இருவரும் திரும்பி வந்ததிலிருந்து சுசீந்திரனுக்கு அவளிடம் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் அவளின் கசங்கிய முகம் அவளின் சோர்வை சொல்ல அவளிடம் பேசும் எண்ணத்தைக் கைவிட்டிருந்தான்.
அவள் சொல்வது போல் அவன் தவறி இருந்தாலும் அதற்கான தீர்வு வேண்டுமல்லவா? தண்டனையாய் ஜடம் போல் உடன் வாழ்வது தீர்வாகாதே?
இரவின் வெளிச்சத்தில் மனமெல்லாம் சிந்தனை வசப்பட்டவனுக்குப் பதில் என்னவோ பூஜ்ஜியம் மட்டுமே.
நாட்கள் அதன் போல் நகர அன்றும் சுசீந்திரன் வீட்டிலிருந்தே வேலை செய்ய மதியமே வீட்டிற்கு வந்திருந்தாள் மஹிமா.
“என்ன மஹி இன்னைக்கு இப்பவே வந்துட்ட?” கேள்வியாய் அவன் நோக்க
“மதியத்துக்கு மேல கிளாஸ் எதுவும் இல்ல. அதான்…” என்றவள் அவளின் அறைக்குள் சென்றுவிட சுசீந்திரனுக்கோ நினைவெல்லாம் அவர்களின் முந்தைய தனிமைப் பொழுதுகளை நினைவுபடுத்த, காதலனாய் கணவனாய் தான் அவளுடன் வாழ்ந்த நாட்களெல்லாம் கனவோ எனும் சந்தேகமே எழுந்தது.
இனிப்பின் சுவை அறியாதவனுக்கு ஏக்கங்கள் இருப்பதில்லை. ஆனால் அதை அறிந்து சுவைத்து அதில் சுகித்தவனுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் அது இருந்தும் கிடைக்காமல் போகும் பொழுதுகள் ரணம் அல்லவா.
சுசீந்திரனுக்கும் அவளை கை வளைவில் நிறுத்தி கொஞ்சி, கொண்டாடி, அவளின் வாசம் முகர்ந்து மெய் தீண்ட என அவனைத் தாக்கிய இளமையின் எண்ண ஓட்டத்தில் அவனின் கால்கள் தானாகவே அவளின் அறை நோக்கி அவனை இழுத்துச் சென்றது.
அவளின் அறை வாசல் வரை வந்தவனுக்கு என்ன சொல்லி அவளிடம் பேச்சைத் தொடங்க எனும் யோசனை வர, நேற்றே இருவரும் கடைக்கு செல்ல திட்டமிட்டது நினைவு வந்தது.
அவளை அழைத்துக் கொண்டு வெளியிலாவது செல்லலாம் என நினைத்தவன் பின்பு அவளுக்கு ஒய்வு தேவை என அந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டான். ஆனாலும் அவளின் அறைக்குள் செல்ல வழி தேடியவனுக்கு தேனிசைத் தென்றல் தேவா வழி காட்ட,
கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா மீனு
வாங்க போலாமா பீச் க்கு தான் போலாமா
எனப் பாடிக் கொண்டே அவளின் அறைக் கதவைத் திறந்தான்.
கதவைத் திறந்தவன் கண்டது உடை மாற்ற மேலாடையைக் கழட்ட நினைத்து கைகள் தூக்கி நின்றிருத்தவளைத் தான்.
“ஏன் மஹி, நீ டிரஸ் சேஞ் பண்ணிக்கோ நான் உன் கிட்ட பேசலாமேன்னு வந்தே. இந்த சைடு பெட்ல உக்காந்துக்குறேன். நீ மாத்திக்கோ.” என பெருந்தன்மையாய் அவன் பேச,
‘ஆமா, இவன் எதையும் முன்ன பின்ன பார்த்ததே இல்ல, இன்னைக்கு திரும்பி உக்காந்துக்குறானாம். பிராடு, சும்மா பெனாத்துறான். அவன் என்ன நெனப்பான்னு எனக்குத் தெரியாது.’ மனதுக்குள் பேசியவள்,
“ஒன்னும் வேணாம் நா அப்புறம் மாத்திக்கிறேன். நீ சொல்லு.” என்று வந்து கட்டிலின் மறு ஓரத்தில் அமர்ந்தாள்.
