அத்தியாயம் 15
உந்தன் இனிமையான
குரலில் செல்லக் குயிலின்
இன்னிசையைக் கேட்டேன் நான்!!!
தன்னுடைய போனை எடுத்த காயத்ரி “சொல்லுங்கம்மா”, என்றாள்.
“எப்ப வர காயு?”
“வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் மா”
“எப்படி டி வர?”
“அது… அது வந்து…”
“மாப்பிள்ளை கூடயா வர?”
“ஆமா மா”
“சரி, நல்லதா போச்சு. தனியா எப்படி வருவியோன்னு உங்க அப்பா புலம்பிட்டு இருக்கார். நானும் அப்பாவும் பத்திரிக்கை கொடுக்க வெளிய போறோம் டா. வீட்டு சாவி ஜன்னல்ல வச்சிருக்கேன். அதை சொல்லத் தான் கூப்பிட்டேன். மாப்பிள்ளை இருப்பாரா, உடனே கிளம்பிருவாரா? அவர் கொஞ்ச நேரம் இருப்பார்னா நாங்களும் இருக்கோம். நாளைக்கு வேணும்னா பத்திரிக்கை கொடுக்க போறோம்”
“என்னை விட்டுட்டு அவன் கிளம்பிருவான் மா. நீங்க போயிட்டு வாங்க”
“அப்ப சரி வைக்கிறேன். ஏண்டி இப்படி அவன் இவன்னு கல்யாணத்தன்னைக்கு பேசித் தொலையாத. யாரும் ஏதாவது நினைச்சுக்குவாங்க டா”
“அது பழக்கத்துல வருது மா. குறைச்சிக்கிறேன்”
“சரி நாங்க கிளம்புறோம். இப்ப கிளம்பினா தான் நைட் சீக்கிரம் வர முடியும்? நாங்க வர லேட் ஆச்சுன்னா தோசை ஊத்தி சாபிட்டுருங்க என்ன? பாத்து வாங்க”, என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும் தீபக் எதுவுமே அவளிடம் கேட்க வில்லை. இருவருக்கும் மௌனமான பயணமாக இருந்தது. அவன் அமைதி அவளை பாதிக்க மெதுவாக அவன் முதுகில் சாய்ந்தாள் காயத்ரி.
அவளுடைய அருகாமையில் கிளர்ந்து எழுந்தவன் “காயு சாயாம நேரா உக்காரு”, என்றான். உறுமலாக வந்தது அவன் குரல்.
அவன் அப்படிச் சொன்னதும் படக்கென்று நிமிர்ந்து அமர்ந்து விட்டாள். அவன் பேசாமல் இருக்கிறானே என்று எண்ணி வம்பிழுக்க தான் அப்படிச் செய்தாள். ஆனால் அவன் அப்படி முகத்தில் அடிப்பது போல சொன்னதும் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
வீட்டுக்கு சென்றதும் அவளை இறக்கி விட்டவன் கிளம்பப் பார்த்தான்.
“உள்ள வந்துட்டு போ”, என்றாள் காயத்ரி.
“வீட்ல யாரும் இல்லை. இப்ப போல கூப்பிடுற? நான் கிளம்புறேன்”
“நான் ஒண்ணும் கண்டவனை கூப்பிடலை. ஒழுங்கா உள்ள வா”
“ஆமா, வந்தா மட்டும்….. நான் தான் என்னோட வெக்கத்தை விட்டு உன்கிட்ட கெஞ்சனும். நான் கிளம்புறேன் பா. ஆளை விடு”
“இப்ப நீ உள்ள வர. அவ்வளவு தான். வா”, என்ற சொல்லோடு நகர்ந்து வீட்டுக்குள் சென்று விட்டாள்.
அவளுடைய அருகாமை அவனுக்கும் பிடிக்க சரி கொஞ்ச நேரம் அவள் முகத்தையாவது பார்க்கலாமே என்று எண்ணி அவள் பின்னே சென்றான்.
வீட்டுக்குள் சென்றதும் சோபாவில் அமர்ந்து விட்டான். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். அந்த சூழ்நிலை அவனுக்கு வேறு விதமான எண்ணங்களை விதைத்தது.
திருமணத்திற்கு பின் இருவரும் எப்படி இருப்போம் என்ற நினைவை அவனுக்குள் விதைக்க ஆசையாக அவளைப் பார்த்தான். பட்டுப் புடவை கசங்கி, காற்றில் தலை முடி கலைந்த நிலையிலும் அவ்வளவு அழகாக இருந்தாள் காயத்ரி.
அவள் மீதிருந்த பார்வையை எடுக்க முடியாமல் மடக் மடக்கென்று அவள் தந்த தண்ணீரைக் குடித்தவன் “கல்யாணத்துல பாக்கலாம். பை”, என்று சொல்லி விட்டு கிளம்ப எழுந்து விட்டான்.
அவன் வாசலை நோக்கி நடக்க “அவன் கிட்ட பேசு டி, அவன் போறான் டி. அவனை எப்படியாவது தடுத்து நிறுத்து. இன்னொரு தடவை இப்படி ஒரு சந்தர்ப்பம் வராது”, என்று குரல் கொடுத்தது மனசாட்சி.
