நீரிற்கு நடுவே இருந்த கோவிலைக் கண்ட தமிழ், “இது என்ன, இப்படி இருக்கு.? எப்படி அங்க போறது..?” என்றவாறே கணவனின் புறம் திரும்ப, சேரல் முன்னரே தண்ணீரில் இறங்கியிருந்தான்.
“உள்ள இறங்கிதான் போகணும் தமிழ்மா.”
“அய்யோ! ஆழம் எவ்வளவுனு தெரியாம எப்படி.?”
“என்னைப் பார்க்குறேல, இடுப்பு அளவு தான் தண்ணி இருக்கும்.”
“ஆனா..” என அவள் தயங்க, “என்ன பயமா இருக்கா.?”
“ம்ம்.. துணி எல்லாம் ஈரமாகிடுமே.?”
“ஈரத்தோட போயிதான் சாமிக் கும்பிடணும்.”
அவள் புரியாமல் பார்க்க, “இங்க அதுதான் முறை. வா!” என்றிட, காலணியைக் கழட்டி வைத்துவிட்டு, சேரலின் கைப்பற்றி இறங்கினாள்.
அவனிற்கு இடையளவு இருந்த நீர், அவளிற்கு மார்பளவு இருந்தது. ஆனால் நிலத்தை நன்றாக உணர முடிந்தது பாதத்தில். அத்தோடு பார்க்கவும் முடிந்தது. அத்தனை தெளிவான தண்ணீர்.
“இருக்காது. போன வாரம் தான், ஆளுங்களை வச்சு எல்லாத்தையும் சுத்தம் செஞ்சேன்.”
“இப்ப எதுவும் வந்திருந்தா.?”
“அதான் நானு இருக்கேன்ல, உனக்கு எதுவும் ஆக விட்டுடுவேனா.?”
மனையாளுடன் பேச்சுக் கொடுத்த படியே, கோவிலின் அருகே அழைத்து வர.. பார்வைக்குத் தெரிந்த கற்களில் ஏறி மேற்புறத்தை அடைந்தனர்.
தனித்தனியாய் இரு கருவறைகள் இருந்தன. ஒன்றில் காக்கும் தொழிலிற்கு அதிபதியான விஷ்ணு, அழகரின் வடிவில் நின்றிருக்க.. மற்றொன்றில் கல்யாணசுந்தரரும் அங்கயற்கண்ணியும் மணக்கோலத்தில் காட்சி தந்தனர்.
தமிழின் கண்கள், அதைப் பார்த்ததும் வியப்பில் விரிந்தது. இதுவரை இதுபோலான சிலையினை அவள் கண்டது இல்லை. மணப்பெண் அலங்காரத்தில் ஒருகாலை மடக்கி, மற்றொன்றைக் குத்துக்காலிட்டு சற்றே திரும்பி தாயார் அமர்ந்திருக்க, அவரிற்கு அருகே இருபுற தோள்களிலும் கைவைத்தபடி சகல ஆபரணங்களுடன் சந்திரனைச் சூடி, நின்றிருந்தார் சிவபெருமான்.
பொதுவாய் தந்தையார் அமர்ந்திருக்க, தாயார் நின்றபடி தான் காட்சித்தருவர். திருமணக்கோலத்தில் கைப்பற்றிய படி இருப்பர் இல்லையேல் கணவரது மடியில் அமர்ந்திருப்பார் அம்மை. ஊஞ்சல் ஆட்டும் வைபவங்களில், சில கோவில்களில் மடியில் படுக்க வைத்திருப்பது போன்று கண்டிருக்கிறாள். ஆனால் இங்கு மட்டுமே.. பெண் தெய்வத்தை அமர்த்தி, ஆணானவர் நிற்பதைக் காண்கிறாள்.
“என்னப்பா வந்துட்டீங்களா.?” என்ற வினாவில் இருவரும் திரும்பிட, முதியவர் ஒருவர் வந்தார். உடுத்தியிருந்த உடை சொன்னது, கோவில் குருக்கள் என்று.
சேரல் சிரித்து, “வந்தாச்சு சாமி!”
“இப்பதான் இங்க வர்றதுக்கு வழி தெரிஞ்சிச்சா உனக்கு.?”
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா.?” எனச் சிரித்தவர், “போயி, குளத்துல நல்லா முங்கி எழுந்திரிச்சிட்டு வாங்க.” என அனுப்பினார்.
