அத்தியாயம் 23
லிங்கேஷ்வரன் ” அபிராமி.. என்ன இந்த இடம் இப்படியிருக்கு இத தொடச்சியா இல்லையா.. எல்லா இடமும் கண்ணாடி மாதிரி பளப்பளன்னு இருக்கனும்… சமையல் எல்லாம் வேலைக்காரங்கள செய்ய சொல்லிட்டு இருக்காத.. நீயே எல்லாத்தையும் பாத்து பக்குவமா சமைச்சுரு.. நீரஜா நீ என்ன இப்படி ஆடி அசைஞ்சுக்கிட்டு வர.. போ போயி.. உங்க அம்மாக்கு ஒத்தாசையா இரு.. என பரபரப்பாய் அனைவருக்கும் வேலை ஏவிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார்..
ஏனெனில் இன்று அபயும் சிற்பிகாவும் கோயம்புத்தூர்க்கு வருகின்றனர்.. திருமணம் முடிந்து மறுவீட்டுக்கு கூட வராத மருமகன் திடிரென்று போன் செய்து நாளை வருவதாக கூறவும் அவருக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை.. அதான் இத்தனை பரபரப்பு..
அபிராமி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.. கணவர் சொன்னதையெல்லாம் செய்துகொண்டிருந்தார்.. மனமோ இந்த சனியன் ஏன் இப்போ வருது.. என்னோட எல்லா ஆசையையும் அழிச்சுட்டு அவ மட்டும் சந்தோஷமா இருக்கா.. விளங்குவாளா அவ.. என சிற்பிகாவை மனதிற்குள் கரித்துக் கொட்டினாள்..
ம்மா.. இப்போ எதுக்கு உன் புருஷன் இப்படி துள்ளிக்கிட்டு திரியுறாரு.. அவன் ஒன்னும் அவக்கூட விருந்தாட இங்க வரலை.. அந்த மேனாமினிக்கிய தலை முழுகுறதுக்காக தான் வரான் என நக்கலாக கூறவும்.. அபிராமி புரிந்தும் புரியாமலும் தன் மகளை பார்த்தார்..
என்னடி சொல்ற.. என்ற அபிராமியின் குரலில் முயன்று மறைக்கப்பட்ட ஆவல் இருந்தது..
ஹ்ம்ம் ஆமாம்மா.. இனிமே அவ புருஷன் அவள திரும்பியும் பார்க்க மாட்டான்.. அப்படியொரு வேலை செஞ்சுருக்கேன் என வில்லத்தனமாய் புன்னகைத்தவள்.. தான் பிறர் குடிக்கெடுக்க செய்த சதிதிட்டத்தை பெருமையுடன் கூறினாள்..
நான் மறுநாளே கொண்டு வந்து விடுவான்னு நினச்சேன்.. ஆனா ஒருவாரம் லேட் என குறைப்பட்டாள்..
நீரஜா கூற கூற.. அதுவரை கொதிகலன் போல் இருந்த அபிராமியின் மனம்.. பனிமலையில் இருப்பது போல் குளிரத்தொடங்கியது..
நீரஜா அதிக்கு போன் செய்து சொன்ன மறுகனம்.. அஜயுடனான தொடர்பில் இருந்த சிம்கார்டையும் உடைத்து தூக்கி எரிந்துவிட்டாள்.. அதனால் அங்கு என்ன நடந்தது என அவளுக்கு தெரியாது.. இருந்தும் அபய் அஜய் கூறியதை நம்பாவிட்டாலும் மறுநாள் இருவரும் தனியாக சந்தித்து பேசுவதை பார்த்துவிட்டால் நிச்சயம் சிற்பிகா என்ன அழுது புரண்டாலும் அவளை நம்பமாட்டான் என நினைத்திருந்தாள்..
