“டேய் குஞ்சு, போற நேரத்துல என்ன டா இப்படி. வர வர உனக்கு பொறுப்பே இல்லை டா”, என்றாள் வேணி.
“படுத்தாத மா. என் ரூம்ல தான் இருக்கும். எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி கொண்டே அவன் உள்ளே போகும் போது தேன்மொழியும் அவனுடன் சென்றாள்.
அவன் டிக்கட்டை தேடும் போது “டேய் செல்வா, நான் தினேஷ் பத்தி கண்டு பிடிச்சிட்டேன் டா. அவன் கீதாவை லவ் பண்ணுறானாம்”, என்றாள் தேன்மொழி.
“என்னது உனக்கும் தெரிஞ்சிருச்சா?”, என்று அவசரமாக கேட்ட செல்வா நாக்கை கடித்துக் கொண்டான். “ஐயோ இந்த பொம்பளை ரவுடிகிட்ட உளறிட்டேனே?”
“உனக்குமா? அப்ப ஏற்கனவே உனக்கு தெரியுமா? தெரியாதுன்னு நினைச்சு உன்கிட்ட சொல்ல வந்தேன் பாரு. ஆனா நீ என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்க?”, என்று கேட்டு அவனை முறைத்தாள்.
“ஹி ஹி, நீ ஓட்டை வாய். அதான் வேற ஏதாவது பிரச்சனை வந்துட்டுன்னா?”
“உன்னை அடிக்கிற ஆசை எனக்கு இப்ப இல்லை. அப்புறமா வச்சிக்கிறேன் உன்னை. சரி எப்படி கண்டு பிடிச்ச?”
“உங்க கல்யாண வீடியோவை பாத்தேன். அதுல அண்ணன் முழுக்க கீதாவை தான் பாத்துட்டு இருந்தான். ஆமா உனக்கு எப்படி தெரியும்? என்னை மாதிரி சி ஐ டி வேலை பாத்தியா?”
“எதுக்கு டா அந்த வேலை? அவனே வந்து என்கிட்ட சொல்லிட்டான்”
“என்னது??”
“ஆமா டா, அவ நம்பர் கேட்டான். நீ வாழ்க்கைல என்ன பண்ண போறேன்னு முடிவு எடு, அப்புறம் தறேன்னு சொன்னேன்”
“அதான் சார், இப்ப கூட்டத்தை கூட்டி ஐடியா கேக்காரோ? ஆனா பாரேன் அவனுக்கு நம்மளை எல்லாம் பிரிஞ்சு இருக்க முடியாதாம்”
“விடு விடு, அவனைப் பத்தி தான் நமக்கு தெரியுமே. எப்படியோ நல்லா இருந்தா சரி தான்”
“நல்ல அண்ணி. அப்புறம் நாளைக்கு எனக்கும் இப்படி ஒரு ஹெல்ப் தேவை பட்டா நீ தான் செய்யணும். இதுவே என் கட்டளை”
“ஆமாங்க டா, ஒவ்வொருத்தன் காதலையா சேத்து வைக்க தான் நான் பொறப்பெடுத்துருக்கேன்”
“நீ பிறந்ததுல இருந்து உன்னை லவ் பண்ணிட்டு இருக்கான் கதிர் அண்ணன். அவன் சகவாசம் உனக்கு இருக்குல்ல? அதனால நீ தாராளமா ஹெல்ப் பண்ணலாம். டிக்கட் கிடைச்சிருச்சு இந்தா, வா போகலாம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள். அதே குழப்பத்தோடு வெளியே வந்தவள் நேராக பார்த்தது கதிர் முகத்தை தான்.
