வீட்டுக்கு சென்றதும் தான் இருவருமே தங்களின் கிஃப்டை பிரித்துப் பார்த்தார்கள். அவனுக்கு இரண்டு டீஷார்ட் வாங்கிக் கொடுத்திருந்தாள் அவள். அவனோ அவளுக்கு பிடித்த கலரில் கேண்ட் பேக் ஒன்றை வாங்கித் தந்திருந்தான்.
அதன் பின் நாட்கள் அழகாக சென்றது. செமஷ்டர் எக்ஸாம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் போது கல்சுரல் வந்தது. அன்று பெண்கள் அனைவரும் சேலை கட்ட முடிவு எடுத்திருந்தார்கள்.
அழகான பிங்க் வண்ண டிசைனர் புடவை அணிந்து, தலைக்கு மல்லிகைப் பூச்சூடி ரோஜா மேல் மீதமிருக்கும் பனித்துளி போன்று அழகாக வந்தவளைக் கண்டு தீபக் திணறித் தான் போனான்.
புதிதாக அணிந்த சேலை, அதனால் வந்த வெட்கம் என்று தயக்கத்துடன் பஸ்ஸில் ஏறிய காயத்ரி யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தன்னுடைய சீட்டில் அமர்ந்தாள். அதன் பின்னர் எப்போதும் போல் தீபக்கை திரும்பி பார்த்தாள்.
ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்த தீபக் அடுத்த நொடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.
அவனுடைய முகம் திருப்பலை எண்ணி ஒரு பெருமூச்சுடன் திரும்பிக் கொண்டாள் காயத்ரி. “இவன் எப்ப தான் மாறுவானோ? பேசுறேன் பேசுறேன்னு சொல்றான். ஆனா சரியா பேச மாட்டிக்கான். இப்ப கூட ஒரு சின்ன சிரிப்பு இல்லை. எப்படி முகத்தை திருப்புறான்”, என்று எண்ணிக் கொண்டாள்.
அதே நேரம் அவனோ “எப்பா, இந்த பேபி இவ்வளவு அழகா? மூச்சடைக்குதே எனக்கு”, என்று எண்ணிக் கொண்டான்.
அவள் தன்னுடைய கை அணைப்புக்குள் இருக்க வேண்டும் என்று பேராவல் அவனுக்கு வந்தது. ஏற்கனவே நிகழ்ந்திருந்த இதழ் முத்தமும் நினைவில் வந்து அவனை பாடாய்ப் படுத்தியது.
“அவளைப் பாத்து திரும்பாத டா”, என்று தனைக்குள் சொல்லிக் கொண்டாலும் அவன் பார்வை அவளை நோக்கியே சென்றது.
சேலை சிறிதாக விலகியிருந்ததால் அவள் முதுகு சிறிது தெரிய அவனோ பார்வையை அவள் மீதிருந்து திருப்ப முடியாமல் தடுமாறினான்.
தன்னுடைய முதுகின் மீது ஊசிக் குத்தும் பார்வையை உணர்ந்தவள் படக்கென்று அவனை திரும்பி பார்க்க அப்படியே அவளிடம் மாட்டிக் கொண்டது அவன் பார்வை.
அவன் கண்களில் வழிந்த ஆர்வமும், தவிப்பும் அவளை எதுவோ செய்ய அவனை பார்த்த படியே இருந்தாள்.
திடீரென்று திரும்பி பார்ப்பாள் என்று எதிர் பார்க்காதவன் அவள் பார்த்துக் கொண்டே இருக்கவும் கண்களால் அவள் சேலையை சரி செய்யச் சொன்னான்.
ஒரு நொடியில் அவன் கண்களின் பாஷையை புரிந்து கொண்டவள் “ராஸ்கல், கண்ணு இவனுக்கு மட்டும் எங்க எல்லாம் போகுமோ?”, என்று எண்ணி புன்னகைத்துக் கொண்டாள்.
அவன் அவளிடம் பேச வில்லை என்றாலும் இந்த மாதிரியான நிகழ்வுகள் அவளுக்கு அதிகம் பிடிக்கும். அவளுக்கு நோட்ஸ் எடுத்து தருவது, படிப்பதற்கு உதவுவது, அப்சர்வேசன் நோட்டை அவளுக்கு எழுதக் கொடுப்பது என்று எப்போதுமே அக்கறையாக இருப்பான்.
