அன்னையின் சுயநலத்தைப் பற்றி எண்ணும் போது மனம் கனத்துப் போனாலும் வைஷ்ணவி மற்றும் சேகரைப் பற்றி எண்ணும் போது மனதுக்கு இனிமையாக இருந்தது. அருமையான ஜோடி இருவரும் என்று எண்ணிக் கொண்டான். அதுவும் சேகர் அருமையான மனிதன். தமிழுக்கும் வைஷ்ணவிக்கும் இடையில் இருக்கும் நட்பை புரிந்து கொண்டு இப்போது வரை பக்க பலமாக இருக்கிறான்.
வைஷ்ணவி மற்றும் சேகரின் திருமணம் நடப்பதற்கு முந்தைய நிகழ்வுகள் தமிழின் மனக் கண்ணில் படமாக விரிந்தது. சரோஜாவின் சுயநல குணத்தை அப்போதும் தமிழ் பார்க்க நேர்ந்தது.
தமிழ் பாரினுக்கு வந்து இரண்டு வருடம் கடந்திருந்தது. அப்போது அவனுக்கு சம்பளம் மாதம் நாப்பதாயிரம் தான். அவன் செலவு போக, வீட்டு செலவு போக நான்கு லட்ச ரூபாய் சேர்த்து வைத்திருந்தான்.
அப்போது மூத்த தங்கை ஜெயாவுக்கு திருநெல்வேலியில் இருந்து ஒரு வரன் வந்தது. மாப்பிள்ளை கேசவன் ஈபியில் பணிபுரிகிறான் என்றும் அவனுக்கு ஜெயாவைப் பார்த்த உடன் பிடித்து போனது என்றும் சரோஜா தான் தமிழுக்கு சொன்னாள். அது மட்டும் இல்ல. கேசவனின் தம்பி வினோத்துக்கு தமிழின் இரண்டாவது தங்கை அமுதாவையும் பிடித்து போனது. அவர்கள் வீட்டில் நகை அவ்வளவு போடுங்க, இவ்வளவு போடுங்க என்றெல்லாம் சொல்ல வில்லை. ஆனால் இரண்டு திருமணத்தையும் ஒன்றாக வைக்க வேண்டும் என்று மட்டும் சொன்னார்கள்.
தமிழிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் உடனே சம்மதம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் சரோஜா. அவனிடமும் கேட்க வில்லை, சிதம்பரத்திடமும் கேட்க வில்லை.
அவர்களிடம் சம்மதம் சொல்லி விட்டு தான் தமிழுக்கு சொன்னாள். தன்னிடம் கேட்காமல் எப்படி அம்மா சரி என்று சொல்லலாம் என்ற எண்ணம் வந்தாலும் “நான்கு லட்ச ரூபாயை மட்டும் வச்சிக்கிட்டு எப்படி ரெண்டு கல்யாணம் பண்ண முடியும்?”, என்று திகைத்தான்.
உடனே சிதம்பரத்தை அழைத்து விவரம் கேட்க “ஆமா மாப்பிள்ளை, உன் தங்கச்சிகளை பொண்ணு பாக்க வந்தாங்க. ஆனா எங்களுக்கு விஷயம் தெரியாது. உன் அம்மா சொல்லலை. அக்கம் பக்கத்துல உள்ளவங்க தான் சொன்னாங்க. நான் தான் மனசு கேக்காம ஜெயா கிட்ட விவரம் கேட்டு அவங்களைப் பத்தி விசாரிச்சேன். நல்ல குடும்பமா இருக்கு. அதுவும் அக்காவும் தங்கச்சியும் ஒரே வீட்டுக்கு போனா நல்லது தானே? நீ என்ன சொல்ற?”, என்று கேட்டார்.
“எனக்கும் சம்மதம் தான் மாமா. முதல்ல கொஞ்ச கொஞ்சம் நகையை போட்டு கல்யாணத்தை முடிப்போம். அப்புறம் சம்பாதிக்க சம்பாதிக்க அவங்களுக்கு மேற்கொண்டு செஞ்சிக்கிறேன். நீங்க மேற்கொண்டு வேலையைப் பாருங்க. ஆனா என்னால தான் வர முடியாது”, என்றான்.
