உள்ளே நுழைந்து கதவை அடைந்தவன் , நேரே சென்று கட்டிலில் படுத்து அவள் இடையோடு கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்து அணைத்தான் , உறக்கம் கலைந்தவள் அந்த அணைப்பில் உயிர்த்தாள்.
சட்டென்று திரும்பி பார்க்க “தும்பிமா…” என்ற அவனின் அழைப்பில் உயிர் சிலிர்த்து அடங்கியது .
உண்மையா கனவா!! மறைந்துவிடுவான என்ற தவிப்பில் அவன் கையை இறுக பற்ற “வந்துட்டேண்டா” என்றவன் அவளை திருப்பி தன் மார்பில் போட்டுக்கொண்டு “தூங்கு” என்க சில நொடிகளில் அவளிடம் சீரான மூச்சு.
நன்றாக உறங்கி எழுந்தவள் அந்த அணைப்பை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்து உறுதி படுத்திக்க கொண்டாள் , அவன் சிகை கோதி நெற்றியில் முத்தம் பதித்து அவனை விழிகளில் நிரப்பினாள்.
மனம் முரண்டியது இதோ காற்றை போல வந்ததும் தெரியாமல் போவதும் தெரியாமல் சென்றுவிடுவான் , அதிலேயே சுற்றியது மனது, மெல்ல எழுந்து மீண்டும் குளித்து உடைமாற்றி கீழே சென்றாள்.
அவளையே நொடிக்கொரு முறை பார்த்திருந்தார் ஷ்யாமா “என்ன பெரியம்மா” என்றாள் அவளே.
“ஜெகன் வந்துட்டான்” என்றவரை பார்த்தவள் முகத்தில் மெல்லிய புன்னகை “தூங்குறார் பெரியம்மா” என்றவள்.
“நான் ஏதாவது பண்ணனுமா” என்க , “ஒன்னும் வேண்டாம்டா எல்லாம் செஞ்சாச்சு , நீ போய் தம்பிய கூட்டிட்டு வா” என்றார்.
“ஹ்ம்ம்” என்று மீண்டும் மேலே வந்தவள் அறை கதவை திறக்க கட்டில் காலியாக இருந்தது.
பாத்ரூமில் இருப்பானோ என்று யோசனையில் திரும்ப பால்கனியில் நின்று அவளையே பார்த்திருந்தான் , தன் கார்தும்பியிடம் என்ன அது இந்த மாற்றம் , இது வெறும் விட்டு சென்ற கோவம் அல்ல , அவளை என்ன அலைக்கழிக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.
தன்னை விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் என்ன குழப்பம் அவளுக்கு என்ற யோசனையில் நின்றான் , அவள் தன்னிடம் பேசப்போவது இல்லை என்ற தெரிந்தவன் “பசிக்குது தும்பி” என்றுவிட்டு முன்னே நடக்க அவன் பின்னையே ஓடினாள்.
வீட்டின் மாற்றங்களை கவனித்தான் மிக அழகாக மாறி இருந்தது, மாதவியும் துரைசெல்வமும் ரூபாவுடன் வந்துவிட்டனர், அனைவரும் அமர்ந்து உணவருதினர்.
ராஜீவ் தான் வாங்கியதை தங்கைகளின் கையில் கொடுத்தான், அனைவரும் இருக்கும்போதே பாரதியை பற்றிய பேச்சை எடுத்தார் துரைசெல்வம்.
ராஜீவ் தன் சம்மதத்தை அப்பொழுதே சொல்லிவிட்டான், உடனே பாரதியின் தந்தைக்கு அழைத்த துரைசெல்வம் தங்கள் சம்மதத்தை கூற , இவர்களை பெண் பார்க்க நேரில் வர அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
மறுநாளே சென்று விடலாம் என்று முடிவு செய்தனர் , அனைவரோடும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவனின் சிந்தனையும் கவனமும் மனைவியின் மீதே.
எங்கு நின்றாலும் பார்வை மட்டும் கணவனை தழுவிக்கொண்டு இருந்தது , அந்த ஏக்கத்தை அவனால் தாங்க முடியவில்லை “என்னடி செய்கிறாய் என்னை” என்று உயிர் உருகியது.
