“ஊருக்கே பால் காய்ப்புக்கு அழைப்பு கொடுத்துருக்காங்க. ஆனா மாமா வீட்ல சொல்லலை. பத்திரிக்கையும் போகலை. என்ன நியாயம் இது? இதெல்லாம் உங்க மூணு பேருக்கும் தெரியுமா தெரியாதா?”, என்று தங்கைகளிடம் சுள்ளென்று கேட்டான். அவர்களுக்கும் இந்த விஷயம் அதிர்ச்சி தான்.
“அம்மா மாமா வீட்லயும் கூப்பிட்டுருபாங்கன்னு தான் நினைச்சோம் அண்ணா. அத்தை வீட்டுக்கு பத்திரிக்கை போகாதது எங்களுக்கு தெரியாது”, என்றாள் ஜெயா.
இப்போது நான்கு பிள்ளைகளும் சரோஜாவைப் பார்க்க ஜெயா மற்றும் அமுதாவின் மாப்பிள்ளைகளும் சரோஜாவைப் பார்த்தார்கள்.
“யாருக்கு என்ன சொல்லணும்னு எனக்கு தெரியும்? விழாவுக்கு யாரைக் கூப்பிடணும்னு எனக்கு தெரியும். நாம வீடு கட்டி நல்லா இருக்கப் போறோம்? ஆனா அதைப் பாத்தா அந்த மீனாட்சி வயிறு எரிவா. அதனால தான் அவங்களைப் கூப்பிடலை. இதுக்கு எதுக்கு என்னவோ நாலு பெரும் கொலைக் குத்தம் பண்ணின மாதிரி பாக்குறீங்க?”, என்று சரோஜா சொல்ல அதிர்ந்து போன தமிழ் “அம்மா, அத்தையைப் பத்தி இப்படி பேசினா உன் நாக்கு அழுகிரும்”, என்றான்.
“நான் இல்லாததையா சொன்னேன்? உன் அப்பா இருந்தவரைக்கும் உன் அத்தைக்காரி எப்படி திமிர் பிடிச்சு ஆடுவா தெரியுமா? மதினின்னு என்னை மதிச்சிருக்காளா? அவ புருஷன் அதுக்கு மேல? இந்த வீட்டைக் கட்டுறதுக்குள்ள எத்தனை லட்சம் சுருட்டினானோ தெரியலை? இப்பவும் உன் கிட்ட வத்தி வச்சிருக்காங்க பாரு. அவங்க குணமே நாம நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறது தான்”
“அம்மா, உலகத்துல எல்லார் வீட்லயும் நாத்தனார் மதினியார் சண்டை இருக்குறது தான். அதுக்காக சிதம்பரம் மாமாவையும் மீனாட்சி அத்தையையும் நீ அப்படிச் சொன்னா அது நியாயமே கிடையாது மா”, என்று சரோஜாவுக்கு புரிய வைக்க முயன்றான்.
“யார் எப்படின்னு எனக்கு புரியுது தமிழு, உனக்கு தான் அவங்களைப் பத்தி புரியலை. இதுக்கு தான் நான் யாரையும் அவங்க வீட்டுக்கு போகக் கூடாதுன்னு சின்ன வயசில இருந்து சொன்னேன். உன் தங்கச்சிங்க எல்லாம் கேட்டுக்கிட்டாங்க. ஆனா நீ கேக்கலை”, என்று சொல்ல தங்கைகளை திரும்பி பார்த்தான்.
அம்மா ஏதாவது சொல்வாள் என்று பயந்து தான் மூவரும் அங்கே அடிக்கடி போக மாட்டார்கள். வைஷ்ணவியையும் சரோஜாவுக்கு பிடிக்காது என்பதால் அவர்களுக்குள் ஒரு ஓட்டுறவே கிடையாது. தமிழ் தான் அவர்கள் மேல் அன்பாக இருப்பான்.
அன்னைக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவன் திகைத்து நிற்க “நாம கூப்பிடலைன்னாலும் நாளைக்கு அவங்க என்ன வராம இருக்க போறாங்களா? அதெல்லாம் வந்து மூக்கு முட்ட தின்னுட்டு தான் போவாங்க. எல்லாரும் போய் தூங்குங்க. பன்னிரெண்டு மணிக்கு தட்சி கழிக்க வரவன் வந்து எழுப்புவான்”, என்று சரோஜா சொல்லி செல்ல அசையாமல் நின்றான் தமிழ்.