அவரும் சரி என்று சொல்லி போனை வைத்தார். பின் உடனே தாயை அழைத்தவன் “அம்மா நான் மாமா அக்கவுண்டுக்கு நாலு லட்ச ரூபாய் பணம் அனுப்புறேன். மத்த விவரம் எல்லாம் மாமா பாத்துக்குவாங்க. என்னால கல்யாணத்துக்கு வர முடியாது. நீங்களே கல்யாணத்தை நல்ல படியா முடிங்க”, என்றான் தமிழ்.
திருமணத்துக்கு ஒரே மகன் வரவில்லையே என்ற வருத்தம் துளி கூட இல்லாமல் “அந்த பணம் எப்படி பா பத்தும்?”, என்று கேட்டாள் சரோஜா.
“என்ன மா சொல்ற?”, என்று அவன் திகைத்த படி கேட்க “ரெண்டு பேருக்கும் நகை எடுக்கணும் தமிழு, அவங்க வேண்டாம்ன்னு சொன்னாலும் நாம போடணும்ல? ரெண்டு பேருக்கும் ஒரு பதினஞ்சு பவுனாவது போடணும் பா”
“பதினஞ்சா?”
“ஆமா பா. மொத்தம் முப்பது பவுன்”
“அம்மா, அவ்வளவு எப்படி மா முடியும்? ஒரு பத்து பத்து போட்டாக் கூட செலவு அதிகம் ஆகும் மா. அது போக சீர்வரிசை, கல்யாணச் செலவு எல்லாம் இருக்கு”
“உன் தங்கச்சிகளுக்கு நீ செய்ற. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன் விருப்பம்”, என்று சொல்ல என்ன செய்ய என்று தடுமாறினாலும் சிதம்பரத்திடம் சொல்லி வட்டிக்கு என்று அஞ்சு லட்சம் கடன் வாங்கி இருவருக்கும் முப்பது பவுன் போட்டு திருமணத்தை சிதம்பரத்தை வைத்து நடத்தினான். ஆனால் அவன் வர வில்லை. அவன் செய்த ஒரே நல்ல காரியம் பணத்தை சிதம்பரத்துக்கு அனுப்பியது தான்.
அதனால் அவர் பார்த்து பார்த்து செலவு செய்தார். இருந்தும் சரோஜா வந்து பெண்களுக்கு அது வாங்க வேண்டும் இது வாங்க வேண்டும் என்று பணம் கேட்கும் போது அதெல்லாம் தேவையா என்று கேட்க அவருக்கு தோன்றியது தான். ஆனால் திருமண சமயத்தில் பிரச்சனை வேண்டாம் என்று எண்ணி பணத்தை தூக்கி கொடுத்தார்.
சரோஜா செய்த செலவுகளை ஈடு கட்டும் வகையில் பந்தலில் கட்ட வாழை மரம், சாப்பிட வாழை இலை, காய்கறிகளை தன்னுடைய தோட்டத்தில் இருந்தே எடுத்துக் கொடுத்தவர் அதற்கு என பணத்தை சிறிதும் எடுக்க வில்லை. தமிழுக்காகவே முழு மனதுடன் செய்தார். திருமணம் நல்ல படியாக முடிந்தது. தங்கைகள் இருவரும் தமிழிடம் வீடியோ காலில் தங்களின் கணவன்களை அறிமுகம் செய்தார்கள்.
எல்லாம் நல்ல படியாக முடிந்தது என்று தமிழ் மூச்சு விடும் போதே அடுத்த மாசத்துக்கான வட்டியை கட்டும் நிலை வந்தது. அடுத்து வந்த மாதங்களில் வட்டியைக் கொடுப்பதற்குள் திணறித் தான் போனான். அவன் சம்பளத்தில், கடன் குறைந்தாலும் பரவாயில்லை. ஆனால் வட்டிக்கே போவது கஷ்டமாக இருந்தது. அதை அவன் “நான் வட்டியவே கொடுத்துட்டு இருந்தா எப்ப தான் அசலை அடைக்கிறதுன்னு தெரியலை வைஷு”, என்று வைஷ்ணவியிடம் புலம்பினான்.
தமிழின் மன வருத்தத்தை அவள் சிதம்பரத்திடம் சொல்ல அடுத்த நாளே வைஷ்ணவியின் திருமணத்திற்கென சேர்த்து வைத்திருந்த நகையை பேங்கில் வைத்து அந்த கடனை அடைத்து விட்டார் சிதம்பரம். பேங்கிலும் வட்டி தான் என்றாலும் அந்த அளவுக்கு இல்லை என்பதால் தமிழுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. உண்மையான உறவுகளை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொன்னான்.