அதற்குமேல் முடியவில்லை அவர்களிடம் ஒரு நிமிடம் என்றவன் வெளியில் சென்று போன் பேசினான் , அதன் பிறகு அங்கேயே நிற்க அடுத்த பத்துநிமிடத்தில் அவனுக்கு அழைப்பு வந்தது , பேசிவிட்டு வந்தவன் “தும்பி” என்க வேகமாக முன்னே வந்து நின்றாள்.
“கெளம்பு வெளில போலாம்” என்க முகத்தில் அத்தனை பிரகாசம் “ஹ்ம்ம்” என்று வேகமாக மண்டையை ஆட்டியவள் தயாராக மேலே ஓடினாள்.
“மாமா நான்..” என்று அவன் தொடங்கும் முன் “பாத்து பத்திரமா போய்ட்டுவாங்க மாப்ள” என்று அவர் எழுந்துகொள்ள “நாளைக்கு சாயந்திரம் தான போகணும் பொண்ணு பார்க்க , நாளைக்கு காலைல எல்லா ஏற்பாட்டையும் செய்யலாம் மாமா” என்று அவன் சொல்ல.
“நீ என் பொண்ண மட்டும் பாரு இப்போதைக்கு , புள்ள ரொம்ப தவிச்சு போய் இருக்கு , இத்தனை பேர் எதுக்கு இருக்கோம் நாங்க பாதுர்க்குறோம்” என்க அனைவரும் அதையே தங்களின் முகங்களில் பிரதிபலித்தனர்.
“எங்கு போகிறோம்” என்ற கேள்வியே இல்லை அவளிடம் , அவனுடன் வண்டியில் ஏறியவுடன் நொடிக்கொரு முறை அவனை பார்ப்பதும் வெளியில் பார்ப்பதும் என்று இருந்தாள்.
சிறிது நேரம் பொறுத்தவன் வண்டியை நிறுத்தி அவளின் இருக்கையை சரிசெய்து , அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டான் , இறுக்கமாக அவன் இடையை கட்டிக்கொண்டாள்.
“தும்பிமா” என்க “ம்ம்” என்றவளிடம்.
“கப்பல்ல இருக்கும்போது மேலதிகாரினு சகஜமா யாரும் பேசமாட்டாங்க , நானும் அப்படிலாம் யாரோடும் பேசமுடியாது”.
“உன்கிட்ட பேசாத வார்த்தைகள் எல்லாம் நெஞ்சை அடைக்குதுடி, உன் குரலை கூட கேக்கலடி ஒன்பது மாசமா , என்கிட்டே சொல்ல உனக்கு ஒண்ணுமே இல்லையா…” என்க.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் அவன் மார்பில் முத்தம் பதித்து “ஐ லவ் யு” என்றவள் அவன் கழுத்தில் முகம் புதைத்து “நெறய இருக்கு” என்றாள் குரல் இடற.
மெல்ல இங்கு வந்த பிறகான கதைகளை சொல்ல தொடங்கினாள்,அவனுக்கான அவளின் தேடலை சுமந்து வந்தது அணைத்து நாட்களின் கதைகளும் , பாதி கதை முடிவதற்குள் அவர்கள் பிரபலமான கைனகாலஜிஸ்ட் முன்பு அமர்ந்திருந்தனர்.
தெரிந்தவர் மூலம் உடனே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தான், விவரங்களை அலைபேசியில் அவரிடம் கூறி இருக்க முதலில் ஸ்கேன் செய்துவிடலாம் என்றார்.
சிலமணி நேரங்கள் கடந்து “மிஸ்டர் ஜெகன் உங்க மனைவிக்கு பெருசா ஒரு பிரச்னையும் இல்ல , அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க, கொஞ்சம் நல்லா சாப்பிட சொல்லுங்க , இந்த மாதிரி பிரச்சனைகள் பல பெண்களுக்கு சாதாரணமா வரும் மாதவிடாய் நாட்கள்ல”.
“சிலருக்கு தாம்பத்ய உறவால் மெல்ல மெல்ல சரி ஆகிடும் , சிலருக்கு குழந்தை பிறந்த பிறகு சரி ஆகும் இது ஒரு பிரச்சினையே இல்ல, பயப்பட ஒன்னும் இல்லை” என்க அவனுக்கும் நிம்மதி.
“மருந்து எதுவும் தேவை இல்லை , உங்க வாழக்கையை தொடங்குங்க சீக்கிரம் சரி ஆகிடும்” என்றார் புன்னகையோடு , அவனும் நன்றி கூற இருவரும் விடைபெற்றனர்.
