அத்தியாயம் 13
தேன் சிந்தும் தமிழ் எடுத்து
கவிதை புனைய வந்தேன்
உந்தன் அழகைப் பாடி!!!
“என்ன டா பேசாம இருக்க? அவளை சமாதானப் படுத்து டா. இன்னும் பேசாம இருக்குறது தப்பு”, என்றான் மதன்.
“என்னை என்ன சொல்லச் சொல்ற மதன்? நான் ஏற்கனவே என்னோட காதலை அவளுக்கு புரிய வச்சிட்டேன். அதுக்கு அவ தான் பதில் சொல்லணும். இனி நான் ஒண்ணும் செய்ய முடியாது. என்னை உண்மைலே அவ விரும்பிருந்தா அவளே என்கிட்ட பேசுவா”
“இதுல என்ன தீபக் ஈகோ? இன்னைக்கு அவளை பொண்ணு பாக்க வரப் போறாங்க டா”
“அதுக்கு நான் என்ன செய்யட்டும்?”
“உனக்கு அதிர்ச்சியா இல்லையா மச்சான்?”
“அதிர்ச்சியா இல்லை. ஆனா கோபம் இருக்கு. அவ எப்படி பொண்ணு பாக்குற பங்சனுக்கு சம்மதிக்கலாம்? (Tramadol) அப்ப அவ மனசுல நான் இல்லை தானேன்னு நினைச்சு கோபம் வருது? கூடவே அவ முகத்தில் இருந்த சோகம் அவளுக்கு பொண்ணு பாக்க வரது பிடிக்கலையோன்னு எனக்கு சந்தோசத்தையும் தருது. நான் என்ன செய்ய?”
“அவ கிட்ட நேரா போய் பேசு டா”
“பேசணும்னு நினைக்கிறேன் டா. ஆனா ஏதோ தடுக்குது. அவளா வந்து ஏதாவது பேசுறாளான்னு பாப்போம்”, என்று சொல்லி தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.
தன்னிடம் ஏதாவது பேசுவானா என்று அடிக்கடி அவனை திரும்பி பார்த்தாள் காயத்ரி. ஆனால் அவனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை.
பேச வேண்டியவனும் பேச வில்லை. அவளாலும் அவனிடம் சென்று பேச முடிய வில்லை. என்ன செய்ய என்று தெரியாமல் தன்னுடைய தந்தையை போனில் அழைத்து விட்டாள்.
அதை எடுத்த முருகேசன் “சொல்லு குட்டி, இந்நேரம் என்ன டா போன்?”, என்று கேட்டார்.
“அப்பா, சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வறேன்னு சொன்னவங்களை வர வேண்டாம்னு சொல்லிருங்கபா. ப்ளீஸ்”, என்றதும் அந்த பக்கம் ஆழ்ந்த மௌனமே நிலவியது.
“அப்பா”
“இருக்கேன் டா, என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?”
“அப்பா… அது வந்து…”
“நான் இன்னைக்கு வரப் போற சம்பந்தத்தை மட்டும் தடுக்கணுமா? இல்லை பொதுவாவே மாப்பிள்ளை பாக்குறதை நிருத்தனுமா?”
“அப்பா, போன்ல என்னால எதுவுமே சொல்ல முடியலை. காரணம் நான் வீட்ல வந்து சொல்றேன். பிளீஸ் பா”, என்று சொன்னதும் அவரும் சரி என்றார்.
ஆனால் வீட்டுக்கு அழைத்து தகவலை சொல்லி விட்டார் முருகேசன். அதைக் கேட்ட கலாவதி “உங்க மக பேச்சைக் கேட்டு ஆடுங்க. எனக்கு என்னமோ பயமா இருக்குங்க”, என்று அவரைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
“விடு கலா, நடக்குறது தான் நடக்கும். என்னால என்னோட பொண்ணுங்களை கஷ்டப் படுத்த முடியாது. உனக்கு ஏதாவது தோனுதா?”
“நாம அடிக்கடி பேசிக்கிற விஷயம் தான். தீபக்கை கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்வாளோ?’
“இருக்கலாம். அப்படி இருந்தா உன்னோட பதில் என்ன கலா?”