மற்ற தங்கைகளும் எதுவும் பேசாமல் தூங்க சென்று விட்டார்கள். தமிழ் மட்டும் மொட்டை மாடிக்கு வந்தான். மனம் பாரமாக இருந்தது. புது வீடு கட்டிய சந்தோஷம் சுத்தமாக இல்லை. இப்படியும் சுயநலமாக மனிதர்கள் இருப்பார்களா என்று வியப்பாக இருந்தது. சற்று நேரத்தில் தட்சி கழிக்க ஆள் வர அவனுக்கு தூங்க நேரம் இல்லாமல் போனது.
அடுத்த நாள் காலை எப்போதும் போல் தான் விடிந்தது. ஜெயந்தி, அமுதாவின் புகுந்த வீட்டினர், மற்ற சொந்தங்கள் அனைவரும் வந்து விட்டார்கள்.
அக்கம் பக்கத்தினர் கூட வந்திருக்க சரோஜா தான் ஒரு பட்டு சேலையைக் கட்டிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள். தமிழுக்காக வைஷ்ணவி வீட்டில் இருந்தும் மூவரும் வந்து விட்டார்கள். அவர்களை வாவென்று கூட சரோஜா அழைக்க வில்லை.
மீனாட்சி அவளை “அட நன்றி கெட்ட ஜென்மமே?”, என்ற பார்வை தான் பார்த்தாள். தமிழ் தான் ஓடி வந்து அவர்களை வரவேற்றான். தங்கைகளையும் ஒரு பார்வை பார்க்க மூவரும் வந்து அவர்களை வரவேற்றார்கள்.
தமிழை தனியே பிடித்த சரோஜா “நான் சொன்னேன்ல கூப்பிடலைன்னாலும் அவங்க வருவாங்கன்னு”, என்று நக்கலாக கேட்டாள்.
“நான் கூப்பிட்டதுனால தான் வந்தாங்க. கூப்பிடாத இடத்துக்கு வரதுக்கு அவங்க ஒண்ணும் மானங்கெட்டவங்க இல்லை”, என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு நகர்ந்தான்.
சரோஜா தான் பால் காய்ச்சினாள். ஜெயந்தி, அமுதா இருவரும் வந்தவர்களுக்கு அந்த பாலில் டீ போட்டு கொடுத்தார்கள்.
தேவியோ இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள். தமிழ் தன்னுடைய நண்பன் வேணுகோபாலிடம் பேசிக் கொண்டிருந்தான். அது வரை எல்லாம் நல்ல படியாக தான் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒரு பெண்மணி “சரோஜா”, என்று அழைத்தாள்.
“என்னங்கத்தை?”
“உன் மவன் உன்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் நல்ல இடமா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டான். இப்ப வீடும் கட்டிப் புட்டான். அடுத்து என்ன அவனுக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தானே?”, என்று கேட்டாள். எல்லாருமே அந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள்.
தமிழுக்குமே அப்போது தான் கல்யாணம் என்ற ஆசையே தோன்றியது. “அதானே? வயசு ஆகிருச்சே? பண்ணிக்கலாமே”, என்று தான் எண்ணினான். அப்போது சரோஜாவோ “அதுக்குள்ள இப்ப அவன் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? தேவி கடைசி வருஷம் காலேஜ் படிச்சிட்டு இருக்கா. அவ படிப்பை முடிச்சதும் அவளை ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டு தான் அவனுக்கு பண்ணனும்”, என்று சொல்ல சிறிது யோசனையானான் தமிழ்.
சரோஜா சொல்வது சரியான விஷயம் தான். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தேவிக்கு இருபது வயது தான் நடக்கிறது. அவளுக்கு இருபத்தி ஐந்து வயதில் பண்ணி வைக்க வேண்டும் என்று தான் அவன் எண்ணியிருந்தான். ஏனென்றால் தேவிக்கு படித்து முடித்து வேலைக்கு போக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அன்னை இப்படி சொல்லவும் புருவம் உயர்த்தினான்.