அடுத்த இரண்டு வருடங்களில் அடைக்க வேண்டிய கடனை அடைத்தான். அவன் சம்பளம் கொஞ்சம் கூடியதால் அவனால் கடனை அடைக்க முடிந்தது. அப்படியும் சில நேரம் திணறத் தான் செய்தான். ஜெயா மற்றும் அமுதாவின் தலை தீபாவளிச் செலவு, பொங்கல் பொடி செலவு, தேவிக்கு கல்லூரிக்கு பீஸ் கட்டுவது, வீட்டுச் செலவு, அவனுடைய செலவு, அனைவருக்குமான ஆஸ்பத்திரி செலவு என்று திணறிய போது சிதம்பரம் தான் பணம் கொடுத்து உதவினார்.
அடுத்த ஒரு வருடத்தில் வைஷ்ணவியின் நகையை திருப்ப பணம் அனுப்பி விட்டான். அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் சிதம்பரம் மூலமாக அவர்கள் வீட்டின் அருகிலேயே ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டச் சொன்னான்.
அவன் சொன்னதும் சிதம்பரம் சொன்ன ஒரே விஷயம், “இப்ப இருக்குற வீட்டை வேணும்னா வச்சிக்கோங்க டா. பணம் கூட முன்ன பின்ன ஆனாப் பரவால்ல”, என்பது தான்.
பணத்தைப் பற்றி எண்ணாமல் அதை வாங்கத் தான் தமிழும் எண்ணினான். ஆனால் சரோஜாவோ “சே சே வாங்குறது தான் வாங்குறோம் எதுக்கு பழைய வீடு வாங்கிக்கிட்டு? இடம் வாங்கி கட்டினா நாமளே பாத்து பாத்து கட்டலாம்ல? இந்த வீடு நல்லாவே இல்லை. இதை எல்லாம் வாங்க வேண்டாம்”, என்று சொன்னாள்.
புது வீடு கட்ட வேண்டும் என்ற அவளின் யோசனை சரியாகப் பட்டாலும் அவள் சொன்ன முறை கொஞ்சம் அனைவருக்குமே கஷ்டமாக தான் இருந்தது. வேறு வழியில்லாமல் அவன் அதையே செய்ய சிதம்பரம் தான் இடம் வாங்கி கொடுத்தார்.
தமிழ் வெளிநாட்டில் இருப்பதால் சரோஜா பேரில் தான் இடம் வாங்கப் பட்டது. வீட்டுக்கான பிளான் போடுவது, அப்ரூவல் வாங்குவது என சிதம்பரம் தான் அலைந்தார். அனைத்தையும் தமிழுக்கு சொல்லி விட்டே செய்தார்.
ஆனால் வீடு கட்ட ஆரம்பித்ததும் “இந்த ரூம் எதுக்கு இங்க வருது? பாத்ரூம் எதுக்கு எல்லா ரூமுக்கும்?”, என்று குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தாள் சரோஜா.
சிதம்பரம் தான் திணறினார். இதை முன்னேமே சொல்றதுக்கு என்ன என்பது தான் அவர் எண்ணமே? சரோஜா என்ன தான் புலம்பினாலும் இனி மாற்ற முடியாது என்பதால் வீடு கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்பியது. அதற்கும் தமிழை அழைத்த சரோஜா “இனி உன் மாமாவுக்கு பணம் அனுப்பாத. இது தான் சாக்குன்னு சுரண்டுற மாதிரி இருக்கு”, என்றாள்.
அதைக் கேட்டு சுள்ளென்று கோபம் வந்தாலும் அதை அடக்கி “பரவால்ல மா, அப்படி சுரண்டுனா சுரண்டிட்டு போகட்டும். இத்தனை வருஷம் அவர் வீட்ல வாடகை கொடுக்காம தானே குடியிருக்கோம்? அதை இப்படி கழிச்சிக்கலாம்”, என்று சொல்லி அவள் வாயை அடைத்தான். இந்த விஷயம் தெரிந்தால் சிதம்பரம் மனக் கஷ்டப் படுவார் என்று அவன் வருந்தி அதை மறைக்க ஆனால் சரோஜாவோ சிதம்பரத்திடமே கணக்கு கேட்க ஆரம்பித்தாள்.