வெளியில் வந்தவன் “தும்பி நாம வீடு போக கொஞ்சம் லேட் ஆகும், ரெஸ்ட் ரூம் போகணும்னா இங்கயே போயிட்டு வந்துடு” என்று அங்கு ரிசெப்ஷனில் அமர்ந்துகொள்ள.
அவள் சென்றுவந்தாள் அங்கிருந்து கொஞ்சம் தூரம் சென்றவன் ஒரு சிறிய கடையில் நிறுத்தினான் , அவள் எட்டிப் பார்க்க “ஐயர் மெஸ்” என்று இருந்தது.
அங்கிருந்து பார்ஸல் வாங்கி வந்தான் , அவளுக்கு பசி தொடங்கி இருந்தது , நேரம் எட்டு மணியை கடந்துகொண்டிருக்க ஊரின் அருகே பாலத்தை நெருங்கி ஓரமாக வண்டியை நிறுத்தியவன் , கை கழுகி அவனே அவளுக்கு ஊட்டி விட்டான்.
முகம் முழுதும் சந்தோஷத்தில் விரிய ஆசையாக வாங்கி கொண்டாள், சுவை அப்படி இருந்தது , “நல்லா இருக்கா” என்க.
“ம்ம்ம்” என்று வாயை திறந்து வாங்கிக்கொண்டே இருந்தாள்.
“இது ஐயர் மெஸ் ரொம்ப கிளீனா இருக்கும் , டேஸ்ட் அதைவிட சூப்பர் அப்பா இங்கேயிருந்து வாங்கி தருவாங்க , கல்தோசை கெட்டி சட்னி ரொம்ப நல்லா இருக்கும் , அதனாலதான் உனக்கு அதேயே வாங்கினேன்” என்க.
“நீங்க சாப்பிடுங்க” என்றாள் அவனிடம் .
“நீ சாப்பிடு முதல்ல” என்றவன் அவள் எப்பொழுதும் உண்ணும் அளவை தாண்டியும் உண்ணுவதை நிறைவாக பார்த்துக்கொண்டே ஊட்டினான்.
அவள் போதும் என்றதும் அவனும் உண்டுவிட்டு அவளுடன் மெல்ல நடந்துகொண்டிருந்தான் , அவன் கை கோர்த்து அமைதியாக நடந்தாள், மீண்டும் வந்து வண்டியில் ஏற மிகுந்த அசதியில் நன்றாக உறங்கினாள்.
காரை மெதுவாக ஓட்டி சென்றவன் வீட்டில் சென்று நிறுத்தி இறங்க, அடித்து பிடித்து எழுந்தவள் அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள் .
“ஏய் தும்பி ஒன்னும் இல்லடா வீட்டுக்கு தான் வந்திருக்கோம் , நான் உன்கூட தான் இருக்கேன்” என்றபோது தான் அவள் உடலில் நடுக்கம் குறைந்தது , அவன் விழிகள் வேதனையை சுமந்தது.
அவன் தும்பியின் பிரச்னையை கண்டு கொண்டான் அதை சரி செய்யும் வழி மட்டும் அவனுக்கு தெரியவில்லை.
வீடே அமைதியாக இருக்க ஷ்யாமா மட்டும் இவர்களை காத்து அமர்ந்திருந்தார் “ஏன்மா தூங்க வேண்டியது தான” என்ற ஜெகன் கதவுகளை அடைத்து சரிபார்த்தான்.
“நீங்க வராம தூக்கம் வரலப்பா , அதனால என்ன போங்க ரெஸ்ட் எடுங்க” என்று அவர் அறைக்குள் சென்றுவிட்டார்.
தங்கள் அறைக்குள் சென்றவள் குளித்து உடைமாற்றி வர , போனில் தீவிரமாக எதையோ பார்த்திருந்தவன் சென்று குளித்து வந்தான், அதற்குள் உறங்க தொடங்கியிருந்தாள் , ஆனால் ஆழந்த உறக்கம் இல்லை.
இடையில் விழி திறந்து பார்ப்பதும் , அவள் அனுமதி இன்றி அடைந்து கொள்வதாகவும் இருந்தது , அவன் அருகில் சென்றதும் கைகளை பிடித்துக்கொண்டாள் .