ஒரு நொடி அவளைப் பார்த்தவன் அடுத்த நொடி முகத்தை திருப்பிக் கொண்டான். “அடேய், என் முகத்தைக் கூட அவனுக்கு பாக்க பிடிக்கலை. இதுல வேற பிறந்ததுல இருந்து காதலாம். நான் என் அம்மா வயித்துக்குள்ள இருக்கும் போதே காதல்னு சொல்லுவீங்க போல? ஒரு வேளை எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காதுன்னு தெரிஞ்சா எல்லாரும் கவலைப் படுவாங்கன்னு இப்படி பொய் சொல்லி வச்சிருக்கானோ?”, என்று அவள் மனதுக்குள் அலசிக் கொண்டிருக்கும் போது “கிளம்பலாமா தேனு?”, என்று கேட்டான் கதிர்.
பின் அனைவரிடமும் சொல்லி விட்டு எல்லாருடைய அறிவுரையும் கேட்டு விட்டு கிளம்பினார்கள். காரில் தான் அவர்கள் பயணம். காரும் கதிருடையது தான். ஆனால் அவனுக்கு வழி தெரியாது என்பதால் தெரிந்த டிரைவரை மட்டும் வர சொல்லி இருந்தான்.
அவர் வந்ததும் அவர்கள் தேனிலவு பயணம் தொடங்கியது. காரில் டிரைவர் இருந்ததால் இருவருக்குள்ளும் மௌனமே நிலவியது. இரவு அங்கு சென்று சேர்ந்தவர்கள் ஏற்கனவே காட்டேஜ் புக் செய்திருந்ததால் உள்ளே சென்று குளித்து விட்டு சாப்பிட்டார்கள்.
“கார்ல உக்காந்துட்டே வந்தது உனக்கு களைப்பா இருக்கும். நீ தூங்கு, நாளைக்கு பேசிக்கலாம்”, என்று சொல்லி படுத்து விட்டான் கதிர். அவன் அருகே படுத்த தேன்மொழியும் நன்கு உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலையில் காலேஜ்க்கு கிளம்பிக் கொண்டிருந்தான் செல்வா. தன்னுடைய வண்டியை எடுத்தவன் நேராக சென்றது நவீன் வீட்டுக்கு தான். நவீனும் கிளம்பி இருக்கவே அவனை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
அவன் வகுப்பறைக்கு சென்றதும் அவன் கண்கள் தேடியது ஒரு ஆளைத்தான். ஆனால் அவன் தேடிய ஆள் இன்னும் அங்கே வந்திருக்க வில்லை.
நண்பர்கள் அவனுடைய கதிரின் திருமண கதையை பற்றி பேசிக் கொண்டிருக்க, அவர்களுடன் செல்வாவும் கதை பேசிக் கொண்டிருந்தான்.
அவன் எதிர் பார்த்த ஆள் வரவும் அவனை அறியாமலே அவன் தலை திரும்பி அந்த பக்கம் பார்த்தது. அடுத்த நொடி கண்டு கொள்ளாதது போல திரும்பிக் கொண்டான்.
அது வேறு யாரும் அல்ல. அவனுடன் படிக்கும் சௌமியா தான். அந்த கல்லூரியிலே அவள் தான் பணக்காரி என்று சொன்னால் அது மிகையாகாது. காலேஜ் வந்த முதல் நாளே அவளை சற்று ஆர்வமாக பார்த்தான் செல்வா. அப்போது அவள் பணக்காரி என்று அவனுக்கு தெரியாது.
[the_ad id=”6605″]
ஆனால் சிறிது சிறிதாக அவள் நிலை புரிய வந்தது. அவள் நிலை மட்டும் அல்ல, அவளுடைய திமிரும் தான் தான் என்ற அகங்காரமும் புரிந்தது. அதுவும் அவளைப் பற்றி அவன் முழுதாக அறிந்தது முதல் செமஸ்டர் ரிசல்ட் வந்த போது தான்.
சௌமியா வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் அதிக செல்லம். வீட்டில் அவள் வைத்தது தான் சட்டம் என்று இருப்பதால் வெளியேவும் அப்படியே இருக்க நினைப்பவள். ஆனால் படிப்பில் கெட்டிக்காரி. படிப்பு மட்டும் அல்ல, நடக்கும் அனைத்து போட்டியிலும் முதலிடம் பிடிக்க எண்ணுவாள். அதற்க்காக உழைக்கவும் செய்வாள்.