அது அவருக்கு கொஞ்சம் தர்மசங்கடமான நிலை தான். ஏனென்றால் தமிழ் பணம் அனுப்ப தாமதமானாலும் செங்கல் வந்து இறங்கும் போது என்ன செய்ய முடியும் என்று எண்ணி தன்னுடைய பணத்தை தான் கொடுப்பார். அதற்கு பின் அவன் அனுப்பியதில் இருந்து எடுத்துக் கொள்வார். ஆனால் இது வரை அவரது பணம் அதில் போடப் பட்டிருக்குமே ஒழிய அவர் ஒரு பைசா கூட எடுத்ததில்லை. எல்லாவற்றையுமே தமிழுக்காக தனியாக நோட் போட்டு எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்.
ஆனால் அதை எல்லாம் சரோஜாவிடம் சொல்ல அவருக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால் இருவரும் அண்ணன் தங்கை உறவு என்றாலும் அதற்கான மரியாதையை சரோஜா கொடுக்காதது போல ஒரு எண்ணம் அவருக்கு உண்டு. அதனால் சரோஜாவிடம் இருந்து விலகியே இருப்பார்
அதனால் அவள் கணக்கு கேட்கவும் கொஞ்சம் திகைத்து தமிழிடம் சரோஜா கணக்கு கேட்பதைப் பற்றிச் சொல்லி விட்டார். அதைக் கேட்டு கொதித்து போனவன் தாயை அழைத்து நன்றாக திட்டி விட்டான். மகன் திட்டியது சிதம்பரத்தால் தான் என்ற கோபம் சரோஜாவுக்கு எழுந்தது. அதனால் இது வரை சரியாக பேசாமல் இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தவள் சிதம்பரத்திடம் பேசுவதையே விட்டுவிட்டாள். சிதம்பரமும் அவள் அப்படித் தான் என்பதால் அதை பெரிதாக எடுக்க வில்லை. ஆனாலும் தெரிந்தவர்களிடம் “என் மகன் ரத்தம் சிந்தி பணம் அனுப்புறான். யார் எல்லாமோ அனுபவிக்கிறாங்க”, என்று சொல்ல அவருக்கு வருத்தமாக தான் இருந்தது.
ஆனால் இதை தமிழிடம் சொன்னால் அவன் உடனே தாயைத் திட்டுவான். அது மேலும் பிரச்சனை ஆகும் எண்ணி தனக்குள் வைத்துக் கொண்டார்.
வீடு மளமளவென்று வளர்ந்தது. வீடு கட்டி முடிக்கும் போது தமிழுக்கு வயது இருபத்தி எட்டு. ஐந்து வருட காண்ட்ராக்ட் முடிந்து தமிழ் ஆசையாக தான் ஊருக்கு வந்தான். அவனை அழைத்துச் செல்ல ஏர்போர்ட் வந்தது சிதம்பரம் தான். முழு ஆண்மகனாக வந்து இறங்கி இருக்கும் மருமகனை அணைத்து கண்ணீர் விட்டாலும் அவன் உடல் மெலிவு, கருத்திருந்தது அனைத்தும் அவனுடைய கடிமான வேலையை பறைசாற்ற அவருக்கு கஷ்டமாக தான் இருந்தது.
“வா மாப்ள, வீட்டுக்கு போகலாம்”, என்று சொல்லி அழைத்துச் சென்றார். சொந்த பந்தம், நண்பர்கள் அனைவரையும் பார்க்க போகிறோம் என்று சந்தோஷமாக அவருடன் பயணமானான். இனி வரும் நாட்களில் அதிர்ச்சியூட்டும் பல நிகழ்வுகள் நடக்கும் என்று தெரிந்திருந்தால் ஊருக்கு வராமல் இருந்திருப்பானோ என்னவோ?
அவன் வீட்டுக்கு போன போது அவன் தங்கைகளும் வந்திருந்தார்கள். அங்கே சிறிது நேரம் பாசக் கண்ணீர் கரை புரண்டு ஓடியது. சரோஜாவோ “வா தமிழு”, என்று சொன்னதோடு சரி. வேறு ஒரு பாசத்தையும் காட்ட வில்லை.