ஆனால் ஒருவாரம் ஆகியும் சிற்பிகா வராமலிருக்கவும்.. தனது திட்டம் தோல்வியோ என அவள் வருந்தும் வேளையில் அபய் சிற்பிகா வருகை குறித்து லிங்கேஷ்வரர் கூறினார்.. நிச்சயம் அபய் சிற்பிகாவை நிரந்தரமாக இங்கு தள்ளிவிடத்தான் வருகிறான் என அவள் வன்மம் கொண்ட மனம் உறுதியாக கூறியது…
வாடி வா.. நீ அங்க போயி பணக்கார வாழ்வு வாழ்வ.. நாங்க அத பார்த்து வயிரெறியனுமா.. என உள்ளுக்குள் கருவிய நீரஜா.. அழுதுக்கொண்டே வீட்டிற்குள் சிற்பிகா ஓடிவருவது போலவும்.. அபய் அவளை இழுத்துக்கொண்டு வீட்டில் தள்ளிவிடுவது போலவும் கனவு கண்டு.. அது நினைவாகும் நேரத்திற்கு காத்திருக்கலானாள்..
மகள் இப்படியிருக்க.. தாயோ வேகமாய் தனது சகோதரனுக்கு போன் செய்து ” அண்ணா.. அந்த திருட்டு சிறுக்கி மறுபடியும் நம்ம கைக்கு வரப்போறா.. ”
என்னம்மா சொல்ற.. அவ எப்படி இங்க வருவா.. ஏன் ஏதாச்சும் பிரச்சனையா என ஆவலாக கேட்டார் ராஜாங்கம்..
ஹ்ம்ம் ஆமாண்ணா இத்தனை வருஷம் அவக்கிட்ட நாம நல்லா ஏமாந்து இருந்தோமே.. அவள ஒண்ணுமே செய்யமுடியலையே நான் மனசுக்குள்ள மருகிகிட்டு இருந்தேன்.. அதுக்கெல்லாம் என் மக நல்லவழி காமிச்சுருக்காண்ணே.. என சந்தோஷமாய் சொன்னவள்.. நீரஜா செய்த காரியங்களை கூற.. ராஜாங்கத்திற்கும் மகிழ்ச்சி..
உண்மையாவடா… மாசம் ஐஞ்சு கச்சேரின்னாலும் 40 லட்சம் கிடைக்கும்.. எல்லாம் போச்சேன்னு நினச்சேன்.. இரும்மா நானும் வரேன்.. அந்த அபய் கோபமா இருக்கும் போது.. நானும் ரெண்டு எடுத்துக்கொடுக்கிறேன்.. என உற்சாகமாய் கூறியவர்.. தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு சென்றார்…
முன்பை விட அதிக உற்சாகமாய் அபிராமி வேலைபார்த்தாள்.. கண்கள் நொடிக்கொருமுறை வாசலுக்கு சென்றது..
வாடி வா.. என்னையேவா ஏமாத்துன… என உள்ளுக்குள் கருவி.. சிற்பியை கொத்தி குதறிவிடும் நோக்கத்தில் இருந்தார் அபிராமி…
அப்போது லிங்கேஷ்வரன்.. ” அபிராமி ஆரத்தி கரைச்சு வச்சுட்டில்ல.. ” என பரபரப்பாக கேட்டார்..
ஹுக்கும் அவ வரதுக்கு இது மட்டும்தான் குறைச்சல் என நீரஜாவிடம் புலம்பியவர்.. வெளியில் ” அதெல்லாம் ரெடியா இருக்குங்க.. ” என கணவனிடம் பவ்வியமாக கூறினார்..
ராஜாங்கம் அவர் மனைவி அனுராதா.. அபிராமி நீரஜா என அனைவரும் சிற்பிகாவின் அவலநிலையை காண ஆவலாய் காத்திருந்தனர்.. அப்பொழுது அபயின் கருப்பு நிற கார் அவர்கள் பங்களாவின் உள்நுழைந்தது..
லிங்கேஷ்வரனோடு அனைவரும் வாசலில் நிற்க.. அபயின் பின்னே வந்த அவன் பாதுகாவலர்கள் வேகமாய் அபயின் பக்க கதவை திறக்க.. கருப்பு வண்ண கோட்சூட்டில் கண்களில் கூலிங் கிளாஸுடன் ரோமன்ட் மாடல் போல் இறங்கினான்… அபயசிம்ஹா..