ஆனால் அவள் வீட்டில் உள்ளவர்களைத் தவிர வேற யாரையும் அவள் மதிக்கவும் மாட்டாள். மொத்தத்தில் திருவிழா என்றால் அவள் தான் சாமியாக இருக்க வேண்டும். இழவு வீடு என்றால் அவள் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்.
அவள் குணம் தெரியாமல் அவளை அவள் அறியாமல் ஆர்வமாக பார்த்த செல்வா அவள் குணம் அறிந்து அவளை கண்டு கொள்ளாமல் இருக்க பழகி கொண்டான். ஆனாலும் அவள் அழகு அவனை சில சமையம் அசைத்து தான் பார்க்கும்.
முதல் செமஸ்டர் பரீட்சை முடிவுகள் வந்த போது தான் தான் முதலிடம் வருவோம் என்று எண்ணி இருந்த சௌமி முதல் முறையாக அதிர்ச்சியை சந்தித்தாள்.
ஏனென்றால் சௌமி இரண்டாவதாக வந்திருந்தாள். முதல் மதிப்பெண்களை பெற்றது நீலவேணி என்ற பெண்.
“என்ன டி, நீதான் பர்ஸ்ட் வருவேன்னு சொல்லிட்டு இருந்த. இப்ப என்னடான்னா அவ வந்துருக்கா”,என்று அவளுடைய தோளிகள் ஏற்றி விட அவள் வன்மம் அந்த நீலவேணி மேல் வளர்ந்தது.
நீலவேணி ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய பரம்பரையிலே இவள் தான் படிக்கவே செய்கிறாள். அவளுடைய அப்பா செருப்பு தைப்பவர். அவளுடைய படிப்பு செலவை அவள் வீட்டருகே இருக்கும் சர்ச் பாதர் தான் ஏற்கிறார். அதனால் கவனமாக படித்து முதலிடத்தை பெற்றாள்.
நீலவேணி தன்னுடைய நிலமையை முதல் நாள் தன்னைப் பற்றி சொல்ல சொல்லும் போதே அவள் சொல்லி இருந்ததால் சௌமி போன்றவர்கள் அவளை ஏளனம் செய்வார்கள். நடுத்தர வீட்டு பிள்ளைகள் அவளிடம் நட்புடன் பழகுவார்கள்.
“செருப்பு தைக்கும் வீட்டில் உள்ளவ என்னை விட ஒரு மார்க் அதிகம் வாங்கிட்டாளே”,என்று எண்ணிய சௌமி அவளை பழி வாங்க காத்திருந்தாள்.
ஒரு நாள் சௌமி காலில் தெரியாமல் நீலவேணி மிதித்து விட அடுத்த நொடி அவளை அறைந்திருந்தாள் சௌமி. ஆனால் அதற்கு அடுத்த நொடி சௌமியை அறைந்தான் செல்வா.
அனைவரும் ஸ்தம்பித்து நிற்க “அவ தான் தெரியாம மிதிச்சிட்டேன்னு சாரின்னு சொல்றாள்ல? எதுக்கு கையை நீட்டுற?”, என்று அவளை திட்டவும் செய்தான்.
[the_ad id=”6605″]
அதில் இருந்து சௌமிக்கு செல்வாவைக் கண்டாலே பிடிக்காது. செல்வாவுக்கு அவள் குணம் பிடிக்காது தான். ஆனால் கிளாசில் இருக்காளா இல்லையா என்று அடிக்கடி சோதிப்பான்.
“அந்த திமிர் பிடிச்சவளை எதுக்கு நீ தேடுற?”, என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டாலும் அவனால் அதை விட முடிய வில்லை.
இன்று அவள் வந்ததை பார்த்தவன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் திரும்பிக் கொண்டான். ஆனால் அவளோ கனல் கக்கிய விழிகளோடு அவனை முறைத்துக் கொண்டே தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
அப்போது நீலவேணி உள்ளே வரவும் “ஹாய், வேணி”,என்று சொல்லி சிரித்தான் செல்வா.
