அதே தயக்கத்துடன் தான் அறைக்குள் வந்தாள் தேன்மொழி. “சாயங்காலம் நடந்த மாதிரி நடக்குமா?”, என்று எண்ணமிட்டாள்.
அவளைப் பார்த்ததும் அவளை கட்டி அணைக்க அவன் செல்கள் அனைத்தும் பரபரக்க “இங்க இருந்தா ஆபத்து”, என்று எண்ணி கீழே சென்று விட்டான்.
“என்னை பிடிக்காம தான் போறானோ?”, என்று எண்ணியவளுக்கு கவலையாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் தன் வேலையைப் பார்த்தாள்.
பின் இரவு சாப்பிடும் போதும் கதிர் அவள் முகத்தை பார்க்கவே இல்லை. அவர்கள் அப்படி இருக்க தினேஷ் கீதாவின் பார்வை நொடிக்கொருதரம் ஒருவரை ஒருவர் தீண்டிச் சென்றது.
செல்வா மட்டுமே அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருந்தான். உணவையும் முடித்து விட்டு அனைவரும் அவரவர் அறைக்கு சென்றார்கள். கதிர் மட்டும் டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
“கதிர் நேரம் ஆகுது. தூங்க போ”, என்று மதி ஒரு சத்தம் கொடுத்ததும் எல்லாத்தையும் அணைத்து விட்டு மேலே வந்தான். ஆனாலும் அறைக்குள் செல்ல மனதில்லை. அவன் மனம் முழுவதும் தேன்மொழிக்காக ஏங்கியது. இப்போது உள்ளே சென்றால் நிம்மதியாக தூங்க முடியாது என்ற உண்மை புரிந்து மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.
இவ்வளவு நாள் அவள் தன்னுடன் இருந்தால் மட்டும் போதும் என்று எண்ணமிட்டவன் முதல் முறையாக அவளை அப்படியே எடுத்துக் கொள்ள ஆசை பட்டான்.
எங்கே அவன் நெருங்கி அவள் மறுத்து விட்டால் அதை தன்னால் தாங்க முடியாது என்பதால் மட்டுமே அவளிடம் விலகி இருந்தான். திருமணமாகி இத்தனை நாட்களில் இல்லாத தாபம் இன்று அவளை அந்த கோலத்தில் பார்த்ததும் அவனையே சுட்டெரித்தது.
அவள் ஏற்படுத்தி இருந்த தாபத் தீயை காதலால் அணைக்க சொல்லி அவன் உடல் அவனைக் கெஞ்சியது. உடல் மனம் மூளை என அனைத்தும் அவளுக்காக ஏங்கியது.
அங்கே அவள் நினைவால் அவன் நடை பயின்று கொண்டிருக்க தேன்மொழியோ “எங்க அவனை இன்னும் காணும்? ஒரு வேளை சாயங்காலம் நடந்தது அவனுக்கு பிடிக்கலையோ? அவனையே அறியாம என்னை கட்டி பிடிச்சிட்டு அதுக்காக கவலைப் பட்டுட்டு தான் வரலையோ?”,என்று எண்ணி கவலை பட்டுக் கொண்டிருந்தாள்.
கீழே உள்ள அறையில் “நாளைக்கு காலேஜ் போய் எப்படி சௌமியை பாக்க?அசிங்க படுத்திருவாளோ?”, என்று செல்வா கவலை பட்டுக் கொண்டிருக்க “உன்கிட்ட பேசணும் போல இருக்கு”, என்று கீதாவுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான்”, தினேஷ்.
புது மொபைலை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த கீதாவோ அவன் பேசுவானா என்ற எதிர் பார்ப்பில் தான் படுத்திருந்தாள். அவன் மெஸ்ஸேஜ் வந்ததும் சந்தோஷமாக அதை பார்த்தவள் “எனக்கும் தான், ஆனா பாட்டி இருக்காங்க”, என்று அனுப்பி வைத்தாள்.
“இன்னைக்கே காதலை சொல்லி அவள் மனதில் நான் இருக்கேன்னு தெரிஞ்சு நிம்மதியா இருக்கு. அந்த நிம்மதியே போதும்.இதுல போன் பேசணும்னு ஓவரா பேராசை படக் கூடாது”, என்று எண்ணிய தினேஷ் “புரியுது கீது. முடிஞ்சா மெஸ்ஸேஜ் பண்ணு.இல்லைன்னா காலைல காலேஜ் போகும் போது பேசுவோம்”, என்று அனுப்பி வைத்தான்.
