அத்தியாயம் 16_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,948
அத்தியாயம் 16
பயம் கொண்டு என்னை நோக்கிய
உந்தன் விழிகள் எப்போது காதலை
பிரதிபலிக்கும் பெண்ணே?!!!
காலை ஒன்பது மணிக்கு கண் விழித்த விக்ரம் தன்னுடைய கைக்குள் சுகமாய் தூங்கிக் கொண்டிருந்த ரேகாவைக் கண்டு சந்தோஷமாக புன்னகைத்துக் கொண்டான். முந்தைய நாள் இரவு முழுவதும் நடந்தது நினைவில் வந்தது.
தன்னுடன் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ்ந்த அவளை அவனுக்கு அவ்வளவு பிடித்தது. இரவு நடந்ததை நினைத்ததில் அவன் உணர்வுகள் மீண்டும் தலை தூக்க அவளை தன்னை நோக்கி இருக்கினான் விக்ரம். அவன் தழுவலில் தூக்கம் கலைந்தவள் அவனுடைய நோக்கம் புரிந்து அவனது முடிகள் படர்ந்த வெற்று மார்பில் முகம் புதைத்து அவனுக்கு இன்னும் நெருக்கமானாள்.
அவள் முகத்தை விலக்கி அவள் இதழ்களில் முத்தமிட அவன் முயல “ஐயோ பல்லு விளக்கலை”, என்றாள் ரேகா.
“நானும் தான் விளக்கலை. அதுக்கு இது சரியா போச்சு டி”, என்று சொல்லிக் கொண்டே இதழ் பதித்தவன் தன்னுடைய தேடலை துவங்க அதன் பின்னர் இருவரும் சேர்ந்து தான் குளிக்க சென்றார்கள்.
குளித்து முடித்து வெளியே வந்ததும் இருவருக்கும் கீழே போகவே தயக்கமாக இருந்தது. “மணி பத்தாக போகுது. இப்ப கீழே போனா எல்லாரும் என்ன நினைப்பாங்களோன்னு இருக்கு. அதனால் நைட் முழுக்க நீ கால் வலின்னு அழுத, அதனால நைட் எல்லாம் சரியா தூங்காம காலைல தூங்கிட்டோம்னு சொல்லிறேன். அக்காவும் அண்ணியும் கேட்டா நீயும் இதையே சொல்லிரு. நைட் நடந்தது நமக்குள்ளயே இருக்கட்டும். நீ சேலை கட்டிட்டு ரெஸ்ட் எடு. நான் கீழே தலையை காட்டுறேன்”, என்று புன்னகையுடன் சொல்லி விட்டு கீழே சென்றான் விக்ரம். நேற்றைய நினைவில் முகம் சிவந்த படி சேலையைக் கட்ட ஆரம்பித்தாள் ரேகா.
புன்னகையுடன் கீழே வந்த விக்ரமிடம் சாரதாவும் சேதுபதியும் ரேகாவின் கால் வலி பற்றி விசாரிக்க அவனுடைய மலர்ந்த முகம் ஆதிக்கு மட்டும் வேறு கதை சொன்னது. “பய வாழ்ந்துட்டான்”, என்று எண்ணி தனக்குள் புன்னகைத்துக் கொண்ட ஆதி அதை அவனிடம் கேட்டு அவனை சங்கடப் படுத்த விரும்பவில்லை.
சேலையைக் கட்டி முடித்த ரேகா அறையிலே இருந்து கொண்டாள். அவளை அனைவரும் அறைக்கு வந்தே பார்த்தார்கள். “நைட் எல்லாம் சரியா தூங்கலையாமே? அதனால சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு. வேலைக்கு போறதை பத்தி எல்லாம் யோசிக்க கூடாது ரேகா”, என்றாள் சாரதா.
“ஆமா ரேகா, உங்க ஆஃபிஸ்ல எவ்வளவு பணம் கேட்டாலும் நாங்க அடைச்சிக்கிறோம். இங்க ஏதாவது வேலைக்கு போய்க்கலாம். நீ வந்த அப்புறம் தான் வீடு வீடாவே இருக்கு”, என்று சொன்னார் சேதுபதி.
அனைவரிடமும் சந்தோஷமாக தலையாட்டிய ரேகாவை ஒரு ஓரமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
அதன் பின் அனைவரும் கீழே செல்ல மஞ்சுவும் காயத்ரியும் மட்டும் ரேகாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“சரி அண்ணி, நாம கீழே போவோம். அவ நைட் எல்லாம் சரியா தூங்காததுனால அவ கண்ணு சிவந்து இருக்கு பாருங்க”, என்று காயத்ரியிடம் சொன்னாள் மஞ்சு.