“என்ன நீ இப்படிச் சொல்ற? இப்பவே அவனுக்கு இருபத்தி எட்டு வயசு ஆகிருச்சு. அது மட்டுமில்லாம வைஷ்ணவிக்கும் வயசு போயிட்டு இருக்கா இல்லையா? பொண்ணு தயாரா இருக்கும் போது காலா காலத்துல கல்யாணம் பண்ணலாம்ல?”, என்று அந்த பெண்மணி கேட்டதும் அனைவரும் கொஞ்சம் திகைத்து தான் போனார்கள்.
வைஷ்ணவியும் தமிழும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்படிப் பட்ட எண்ணம் இருவர் மனதிலும் துளி கூட இல்லவே இல்லை. சிதம்பரம் மற்றும் மீனாட்சிக்கு கூட அது தெரியும். அது மட்டுமில்லாமல் கடந்த நான்கு மாதமாகவே வைஷ்ணவிக்கு நல்ல வரனாக சிதம்பரம் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். அதுவும் மகளின் சம்மதத்தோடு. அது தமிழுக்கும் தெரியும். அப்படி இருக்க அந்த பெண்மணி அப்படி பேசியதும் கொஞ்சம் திகைப்பு தான்.
ஆனால் இது எதையும் அறியாத சரோஜாவோ “நினைச்சேன், இப்படி தான் நடக்குமுனு”, என்று ஆரம்பித்து சிதம்பரம் மற்றும் மீனாட்சியைப் பார்த்து “என்ன சந்தோஷமா? இதுக்கு தானே ஆசைப் பட்டீங்க?”, என்று கேட்டாள்.
அவர்கள் திகைப்பும் குழப்பமுமாக அவளைப் பார்க்க “இதுக்கு தான் இந்த பாவி பயக் கிட்ட அங்க போகாதே போகாதேன்னு சொன்னேன்? கேட்டானா இவன்? கடைசியில் பொண்ணை வச்சு அவனை மயக்கிட்டீங்கல்ல?”, என்று சரோஜா நரம்பில்லாமல் பேச வைஷ்ணவி தன்னுடைய காதை பொத்திக் கொண்டாள்.
“அம்மா”, என்று அதிர்ச்சியாக கத்தினான் தமிழ்.
“என்ன? என்ன அம்மா? இவங்க புத்தி தெரிஞ்சு தான் இவங்க கூட சேராதேன்னு சொன்னேன்? சும்மாவே உன்னை விட மாட்டாங்க. இப்ப நல்ல வேலையில் இருக்க? நல்லா சம்பாதிக்கிற? வீடு வேற கட்டி முடிச்சிட்ட? இதுக்கு மேல உன்னை விட்டு வைப்பாங்களா? ஏற்கனவே ஐஸ் வச்சு ஐஸ் வச்சு உன் சம்பாத்தியத்தை பாதி தின்னாச்சு. அது எப்படி பத்தும்? பொண்ணைக் கொடுத்து மொத்தமா சுருட்டனும்ல? அது தான் உன் அத்தை பிளானே”, என்று சரோஜா பேச சிதம்பரம் கோபத்துடன் ஏதோ சொல்ல வர அவர் கையைப் பற்றிக் கொண்ட வைஷ்ணவி “இங்க இருந்து போகலாம் பா”, என்றாள்.
தந்தையை அடக்க முடிந்த வைஷ்ணவியால் மீனாட்சியை அமைதி படுத்த முடியவில்லை. “சீ வாயை மூடு. இது என்ன வாயா இல்லை கால்வாயா? உன்னைப் போய் இத்தனை நாளும் என் மதினின்னு நினைச்சேன்? யாரைப் பாத்து என்ன பேச்சு பேசுற? என் பொண்ணு தங்கம். அதை விட உன் பிள்ளை இன்னும் சுத்த தங்கம். அவங்க ரெண்டு பேர் மனசுலயும் நட்புங்குற உறவைத் தவிர வேற எதுவுமே இல்லை. ஊருக்காரங்க உறவு முறையில இருந்தா இப்படி பேச தான் செய்வாங்க. என் பொண்ணுக்கு நாங்க ஏற்கனவே மாப்பிள்ளை பாத்துட்டு தான் இருக்கோம். எங்க கிட்டயும் உன் அண்ணன் பையனைக் கட்டி வைக்க வேண்டியது தானேன்னு கேட்டுட்டு தான் இருக்காங்க. ஆனா நாங்க தெளிவா சொல்லிட்டோம். தமிழ் அவன் தங்கச்சிகளை எப்படிப் பாக்குறானோ அது போல தான் வைஷ்ணவியை பாக்குறான்னு. ஆனா நீ என்ன பேச்சு பேசுற? என் பொண்ணு உன் பையனை மயக்குறாளா? நீ வேணும்னா உன் பிள்ளைகளுக்கு அப்படிச் சொல்லிக் கொடுத்துருப்ப? ஆனா நான் என் பொண்ணை அப்படி வளக்கலை”, என்று கண்ணீருடன் கத்தினாள் மீனாட்சி.