“அவன் நல்ல பையன் தான். இருந்தாலும் நீங்களே தெளிவா முடிவு எடுத்துக்கோங்க. இன்னைக்கு வர வேண்டியவங்க கிட்ட வர வேண்டாம்னு சொன்னதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”
“எதுக்குன்னு காரணம் கேட்டாங்க. நான் எங்க பொண்ணுக்கு இப்ப கல்யாணம் பண்ண ஐடியா இல்லைன்னு சொல்லிட்டேன். சரி கலா, சாயங்காலம் காயத்ரியே ஏதாவது சொன்னா கேட்டுக்கலாம். நம்மளா அவ கிட்ட கேட்டு அவளை கஷ்டப் படுத்த வேண்டாம்”
“சரிங்க”, என்று சொல்லி போனை வைத்த கலா ஸ்டடி லீவில் வீட்டில் இருந்த சௌமியிடம் அனைத்தையும் சொல்லி விட்டாள்.
அனைத்தையும் கேட்ட சௌமிக்கு இப்போதைக்கு நிம்மதியாக இருந்தாலும் “இந்த அக்கா எப்ப தெளிவான முடிவு எடுப்பா?”, என்ற கேள்வி எழுந்தது. அன்று மாலை அவளிடம் தெளிவாக பேச வேண்டும் என்று எண்ணினாள்.
அதே நேரம் மனம் கணக்க தன்னுடைய சீட்டில் அமர்ந்திருந்தாள் காயத்ரி. தந்தையிடம் சொன்ன பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனாலும் தான் சொன்ன உடனே சரி என்று சொல்லும் இப்படி ஒரு தந்தை யாருக்கு கிடைக்கும் என்று அவளுக்கு பெருமிதமாக இருந்தது.
அப்படி பாசம் வைத்திருக்கும் பெற்றோரிடம் எப்படி தீபக்கை திருமணம் செய்ய கேட்பது என்று அவளுக்கு கேள்வி எழுந்தது.
“வீட்ல கேக்குறது இருக்கட்டும். முதல்ல சம்மந்தப் பட்டவன் கிட்ட எப்ப பேசப் போற?”, என்று கேள்வி எழுப்பியது அவள் மனசாட்சி.
அதை எண்ணி தான் அவளுக்கு எரிச்சலே வந்தது. அவன் திடமாக இருந்தால் அவளும் தைரியமாக பேசுவாள். ஆனால் அவனோ எதிலும் பட்டும் படாமல் இருந்தால் அவளால் என்ன செய்ய முடியும்.
அவள் மனதில் சலனத்தை விதைத்து விட்டு அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பவனை எண்ணி அவளுக்கு கோபமும் வந்தது.
“நான் பேசாட்டி இருந்தேன். காதலிக்கிறியான்னு கேட்டான். அதுக்கு பதிலை யோசிக்கிறதுக்குள்ள கட்டி புடிச்சு, முத்தம் கொடுத்து, அதுக்கப்புறம் சண்டை போட்டு பேசாம இருந்து… சே.. அவன் பேசாம முத்தத்தைக் கொடுத்துட்டு போய்ட்டான். அன்னைல இருந்து எத்தனை நாள் அதை நினைச்சு தூங்காம இருந்துருக்கேன்னு அவனுக்கு தெரியுமா?”, என்று எரிச்சலுடன் எண்ணினாள்.
இதுவே அவன் திடமாக வந்து உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லி, வீட்டுக்கு பெண் கேட்டு வந்தால் இவளும் வீட்டில் இவனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பேச எளிதாக இருக்கும்.
இப்போது தான் தன்னுடைய வீட்டில் அவனை விரும்புவதைச் சொல்லி அவர்கள் வீட்டில் இருந்து பெண் கேட்டு வருவார்களா என்று தன்னுடைய வீட்டில் கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாள்? இல்லை அவனிடம் தான் எப்படி என்னை பெண் கேட்டு வா என்று அவளால் சொல்ல முடியும்?
“பெரிய இவனாட்டம் காதல் காதல்னு பினாத்துனான். ஆனா அந்த காதலுக்கு அவன் என்ன மரியாதை செஞ்சிருக்கான்?”, என்று கடுப்பானவள் அதற்கு மேல் வேலை செய்ய முடியாமல் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டாள்.
அவள் செல்வதைக் கண்ட தீபக்க்கு பெண் பார்க்க சீக்கிரம் வரச் சொன்னதால் தான் செல்கிறாளோ என்ற கோபம் வந்தது.