சிறிது நேரம் அசைவின்றி படுத்திருந்தவள் எழுந்து அவன் புறம் திரும்பி அமர்ந்து “நந்தேட்டா திரும்ப எப்போ போகனும்” என்றாள் பரிதவிக்கும் விழிகளோடு.
அவளை தன் மீது சாய்த்துக் கொண்டவன் “தும்பி என்னடா யோசிக்கிற என்கிட்டே சொல்லு , இந்த தவிப்பை பாக்கமுடியலடி, எனக்கு நீ வேணும் தும்பிமா” என்றவனை இறுக்கமாக அனைத்துக்கொண்டவள் அழுகுரல் அந்த அறையை நிறைத்தது.
“என.. எனக்கு உங்க கூட வாழனும் உங்கள மாதிரி பாப்பா வேணும், ஆனா பயமா இருக்கு நீங.. நீங்க கொஞ்ச நாள்ல திரும்ப போய்டுவீங்களா… எனக்கு கஷ்டமா இருக்கு தனியா தூங்க முடியல”.
“உங்க வேலை அப்படி… எனக்கு புரியுது நந்தேட்டா , ஆனா என்னால முடியல நா.. நான் தப்பா ஆயிட்டேனா , பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு, செத்துபோய்டலாம்னு தோணுது” என்றபோது.
“ஷ் ஷ்” என்றவன் அணைப்பு இன்னும் இறுகியது.
“எனக்கு சாக வேண்டாம், தும்பிக்கு நந்தேட்டன் கூட இருக்கணும் ஏதாவது பண்ணுங்க , தும்பிக்கு நீங்க வேணும் ஏதாவது பண்ணுங்க” என்றவள் தேம்பி தேம்பி உறக்கத்திற்கு உடனே சென்றுவிட்டாள்.
அவனுடைய உறக்கம் தூர தேசம் சென்றது.
தன்னை மறந்து உறங்குபவளின் நெற்றியில் இதழ் பதித்தவன் “விடமாட்டேன் உன்ன எதுக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் , மீட்டு எடுத்துடுவேன் என் பழைய தும்பியா” என்றவன் அவள் இதழில் முத்தமிட்டு அலைபேசியுடன் எழுந்து பால்கணி சென்றான்.
சிலதினங்களாக இருந்த எண்ணம் இப்பொழுது வலுபெற்றது, அவளுக்கு மருத்துவ ஆலோசனை தேவை இங்கு எங்கேயும் வேண்டாம்.
தாங்கள் எங்கு எதற்க்காக செல்கிறோம் என்பதை எவரிடமும் சொல்ல விரும்பவில்லை , வெகு நேரம் ஆலோசித்து கூகுளை குடைந்து, இடத்தை தேர்வு செய்தான் “ஹிமாச்சல்”.
அங்கு இருந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆயுர்வேத சாலையின் விவரங்களை சேகரித்தான், முடிவு செய்த பிறகு எத்தனை சீக்கிரம் முடியுமோ அவளுடன் அங்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.
உறக்கம் வரவில்லை அதிகாலை நான்கு மணிக்கு அவளை அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான் , அவன் எழுந்து வந்த பொது வீடே பரபரப்பாக மாலை பெண் பார்க்கும் சடங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
இரு பக்கமும் கிட்டத்தட்ட சம்மதம் தான் அங்கு சென்று அவர்களுக்கும் விருப்பம் என்றால் இன்றே நிச்சயம் செய்து கொள்ளலாம் துன்றார் மாதவி , சரி என்று அனைவரும் ஒத்துக்கொண்டனர் .
மனைவியை தேட ஷ்யாமாவின் பின்னே ஏதோ கதை பேசிக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்தாள்.
“தும்பி” என்றவன் அழைப்பில் அடித்து பிடித்து வந்து நின்றவளை பார்த்தவன் “நான் எங்கயும் போகல சரியா, கொஞ்சம் வேலை இருக்கு யாரும் என்னை கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்க வேகமாக மண்டையை ஆட்டினாள்.
அவள் பார்வை படும் தூரத்தில் அவன் இருக்கிறான் என்ற நிம்மதி அந்த தலை ஆட்டலில் தெரிந்தது, பெருமூச்சோடு அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.
மனித மனம் விசித்திரமானது சுற்றம் நட்பு என்று அனைவரும் கூடி நின்று தாங்கியாலும் காதல் கொண்ட மனது தன்னை பொருட்டாக கூட மதிக்காத அந்த ஒருவனையே/ ஒருத்தியையோ தேடி ஓடும்.