“அம்மா வேண்டாம் மா”, என்று வைஷ்ணவி சொல்ல “நீ சும்மா இரு டி”, என்றாள் மீனாட்சி.
“பாத்தியா டா அத்தை அத்தைன்னு தூக்கி வச்ச? உன் அம்மாவையே என்ன பேச்சு பேசுறான்னு”, என்று மகனிடம் கேட்டாள் சரோஜா.
தமிழ் அமைதியாக இருந்தான். மீனாட்சி பேசுவது சரி என்பது போல? அவன் அமைதி வேறு சரோஜாவுக்கு கடுப்பாக இருந்தது. அதனால் மீனாட்சியை முறைத்தாள். பதிலுக்கு அவளை முறைத்த மீனாட்சி “அடுத்து என்ன சொன்ன? தமிழ் சம்பாத்தியத்தை நாங்க அழிச்சோமா? இப்படி அபாண்டமா பேசினா நீயெல்லாம் புழு வச்சு தான் சாவ. உன் பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ண வாங்கின கடனை அடைக்க என் புருஷன் என் பிள்ளைக்கு சேத்த நகையை தான் அடகு வச்சார். அதையும் தமிழ் அடைச்சிட்டான். அப்புறம் வீடு கட்டன்னு அவன் அனுப்பின பணத்துக்கு கணக்கு வச்சிருக்கார் என் புருஷன். அது மட்டுமில்லாம இந்த வீடு கட்டுறதுல எங்க வீட்டு பணம் தான் ஒரு லட்ச ரூபாய் விழுந்துருக்கு. அதைக் கூட இந்த மனுஷன் கேக்கல. இது தமிழுக்கும் தெரியும்? அதை விடு. தமிழ் பாரின் போக பணம் கட்டினது யாரு? நீயா கட்டின? அதையும் கூட விட்டுறலாம். நாங்க என் மகனுக்கு செஞ்சதை சொல்லிக் காட்டக் கூடாது. ஆனா நீ இத்தனை வருஷம் என் வீட்ல ஓசியா தானே உக்காந்துருந்த? இவ்வளவு சட்டம் பேசுறவ மாசம் மாசம் வாடகை கொடுத்துருக்க வேண்டியது தானே?”, என்று கத்த சரோஜா முகம் கூம்பிப் போனது.
இத்தனை நாள் வீட்டுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இன்று அனைவருக்கும் தெரிந்ததும் அவமானமாக இருந்தது. சரோஜாவால் பதில் பேச முடிய வில்லை.
“எங்க வீட்லே இருந்துட்டு எங்களையே குத்தம் சொல்லுவியா? என் அண்ணன் உன்னால தான் குடிச்சு குடிச்சு செத்துப் போனான். அவன் கிட்ட பணம் பணம்னு நீ அழுததுனால அவன் ஒரெடியா போய்ட்டான்; அவனைத் தான் வாழ விடலை. என் மருமகனையும் வாழ விட மாட்டேன்னு தான் என் புருஷன் அவனை வாழ வச்சார். என் அண்ணனைக் கொன்ன மாதிரி இவனையும் நீ பேசி பேசியே கொல்லத் தான் போற? நான் தப்பு பண்ணிட்டேன். என் அண்ணன் செத்தப்பவே உங்க உறவு முறையை வெட்டி விட்டுருக்கணும். அதைச் செய்யாம உங்களை என் வீட்ல குடிவச்சதுக்கு எனக்கு இதுவும் தேவை தான் இன்னமும் தேவை தான்”, என்று சொன்ன மீனாட்சி தமிழ் புறம் திரும்பி “இங்க பாரு தமிழ். நீ எப்பவும் என் மருமகன் தான். நீ என் அண்ணன் பையன். எனக்கும் பையன் மாதிரி தான். நீ எப்ப வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வா. உன் மேல எனக்கு எந்த கோபமும் கிடையாது. ஆனா உனக்கு ஒரு விஷயம் சொல்றேன், நல்லா கேட்டுக்கோ. உன் ஆத்தா ஒரு பண பேய். உன் ரத்தத்தை உறிஞ்சு குடிக்கிற ரத்தக் காட்டேறி. உனக்கு ஒரு நல்லது கெட்டது செய்ய மாட்டா. உன் வாழ்க்கையை நீ பாத்துக்கோ. இனி மாமாவை உன் விசயத்துல தலையிட விட மாட்டேன். நீ தான் உன்னைப் பாத்துக்கணும். உன் அம்மா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கவே மாட்டா. உன் வாழ்க்கையை சரியா பாத்துக்கோ. நாங்க போறோம். இனி இந்த வீட்டுப் படியேற மாட்டோம். எங்க வீட்ல இருக்குற உங்க பொருளை எல்லாம் சீக்கிரம் எடுத்துரு. உன் அம்மா இருந்த வீட்டை பினாயல் போட்டு கழுவி விடணும்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள். அவள் பின்னேயே சிதம்பரம் மற்றும் வைஷ்ணவியும் கிளம்பி விட்டார்கள்.