அவனிடம் பேச கொள்ளை ஆசை, அவனும் அதை கேட்டிருக்க எப்படியாவது பேசலாம் என்று எண்ணி படுக்கையில் இருந்து எழுந்தாள் கீதா. “என்ன மா தூக்கம் வரலையா?”, என்று கேட்டாள் அன்னம்.
“ஆன்,.. அது பாட்டி.. அது வந்து மாடில துணி காய போட்டேன். மறந்துட்டேன். எடுத்துட்டு வரேன்”, என்று சமாளித்தாள் கீதா.
“இந்த நேரம் நீ போக வேண்டாம் கண்ணு. நான் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றாள் அன்னம். “அப்பாடி, ரெண்டு நிமிஷம் இருக்கு”, என்று நினைத்துக் கொண்டு அவனை அழைத்தாள் கீதா.
அவள் போனைக் கண்டதும் செல்வாவை ஒரு பார்வை பார்த்தான் தினேஷ்.
“நாளைல இருந்து பஞ்சு வாங்கிக்கிறேன் அண்ணா. இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. எனக்கு கேக்காத மாதிரி பேசு. நானும் காதை மூடிக்கிறேன்”, என்று சொல்லி தலை முழுவதுமாக மூடிக் கொண்டான் செல்வா.
அவனைப் பார்த்து சிரித்து விட்டு போனை எடுத்தவன் “கீது…”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
[the_ad id=”6605″]
நேற்று வரை யாரோவாக இருந்தவன் ஒரு நாளில் எல்லாமுமாக மாறிப் போன விந்தை காதலிலும் திருமணத்திலும் மட்டுமே சாத்தியம். அவன் குரலில் வழிந்த தேடலில் அவள் உயிர் வரை துடித்தது.
அதே ஏக்கத்துடன் “தூங்கலையா அத்த்…?”, என்று கேட்டாள் கீதா.
“ஏய் என்ன சொல்ல வந்த?”
“தூங்கலையான்னு கேட்டேன்”
“ஏய் பொய் சொல்லாத. நீ வேற ஏதோ சொல்ல வந்த. சொல்லு கீது. என்கிட்ட என்ன தயக்கம்?”
“அத்தானு சொல்ல வந்தேன் போதுமா?”
“இப்படி எல்லாம் உசுப்பேத்தாத டி. அப்புறம் ஒரு வருசமாவது ஒன்னாவதுன்னு. உடனேயே கிழவியை நாடு கடத்திட்டு அங்க வந்துருவேன்”
அவனுடைய தாபத்தில் திகைத்தவள் “டியா? நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா?”, என்று நடுக்கத்துடன் கேட்டாள்.
“என் பொண்டாட்டிக்கிட்ட பேச தோணுது. பேசலாம் தானே?”
“இப்படிக் கேட்டால் அவளால் என்ன சொல்ல முடியும் ”ம்ம்”, என்று மட்டும் சொன்னாள்.
“பாட்டி இல்லையா?”
“துணி எடுக்க மாடிக்கு போனாங்க”
“பெர்த்டே பாய்க்கு கிஃப்ட் எல்லாம் இல்லையா?”
“நான் தான் கொடுத்தேனே?”
“நான் அதையா கேட்டேன்… சரி சரி.. ஒண்ணும் இல்லை. சரி கீது, நீ மெஸ்ஸேஜ் பண்ணு பாட்டி வந்தா கொஞ்சம் ரிஸ்க்”, என்று சொல்லி வைத்து விட்டான்.
அவன் கேட்டது என்ன என்று புரியாமல் அதை மெஸ்ஸேஜில் கேட்டு அவன் ஆண்மையை சோதித்துக் கொண்டிருந்தாள் கீதா.
மாடிக்கு சென்ற அன்னம் கண்ணில் பட்டது ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல் நடந்து கொண்டிருந்த கதிர் தான். அவன் முகத்தை ஒரு நொடி பார்த்த பாட்டிக்கு அனைத்தும் விளங்கி விட்டது. அவரும்
எல்லாவற்றையும் பார்த்தவர் தானே? இந்த நேரத்தில் திருமணமான ஒரு ஆண் மகன் இப்படி நடை பயின்றால் புரியாதா என்ன?
வந்த சுவடில்லாமல் கீழே வந்தவள் நேராக சென்றது தேன்மொழியைப் பார்க்க தான். அங்கே தேன்மொழியோ கட்டிலில் சாய்ந்து எதையோ யோசித்த படி அமர்ந்திருந்தாள்.
“நான் வந்தது கூட தெரியாம அப்படி எந்த கோட்டையை ஆத்தா பிடிக்க போற?”, என்று கேட்டாள் அன்னம்.
“வா பாட்டி, என்ன இந்த நேரம்? நீ இன்னும் தூங்கலையா?”