“ஹாய் செல்வா, கல்யாணம் நல்ல படியா முடிஞ்சதா?”, என்று கேட்டாள் நீலவேணி.
“சூப்பரா போச்சு”
“எங்களை எல்லாம் எதுக்கு நீ கூப்பிடலை?”
“என் கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிடுறேன்”,என்று சொல்லி சிரித்தவன் “எனக்கு எல்லா நோட்ஸையும் கொடு. மொத்தமா எழுதணும்”, என்றான்.
“சரி செல்வா, சாயங்காலம் வாங்கிட்டு போ.நான் வேணா ஏதாவது எழுதி தரவா?”
“அதெல்லாம் வேண்டாம் பா. என் சின்ன அண்ணன் எழுதி தருவான்”, என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆசிரியர் வர அனைவரின் கவனமும் அவர் பக்கம் சென்றது.
ஆனால் சௌமி மட்டும் இருவரையும் முறைத்த படியே இருந்தாள்.
அந்த வகுப்பு முடியும் தருவாயில் “உங்க கிளாஸ் இண்டஸ்ட்ரியல் விசிட் போகுறதுக்கு ஹெச். ஓ. டி பெர்மிசன் கொடுத்துருக்காங்க. உங்க கிளாஸ் இன்சார்ஜ் கிட்ட பேசிட்டு எங்க போகன்னு முடிவு பண்ணுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார் அந்த லெக்சரர்.
அவர் சென்றதும் அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்த இரண்டு பீரியட் கழித்து வந்த கிளாஸ் இன்சார்ஜ் பேங்களூர்,மைசூர் போகலாம் என சொல்ல அதன் படி செலவு கணக்கு அனைத்தும் ஆலோசிக்க பட்டு ஆளுக்கு முவ்வாயிரம் என்றும் இந்த வாரம் கடைசி வரை பேர் கொடுக்கலாம் என்றும் முடிவெடுக்க பட்டது.
“நீ ஐ.வி போறியா நீலவேணி?”, என்று கேட்டான் செல்வா.
[the_ad id=”6605″]
“நானா? என்னைப் பத்தி தெரிஞ்சுமா நீ கேக்குற?”, என்று மனதுக்குள் எழுந்த வலியை மறைத்துக் கொண்டு சொன்னாள் நீலவேணி.
“ஹேய், ஒண்ணு பண்ணலாம். நீ என்னோட ஃபிரண்ட் தானே? நான் உனக்கு பைசா தரேன். நீ வேணும்னா போயிட்டு வா, கடனா நினைச்சிக்கோ. நீ வேலைக்கு போன அப்புறம் திருப்பி கொடு”
நீலவேணி எவ்வளவோ மறுத்தும் “நான் தருவேன், நீ கண்டிப்பா போற”,என்று முடித்து விட்டான்.
“வேண்டாம்னு சொல்றேன் கேக்க மாட்டிக்க. நான் நாளைக்கு எங்க வீட்ல கேட்டுட்டு வரேன். சரி நீ போகலையா செல்வா?”
“எங்க அம்மா பத்தி சொல்லிருக்கேன்ல? எங்கயும் விட மாட்டாங்க., நான் அவங்க கண் முன்னால தான் இருக்கணும். நான் போறேன்னு அடம் பிடிச்சா வேணி போக கூடாதுன்னு அடம் பிடிக்கும். வேணின்னு பேர் வச்சிருக்குறவங்க எல்லாம் பாசக் காரங்க போல? அப்படி தானே வேணி”
“ஹா ஹா, அம்மாவை நான் கேட்டேன்னு சொல்லு செல்வா”, என்று நீலவேணி சொன்னதும் அவளிடம் பேசி விட்டு நவீனுடன் பேசிக் கொண்டிருந்தான் செல்வா. இவர்கள் பேசுவதை ஒரு புகைச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமி.
“டூருக்கா வர? வாடி உனக்கு இருக்கு”, என்று எண்ணிக் கொண்டாள் சௌமி.
காதல் தீயை நீர் அணைக்குமா?…