மற்றவர்களும் சரோஜாவை நன்றி கெட்ட ஜென்மம் என்பது போல பார்த்து விட்டுச் செல்ல சரோஜா கோபம் ஏறியது.
“கடைசில சாக்கடைன்னு நிரூபிச்சிட்டு போயிட்டாங்க பாத்தியா? இதான் இவங்க குணம். இதான் இவங்க கிட்ட ஒட்டக் கூடாதுன்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்”, என்று சரோஜா சொல்ல “அந்த சாக்கடையே நீ தான் மா”, என்று சொல்லி விட்டு பழைய வீட்டுக்கு சென்றான் தமிழ்.
அவன் பேச்சைக் கேட்டு சரோஜா கோபத்துடன் உள்ளறைக்குச் செல்ல “உங்க அம்மா என்ன இப்படி பேசுறாங்க? நீங்களும் இப்படி மாறிறாதீங்க மருமகளுங்களா? எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அவங்களை நீங்க நல்லா பாத்துக்குற வரைக்கும் தான் நானும் உங்களை என்னோட மக மாதிரி பாத்துக்குவேன். உங்க அம்மா மாதிரி சொந்த நாத்தனாரையே இப்படி பேசுற மாதிரி பேசினா நான் அன்னைக்கு உண்மையான மாமியாரா மாற வேண்டியது இருக்கும். சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருங்க. பாவம் இந்த தமிழு பய”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் ஜெயா மற்றும் அமுதாவின் மாமியார். ஜெயா மற்றும் அமுதாவுக்கு சரோஜாவை நினைத்து எரிச்சலாக வந்தது.
மதியத்துக்கு ஹோட்டலில் இருந்து உணவு வர அனைத்தையும் கேசவன் மற்றும் வினோத் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் யாருக்கும் இப்போதும் உண்ணும் மனநிலை இல்லாமல் போனது.
ஆனால் சரோஜாவோ “என்ன வார்த்தை சொல்லிட்டா? நான் என் மகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க மாட்டேனா? செஞ்சு வைக்கிறேன் டி. உன் பொண்ணுக்கு முன்னாடியே என் மகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்”, என்று எண்ணிக் கொண்டு மகளுக்கு மாப்பிள்ளை பார்த்த தரகரை அழைத்து மகனுக்கு பெண் பார்க்கச் சொன்னாள். அவரும் பார்த்து சொல்வதாகச் சொன்னார்.
அறைக்குச் சென்ற தமிழுக்கோ மனது பாரமாக இருந்தது. அத்தை குடும்பத்தை எண்ணி அவன் மனம் கனத்தது. அவர்கள் அவனுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார்கள். அதை எல்லாம் ஒரு நொடியில் சரோஜா ஒன்றும் இல்லாமல் ஆக்கியதை அவனால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.
சிதம்பரம் மனம் என்ன பாடுபடும் என்று அவனுக்கு கவலையாக இருந்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் தான் அங்கே போவதால் தானே வைஷ்ணவிக்கு கெட்ட பேர் என்று எண்ணி அமைதியாக இருந்தான். கூடவே சரோஜா செய்த தவறுக்கு அவர்கள் முகத்தில் விழிக்க அவனுக்கு சங்கடமாகவும் இருந்தது.