சிறு வயதில் இருந்தே சரோஜா அவனுக்கு உணவு ஊட்டியதில்லை, பாசத்துடன் தலை கோதியதில்லை என்பதால் அவனுக்கு இது பெரிதாக தெரிய வில்லை. இருந்தாலும் இத்தனை நாள் பிரிவின் காரணமாக அன்னையின் அன்புக்காக சிறிது ஏங்கவே செய்தான். அந்த ஏக்கத்தை உடனே போக்கியது அவனது அத்தை தான். அது வரைக்கும் அவனுக்கு சந்தோஷம் தான். அனைவரிடமும் நலம் விசாரித்து அனைவருக்கும் தனித் தனியே வாங்கிய பொருள்களைக் கொடுத்து சந்தோஷப் படுத்தினான். பின் காலை உணவை உண்டு விட்டு மாமாவுடன் புது வீட்டைப் பார்க்கப் போனான்.
சிதம்பரம் வீட்டை பார்த்து பார்த்து கட்டியிருந்தார். அதைக் கண்டு அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. அவன் இருந்தால் கூட இந்த அளவுக்கு அழகாக வீடு வந்திருக்குமா என்பது அவனுக்கு சந்தேகமே.
அன்று இரவு அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது பால் காய்ப்பது பற்றி சரோஜாவிடம் பேசினான். என்று விழா வைக்க வேண்டும், என்ன என்ன செய்ய வேண்டும் என்று சரோஜா சொல்ல அவனும் சரி என்று சொன்னான். அடுத்த நாளே பத்திரிக்கை அடிக்க கொடுத்தான். அடுத்து வந்த நாட்களில் பத்திரிக்கைகளை கொடுத்து சொந்தபந்தம், அக்கம் பக்கத்தினர் அனைவரையும் சரோஜா தான் அழைத்தாள்.
அந்த நாளும் நெருங்கியது. அடுத்த நாள் பால் காய்க்கும் நிகழ்வு என்பதால் முந்தைய நாள் இரவு சிதம்பரத்துடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் தமிழ். அங்கே தான் மீனாட்சி மற்றும் வைஷ்ணவியும் இருந்தார்கள்.
மணி பத்து அடிக்கவும் “சரி மாமா, நான் தூங்கப் போறேன். காலைல பாக்கலாம்”, என்றான்.
“நாங்க காலைல ஊருக்கு போறோம் மாப்ள. நீ இங்க எல்லாத்தையும் பாத்துக்கோ”, என்றார் சிதம்பரம். அதைச் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தார். ஆனால் காலையில் தாங்கள் இல்லை என்றால் நிச்சயம் அவன் வருத்தப் படுவான் என்பதால் தான் சொன்னார். அதைக் கேட்டு அதிர்ந்து திரும்பி பார்த்தவன் “என்னது ஊருக்கு போறீங்களா? என்ன மாமா சொல்றீங்க?”, என்று கேட்டான்.
“என் தங்கச்சிக்கு என்னைப் பாக்கணும் போல இருந்துச்சாம்? அதான் நாங்க எல்லாரும் நாளைக்கு அவளைப் பாக்க ராமேஸ்வரம் போறோம்“
“நீங்க போங்க மாமா. உங்களைப் போக வேண்டாம்னு சொல்லலை. ஆனா இங்க பால் காச்சு முடிஞ்சதும் போங்க”
“இல்ல மாப்ள, காலைல கிளம்பனும்”
“மாமா, நாளைக்கு வீட்டு பால் காப்பு இருக்கு. அது நம்ம வீடு மாமா. நீ தான் வீட்டுக்கு பெரியவர். நீ இல்லாம எப்படி?”, என்று கேட்டான். கோபத்தில் இல்லையென்றால் எரிச்சலில் இருந்தால் அவரை தன்னுடைய தந்தையாக நினைத்து இப்படி தான் உரிமையுடன் பேசுவான் என்பதால் அது அவருக்கு பெரியதாக தெரிய வில்லை.
அவர் மீண்டும் மறுக்கவும் “அத்தை, மாமா கிட்ட சொல்லுங்க”, என்றான்.
மீனாட்சியும் அமைதியாக இருக்க வைஷ்ணவியோ தர்மசங்கடத்துடன் அவனைப் பார்த்தாள். அவன் புருவங்கள் முடிச்சிட்டது.