பஸ்ஸில் இருந்து இறங்கியவள் அவன் வரவுக்காக காத்திருந்தாள். அவள் நிற்பதைப் பார்த்தவன் அவளுடன் கிளாசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
தன்னுடைய சேலையைப் பார்த்து ஏதாவது சொல்லுவான் என்று அவள் எதிர் பார்க்க அவனோ “காலைல என்ன சாப்பிட்ட?”, என்று கேட்டான்.
“இது இப்ப ரொம்ப தேவை”, என்று மனதுக்குள் எண்ணினாலும் “இட்லி”, என்று பதில் கொடுத்தாள்.
கிளாஸ் அருகே வரும் வரை அவன் எதுவுமே சொல்லாதது அவளுக்கு வருத்தமாக இருந்தது. “நல்லா இருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சிருவானா?”, என்று மனதுக்குள் குமைந்தாள்.
“காயு”
“ம்ம்”
“நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்காத”, என்று அவன் சொன்னதும் படபடப்பாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“உன் காலுல விழுந்து கெஞ்சி வேணும்னாலும் கேக்குறேன். தயவு செஞ்சு சேலை கட்டிட்டு என் கண்ணு முன்னாடி வராத. பிளீஸ்”, என்று ஒரு மாதிரி குரலில் முணுமுணுத்து விட்டு விரைந்து விட்டான்.
அப்படியே சிலை போல் அதே இடத்தில் நின்றாள் காயத்ரி. அவனுடைய வார்த்தைகள் அவளுக்கு பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தது.
“இப்ப என்ன உனக்கு சேலை நல்லாவே இல்லை அதனால கட்டாதேன்னு சொல்றானா? இல்லை, வேற எதுவும் அர்த்தமா?”, என்று திகைத்த படி கிளாசுக்கு சென்றாள்.
அவள் முகம் கலவரமாக இருக்க நந்தினி என்னவென்று விசாரித்தாள். தீபக் சொன்னதை காயத்ரி அப்படியே அவளிடம் ஒப்பித்தாள்.
அதைக் கேட்ட நந்தினி காயத்ரியை செய்த கிண்டலில் காயத்ரி முகம் சிவந்து போனது.
“இங்க பாரு காயு, அவனோட அளவுக்கு அதிகமான காதலால தான் அவன் அப்படிச் சொல்லிருக்கான். உனக்கும் அவனை பிடிச்சிருக்கு தானே? அப்புறம் என்ன டி? அவன் கிட்ட உன் காதலைச் சொல்லேன்”
“அவனை பிடிச்சிருக்கு நந்து. அதை சொல்றதுக்கு அவன் விடவே மாட்டிக்கான். நான் பேச வரதை அவன் கேக்குறதே இல்லை. இல்லைன்னா பேச்சை மாத்திறான்”
“ஏன், சட்டுனு உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிற வேண்டியது தானே?”
“அவன் கிட்ட சாதாரணமா பேசும் போது ஒண்ணும் தெரியலை டி. ஆனா இதைப் பத்தி சொல்ல நினைக்கும் போது வெக்கம் வந்து தொலைச்சிறுது. நீ எப்படி மதன் கிட்ட சொல்லாம இருக்கியோ அது மாதிரி”
“மதன் விஷயம் வேற. ஏன்னா மதன் என்கிட்ட வந்து இன்னும் காதலிக்கிறேன்னு சொல்லலை. ஆனா தீபக் அப்படி இல்லையே?”
“என்ன இல்லை? தீபக்கும் என்கிட்ட இது வரை காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லை. அதனால என்னாலயும் சொல்ல முடியலை. பாப்போம். என்கூட தானே இருக்கான். எங்க போயிறப் போறான்? சரி வா. எல்லாரும் கிளம்புறாங்க. நாமளும் ஆடிட்டோரியம் போவோம்”
“இவ்வளவு சீக்கிரமாவா? ஓஹோ, வெல்கம் டேன்ஸ் உங்க ஆளோடதுன்னு கூப்பிடுறியோ? சரி சரி வா”, என்று சொல்லி காயத்ரியை கிண்டல் அடித்த படியே சென்றாள் நந்தினி.
சொன்னது போல் வெல்கம் டேன்ஸ் தீபக் குருப் தான். அதன் பின் மற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் பின் ஸ்டேஜில் ஏறி காயத்ரி பாட்டுப் பாட அந்த பாடல் அவனுக்காக பாடப் பட்டது போல இருந்தது. அன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.
அன்று மாலை பஸ்ஸில் ஏறுவதற்கு முன்னர் “காலைல எதுக்கு அப்படிச் சொன்ன?”, என்று கேட்டாள் காயத்ரி.