தமிழ் கேள்வியாய், “எதுக்கு அத்தான்.?”
“மாலை மாத்த.”
“சாமிக்கா.?”
“நமக்கு.”
“ஏன்.?”
“கல்யாணம் ஆன மறுநாளு.. இங்க கோவிலுக்கு வந்து மறுமாலை மாத்திக்கிட்டா, ஆயுசுக்கும் ஒத்துமையா இருப்பாங்களாம். ஏழு ஜென்மத்துக்கும் அவங்க உறவு தொடரும்னு சொல்லுவாங்க.”
“இதெல்லாம் உண்மையா.?”
“தெரியல. ஆனா தாத்தா ஆச்சி, அப்பா அம்மா எல்லாருமே இங்க வந்து மாலை மாத்திக்கிட்டதா, பரமசிவம் பெரியப்பா சொல்லி இருக்காரு.”
சுற்றிலும் நீர்தான் என்றாலும்.. அதற்குள் பாறை போல் இருந்த ஒரு இடத்திற்குள் அழைத்துச் சென்ற சேரல், அவளை நீரில் இறக்கி விட்டான்.
“இங்க, ஆழம் அதிகமா இருக்கும் போல அத்தான்.?”
“ஆமா.”
“எனக்குப் பயமா இருக்கு.”
“பயப்படாம இறங்கு, உள்ள ஒண்ணு இருக்கு. உனக்குக் காட்டுறேன்!” என அவளோடு சேர்ந்து நீரில் மூழ்கியவன்.. மேற்புறம் பாறையாய் தெரிந்த பகுதி, உட்புறம் குகையாய் செல்வதைக் காட்டினான்.
அதனுள் அங்கயற்கண்ணி கல்யாண சுந்தரரின் திருமண வைபவமும், அதன் நிகழ்வுகளும், விநாயகரின் மற்றும் அழகன் முருகனின் பிறப்பும், குடும்பமாய் அவர்கள் விளையாடுவதைப் போன்றும் வரிசையாய் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வியப்பின் உச்சத்திற்கே சென்றாள் தமிழ்.
வெளியே வந்ததும், “எவ்வளவு அழகா இருக்கு. இதை ஏன் இப்படித் தண்ணிக்குள்ள போட்டு வச்சிருக்காங்க.?”
“அதைக் குகையோட உள்பக்கமா செதுக்கி இருக்காங்க, தமிழ்மா. தனித்தனி சிலையா இருந்தா, வெளிய எடுத்திருக்கலாம். அதுக்கு வழி இல்லாததால, அப்பாவோட காலத்துல தண்ணியை எல்லாம் வெளியேத்தி, அப்படியே சுத்தி சுவர் எடுத்துக் கட்டலாம்னு பார்த்தாங்க. ஒருநாள் முழுக்க வேலை செஞ்சு, பாதி அளவு தண்ணியை எடுத்தாங்க. ஆனா மறுநாளே திரும்பவும் நிறைஞ்சிடுச்சு.”
“எப்படி.?”
“இப்ப போனோமே குகை.. அதுக்கு மறு பக்கத்துல ஊத்து ஒண்ணு இருக்கு. தண்ணி கசிஞ்சுக்கிட்டே இருக்கும். முதல்ல, இந்தச் சாமியே தண்ணிக்குள்ள தான் இருந்திச்சு. கும்பிடுறதுக்கு வசதியா குளத்துக்கு நடுவுல மேடை போட்டு, மூலஸ்தானத்துல இருந்த சிலையை மட்டும் மேல தூக்கி வச்சாங்க.” என்றபடியே தான் அறிந்ததை எல்லாம் அவன் உரைத்தபடி அழைத்து வர, “என்னப்பா ஆரம்பிக்கலாமா?” என்றார் முதியவர்.
இருவரும் தலையசைக்க, முதலில் அழகரிற்கு அர்ச்சனை செய்து துளசி நீர் கொடுத்தார். அடுத்ததாய் அங்கயற்கண்ணிக்கும் கல்யாண சுந்தரரிற்கும் பூஜையை முடித்து இறைவன் மற்றும் இறைவியின் கழுத்தில் இருந்த மாலையை எடுத்து வந்து ஆளுக்கு ஒன்றாய் கையில் கொடுத்து, “மாலை மாத்திக்கோங்க!” என்றிட, சேரலும் தமிழும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
தமிழின் எதிரே வந்த சேரல் குனிந்து மாலையை அணிவித்து, குருக்கள் கொடுத்த குங்குமத்தையும் வைத்து விட்டான்.
