“எனக்கு சொல்லவே பயமா இருக்கு ஜெயா, அவங்க வீட்ல சொல்றத தான் அவர் கேப்பார், அவங்களுக்கு கொஞ்சமா சந்தேகம் வந்தாலும் கல்யாணத்தையே நிறுத்திடுவாங்க”.
“இப்போ வரைக்கும் பெருசா இந்த விஷயங்கள் அவங்களுக்கு தெரில, எனக்கு என்ன பண்ணனே தெரில” என்ற ரம்யாவை ஆச்சர்யமாக பார்த்தாள் அம்மு.
யாரைப் பற்றியும் கவலை படாதவள், காதல் எப்படி மாற்றி இருக்கிறது இவளை, இன்று இல்லையேல் நாளை நிச்சயம் அனைவருக்கும் உண்மைகள் தெரிந்துவிடும் எப்படி மறைக்க போகிறாள் என்று அவளை பரிதாபமாக பார்த்திருந்தாள்.
“இந்த நந்தேட்டன் அங்க விட்டுட்டு போனதுக்கு பெரியம்மா கிட்ட விட்டுட்டு போயிருக்கலாம்” என்று அவள் மனம் யோசனை செய்ய.
“அப்போ மட்டும் இவனுங்க உன்ன கடத்த மாட்டாங்களா” என்று மனச்சாட்சி கேள்வி கேட்டது, “அதுவும் சரிதான் இப்படி எல்லாரும் என்னை புலம்ப விட்டுட்டாங்களே” என்று பாவமாக அமர்ந்திருந்தாள்.
ராஜீவிடம் இருந்து அழைப்பு , ஹரி எடுக்க “சொல்ல சொல்ல கேக்காம பண்ணீங்கல்ல என்ன ஆச்சுன்னு இப்போ பாருங்க” என்ற ராஜீவ் “பேஸ்புக் லிங்க் அனுப்பி இருக்கேன்” என்று வைத்துவிட்டான்.
டிவியில் கனக்ட் செய்து வீடியோ பதிவை ஓட விட நேரலையில் செய்தி…. “கோழிக்கோடு விமானநிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணிபுரிந்த பிரகாஷ் என்பவரின் மனைவி சீதாராணி மற்றும் அவரின் மகன் வாஞ்சிநாதனின் தற்கொலை சம்பவத்தில் புதிய திருப்பம்”.
“அதில் சம்மந்தப்பட்ட முக்கிய நபர் ரவி இப்பொழுது அதன் பின்னணியில் உள்ள உண்மையை உலகிற்கு தெரிவிக்கிறார்” என்றதோடு அந்த ரவியின் நேரடி வாக்குமூலமும் ஓடிக்கொண்டிருந்தது.
“அவங்க மேல எந்த தப்பும் இல்லங்க, சங்கரன் நாயருக்கு எதிரா ஏதோ ஆதாரம் அந்த பிரகாஷ் வெச்சிருந்தார், அது வெளில வராம இருக்கவும், அவர் அண்ணன் மகள் கல்யாணம் அந்த பிரகாஷ் பையன் கூட நடக்காம இருக்கவும் தான் அப்படி செய்ய சொன்னார், அவர் சொன்னதை நான் செஞ்சேன்”.
“எவ்ளோ குடுத்தார்” என்ற மீடியா ஆளின் கேள்விக்கு , “பத்து லச்சம்” என்றான் அவன்.
“நாலு வர்ஷம் கழிச்சு இப்போ ஏன் சொல்றீங்க” என்க.
“குற்ற உணர்ச்சி…. அதோட என் மகனுக்கு அதுக்கு அப்புறம் அடிக்கடி ரொம்ப முடியாம போக ஆரம்பிச்சது, அதான் இப்போ அவங்களுக்கு எதிரா கேஸ் நடக்கும் போது நானும் சொல்லலாம்னு நெனச்சேன்” என்று வீடியோ ஓடிக் கொண்டிருக்க, அதில் பேசிக் கொண்டிருந்தவனை அதிர்ச்சியாக பார்த்திருந்தாள் அம்மு.
இதை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த ஜெகனிற்கு சிரிப்புதான் வந்தது , ரவிக்கு குற்ற உணர்ச்சியும் இல்லை கொழுக்கட்டையும் இல்லை , அவன் மகனின் கழுத்தில் இருக்கும் கத்தி அவனை உண்மைகளை கக்க வைத்தது.
மூவரும் அதிர்ச்சியில் இருந்தனர், அம்முவை வைத்து மிரட்டினால் அனைத்தும் சரி ஆகிவிடும் என்று நினைத்திருக்க, இப்பொழுது புதிய பிரச்சனை.
வண்டி வரும் சத்தம் கேட்டு கதவை திறக்க, இரண்டு பேர் நின்றிருந்தனர் “யாரு நீங்க” என்றான் ஜெயன் பயத்தோடு.