[the_ad id=”6605″]
“நான் தூங்குறது இருக்கட்டும். எங்க உன் புருஷன்?”
“அதான் தெரியலை. நானும் அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன். அத்தான் கீழ இருக்காங்களா?”
“என்கிட்ட கேளு. அடிச்சு புடுவேன் டி”
“என்ன பாட்டி?”
“என்ன நொன்ன பாட்டி. இன்னும் ரெண்டு பேரும் சேந்து வாழலை அப்படி தானே?”
தலை குனிந்த படி அமைதியாக இருந்தாள் தேன்மொழி. அவள் அருகே சென்று அமர்ந்த அன்னம் அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தாள். அதில் அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
“என்ன தான் தேனு உன் பிரச்சனை? உனக்கு கதிரை பிடிக்கலையா?”
“ப்ச் போ பாட்டி. அதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னோட எதிர்பார்ப்புல உன் பேரன் எனக்கு ஒண்ணு கூட செய்யலை. ஆனாலும் அத்தானை பிடிச்சிருக்கு. அவங்களுக்கு தான் என்னை பிடிக்கலை”
“உளராத தேனு”
“நான் ஒண்ணும் உளரலை. உன் பேரன் நம்ம குடும்பம் சேரணும்னு தான் என்னை கட்டிருக்கான்”
“போடி கூறுக்கெட்டவளே, சரி உன் எதிர்பார்ப்பு என்னன்னு சொல்லு பாப்போம்”
“அது எதுக்கு இப்ப? நீ சொன்னா சிரிப்ப”
“அட சொல்லு டி”
“எனக்கு வர புருஷன் என்னையே சுத்தி சுத்தி வரணும்னு நினைச்சேன். என்னை அப்படியே தாங்கணும். அவன் மொத்த காதலையும் என்கிட்ட கொட்டணும்னு நினைச்சேன். அப்படி ஒரு ராஜகுமாரன் வருவான்னு நினைச்சேன். ஆனா என் ஆசை எல்லாமே கானல் நீரா போச்சு. உன் பேரன் என் முகத்தைக் கூட பாக்க மாட்டிக்கான்”
“அட போடி, என் பேரன் அந்த பிரமாண்டமான பெருங்கடல் டி. அவனைப் போய் கானல் நீர்னு சொல்ற? உனக்கு அறிவே இல்லை”
“ஆமா எனக்கு அறிவே இல்லை. உனக்கு தான் நிறைய இருக்கு. போ பாட்டி, இப்ப கூட என்னை பாக்க பிடிக்காம தான் ரூமுக்கு வரலை தெரியுமா உனக்கு?”
“ஆமா நீ கண்ட”
“நீ மட்டும் கண்டியோ? போ போய் தூங்குற வேலையை பாரு”
“நான் போறது இருக்கட்டும், அங்க மேல இருக்கே ஒரு பெட்டி. அதை என்னன்னு பாத்தியா?”
“அது ஏதோ பழைய பெட்டி. அதை எதுக்கு நான் பாக்கணும்?”
[the_ad id=”6605″]
“நீ எடுத்து பாரு, உனக்கே தெரியும். சீக்கிரம் கொள்ளு பேரனைப் பெத்து என் கையில கொடுக்காம அவன் நடுராத்திரில நடை பழகிட்டு இருக்கான். நீ கானல் நீர் ராஜகுமாரன்னு புலம்பிக்கிட்டு இரு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பாட்டி.
“அது என்ன வா இருக்கும்?”, என்று குறுகுறுப்புடன் அந்த பெட்டியை எடுத்தாள். சிறிது தூசி இருக்க இவர்கள் திருமண நாள் முன்பு வரைக்கும் அதை அவன் துடைத்து வைத்திருக்கிறான் என்று புரிந்தது.
ஆவலுடன் அதை திறந்து பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்து போனது மட்டும் உண்மை. அங்கே இருந்தவை அனைத்துமே தேன்மொழி சம்பந்த பட்டது மட்டுமே.
அவனை அவள் கானல் நீர் என்று எண்ண அவள் குடித்த பால் பாட்டீல் வரைக்கும் பொக்கிசமாக சேர்த்து வைத்திருந்தான் கதிர்.
ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தவளுக்கு அவன் சொல்லாமலே அவனுடைய காதல் புரிந்தது. அடுத்த நொடி அதை அப்படியே மூடி, இருந்த இடத்தில் வைத்தவள் அங்கிருந்து மாடிக்கு ஓடியிருந்தாள் அவனுடைய ராஜகுமாரனைத் தேடி.
காதல் தீயை நீர் அணைக்குமா?….