“ஜோடியா நின்னு கும்பிட்டுக்கோங்க!” என்றவர், தயாராய் வைத்திருந்த பைகளை எல்லாம் வெளியே எடுத்தார்.
“சொன்ன மாதிரியே, காலையில அபிஷேகம் எல்லாம் செஞ்சு நெய்வேத்தியமும் படைச்சாச்சு. இந்தாங்க..” என்று சர்க்கரைப் பொங்கலோடு சேர்ந்த தேங்காய் வாழைப்பழம் நிறைந்த தாம்பூலத்தைக் கொடுக்க, பெற்றுக் கொண்டனர்.
வீசிய காற்றில் உடை மெல்ல உலரத் துவங்க, பொங்கலையும் பழத்தையும் அங்கேயே அமர்ந்து உண்டனர்.
முதியவர், “உச்சிப் பொழுது ஆரம்பிடுச்சு. கிளம்புவோமா.?” என்றிட, “எல்லாப் பொருளையும் எடுத்து வைங்க சாமி. இதோ வர்றேன்!” எனக் கோவிலின் பின்பக்கம் சென்ற சேரல், அங்கிருந்த பரிசலில் அமர்ந்து கழியின் உதவியால் நகர்த்தி முன்பக்கமாய் வந்தான்.
“கோவிலை பூட்டிட்டு வாங்க சாமி!” என்றவன் பொருட்களை எடுத்து வைத்து தமிழையும் கைப்பிடித்துப் பரிசலில் அமர வைக்க, முதியவரும் வந்து ஏறிக்கொண்டார்.
“இது இருக்கும் போது, எதுக்குத் தண்ணில நடக்க வச்சு கூட்டிட்டு வந்தீங்க அத்தான்.?”
“ஒரு பரிசல் தான் இருக்கு. காலையிலயே சாமி அதுல வந்திட்டாரு. எப்படியும் குளத்துல முங்கப் போறோம், அப்புறம் என்னனு தான், தண்ணியில இறங்கிட்டேன்!” எனச் சமாதானம் உரைத்தவன்.. பரிசலை இயக்கி, மண் பகுதிக்கு வந்தான்.
முதியவர் விடைபெற, “நானு, சொன்னதும் வந்ததுக்கு ரொம்ப நன்றி சாமி!” எனப் பணத்தைக் கொடுத்து அனுப்பியவன், மனைவியோடு இல்லத்திற்குக் கிளம்பினான்.
வழியில் அவள், “ஏன், கோவில் இருக்கிற இடம் மட்டும் இவ்வளவு பள்ளமா இருக்கு.? மண்ணைப் போட்டு மேடு ஏத்தலாம்ல.?”
“ஹோ.. இவ்வளவு பெரிய குளம் இருக்கும் போது, விவசாயத்துக்கு ஏன் தண்ணி இல்லனு சொன்னீங்க?”
“அதை முறையா பாதுகாத்தா தான், நம்மளோட தேவைக்குப் பயன்படுத்த முடியும்? அப்பாதான், அதை எல்லாம் பார்த்துச் செஞ்சிக்கிட்டு இருந்தாரு. அவரு இறந்ததுக்கு அப்புறம், அதைச் செய்ய ஆளு இல்ல. கோவிலுக்கும், சாமி கும்பிட ஆள் வர்றது இல்ல.
நானு ஊருல இருந்து இங்க வந்தப்ப, வெங்காயத் தாமரையால நிறைஞ்சு இருந்திச்சுக் குளம். அவ்வளவு அழுக்கு. லேசுல அதைச் சுத்தம் செய்ய முடியாது. மூணு வருசத்துக்கு முன்னாடிதான், வேலையை ஆரம்பிச்சேன். மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஆளுங்களை இறங்கச் சொல்லி உள்ள என்னென்ன இருக்குனு பார்த்து, உடனுக்குடனே சுத்தம் செஞ்சிடுறது. இப்பதான் தண்ணி இவ்வளவு தெளிவா இருக்கு. முன்னாடி, சாக்கடை மாதிரி கிடந்துச்சு!”