“மேடம் எங்க” அவங்கள கூட்டிட்டு போக வந்தோம் என்றவர்கள் உள்ளே நுழைந்து அம்முவிடம் “மேடம் நாம போகலாம்” என்க.
“யார் நீங்க” என்று பயத்தில் பின்னால் போனாள் அவள், “அவங்க ஜெகன் சார் ஆளுங்க தான் மேடம், உங்கள பத்திரமா கூட்டிட்டு போக வந்திருக்கோம் வீட்டுக்கு போகலாம், நீங்க வாங்க” என்று வந்தான் கிஷோர்.
“நான் எங்க வீட்டுக்கு போகணும்” என்று அதிலேயே பிடிவாதமாக நின்றாள் அம்மு.
“அவளை அங்கேயே விடுவது தான் நல்லது” என்று கிஷோர் முடிவு செய்தான், இப்பொழுது அவளின் மனநிலையை கருதி அதிகம் அவளை ஸ்ட்ரெஸ் இல்லமால் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தவன், அவர்களிடம் அவளை குட்டநாட்டில் விட சொன்னான்.
ரெம்யாவையும் அவளுடன் அனுப்பினான், தம்பிகளை விட்டு போகமாட்டேன் என்ற ரெம்யாவை கட்டி தூக்கி கொண்டு சென்றனர்.
“டேய் நேவி ஆபிசர் மனைவியை கடத்திட்டு வந்து ராணுவ ரகசியத்தை கேட்டு மிரட்டுறீங்கன்னு உங்க மேல கேஸ் போடணும்னு தான் யோசிச்சேன், வயசு பசங்க பொழச்சு போங்க, உங்கள சார் அவர் லிஸ்ட்லயே வைக்கல வாண்டடா ஏண்டா வந்து சிக்குறீங்க” என்ற கிஷோர்.
“உங்கள சும்மாவும் விட முடியாதே போலீஸ் பின்னாடியே வருது” என்றவன் அம்முவை அழைத்து சென்றான்.
இருவரும் பேயறைந்தபோல நின்றனர், டென்ஷனில் இருந்த ஹரி வேகமாக சென்று வண்டியெடுக்க ஜெயன் அவனுடன் சேர்ந்துகொண்டான்.
“என்னடா பண்றது ஹரி எனக்கு பயமா இருக்கு, அப்பாவும் பெரியப்பாவும் உள்ள இருக்காங்க, மாமா வீட்ல நம்மள இப்போ தல முழுக்கத்தான் பார்ப்பாங்க, கடத்தல் கேசுல மாட்டினோம் மானமே போய்டும்” என்க.
“முதல்ல ஏதாவது இருக்கா பாரு மூளை வேலை செய்யல” என்றான் ஹரி.
சீட்டிற்கு அடியில் சிறிய அறைபோல் இருப்பதில் இருந்து போதை மருந்தை எடுத்தான் ஜெயன், ஹரி ஒரு பாக்கெட் அப்படியே வாயில் கொட்டிக்கொண்டான், சுர் என்று மூளையை சென்று சேர்ந்தது.
ஜெயன் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பின்னால் சைரன் ஒளி கேட்கவும் அவனும் எடுத்து வாயில் இட்டுக்கொண்டான், மூணார் வளைவுகளில் போதையோடு தலை சுற்றியது வானத்தில் பறப்பதை போல, மாயையில் கை நழுவ செங்குத்தாக விழுந்து கீழே தரையை முத்தம் வைத்துக் கொண்டிருந்தது கார்.
பெரியம்மாவின் கைகளுக்குள் அடைக்கலம் புகும் வரை, தான் பாதுக்காப்பாக இருக்கிறோம் என்ற எந்த எண்ணமும் இல்லை அம்முவிற்கு.
அவள் வீட்டையும் ஷ்யாமாவையும் பார்த்த பின் அவளுக்கு உயிர் வந்தது, பாய்ந்து சென்று கட்டிக்கொண்டாள் “பெரியம்மா” என்று.
எத்தனை வருடம் கடந்து அவளின் இந்த அழைப்பு வார்த்தைகளே வரவில்லை அவருக்கு, ராஜீவ் அவளை பார்த்துவிட்டு பின்னேயே வந்த தங்கைக்கு கன்னம் பழுக்க ஒன்று வைத்தான்.
“ஏன் எல்லாரும் இப்படி பண்றீங்க, இப்போ சோசியல் மீடியா வரைக்கும் போய்டுச்சு உலகத்துக்கே தெரிஞ்சுடுச்சு நிம்மதியா” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“அவனுங்க ரெண்டு பெரும் எங்க” என்று கேட்க, “தெரில எங்களை இவர் கூட்டிட்டு வந்தார்” என்றாள் கிஷோரை காண்பித்து.
அதை பார்த்துக்கொண்டே வந்த கிஷோர் “மேடம் இங்க தான் வரணும்னு ஒரே பிடிவாதம் அதனால இங்க விடுறேன், சார் கால் பண்ணும்போது நான் சொல்லிக்கிறேன்”.