“அப்படின்னா, இவ மனசுல நான் எந்த சலனத்தையும் ஏற்படுத்தலையா? என்னோட காதல் அவளை எந்த விதத்துலயும் பாதிக்கலையா?”, என்று எண்ணிய படி அமர்ந்திருந்தான்.
“டேய் மச்சான், காயு வீட்டுக்கு கிளம்பிட்டா டா”, என்றான் மதன்.
“பாத்துட்டு தானே இருக்கேன். என்னமோ அவ கிட்ட போய் பேசச் சொன்ன? வேற மாப்பிள்ளையை கட்டிக்க அவ தயாரான பிறகு அவ கிட்ட கெஞ்ச சொல்றியா? போகும் போது ஒரு வார்த்தை சொல்லிட்டு போறாளா பாரேன். நான் அவ மனசுல இல்லை டா. அவ என்னை ஒரு நல்ல பிரண்டா தான் நினைச்சிட்டு இருக்கா போல? கடைசி வரை பிரண்டாவே இருந்துட்டு போறேன்”, என்று சொல்லி விட்டு வேலையில் ஆழ்ந்தான்.
மதனுக்கு தான் மண்டையை பிச்சிக் கொள்ளலாம் போல இருந்தது. அன்று மாலை நந்தினியிடம் சொல்லி காயத்ரியிடம் பேச சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் மதன்.
லீவ் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த காயத்ரியை பார்த்து திகைத்தாலும் கலாவதி அவளிடம் எதையுமே கேட்க வில்லை. அவளாகவே எல்லாம் சொல்லட்டும் என்று பொறுமையாக இருந்தாள்.
ஆனால் அறைக்குள் வந்ததும் சௌமி அவளை பிடித்துக் கொண்டாள்.
“அக்கா, எனக்கு உண்மை தெரியணும். அன்னைக்கு என்ன தான் ஆச்சு?”, என்று சௌமி கேட்டதும் அவளிடம் என்ன சொல்ல, எப்படி சொல்ல என்று திணறினாள் காயத்ரி.
“என்ன சொல்ல சொல்ற? ஒண்ணுமே நடக்கலை”
“இல்லை நம்ப மாட்டேன். அன்னைல இருந்து நீ சரியே இல்லை. கேட்டதுக்கும் பதில் இல்லை. கண்டிப்பா மா… தீபக் தப்பு பண்ணிருக்க மாட்டாங்க”, என்றாள் சௌமி. மாமா என்று சொல்ல வந்து தன்னை திருத்திக் கொண்டாள்.
“என்ன அவனுக்கு ஓவரா சப்போர்ட் பண்ணுற? அது என்ன அவன் தப்பு பண்ணிருக்க மாட்டான்னு இவ்வளவு தெளிவா சொல்ற?”
“அன்னைக்கு நீ சாரு அக்காவைப் பாத்துட்டு கோபத்துல இருந்த. நம்ம கிட்ட தீபக் பேச வந்தப்ப நீ அங்க இருந்து போய்ட்ட”
“ஆமா அதுக்கென்ன? இதுல அவன் மேல எந்த தப்புமே இல்லைன்னு எப்படி சொல்ற?”
“நீ போன அப்புறம், என்கிட்ட என்ன ஆச்சுன்னு கேட்டாங்க”
“ஓ, நீ என்ன உளறி வச்ச? தீபக்கும் சாருவும் பேசுறதுக்கு நான் பொறாமை படுறேன்னு சொல்லி வச்சியா? உடனே அவன் காதல்னு முடிவு பண்ணிட்டானா?”
“இதை இல்லைன்னு சொல்றியா? சரி சரி முறைக்காத. நான் அன்னைக்கு நடந்ததை சொல்லிறேன். நான் சாரு பத்தி விசாரிச்சதுக்கு அந்த அக்கா யாருன்னு சொன்னாங்க. நீ மட்டும் தான் அவங்களுக்கு ஸ்பெஷல்னு சொன்னாங்க. நான் உடனே நீங்க என்னோட அக்காவை லவ் பண்ணுறீங்களான்னு கேட்டேன்”, என்று சௌமி சொன்னதும் அவளை அதிர்வாக நோக்கிய காயத்ரி “என்னது? சௌமி நீ என்ன டி சொல்ற?”, என்று கேட்டாள்.