“ஆமா ஆமா போக வேண்டியது தான். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு டவுட். ரேகா, நீ நைட் முழுக்க கால் வலினால தான் சரியா தூங்கலையா?”, என்று கேட்ட காயத்ரி ரேகாவைப் பார்த்து கண்ணடித்தாள். ரேகா முகம் சிவந்து விட்டது.
“அக்கா”, என்று அவள் சிணுங்களாக அழைக்க “இப்ப தான் உன்னையும் விக்ரமையும் பாக்க சந்தோஷமா இருக்கு. அவனை அப்படியே இறுக்கிப் பிடிச்சிக்கோ. நாங்க இப்ப இங்க இருந்து போனதும் இங்க விக்ரம் வந்துருவான் பாரு”, என்றாள் காயத்ரி.
மேலும் பத்து நிமிடங்களுக்கு மேல் அவளை கிண்டல் அடித்து விட்டே அங்கிருந்து சென்றார்கள். காயத்ரி சொன்ன படி அவர்கள் சென்றதும் அங்கே வந்த விக்ரம் ரேகாவை ஓய்வு எடுக்கவே விட வில்லை.
இங்கே அவர்கள் சந்தோஷமாக இருக்க அதே நேரம் தன்னுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் சங்கரன். அடுத்து என்ன என்று சிந்தித்து சிந்தித்து அவர் மூளை வெகுவாக சோர்ந்து போனது.
ரேகா விக்ரம் திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் இது வரை விக்ரமிடம் இருந்து அவருக்கு எந்த தகவலும் வர வில்லை. ஓரிரு முறை அவர் அவனை அழைத்தாலும் அவன் அவர் போனை எடுக்க வில்லை.
இனியும் பொறுக்க முடியாது என்று எண்ணி அவனை போனில் அழைத்த சங்கரன் இன்று அவன் போனை எடுக்க வில்லை என்றால் நாளை அவனை நேரில் பார்த்து தான் முடிவு எடுக்க வேண்டும் என்று எண்ணினார்.
அழைப்பது சங்கரன் என்று தெரிந்தத்தும் ஒரு நொடி புன்னகைத்த விக்ரம் அந்த போனை சட்டையே செய்யாமல் தன்னுடைய வேலையை பார்த்தான்.
மீண்டும் அவர் அடித்தார். அப்போதும் அவன் அலட்சியமாக தான் இருந்தான்.
மூன்றாவது முறை அடிக்கும் போது தான் அதை எடுத்தான். எடுத்ததும் “ஒரு தடவை போனை எடுக்கலைன்னா அவங்க வேலைல இருப்பாங்கன்னு புரியுற அளவுக்கு கூட உங்களுக்கு அறிவில்லையா சங்கரன்?”, என்று நக்கலாக கேட்டான் விக்ரம்.
அவன் நக்கலில் கொதித்துப் போன சங்கரன் “தம்பி வார்த்தை வேற மாதிரி வருது. பாத்து பேசுங்க”, என்றார்.
“போன்ல எப்படி பாத்து பேச முடியும் சங்கரன்? உங்க அழகான முகத்தைப் பாத்து பேச நீங்க என்ன வீடியோ காலா பண்ணிருக்கீங்க? சரி சரி உங்க கிட்ட வெட்டியா பேசினா என் நேரம் தான் வீணாகும். என்ன விஷயமா கால் பண்ணினீங்க? சீக்கிரம் சொல்லிட்டு போனை வைங்க”, என்றான் விக்ரம்.
அவன் உதாசீனத்தில் பல்லைக் கடித்த சங்கரன் அதை வெளியே காட்டாமல் “அந்த சேட்டு கால் பண்ணினார்”, என்றார்.
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “அதை எதுக்கு என் கிட்ட சொல்றீங்க?”, என்று கேட்டான் விக்ரம்.
“தம்பி”, என்று அவர் கத்த “இப்ப எதுக்கு சங்கரன் கத்துறீங்க? சேட்டு உங்களுக்கு பணம் கொடுத்துருக்கார். நீங்க அவர் கிட்ட வாங்கிருக்கீங்க? இதுல இடைல இருக்குற நான் எதுக்கு இதை தெரிஞ்சிக்கணும்”, என்று கேட்டான்.