ஒரு வாய் வார்த்தையாக கூட அவள் தன்னை இருக்க சொல்ல வில்லையே என்ற மனத்தாங்களுடன் தான் வாசலை நோக்கி நடந்தான் தீபக். அப்போது ஓடிச் சென்று அவனுடைய இடுப்பை வளைத்து அவன் பின் பக்கமாக கட்டிக் கொண்டாள் காயத்ரி.
அவள் முகம் அவன் முதுகில் புதைந்திருந்தது. சத்தியமாக அவளிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அவன் மனம் குளிர்ந்து போனது. இந்த தேடலைத் தானே அவளிடம் இருந்து பெற முயன்றான்.
இப்போது வரை தன்னை பிடித்திருக்கிறது என்று ஒரு வார்த்தை கூட அவள் சொல்ல வில்லையே என்ற அவனுடைய மனத்தாங்கல் அவனை விட்டுச் சென்றிருந்தது.
ஏதேதோ பேச வேண்டும் என்று எண்ணி தான் அவனை நெருங்கினாள் காயத்ரி. ஆனால் மனதில் இருப்பதை அவளால் துளி அளவு கூட வெளியே சொல்ல முடியவில்லை.
அவனை இறுக கட்டிப் பிடித்திருந்தாலும் அவனுக்கு முத்தம் கொடுக்கும் அளவுக்கு தைரியம் எல்லாம் அவளுக்கு வர வில்லை. ஆனால் இதற்கு மேல் அவனுக்கு புரிய வைக்க வில்லை என்றால் இருவருக்கும் கஷ்டம் என்பதால் தான் அவனை நெருங்கி விட்டாள். ஆனால் அந்த உணர்வுகளை அவனிடம் காட்ட முடியாமல் அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
அவளுடைய கண்ணீர் அவன் முதுகை நனைக்க “காயு என்ன ஆச்சு? எதுக்கு அழுற?”, என்று குழப்பமாக கேட்டான் தீபக். அவளுடைய செய்கையும் அழுகையும் அவனுக்கு குழப்பத்தைக் கொடுத்தது. அவளை கை நீட்டி முன் பக்கமாக அவள் முகத்தை நிமிர்த்து தன்னைப் பார்க்க வைத்தான்.
அவளின் இதழ்கள் துடித்துக் கொண்டிருந்தது. மூடியிருந்த இமைகள் வழியாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவளை நெருங்காமல் இருந்தவன் அவளுடைய அழுகைக்கான காரணத்தை விசாரித்த படியே இருந்தான்.
அவனாக தன்னை நெருங்கப் போவதில்லை என்று உணர்ந்தவள் அடுத்த நொடி அவன் மார்பில் முகம் புதைத்தாள். தன்னுடைய தவிப்பை அவன் நெஞ்சில் சாய்ந்தே அவனுக்கு உணர்த்தினாள்.
அவளுடைய செய்கையை நம்ப முடியாமல் பார்த்தான் தீபக். “காயு, என்ன மா என்ன ஆச்சு? எதுக்கு இந்த அழுகை?”, என்று அவன் கேட்டும் அவளிடம் பதில் இல்லை.
“காயு, இப்ப நீ சொல்லலைன்னா நான் கிளம்புறேன்”, என்று சொல்லி அவனுடைய இடையில் இருந்த அவளுடைய கரத்தை விலக்க முயல அவளோ அவனை இன்னும் இறுக கட்டிக் கொண்டு பிரிய மறுத்தாள்.
“என்ன ஆச்சுன்னு சொல்லு டி. இப்படி அழுதுட்டு இருந்தா நான் என்ன நினைக்கிறது? இது வரைக்கு ஏதாவது மனசை திறந்து சொல்லிருக்கியா? இப்பவாது சொல்லு. எதுக்கு அழுற?”
“நீ எதுக்கு என்னை அவாய்ட் பண்ணுற?”, என்று அழுது கொண்டே கேட்டாள் காயத்ரி.
“ஏன் உனக்கு தெரியாதா? எத்தனை தடவை அதை சொல்லிட்டேன்? அப்புறம் நான் உன்னை அவாய்ட் பண்ண நினைக்கலை. உன்கிட்ட இருந்து விலகி தான் இருக்கேன். அது எதுக்குன்னு உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்”
“சொன்ன சரி, ஆனா அதுக்கான பதிலை என்கிட்ட கேட்டியா? இப்ப நமக்கு கல்யாணம் ஆகலை. அதனால விலகி இருக்க சரி. நாளைக்கு நான் உன் வீட்டுக்கு வந்த அப்புறமும் இப்படித் தான் இருப்பியா?”
“ஆமா இப்படித் தான் இருப்பேன். நான் தொட்டா செத்துருவேன்னு நீ சொன்னப்புறம் என்னால எப்படி உன்னை நெருங்க முடியும்? கல்யாணத்துக்கு அப்புறமும் உன்கிட்ட முத்தத்துக்காக கெஞ்சிட்டு தான் அலைவேன்னு நினைக்கிறேன்”, என்று சொல்லும் போது அவனுக்கே சிரிப்பு தான் வந்தது. அந்த சூழ்நிலை எப்படி இருக்கும் என்று அவன் கண் முன் காட்சியாக வந்தது.