“நீ ரொம்ப அழகா இருக்க, அதனால தான் சொன்னேன்”, என்று அவன் சொன்னால் தன்னுடைய மனதில் இருப்பதையும் அவனிடம் சொல்ல எண்ணியே அவ்வாறு கேட்டாள் காயத்ரி.
ஆனால் அவனோ “சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன். இனி எதுவும் சொல்ல மாட்டேன். சாரி”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
“பிடிகொடுக்கவே மாட்டுக்கானே”, என்று கடுப்புடன் எண்ணினாள் காயத்ரி.
அதே நேரம் அவனோ அவளுடைய அருகாமையை தவிர்க்கவே அங்கிருந்து விரைவாக சென்று விட்டான். பகல் முழுவதும் சேலையில் இருந்ததால் சிறிது கசங்கி, தலை முடி எல்லாம் கலைந்து, தலையில் இருந்த மல்லிகை பூ எல்லாம் வாடி, சோர்ந்த நிலையில் இருந்தாலும் அவ்வளவு அழகாக இருந்தாள் காயத்ரி.
அதுவும் “காலைல எதுக்கு அப்படிச் சொன்ன?”, என்று கேட்ட போது அவள் கண்களில் வழிந்த எதிர்பார்ப்பு அவனுக்கு அவளை அப்படியே வாரி அணைக்கும் ஆவலைக் கொடுத்தது. அதனாலே அவளிடம் கோபப் படுவது போல பேசி விட்டு சென்று விட்டான்.
அவர்களுக்குள் இருந்த பனித்திரை இப்படியே தான் கடந்தது. அவள் அதைப் பற்றி பேச வந்தாலே அவன் பேச்சை மாற்ற ஆரம்பித்தான். அதற்கு காரணம் அவனுக்குள் இருந்த குற்ற உணர்வு தான்.
தங்கள் வீட்டில் வைத்து காதலை கூட முறையாக சொல்லாமல் அவளிடம் அதிக நெருக்கமாக நடந்து கொண்டது தவறோ என்ற குழப்பம் அவனுக்கு இருந்தது. அதைப் பற்றி பேசினால் அது தவறு என்று தன்னை குற்றம் சாற்றி விடுவாளோ என்ற பயத்தில் தான் அந்த பேச்சில் இருந்து தப்பிக்கப் பார்த்தான்.
ஆனால் அவளிடம் மன்னிப்பை வேண்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனுக்கு வரவே இல்லை.
காலேஜ் கிசுகிசு, காதல், நட்பு, சீனியர்களின் பகை, சந்தோஷம், கலாட்டா என நாட்கள் மாதங்களாகவும் வருடங்களாகவும் கடந்தது. தீபக் காயத்ரி இருவரும் கடைசி வருடத்தில் இருந்தார்கள்.
தாமரை இலை தண்ணீர் போல தீபக், காயத்ரி உறவும் இருந்தது. அந்த வருடமும் வெகு வேகமாக சென்றது.
கேம்பஸ் இன்டர்வியூவில் தீபக், காயத்ரி, மதன், நிர்மல் உற்பட அவர்கள் கிளாசில் இருந்து இருபத்தி ஏழு பேர் ஒரே கம்பெனியில் செலக்ட் ஆகியிருந்தார்கள்.
நந்தினி, விக்னேஷ், தினேஷ் வேறு கம்பெனியில் செலக்ட் ஆகியிருந்தார்கள். அவர்களை விட இவர்களுக்கு தான் சம்பளமும் அதிகம்.
கிளாசில் சில பேருக்கு வேலை கிடைக்காமலும் இருந்தது. தீபக் குருப்பில் இருந்த நண்பர்களுக்கு ஒன்றாக வேலை செய்ய முடியவில்லையே என்று வருத்தம் தான். ஆனாலும் வேலை கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.
அடுத்து ஃபேர்வல் டே வைத்தார்கள். கண்ணீர் ஆறு தான் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் முந்தைய காலம் போல நண்பர்களிடம் காலேஜ் முடிந்ததும் தொடர்பு விட்டுப் போய் விடும் என்ற பயம் அவர்களிடத்தில் இல்லை.
அது தான் போன் இருக்கிறதே. நினைத்ததும் பேசிக் கொள்ளலாம் என்று இருந்ததால் தீபக் நண்பர்களுக்கிடையே எந்த வருத்தமும் இல்லை.