நீரஜா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.. சிற்பிகா அங்கிருந்து சென்றும் அவள் மேல் மேலும் வஞ்சம் வைத்ததற்கு காரணம் அபய்.. அழகு ஆண்மை அந்தஸ்து என்று ஹீரோஷிப் உடைய அபயின் மனைவியாக சிற்பிகா இருப்பதை அவள் விரும்பவில்லை…
காரிலிருந்து இறங்கிய அபய்.. தானே சென்று மறுபக்க கதவை திறக்க.. அங்கு மதிவதனம் முழுதும் தன்னவனின் செயலில் சிவந்து.. முகம் முழுக்க மகிழ்ச்சியின் பூரிப்புடன்.. மெல்லிய மென்பட்டு புடவையில் அளவான நகையும் நிறைவான புன்னகையுமாய் தன்னவனின் கரம் பிடித்து இறங்கினாள்.. சிற்பிகா.
எதையெதையோ எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.. முகம் இறுகி வருவான் என எதிர்பார்த்த அபய் சாதாரணமாகவும்.. கண்ணீருடன் வருவாள் என எதிர்பார்த்த சிற்பிகா சிரிப்பும் பூரிப்புமாய் நிற்க.. லிங்கேஷ்வரனைத் தவிர அனைவரும் ஒருவருக்கொருவர் ஏமாற்றமாய் பார்த்து.. நீரஜாவைக் குழப்பமாக பார்த்தனர்..
அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை.. ஒருவேளை அஜய் மாட்டிக்கொண்டானா இல்லை மனம் மாறி சிற்பிகாவை பார்க்காமலே சென்றுவிட்டானா.. இல்ல அனைத்தும் தெரிந்தும் அபய் கண்டும் காணாமல் விட்டுவிட்டானா என பலவற்றை நினைத்து பைத்தியம் பிடிக்காத குறையாய் நின்றுகொண்டிருந்தாள் நீரஜா..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க.. லிங்கேஷ்வரன் குரல் அனைவரையும் நிகழ் காலத்திற்கு திருப்பியது..
அபிராமி என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க.. சீக்கிரம் போய் ஆரத்தி எடுத்துட்டு வா.. மாப்பிள்ளையும் சிற்பியும் இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே நிக்குறது என திட்ட.. வாய்க்குள் முனங்கிக்கொண்டே ஆரத்தியை எடுத்து வந்து இருவருக்கும் சுற்றினார்..
வாங்க மாப்பிள்ளை.. வாம்மா சிற்பிகா என முகம்கொள்ளா மகிழ்ச்சியுடன் இருவரையும் வரவேற்று ஹாலில் அமரவைத்தார்.. நீரஜா.. அக்காவுக்கும் மாமாவுக்கும் ஜூஸ் கொண்டு வாம்மா.. போ என அவர் அடுத்த கட்டளையை பிறப்பிக்க.. எரிச்சலுடன் எடுத்து வந்தாள்..
அபய் மறுத்துவிட்டு சிற்பிகாவைப் பார்க்க.. அவன் பார்வை புரிந்தவளும் ஜூசை எடுத்துக்கொள்ளவில்லை.. இதைகண்டு நீரஜாவிற்கு மேலும் பற்றிக்கொண்டு வந்தது..
நீங்க இப்போ வந்தது ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை.. என லிங்கேஷ்வரன் அபயிடம் பேச்சுக்கொடுக்க.. அவன் வெறும் தலையசைப்பை மட்டும் கொடுத்தான்…
உன் ரூம் எங்கயிருக்கு… என அபய் சிற்பிகாவிடம் கேட்க.. சிற்பி பதில் சொல்லுமுன்.. மேல இருக்கு மாப்பிள்ளை நீங்க போங்க.. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க.. லஞ்ச் சாப்பிடும் கூப்பிடுறேன்.. என லிங்கேஷ்வரன் கூறினார்..
சரி என்பதாய் தலைசைத்தவன்.. சிற்பிகாவின் தோளில் கைப்போட்டவாரு மேலே சென்றான்… ஆனால் பாதி படியிலே சட்டென்று திரும்பியவன்… நீரஜாவிடம் ஜூசை மேலே கொண்டு வரச்சொல்லி செல்ல.. லிங்கேஷ்வரன் அவள் கையில் ஜூசை திணிக்காத குறையாய் மேலே அனுப்பினார்..