“லூசா நீ? நான் அன்னைக்கு அந்த அர்த்தத்துல சொல்லலை. இன்னைக்காவது என்னை பேச விடு. யாராவது வந்துருவாங்களோன்னு பயத்துல, அப்படி சொன்னா தான் நீ விலகுவன்னு நினைச்சு தான் நான் அன்னைக்கு அப்படிச் சொன்னேன். உன்னோட தொடுகை பிடிக்கலைன்னா நீ முத்தம் கொடுத்தப்பவே உன்னை விலக்கிருப்பேன் தானே? அம்மா சத்தம், சௌமி சத்தம் எல்லாம் கேட்டுச்சு. யாரும் வந்துரக் கூடாதுன்னு தான் அப்படிச் சொன்னேன். அந்த நிலைமைல யாராவது நம்மளைப் பாத்தா என்ன நினைப்பாங்க? ஆனா நீ சௌமியை காவலுக்கு வச்சிட்டு வந்துருப்பேன்னு எனக்கு தெரியாது. அவ இப்ப கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் அந்த விசயத்தையே எனக்கு சொன்னா தீபு”
“ஏய், என்ன டி சொல்ற? அப்ப என்னை பிடிக்காம இல்லையா? உண்மைலே அன்னைக்கு நடந்தது உனக்கு பிடிச்சிருந்ததா?”, என்று கேட்டவனின் குரலில் ஆர்வம் கொப்பளித்தது.
“பிடிக்காம தான் உன் முத்தத்தை வாங்கிட்டு உன் கை அணைப்புல நின்னேனா? அதை நீ உணரவே இல்லையா? இப்ப கல்யாணமும் உன்னை பிடிக்காம தான் பண்ணிக்க போறேனா? என்கிட்ட எதுக்குன்னு காரணம் கேக்க கூட உனக்கு மனசு இல்லைல? நீயா உன் இஷ்டத்துக்கு முடிவு பண்ணிக்கிற? உன்னோட இஷ்டத்துக்கு என்னை லவ் பண்ணின. அதை சொல்லக் கூட செய்யாம திடீர்னு அப்படி எல்லாம் செஞ்சா நான் என்ன ஆவேனாம்?”
“அப்படி இல்லை டி செல்லம், அப்ப இருந்த மன நிலைல என்னால யோசிக்க முடியலை. அப்புறம் நீ சொன்னது நிஜமாவே உனக்கு என்னை பிடிக்கலையோன்னு தான் என்னை நினைக்க வச்சது. சாரி மா”
“இனி என்ன ஆனாலும் என்கிட்ட கேளு. நீயா மனசுக்குள்ள குழம்பி என்னைக் கஷ்டப் படுத்தாத”
“சரி இப்ப கேக்குறேன். என்னை லவ் பண்ணுறியா?”
“ஆமான்னு தான் நினைக்கிறேன்”, என்று புன்னகையுடன் சொன்னாள் காயத்ரி.
“எது என்ன பதில் டி?”
“நீ முறையா புரப்போஸ் பண்ணிருந்தா நானும் சரியா சொல்லிருப்பேன். உனக்கு இது போதும் போ. எத்தனை நாள் நான் சரியா தூங்கலை தெரியுமா?”
“எனக்கும் தான் டி கஷ்டம்? ஒரு முத்தம் கூட கிடைக்க மாட்டிக்குன்னு”
“ரொம்ப முக்கியம்?”
“எனக்கு அது தான் முக்கியம்? முறைக்காத சும்மா சொன்னேன் டி. ஏதாவது தேவையில்லாம பேசி உன்னைக் கஷ்டப் படுத்திரக் கூடாதுன்னு தான் பேசாம இருந்தேன்”
“இனி இப்படி பண்ணாத தீபு”
“இப்படி கட்டி புடிச்சிட்டு இருக்குற பொண்டாட்டிக்கிட்ட நான் ஏன் பேசாம இருக்கப் போறேன்?”
“போடா”, என்று சொல்லிக் கொண்டே அவன் நெஞ்சில் இருந்து விலகினாள்.
அவள் இடையில் கரம் கொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் “இப்பவும் விளக்கம் தானே சொல்ற? கேட்டதைத் தரலையே?”, என்றான்.
“அதை கேக்க தான் செய்யணும்னு இல்லை. கொடுக்கவும் செய்யலாம்”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள் காயத்ரி.
அவள் அப்படிச் சொன்னதும் “ஏய் என்ன சொன்ன?”, என்று பரபரத்தவன் அவளை இன்னும் இறுக்கி அணைத்தான்.
சேலை மறைக்காத வெற்றிடையில் இருந்த அவன் கரம் மேலும் அவள் உடலில் அழுந்தியது. அவன் கைகளில் இருந்த கதகதப்பு அவள் உடல் முழுவதும் பரவுவது போல உணர்ந்தாள் அவள்.