மற்று சிலருக்கு தன்னை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் மனதில் எப்பொழுதும் ஒரு வெற்றிடம் இருக்கும் , அதை ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும்.
அம்மு இரண்டாம் வகை , தாய் தந்தையின் அன்பை அறியாதவள் சில உறவுகள் காயப்படுத்தினாலும் பலர் அவளை நேசித்தனர் , ஆனால் அவளின் மனதின் நிறைவு அவன் மட்டுமே.
அவளுக்கான உறவு… மற்ற யாரும் பகிர்ந்து கொள்ள முடியாத, யாருக்கும் விட்டுக்கொடுக்க விரும்பாத அவளுக்கு மட்டுமேயான உறவு.
வேதனைகளையும் வலிகளையும் கடந்து வந்தவளால் அவனின் விலகலை தாங்க இயலவில்லை , உணர்வுகள் மறித்தது நினைவுகள் தப்பியது , சூடு கண்ட பூனை போல ஒவ்வொரு முறையும் அவன் பிரிந்து செல்லுகையில் அது நிரந்தர பிரிவாய் ஆகுமோ என்று மனம் பயத்தில் தவித்தது.
அவளுக்காக தன் வேலையை கூட விட்டு விட அவன் தயாராக இருந்தான் , அவளை முதலில் சரி செய்யவேண்டும் தான் அவளுடன் இருப்பதை மட்டுமே அவள் விரும்புகிறாள் என்றால் எதை செய்யவும் அவன் தன்னை தயார் படுத்திக்கொண்டான்.
சேகரித்த விவரங்களை வைத்து ஹிமாச்சலின் அந்த ஆயிர்வேத சென்டருக்கு அழைத்தவன் தெளிவாக விவரங்களை கேட்டுக்கொண்டு மருத்துவரிடம் பேச அனுமதி வாங்கிக்கொண்டான்.
மலையாளம் தெரிந்த ஆளாக இருந்தால் நல்லது என்ற அவனின் கோரிக்கைக்கு ஏற்ப மத்திம வயதில் இருந்த பெண் மருத்துவர் அவர்களின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஆன்லைன் வழி மொத்த பணத்தையும் செலுத்திவிட்டான் , இரு வாரங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது அந்த மருத்துவருக்கு தங்கள் வாழ்வில் நடந்ததையும் மனைவியின் தற்போதைய நிலையையும் மேலோட்டமாக கூறினான்.
அனைத்தையும் குறித்துக்கொண்டவர் அவனுக்கு நம்பிக்கை அளித்தார்.
பயணத்திற்கு இருவருக்கும் விமான டிக்கெட் முதல் அனைத்தையும் ஏற்படு செய்துவிட்டுத்தான் கீழே இறங்கினான்.
மாலை அழகான இளம் மஞ்சள் நிறத்தில் தங்க சரிகை கொண்ட புடவை உடுத்தி மிதமான அலங்காரத்தில் ஜொலித்தாள் கார்த்தும்பி, அவனை பார்ப்பதும் கதவை பார்ப்பதுமாக இருந்தாள்.
எப்பொழுது வேண்டுமானாலும் ஷ்யாமாவிடம் இருந்து அழைப்பு வரலாம் , இவனானால் போனில் பேசிக்கொண்டே இருக்கிறான் “அப்படி என்னதான் பேசுவாரோ” என்று எண்ணிக்கொண்டே நிமிர்ந்து பார்க்க.
அவள் கைபிடித்து தன் அருகில் இழுத்தவன் அவளை கை வளைவில் நிறுத்தி “தும்பிமா சொக்க வெக்குறீங்களே” என்றவன் மீசை அவள் இதழில் உரச விழிகளை மூடிக் கொண்டாள்.
உதட்டுச்சாயம் இன்றி மிளிர்ந்தது அவள் அதரங்கள் , மெல்ல தொடங்கிய இதழ் ஒற்றல் ஆழ்ந்த முத்தமாக நீண்டது ஷ்யாமாவின் அழைப்பு ஏதும் அவள் செவிகளை அடையவில்லை.
மெல்ல விலகியவன் “நான் எப்போவும் உன்கூட இருப்பேன் அந்த நம்பிக்கை உனக்கு இருக்கணும் சரியா” என்க முகத்தின் செம்மை குறையாமல் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.