அவள் அவர்களுக்கு இடையில் விட்ட அந்த இடைவெளி அவனைக் கடுப்பேற்ற ‘ஹுக்கும், கிட்ட கூட உக்கார மாட்டா போல. முன்ன என் மடிய தேச்சதெல்லாம் மறந்துடுச்சு கண்ணம்மா உனக்கு. இரு இனி மெல்ல ஞாபகப் படுத்துறேன்.’ மனதோடு பேசியவன் கண்கள் அந்த இடைவெளியைச் சுற்றிவர, மஹிமாவின் கைகள் அவளின் இடையின் வெளியைச் சரி செய்து கொண்டது.
அதுவரை அதை அவன் கவனித்திருக்கவில்லை. அவள் சரி செய்ய அது சரியாய் அவன் கண்களில் பட்டு அவனை வைத்து செய்யத் தொடங்கியது.
“இங்க வந்து உக்காரு மஹி. எதுக்கு இந்த கேப்?” என அவன் தொடங்கிய உடனேயே, மறுப்பாய் தலை அசைத்தவள் “பரவாயில்ல சொல்லு சுசீ. எதுவும் சொல்லனுமா?” என்றாள்.
“சொல்லணுமான்னு என்னை கேக்குற உனக்கே தெரியாதா? எனக்கு என்ன பேசணுமுன்னு. இல்ல உனக்கு எதுவும் பேச வேணாமா?” என்றவன் குரலில் சிறு சூடு தெரிய,
“பேசி? என்ன செய்ய சுசீ.” என்றாள் விட்டேற்றியாய்.
“சரி பேசாம இப்படியே இருந்து, ஆளுக்கு ஒரு பக்கமா இருந்து என்ன செய்யப் போறோம். அதையாவது சொல்லு. நானும் வந்ததிலிருந்து பேச நினைக்கிறேன். அது உனக்கும் தெரியும். தெரிஞ்சும் என்ன அவாய்ட் பண்ற?”
“அவாய்ட் பண்ண நினைக்கல சுசீ. ஆனா என்ன பேசணும்ன்னு நீ எதிர் பார்க்குற?” அவளின் குரலிலும் கோபம் வெளிவரத் தொடங்கியது.
“மஹி, நா நேராவே கேக்குறேன், சதீஷ் கிட்ட நா பேசுனது எல்லாம் உன்கிட்ட சொன்னேன். அதுக்கு உனக்கு இவ்வளவு கோவம். சரி, நான் சொன்ன விஷயம் உன்ன ஹர்ட் பண்ணிருக்கலாம். ஆனா நான் அதை ஏன் சொன்னேன், என்ன மனநிலைல அன்னைக்கு நான் இருந்தேன், இப்படி எதுவும் கேட்க மாட்டியா?”
“அதெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டாலும் நீ என்ன பத்தி சொன்னதை மாத்த முடியாதே சுசீ. அது உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு தரமும் நினைப்பு வருதே. என்னால எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு எப்பவும் போல இருக்க முடியல.”
“அப்ப இதுக்கெல்லாம் என்னதான்டி முடிவு? இப்படியே ஆளுக்கொரு ரூம்ல காலத்தை ரொம்ப நாளைக்கு ஓட்ட முடியாது.” என்றவன் சீற,
‘ஹ்ம்ம், தப்பு செஞ்சது அவன். இதுல நான் என்ன செய்ய. இவனை கிட்ட பார்த்தாலே ‘ஏன் இப்படி சொன்னான்னு’ வர்ற கோவம் என்னை கொலகாரியா மாத்தாம இருக்கனும்ன்னு நான் நினைக்கிறன். இதுல பேசி என்ன ஆகப் போகுது?’ தனக்குள்ளே பேசியவள், “ஏன் ஆளுக்கொரு ரூம்ல இருந்தா என்ன?” என்று கேட்டு அவனை அலட்சியமாய் நோக்கினாள்.
