காலையிலே சங்கரன் நாயரின் குரலில் தான் விழித்தார் சீதா.
உத்தமப்பாளையத்தில் கல்யாண வேலைகளை அண்ணன் துரைசெல்வமும் அண்ணி மாதவியும் பார்த்துக்கொள்ள , திடிரென்று வரப்பில் வழுக்கி விழுந்து காலை உடைத்துக்கொண்டார் துரைசெல்வம்.
வேலைகளை கவனிக்க பிரகாஷ் ஊருக்கு சென்றுவிட்டார் , உடன் தாயை அழைக்க “இப்போ வந்துட்டு திரும்ப கல்யாணத்துக்கு வரணும் அலயமுடியாது” என்றுவிட்டார்.
ப்ரகாஷிற்கு நீலவேணியை அங்கு விட்டு செல்ல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை , வரவில்லை என்று நீலவேணி பிடிவாதமாக நிற்க, அவர் மட்டும் சென்றுவிட்டார்.
ஜெகனும் இல்லை , திருமணம் முடிந்து அப்படியே ஊருக்கு போக வேண்டும் ஆகையால் அதிகம் லீவு எடுக்க முடியவில்லை.
காலையில் சங்கரனின் குரல் கேட்டவுடன் வெளியில் வந்து பார்த்தார் சீதா , பின்னோடு வந்துவிட்டார் மாமியார் “என்னங்க , என்ன ஆச்சு??” என்ற சீதாவின் கேள்விக்கு.
“ரொம்ப சாதாரணமா என்னாச்சுன்னு கேக்குறீங்க , இந்த வீட்டோட மதிப்பு தெரியுமா நம்பி குடுத்தா இப்படி பண்ணியிருக்கீங்க” என்று இரைந்தார்.
“என்ன” என்றே தெரியாமல் வெளியில் வந்து அவர் நின்ற இடத்தில சீதா பார்க்க , சீதா பிரகாஷின் படுக்கை அறையின் பின் பக்கம் இருக்கும் கதவில் மிக பெரிய விரிசல், நல்ல உறுதியான மரக்கதவு எப்படி இப்படி என்று சீதாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
அந்த பழைய காலத்து வீட்டில் எந்த அறையில் இருந்து வேண்டுமானாலும் வெளியில் வரலாம் , அணைத்து அறைகளிலும் வீட்டின் உள்ளே இருந்து அறைக்கு செல்ல ஒரு கதவும் , அறையில் இருந்து வெளியில் செல்ல மற்றோரு கதவும் இருக்கும்.
அப்படி சீதா பிரகாஷ் அறையில் இருந்த வெளிப்புற கதவில் பெரிய விரிசல் , என்ன செய்ய ஒன்றும் புரியவில்லை “நாங்களே சரி பண்ணி கொடுக்குறோம்” என்றார் சீதா.
“உங்க ஊரு வீடு மாதிரி நினைசீங்களா , இது மரத்தால இழைச்சு கட்டினது வேல தெரிஞ்சவங்க கிட்ட தான் குடுக்கணும் , நானே ஆள கூப்பிடுறேன்” என்று சென்றுவிட்டார்.
மாமியார் குறு குறு என்று சீதாவை பார்க்க எரிச்சலாக இருந்தது, இதற்க்கு என்ன கதை கட்ட போகிறார் இவர் என்று.
பிரகாஷை அழைத்த சீதா “என்னங்க…. இந்த ஆளு சங்கரனுக்கு என்ன பிரச்சனை சும்மா ஏதாவது சொல்லிட்டே இருக்கார்” என்றார்
“என்னம்மா என்ன பிரச்சனை?” என்ற பிரகாஷிடம்.
காலையில் நடந்ததை சொல்ல “நீ ஒன்னும் கண்டுக்காத , அவங்க வீடு ஏதாவது செய்யட்டும் , நா வந்துடுவேன் நாளைக்கு வந்து பேசிக்கிறேன்” என்றார் .
“சரிங்க” என்க.
“சீதா அம்முவை பக்கத்துலே வெச்சுக்கோ பத்திரமா பாத்துக்கோ” என்றார், அனைவரும் அம்முவை சங்கரன் ஏதும் செய்துவிடுவாரோ என்று கவலை பட்டனர்.
சங்கரன் அழைத்து வந்த இருவர் அங்கு வேலை பார்க்க தொடங்க, அம்மு வந்து பார்த்தவள் “என்ன ஆச்சு அம்மாயி” என்றாள் சீதாவிடம்.
“ஒன்னும் இல்லடா , கதவுல ஏதோ விரிசல் அவங்க பாத்துப்பாங்க நீ வா” என்று அழைத்து சென்றார்.
வேலை செய்பவர்களுக்கு தேநீர் தயாரித்தவர் அதை எடுத்து செல்ல “குடுங்க அம்மாயி நான் கொடுக்குறேன்” என்று கொண்டு சென்றாள்.
மாலை வரை வேலை நடந்தது , கதவை காலை வரை தொட வேண்டாம் என்று சொல்லி சென்றார்கள்.
“என்னடா ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க” என்றார் அவளின் கன்னம் பற்றி , “தெரில அம்மாயி பயமா இருக்கு” என்றவளை பார்த்தவர் மனமும் பதறியது.
எதுவுமே சரி இல்லை முதல் முறை தட்டு சிதறி விழுந்தது , வீட்டில் விளக்கு அடிக்கடி அணைந்து போகிறது , திருமண வேலையில் இருந்த அண்ணன் இடறி விழுந்து காலை உடைத்துக்கொண்டார்.
“பிள்ளைகளுக்கு எதுவும் ஆகக் கூடாது , அம்முவிற்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ” என்று தான் சீதா பயந்தார்.
அவள் இல்லாமல் மகனின் நிலையை யோசிக்க கூட முடியவில்லை, ஆயிரம் முறை பத்திரம் சொல்லி சென்றிருக்கிறான் அவனுக்கும் அம்முவை பற்றிய பயம் தான்.
அம்முவின் அருகில் வந்த வாஞ்சி “அம்முக்குட்டி இங்க பாரு , ஒன்னும் இல்ல நாளைக்கு ஒருநாள்… நாளான்னைக்கு நீங்க எனக்கு அண்ணி , நாளைக்கு சாயந்திரம் அண்ணன் வந்துடுவான் அவனைப் பார்த்தா உன் பயம் எல்லாம் போயிடும்ல” என்க.
தலை ஆடியது அவளுக்கு , அதே நேரம் அழைத்துவிட்டான் ஜெகன் “ஏய் நூறு ஆயுசு உனக்கு இப்போ தான் உன் கார்த்தும்பி கிட்ட சொல்லிட்டு இருந்தேன் , இந்தா நீயே பேசு” என்று அவளிடம் கொடுக்க எடுத்துக்கொண்டு தோட்டம் பக்கம் சென்றாள்.