“விளையாடாதீங்க விக்ரம். நான் அந்த வீட்டை அடமானம் வச்சு உங்க கிட்ட தான் பணம் வாங்கினேன். ஆனா சேட்டு தான் எனக்கு பணம் கொடுத்தேன்னு சொல்றான். சரி நீங்களோ அவனோ யாரோ பணம் கொடுத்ததா வச்சிக்கிட்டாலும் எங்க வீட்டுப் பத்திரம் உங்க கிட்ட தானே இருக்கு? அதைக் கொடுங்க. நான் அதை சேட்டுக் கிட்ட கொடுக்கணும். அவன் ஒண்ணு பணத்தைக் கொடு, இல்லைனா வீட்டைக் கொடுன்னு சொல்றான். எழுபத்தி அஞ்சு லட்சம் எல்லாம் என்னால புரட்ட முடியாது. வீட்டுப் பத்திரத்தை அவன் கிட்ட கொடுக்கணும். அது உங்க கிட்ட தானே இருக்கு? அதை நான் எப்ப வந்து வாங்கிக்கட்டும்?”
“உங்க வீட்டு பத்திரம் என் கிட்ட இருக்கா? இது என்ன புதுக் கதை?”, என்று நக்கலாக கேட்டான் விக்ரம்.
“விளையாடாதீங்க தம்பி, நான் உங்க கிட்ட போன மாசம் ஒரு பத்திரத்தைக் கொடுத்து பணம் வாங்கினேன்ல? அந்த பத்திரம் எனக்கு இப்ப வேணும். சேட்டு பணம் கேக்குறான். என் பொண்ணுக்கு கல்யாணம் வேற கூடி வர மாதிரி இருக்கு. அதனால கை காசை எல்லாம் எடுக்க முடியாது. இப்ப நீங்க பத்திரத்தைக் கொடுத்தா சேட்டு கிட்ட அதைக் கொடுத்துருவேன். கொடுங்க”
“ஹலோ மிஸ்டர் சங்கரன், முதல்ல உங்க வீட்டு பத்திரம் என் கிட்ட இல்லை ஓகே?”
“விக்ரம்”
“சொல்றதை முழுசா கேளுங்க. என் கிட்ட நீங்க கொடுத்தது ரேகாவோட வீட்டு பத்திரம். அதாவது என் மனைவியோட வீட்டுப் பத்திரம். ரேகாவுக்கு கூட பிறந்தவங்க யாருமே இல்லை. அதனால அவ வீடு புருசனான எனக்கு வந்திருக்கு. அதை எதுக்கு நான் உங்க கிட்ட கொடுக்கணும்?”, என்று அவன் கேட்டதும் மொத்தமாக அதிர்ந்து போனார் சங்கரன்.
“அப்ப நான் வாங்கின கடனை எப்படி அடைக்க?”
“அது உங்க தலை வலி. சேட்டு கிட்ட வாங்கின கடனை நீங்க தான் அடைக்கணும். என் கிட்ட நீங்க கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பத்திரம் இப்ப சேட்டு கிட்ட இருக்கு. இனி நீங்களாச்சு அவனாச்சு”
“விளையாடாதீங்க விக்ரம். நீங்க பேசுறது எதுவும் சரியில்லை”
“உங்க கூட விளையாடுறதுக்கு நீங்க என் அத்தை பையன் பாருங்க. அட போங்க சார். சரி உங்களுக்கு ஒரு வழி சொல்றேன். என் பொண்டாட்டி வீட்டை வச்சு எழுபத்தி அஞ்சு லட்சம் வாங்கினீங்கல்ல? அந்த பணத்தை அப்படியே சேட்டு கிட்ட கொடுத்து கடனை அடைங்க. அந்த பணத்தைக் கொடுத்துட்டா உங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை தானே?”
”அப்ப வீடு”
“அது உங்க வீடு இல்லை. ரேகா வீடு. நியாயமா பாத்தா அவ இப்ப உங்க மேல கேஸ் போடலாம் தெரியுமா? அவ அனுமதி இல்லாமலே அவ வீட்டை வச்சு பணம் வாங்கிருக்கீங்க”
“விக்ரம் அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்? நீங்க கொடுத்த பணம் எல்லாம் செலவாகிருச்சு”
“எப்படி செலவாச்சுனு தான் எனக்கு தெரியுமே? குன்னூர்ல ஐம்பது லட்சத்துக்கு ஒரு எஸ்டேட், அப்புறம் இருபத்தி அஞ்சு லட்சத்துக்கு உங்க மகள் மனைவிக்கு நகை வாங்கினது எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா? உங்க குடும்பத்துக்காக நீங்க கடன் வாங்கிருக்கீங்க. அப்ப நீங்க தான் அந்த கடனை அடைக்கணும்?”