“என்னை என்ன பண்ண சொல்ற? எனக்கு அப்படித் தான் தோணுச்சு. அதான் கேட்டேன்”
“அதுக்கு அவன் என்ன சொன்னான்?”, என்று படபடப்பாக கேட்டாள் காயத்ரி.
“கிழிஞ்சது போ, இன்னும் நீங்க அதையே பேசிக்கலையா? அப்ப மாமா உன்கிட்ட காதலை சொல்லவே இல்லையா?”
“என்ன டி மாமான்னு எல்லாம் சொல்ற? முதல்ல அன்னைக்கு அவன் என்ன தான் பதில் சொன்னான்?”
“நான் அப்படிக் கேட்டதுக்கு ஏன் என்னை உன் மாமாவா நீ ஏத்துக்க மாட்டியான்னு கேட்டாங்க?”, என்று சொன்னதும் காயத்ரி கண்களில் மின்னல் வந்தது.
“சௌமி நீ சொல்றது நிஜமா?”
“ஆமாக்கா. நானும் இப்படி ஒரு சூப்பர் மாமா கிடைச்சா யாருக்கு தான் பிடிக்காதுன்னு கேட்டேன். உடனே அவங்களும் சரி நான் அக்கா கிட்ட போய் சொல்றேன். யாரும் வராம பாத்துக்கோன்னு என்கிட்ட சொல்லிட்டு தானே உன்னை பாக்க வந்தாங்க. அப்புறம் என்ன ஆச்சு?”
“அப்புறம்…. அப்புறம்…”, என்று இழுத்தவளின் முகம் சிவந்து போனது.
“அக்கா என்ன வெக்கமெல்லாம் படுற? என்ன தான் அன்னைக்கு ஆச்சு?”
“நீ சின்ன பொண்ணு டி. அதை விடு. நீ சொல்றது எல்லாம் நிஜம் தானா?”
“நான் சொல்றது எல்லாம் உண்மை தான். ஆமா அது என்ன என்னை சின்ன பொண்ணுன்னு சொல்றது? இந்த விஷயம் நடந்தது உன்னோட செகண்ட் இயர்ல தானே? இப்ப நான் பைனல் இயர் படிக்கிறேன். அதனால பெரிய பொண்ணு தான். என்னன்னு சொல்லு”
“வாயாடி, அன்னைக்கு,… நானும் சாரு பத்தி தான் கேட்டேன். அதை சொல்லிக்கிட்டே கிட்ட வந்து முத்தம் கொடுத்துட்டான் டி”
“வாரே வா. மாமா தூள் அக்கா. அப்புறம் என்ன ஆச்சு?”
“அம்மா சத்தம், அப்புறம் உன் சத்தம் கேட்டது. உடனே இப்ப நீ என்னை விடலைன்னா நான் செத்துருவேன்னு சொன்னேன். உடனே அவனுக்கு கோபம் வந்து திட்டிட்டான்”
“அடப்பாவி நீ ஏன்கா அப்படிச் சொன்ன? உனக்கும் தான் மாமாவை பிடிச்சிருந்ததே? அப்புறம் என்ன?”
“யாராவது பாத்தா என்ன ஆகும் டி? மானமே போயிருக்கும்”
“நான் காவலுக்கு நிக்குறேன்னு நினைச்சிருந்துருப்பாங்க”
“அது எனக்கு இப்ப தானே தெரியும்? நீ முன்னாடியே சொல்லிருக்கலாம்ல?”
“ஏன் சொல்ல மாட்ட? நான் விசாரிக்க வரப்ப எல்லாம் அதைப் பத்தி பேசாதேன்னு என்னை துரத்தி விட்டது நீ தான். சரி சரி அடுத்து என்ன பண்ண போற?”
“தெரியலை சௌமி”
“நாளைக்கு தீபக் கிட்ட பேசு. அப்புறம் அம்மா அப்பா கிட்ட பேசலாம். ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”
“சரி”, என்றவளுக்கு அதன் பின் உற்சாகமாகவே இருந்தது. அப்போது நந்தினி அழைத்து அவளிடம் மதன் பேசச் சொன்னதைப் பேச அவள் சந்தோஷம் இன்னும் அதிகமானது.