“எதுக்கு இதெல்லாம் செய்யிறீங்க.?”
“நானு பிறந்த ஊரு. ஓடி, விளையாடுன மண்ணு. அப்பாக்கு அடுத்து, நான்தான எல்லாத்தையும் கவனிக்கணும்? இப்போதைக்கு, இது ஒண்ணைத் தான் செஞ்சிருக்கேன். இன்னும் நிறையச் செய்யணும் தமிழ்மா.
பள்ளிக்கூடம் இடிஞ்சு விழுந்துதான், அம்மாவும் அப்பாவும் இறந்தாங்க. இன்னும் அந்த ஸ்கூல் அப்படியே தான் இருக்கு. அதை எடுத்துக் கட்டணும். கவர்மெண்ட்ல இருந்து, எந்த நடவடிக்கையும் இப்ப வரைக்கும் எடுக்கல. திரும்பவும் ஸ்கூலைக் கட்டுறதுக்கு வழி என்னனு பார்க்கணும்.
ஊருல, தார் ரோடு போட்டு இருபது வருசம் ஆச்சு. பதினேழு வருசத்துக்கு முன்னாடி வெள்ளத்துல அடிச்சிட்டுப் போனது தான். இப்ப வரைக்கும், அதுலயே தான் போயி வந்துக்கிட்டு இருக்கோம். ரோடு இல்லாததால, எப்படி ஓட்டுறதுனு பஸ்ஸையும் நிப்பாட்டிட்டாங்க. உள்ள பஸ் வர்றது இல்ல. அதுனால, முதல்ல ரோடு போடணும்.
கோவில்ல, திருவிழா நடந்து பதினெட்டு வருசம் ஆச்சு. அதையும் நடத்தணும். பெரியப்பாவோட வீட்டை, எடுத்துக் கட்டணும்!” என அவன் ஒவ்வொன்றாய் உரைக்க, “இதைத்தான்.. கடமை இருக்கு, இலட்சியம் இருக்குனு சொன்னீங்களா அத்தான்.?”
அவன் மறுமொழி உரைக்காமல் புன்னகைக்க, இருவரும் அமைதியாய் வீடு வந்து சேர்ந்தனர்.
அடுத்த நொடியே கீதா மதிய உணவிற்காகக் கைப்பேசியில் அழைக்க, “இப்பதான் அக்கா, கோவில்ல இருந்து வந்தோம். ரெண்டு மணிக்கு மேல, கூட்டிட்டு வர்றேன்!” என்றவன் உள்ளே செல்ல, தாங்கள் கொண்டு வந்த மாலையையும் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் செந்தமிழ்.
சமையலறை சென்று நீர் அருந்தியவன், அவளிடமும் கொடுத்துவிட்டு உடை மாற்றிப் படுக்கையில் விழ, சில நொடிகளில் அங்கு வந்தவள், “அதெப்படி உடனுக்குடனே படுத்துடுற.? வீட்டுக்கு வந்து, என்ன ஒரு அஞ்சு நிமிசம் இருக்குமா.? அதுக்குள்ள..” என்றவளின் பேச்சு, அவன் கைப்பற்றி இழுத்ததில் பாதியிலேயே நின்றது.
அவனைத் திணறலும் தவிப்புமாய்ப் பார்த்தவள், “என்ன.? எதுக்கு இப்படி இழுத்த..?”
“வாசல் வரைக்கும்.. உன்னோட வாய்ல இருந்து வந்த அத்தான், இப்ப என்ன பின்னாடி பக்கமா ஓடிட்டானா..?”
அவள் தலையை வேறுபுறம் திருப்ப, “தமிழ்மா..”
…
“உன்னைத்தான்!”
…
“திரும்பு, பேசணும் உன்கிட்ட.”
அவள் மறுத்துத் தலையசைக்க, கரம் பற்றிய கையை விலக்கி இடையில் கோர்த்து, மனைவியைத் தன்மீது போட்டுக் கொண்டான்.
“அச்சோ! என்ன செய்யிறீங்க.?” என்ற அவளின் சொற்கள் முடியும் போது.. தமிழ் படுக்கையில் இருக்க, அவனின் கரங்களோ பாவையின் தேகத்தைத் தழுவி இருந்தது.