“என்ன ஆச்சு வைஷு?”, என்று கேட்க அவள் எதுவும் சொல்ல வில்லை.
“இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா?”, என்று அவன் குரல் உயர்த்த “நான் சொல்றேன் தமிழு”, என்றாள் மீனாட்சி..
“என்ன அத்தை?”
“அழைக்காத இடத்துக்கு எப்படி தமிழ் வரது? எங்களுக்கும் கொஞ்சம் சுய மரியாதை இருக்கணும் தானே?”, என்று மீனாட்சி கேட்க “அத்தை?”, என்று திகைத்து போனான்.
“என் அண்ணன் இருந்திருந்தா எங்களுக்கு இப்படி நடந்திருக்குமா? அதை விட என் அம்மா அப்பா இருந்திருந்தா இப்படி என் புருஷனை மதிக்காம இருந்துருப்பாங்களா? இவர் தானே இந்த வீட்டு மாப்பிள்ளை. அப்படின்னா அவரைக் கூப்பிடணும் தானே? என் அண்ணிக்காரி அதோ கிழக்கு வீட்ல கூப்பிடுறா. பக்கத்து வீட்ல கூப்பிடுறா. ஆனா எங்களைக் கூப்பிடவே இல்லையே? பத்திரிக்கை வராம நாங்க எப்படி வரது?”, என்று கேட்க அதிர்ந்து போனான்.
“என்னது அம்மா உங்க கிட்ட சொல்லலையா?”, என்று அவன் அதிர்ந்து போய்க் கேட்க “இதுல என்ன இருக்கு மாப்பிளை? சரோஜா நம்ம வீடுன்னு நினைச்சு எதுக்கு நம்ம கிட்ட சொல்லணும்னு விட்டுருப்பா. எங்களுக்கு தான் என் தங்கச்சியைப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான் போறேன்”, என்று தர்மசங்கடத்துடன் சொன்னார் சிதம்பரம்.
“ஏன் மாமா, என் அம்மா கூப்பிட்டா தான் நீ வருவியா? நான் கூப்பிட்டா வர மாட்டியா?”
“மாப்ள”
“அது என் வீடு மாமா, என் சம்பாத்தியத்துல வாங்கின வீடு. நான் விழா எடுக்குறேன். இப்ப நான் அழைப்பு கொடுக்குறேன். தாமதமா கொடுக்குறேன்னு நினைக்க வேண்டாம். நீங்க எல்லாரும் வரணும்”, என்று அழைத்தான்.
அப்போதும் அவர் தயங்க “என்னோட சந்தோஷம் முக்கியம்னு நினைச்சா வாங்க. இல்லைன்னா வேண்டாம்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
நாளை நடக்கப் போகும் அதிர்வான விஷயங்களை பற்றி முன்பே தெரிந்திருந்தால் அவர்களை அழைக்காமல் இருந்திருப்பானோ என்னவோ?
அவன் உருவில் விதி அவர்களை அழைத்தால் அதை யார் என்ன செய்ய முடியும்?”
வீட்டுக்குச் சென்றவன் சரோஜாவை முறைத்தான். அவன் அன்னையை முறைக்கவும் அங்கிருந்த அனைவரும் வியப்பாக பார்த்தார்கள். இப்போது அவர்கள் சிதம்பரத்தின் வீட்டில் தான் இருந்தார்கள். பால் காய்த்ததும் புது வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பது தான் முடிவு. ஜெயா மற்றும் அமுதா இருவரும் அவர்கள் குடும்பத்துடன் வந்தார்கள். இருவருக்குமே இப்போது மூன்று வயதில் குழந்தை இருக்கிறது. ஜெயாவுக்கு எழிலரசி என்ற பெண் குழந்தை. அமுதாவுக்கு ஆண் குழந்தை, பெயர் இன்பன்.
தமிழ் சரோஜாவை முறைக்கவும் ஜெயா மற்றும் அமுதா இருவரும் குழப்பமாக பார்த்தார்கள். ஆனால் இரண்டு குழந்தைகளையும் மடியில் வைத்திருந்த தேவியோ “என்னண்ணா? அம்மாவையே முறைச்சு முறைச்சு பாக்குற?”, என்று கேட்டாள். எப்போதும் தேவி மனதில் பட்டதைக் கேட்டு விடுவாள் என்பதால் இப்போதும் கேட்டாள்.