பங்ஷன் முடிந்ததும் கிளாசில் முதல் மாணவனாக வந்தது மட்டுமின்றி அனைத்து டிபார்ட்மெண்டிலும் முதலாவதாக வந்ததற்காக தீபக்க்கு விருது வழங்கப் பட்டது. கூடவே அந்த வருடத்தின் பெஸ்ட் அவுட் கோயிங்க் அவார்டும் அவனுக்கு வழங்கப் பட்டது. அவனுக்கு கிடைத்ததில் உண்மையாக சந்தோஷப் பட்டாள் காயத்ரி.
அதன் பின் ஆட்டோகிராப் பரிமாறிக் கொண்டார்கள். காயத்ரியும் அவனிடம் டைரியைக் கொடுத்தாள். அதை கையில் வாங்கியவன் “இப்ப இந்த நிமிசத்துல இருந்து நம்ம ரெண்டு பேரும் பாக்கவே மாட்டோம், நீ யாரோ நான் யாரோன்னு நீ நினைச்சா நான் எழுதித் தரேன். இல்லை, நாம எப்பவும் ஒண்ணா சேந்து தானே இருக்க போறோம்னு நினைச்சா…. ஐ மீன் ஒண்ணா ஒரே இடத்துல தானே வேலை செய்யப் போறோம்னு நினைச்சா நான் எழுத மாட்டேன், இப்ப நான் எழுதணுமா வேண்டாமான்னு நீ தான் சொல்லணும்”, என்று அவன் சொன்னதும் டைரியை பிடுங்கிக் கொண்டு சென்று விட்டாள் காயத்ரி.
“லூசு, ஒரே வார்த்தையில நாம ஒண்ணா தானே இருக்க போறோம்? எதுக்கு ஆட்டோகிராப்னு கேக்குரதை விட்டுட்டு சுத்தி வளைச்சு மூக்கைத் தொடுறான்”, என்று மனதுக்குள் திட்டினாள் காயத்ரி.
அதன் பின் காலேஜ் முடிந்து ரிசல்ட் வந்ததும் அனைவரும் வேலையில் சேர்ந்தார்கள். அங்கேயும் அனைவரின் நட்பும் எப்போதும் போல கடக்க வருடங்களும் உருண்டோடியது.
இடையில் தீபக் பாரின் கூட சென்று வந்து விட்டான். சௌமியும் அவர்கள் படித்த காலேஜிலே இன்ஜினியரிங் சேர்ந்திருந்தாள். நாட்கள் மிகவும் வேகமாக சென்று கொண்டிருந்தது.
படிப்பை நல்ல படியாக முடித்து நல்ல வேலையில் அமர்ந்த பிள்ளைகள் மேல் பெற்றவர்களின் மதிப்பு கூடித் தான் போனது. அது தானே அவர்களின் ஆசையும்.
எல்லாம் சாதாரணமாக சென்று கொண்டிருக்கும் போது ஒரு நாள் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் காயத்ரி. அப்போது “காயு, இன்னைக்கு சாயங்காலம் பெர்மிசன் வாங்கிட்டு கொஞ்சம் சீக்கிரம் வந்துரு”, என்றாள் கலாவதி.
“எதுக்கு மா?”
“உங்க அப்பா உன்னோட ஜாதகத்தை தரகர் கிட்ட கொடுத்திருந்தார். ஒரு நல்ல வரன் வந்திருக்கு. அவங்க இன்னைக்கு உன்னை பொண்ணு பாக்க வாராங்க”, என்று சொல்லி அவள் தலையில் குண்டைப் போட்டாள்.
அவள் அதிர்ந்து அமர்ந்திருக்க “நீ இன்னும் தீபக் கிட்ட பேசாம கண்ணாம்பூச்சி ஆடிட்டு இருந்தா இப்படித் தான் கா நடக்கும்”, என்று அவளிடம் சொல்லி விட்டு சென்றாள் சௌமி.
அந்த அதிர்ச்சியிலே வேலைக்கு வந்தவளின் முகம் சோகமாகவே இருந்தது. அன்றையே டீ டைமில் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது “என்ன ஆச்சு காயு, காலைல இருந்தே டல்லா இருக்க?”, என்று கேட்டான் மதன்.
தீபக்கும் அவள் முகத்தை தான் என்ன பதில் சொல்வாள் என்று பார்த்திருந்தான். அவனை ஒரு பார்வை பார்த்த காயத்ரி தன்னை பெண் பார்க்க வரப் போகும் செய்தியை சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
போகும் அவளையே கண்கள் சுருங்க பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் தீபக்.
காதல் தொடரும்!!!