அவளின் பதிலில் பொங்கி எழுந்தவன் அவளருகில் வந்து “ஹ்ம்ம், தனியா இருந்து … இதுக்கு நான் பதில் சொன்னா, ஆம்பளைங்களே இப்படித்தான், அவங்களுக்கு எல்லாம் செக்ஸ் இல்லாம இருக்க முடியாதுன்னு கேவலமா பேசி இன்னும் இன்னும் இத பெருசாக்குவ. அந்த மொக்க ஸீன் எல்லாம் இங்க இல்ல.” என்றான் சீறலாய்.
“அப்ப சரி. ஆனா நீ அப்படி இல்லன்னா எதுக்கு நம்ம ஒண்ணா இருக்கனும்ன்னு சொல்லற? தள்ளி இருக்கும் போதே உன்னால என்னை விட்டுத் தள்ளி நிக்க முடியல. அத நான் கேட்டா தப்பா?”
“தப்பில்ல. ஆனா அது என்னைக்குமே நம்ம பிரச்சனைக்கான சொல்யூஷன் இல்ல. இப்படியே மாத்தி மாத்தி தப்பு சொன்னா டைம் போகுமே தவிர, வாழ்க்கை மாறாது. எனக்கு தேவை என் லைப் பழையபடி வேணும். அவ்வளவு தான். அதுக்கு நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன்.” என்றவன் சற்றே தணிய,
“லைப் மாறணும்ன்னா எனக்கு மனசு மாறனும் சுசீ. அது எப்படின்னு எனக்கு தெரியல. மாறுமான்னும் எனக்கு சொல்லத் தெரியல. நம்ம எல்லாமுமேன்னு நினைக்கிறவங்க நம்மள ரொம்ப கீழ நினைச்சுட்டு இருக்காங்க என்பதோட வலி அவ்வளவு சீக்கிரம் மாறாது.
இல்ல ஒருவேளை மாறும்ன்னா அதுக்கு வழி உனக்குத்தான் தெரியணும். ஏன்னா எனக்குத் தெரியல. நான் ஏன் இப்படின்னு கூட எனக்கு தெரியல. ஆனா எனக்கு இதைப் பத்தி எல்லாம் யோசிக்கவே தோணல.” வெகு சாதாரணமான குரலில் சொல்லி முடித்தாள் மஹிமா.
ஆனால் அதைக் கேட்டுக் கொண்டவனுக்கு இன்னும் இன்னும் தலையைப் பிய்த்துக் கொள்ளும் குழப்பம் கூட என்ன செய்வது எனத் தெரியாதவனுக்குள் பற்பல நினைவுகள்.
ஒரே ஒரு ஒற்றை முத்தத்தில் எனக்குள் இருந்த காதலை உறுதி செய்தவள். அவளின் இதழ் சிந்திய இரண்டாம் முத்தத்தில் அவளின் காதலையும் உணர்ந்து என் வாழ்வோடு இணைந்தவள்.
இன்றும் அதுபோல் ஒரு ஒற்றை முத்தம் எங்கள் வாழ்வை மாற்றிவிடுமா என நினைத்தவன், “ஹ்ம்ம், உன்ன யோசிக்க விட்டா நீ தப்பு தப்பா யோசிப்ப. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானே யோசிக்கிறேன் யோசிச்சு, …” என்றவன் கண்கள் அவளின் முகமெங்கும் பரவ, அவளுக்குள் வந்த சிறு தடுமாற்றம் அவன் முகத்தில் காதலாய் பரவி இதழ்களில் குறுநகையாய் முடிவுற்றது.
நெருக்கங்கள் நெருங்க மறுக்க, காதலும் களவியும் காணாமல் போயிருக்க, களி நிறையும் என அவன் கனவு கண்ட வாழ்வு கனவாகவே கரைவது போல் ஒரு காட்சிபிழையில் காதல் கண்ணம்மாவுடன் கனவாகிய நேற்றைய நினைவுகளோடு கைகோர்த்து நின்றிருந்தான் கவிபாரதி.