” எங்க ஆளுங்க ரெண்டு பேர் இங்க இனிமே காவலுக்கு இருப்பாங்க பாத்துக்கோங்க” என்றவன் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியேறினான் .
அன்று இரவே அவர்கள் வீட்டிற்கு ஜெகனிடம் இருந்து அழைப்பு வந்தது எடுத்த உடனே “தும்பி எங்க” என்று தான் கேட்டான்.
அவனின் அழைப்பு என்றவுடன் ஷ்யாமாவின் அருகிலே நின்றவள் “பேசமாட்டேன்” என்றாள் தலை அசைத்து.
முகத்தி சுருக்கி பேச மாட்டேன் என்று சிறு பிள்ளையாய் பிடிவாதம் செய்தவளை பார்த்தவருக்கு உண்மையில் சிரிப்பு வந்தது, கோவப்படுகிறாளாம் கணவனிடம் உன் கோபம் எதனை நாள் என்று நானும் பார்க்கிறேன் என்று மனதில் எண்ணிக் கொண்டார் ஷ்யாமா.
“என்கூட இருக்கட்டும் தம்பி , நீங்க வரும்போது கூப்பிட்டு போங்க” என்றார் ஷ்யாமா.
“எனக்கு அனுப்ப பயமா இருக்கு” என்றவர் வார்த்தையில் மௌனமானான் , உடல் எல்லாம் பற்றி எரிந்தது , எவ்வளவு போராட்டங்களை கடந்து கைபிடித்தேன் , நான் இல்லாத வீட்டில் என் மனைவிக்கு நான்கு நாட்கள் கூட பாதுகாப்பில்லை.
நினைக்க நினைக்க தன் மீதே கோபம் துளிர்த்தது .
மாமாவிற்கு அழைத்தவன் “உங்க வீட்டை விட்டு இவ்ளோ நாள் இங்க இருந்ததே பெருசு மாமா நீங்க வீட்டுக்கு போங்க , அப்பாவை நர்ஸ் பாத்துப்பாங்க உங்களால முடியும்போது போய் ஒரு தடவ பாருங்க மாமா போதும்”.
“எங்க அப்பாவோட அம்மாவை அவங்க சின்ன மகன் கிட்ட அனுப்பிடுங்க , இனிமே அவங்க என் வீட்ல இருக்க கூடாது , நான் அவங்கள எப்போவும் பாக்க விரும்பல” என்றான் நீலவேணியை குறிப்பிட்டு.
“மாப்பிள மன்னிச்சுடுயா நாங்க சரியா கவனிக்கல” என்று வருந்தும் மனிதரை என்ன சொல்ல , அவர் மீது என்ன தவறு.
அவளுடன் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டியவன் தான் தானே , அணைத்து தவறும் தன் மீது மட்டுமே .
“மாமா என்ன பேசுறீங்க , உங்க யார் மேலயும் எனக்கு எந்த கோவமும் இல்ல அவ அங்கேயே இருக்கட்டும் நான் வர வரைக்கும் , எனக்கு வேற என்ன பண்ணணு தெரில மாமா”என்றான் இயலாமையோடு.
தன் அறையில் கட்டிலில் படுத்திருந்த அம்முவிற்கு காலையில் பார்த்த வீடியோ மனதை அரித்துக் கொண்டிருந்தது , நான்கு வருடங்களுக்கு பிறகு சீதாராணிக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.
முழுதாக கிடைத்துவிட்டதா என்று யோசித்தவள் நினைவுகள் தங்கள் திருமணத்திலும், சீதாராணி வாஞ்சியின் மரணத்திலும் சென்று நிலைத்தது.
ஜெகந்நாதனின் மனம் கூட கொஞ்சம் நிம்மதி அடைந்த போல இருந்தது , தாயின் மீது படிந்த களங்கத்தை துடைக்க அவன் இதனை வருடமாக போராடுகிறான்.
அவன் என்ன செய்தான் செய்கிறான் எதையும் தந்தையிடம் இதுவரை கூறவில்லை , கிருஷ்ணன் சங்கரன் இருவரும் தண்டிக்கப் பட வேண்டும் , அதோடு சீதாராணி களங்கமற்றவர் என்ற உண்மை வெளிவர வேண்டும் , இன்று அது நிறைவேறிய நாள் அவன் மனம் நிறைந்து இருந்தது.
மனம் முழுதும் அவனின் கார்தும்பியின் நினைவுகளில் தளும்பி நின்றது.
நீ என் வாழ்வின் சாபம் என்று உன்னை தூற்றுகிறது என் சுற்றம்
வரத்தையும் சாபத்தையும் பிரித்தறிய முடியாத
காதல் கடலின் அலைகளில் கால் கூட நனைத்திடாத
அவர்களுக்கு எப்படி தெரியும்
நீயே என் வாழ்வும் வரமும்
ஆதியும் அந்தமும் என்று
உணர்வோடும் உயிரோடும் நான் கடந்துவிடும் ஒவொரு நொடியும் அதன் சாட்சிகள் என்று….