“இது ஏமாத்துற வேலை விக்ரம். ரேகா வீட்டை நீங்க என்னை ஏமாத்தி வாங்கிக்கிட்டீங்க. இது நம்பிக்கை துரோகம்”
“ஆமா என் பொண்டாட்டிக்கு சேர வேண்டிய நகைகளையும் வீட்டையும் அவளுக்கு வாங்கிக் கொடுத்துருக்கேன். இன்னும் அவ சொத்து கணக்கை கணக்கு போட்டு வாங்கினேன்னு வைங்க, இப்ப நீங்க குடியிருக்குற வீடும் காணாம போயிரும். ஆனா நான் இதோட நிறுத்திக்கலாம்னு பாக்குறேன். என்ன இருந்தாலும் இவ்வளவு வருஷம் என் மனைவிக்கு கார்டியனா இருந்துருக்கீங்கல்ல அதான். சரி இதோட நம்ம டீலிங்கை எல்லாம் முடிச்சிக்கலாம். சேட்டு கிட்ட வாங்கின கடனை நீங்களே அடைச்சிக்கோங்க”, என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
திகைத்துப் போய் அமர்ந்திருந்தார் சங்கரன். மகனுக்காக ஆசையாக வாங்கிருந்த எஸ்டேட் கையை விட்டு போக போகுதா? மகளுக்காக ஆசையாக வாங்கின நகையை விற்க வேண்டுமா? என்று அவருக்கு தலை வேதனையாக இருந்தது.
விக்ரம் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று அவர் கனவிலும் எண்ண வில்லை.
அவர் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சுங்க, மாப்பிள்ளை வீட்ல இருந்து கால் பண்ணினாங்களா? நிச்சயம் முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது. இன்னும் கல்யாண தேதி குறிக்கலையே?”, என்று கேட்டாள் வேணி.
“இன்னைக்கு தான் நாள் குறிக்க போறதா சொன்னாங்க. போயிட்டு வந்து சொல்வாங்க”, என்றார் சங்கரன்.
“சரிங்க, நல்ல விஷயம் தானே நடக்க போகுது. உங்க முகம் எதுக்கு ஒரு மாதிரி இருக்கு”
“அந்த விக்ரம் நம்ம காலை வாரிட்டான் வேணி”
“என்னங்க சொல்றீங்க? அவன் தான் அந்த ரேகாவை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டானே?”
“ஆமா செட்டில் ஆகிட்டான் தான். ஆனா என் தலைல கல்லைத் தூக்கி போட்டுட்டான்”
“விவரமா சொல்லுங்க, எனக்கு பதறுதுங்க”, என்றதும் சங்கரன் அனைத்தையும் சொன்னார்.
அவனுடைய ஏமாற்று வேலையை அறிந்த வேணி திகைத்து போனாள்.
முதலில் இவர்களின் மகளுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையை ரேகா கெடுத்தாள். இப்போது விக்ரம் இவர்கள் தலையில் கடன் சுமையை ஏற்றி இருக்கிறான். இதை எண்ணி நெஞ்சம் கொதித்தது வேணிக்கு.
ரேகா விக்ரம் திருமணம் முடிந்த உடனே தாயும் மகளும் அவளை நிம்மதியாக வாழ விடக் கூடாது என்று தான் முடிவு எடுத்தார்கள். ஆனால் அப்போது வர்ஷாவை ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து பெண் கேட்டு வர தாய் மற்றும் மகளின் கவனம் ரேகா புறம் செல்ல வில்லை. இப்போது இப்படி நடக்கவும் கடுப்பான வேணி நேராக விக்ரம் வீட்டுக்கு கிளம்பி விட்டாள். சங்கரனுக்கு தெரிந்தால் அவளைத் தடுப்பார் என்பதால் அவரிடம் சொல்லாமலே சென்று விட்டாள்.
மஞ்சு குடும்பத்தை வழி அனுப்ப விக்ரம் சென்றிருந்தான். ஆதி காயத்ரியை அழைத்துக் கொண்டு காயத்ரி வீட்டுக்கு சென்றிருந்தான். சாரதா சேதுபதி தம்பதியினரும் ரேகாவும் தான் வீட்டில் இருந்தார்கள் .
சேதுபதி சோபாவில் சாய்ந்து அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க “இது என்ன தலைல எண்ணைய் இல்லாம இருக்க? இரு எண்ணெய் தேச்சு விடுறேன்”, என்று சொல்லி ரேகாவுக்கு எண்ணெய் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள் சாரதா. ரேகா, சாரதா, சேதுபதி மூவரும் கதை பேசிய படியே அமர்ந்திருக்க அப்போது தான் உள்ளே வந்தாள் வேணி.