அந்த நாள் அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக கடந்தது. அடுத்த நாள் விடியல் வைஷ்ணவிக்கு நல்லதாக விடிந்தது என்றால் தமிழுக்கு கெட்டதாக விடிந்தது.
நேற்று இவர்கள் வீட்டில் நடந்த விஷயங்கள் எல்லாம் ஊர் முழுக்க பரவியது. அதே ஊரில் இருக்கும் சேகரின் அம்மா தேவகி காதுக்கும் விஷயம் பரவியது.
அவருக்கு வைஷ்ணவியை மிகவும் பிடிக்கும். தன்னுடைய மகனுக்கு அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை முன்பே இருந்தது. ஆனால் வைஷ்ணவிக்கும் தமிழுக்கும் தான் திருமணம் செய்வார்கள் என்று எண்ணி அமைதியாக இருந்தாள். அது மட்டும் அல்ல. சேகரும் இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னதால் தேவகி அவனுக்கு பெண் பார்க்க வில்லை. தரகரை பார்த்திருந்தால் அவரே வைஷ்ணவிக்கு மாப்பிள்ளை பார்க்கும் விசயத்தைச் சொல்லி இருப்பார். சிறிது நாட்கள் கழித்து சேகரின் ஜாதகத்தை தராகரிடம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருக்கும் போது தான் இந்த பிரச்சனை தேவகி காதில் விழுந்தது.
இதற்கு பின் அவரால் அமைதியாக இருக்க முடிய வில்லை. நடந்த விசயங்களைச் சொல்லி தேவகி மகனிடம் திருமணம் பற்றிக் கேட்க அவனும் மறுக்க முடியாமல் சரி என்று சம்மதம் சொன்னான். அடுத்த நாள் காலையில் அவனுக்கு தந்தை இல்லை என்பதால் தேவகியும் சேகருமே வைஷ்ணவி வீட்டுக்கு சென்றார்கள்.
மாப்பிள்ளை சேகர் என்றதும் வைஷ்ணவி வீட்டினருக்கும் சந்தோசமே. கவர்ன்மெண்ட் வேலையில் இருக்கும் மாப்பிள்ளையை எப்படி வேண்டாம் என்பார்கள்? உடனே சரி என்று சொல்லி விட்டார்கள்.
சேகர் மற்றும் வைஷ்ணவி இருவரும் தனியே பேச ஏற்பாடு செய்யப் பட்டது. அவன் பேசுவதற்கு முன்பே “நீங்க என்னையும் தமிழையும் புரிஞ்சிக்கிட்டீங்கன்னா மேற்கொண்டு பேசுங்க. இல்லைனா வேண்டாம்”, என்றாள் வைஷ்ணவி.
“எனக்கும் அத்தை பொண்ணுங்க இருக்காங்க. என்னால உங்க ரெண்டு பேரையும் புரிஞ்சிக்க முடியுது”, என்று சேகர் சொன்ன பிறகு தான் அவள் முகம் மலர்ந்தது. இருவரும் திருமணத்துக்கு சம்மதம் சொல்ல இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்றும் திருமணத்துக்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம் என்றும் முடிவு எடுக்கப் பட்டது.
ஆனால் இந்த விஷயம் தமிழின் நண்பன் சொல்லி தான் தமிழுக்கு தெரிந்தது. அவனுக்கு சந்தோஷம் தான். ஏனென்றால் தமிழுக்கு சேகரைப் பற்றி நன்கு தெரியும். சேகர் தமிழை விட மூன்று வயது பெரியவன். ஒரே ஊர் என்பதால் இருவருக்கும் நல்ல பழக்கம் இல்லை என்றாலும் அவ்வப்போது சிரிக்கும் அளவுக்கு தெரிந்தவர்களே. ஆனால் சிதம்பரம் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லையே என்று மனம் வருந்தினான்.
“உன் அம்மா பேசின பேச்சுக்கு எப்படி உன் கிட்ட சொல்லுவாங்கன்னு நினைக்கிற?”, என்று அவன் நல்ல மனது சொல்ல கொஞ்சம் தெளிந்தான். உடனடியாக மாமா வீட்டுக்கு சென்றான்.