வேண்டாவெறுப்பாய் சிற்பிகாவின் அறை முன்நின்ற நீரஜா.. கதவை தட்டாமல் உள்ளே செல்ல.. அபயின் மார்பில் சாய்ந்து அவன் இதழில் முத்தம் வைத்துக்கொண்டிருந்த சிற்பிகா சட்டென்று விலகினாள்..
அதைக்கண்டு எரிச்சலுற்ற அபய்.. ஏற்கனவே அங்கு உள்ளக்கொதிப்பில் நின்றுக்கொண்டிருந்த நீரஜாவிடம் ” அறிவில்ல உனக்கு இப்படித்தான் மேனர்ஸ் இல்லாம வருவியா.. என கடுமையாக கேட்டான்..
நீரஜா பதிலின்றி விழிக்க.. சிற்பிகாவை அங்குள்ள மெத்தையில் அமர வைத்த அபய்.. உங்கக்காக்கு ட்ராவல் பண்ணது கால் வலிக்குதாம் வந்து பிடிச்சிவிடு.. என்றதும்தான் தாமதம்.. என்ன என்று கீச்சிட்டவாறு முகம் சுழித்தவள்.. அபயை பார்க்க பயந்து சிற்பிகாவை உறுத்து விழித்தாள்..
ஏதோ கூறவந்த சிற்பியை பார்வையாலே அடக்கினான்.. அபய். நீரஜா அபயை எதிர்க்க பயந்து வேகமாய் அங்கிருந்து செல்ல பார்க்க.. அவள் காலை தட்டிவிட்டான்..
நீரஜா விழுந்த வேகத்தில் முன்பக்க நெற்றி ஓரத்தில் வீங்கியது.. இங்க பார் நான் சொன்னத செய்யாம உன்னால இங்கிருந்து போக முடியாது… என அபய் மிரட்டவும் நீரஜாவின் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது..
மெதுவாய் சிற்பிகாவின் அருகே சென்றவள்.. கீழே அமர்ந்து மெத்தையின் ஓரத்தில் இருந்த சிற்பியின் கால்களை பிடித்துவிட்டாள்..
உங்கக்கா ரொம்ப மென்மையானவ அதுனால பார்த்து பதமா பூவை ஹேண்டில் பண்ற மாதிரி அமுக்கணும் என இன்ஸ்ட்ரக்ஷன் வேறு கொடுக்க.. அவமானத்தில் கன்றி கருத்த முகமாய்.. விழியில் தேங்கிய நீருடன்.. சிற்பியின் காலை அமுக்கினாள்…
சிற்பிக்கு நீரஜாவைப் பார்க்க பாவமாய் இருக்க.. வேண்டாமென்பது போல் அபயை பார்த்தாள்.. அவனோ அதைக்கண்டு கொள்ளாமல்.. இந்தா கொஞ்சம் ஜூஸ் குடி பேபி… என பழசாறை அவள் இதழில் வைக்க.. அவனை செல்லக்கோபத்துடன் பார்த்தாவாறு குடித்தாள்…
அவளால் இன்றும் தன் வாழ்க்கை அழகாய் மாறிவிட்டதை நம்பமுடியவில்லை.. அவள் அன்று மறுபடியும் விழித்த போது முதலில் கண்டது.. தன்னை அனைத்தவாரு துயில் கொள்ளும் தன்னவனைத்தான்..
சிற்பிக்கு கொஞ்ச கொஞ்சமாக அவள் கூறியதெல்லாம் நினைவு வர.. அது கொடுத்த வெட்க தாக்கத்தில் அவன் மார்பிலே புதைய.. அதில் துயில் கலைந்தவன்.. அவளின் வெட்கம் புரிந்தாவாறு கள்ளச்சிரிப்பு புரிந்தான்..
பார்க்க பூனை மாதிரி இருந்துட்டு.. என்ன வேலையெல்லாம் பார்த்துருக்க.. என அவன் கேட்டதும் ஏற்கனவே வெட்கத்தில் துடித்தவள்.. மேலும் லட்ஜையுற்று.. அச்சோ மாமு என சிணுங்க.. அவன் அந்த அறையே அதிரும் வண்ணம் சிரித்தான்..
ஏற்கனவே அவனில் மயங்கியிருந்தவள்.. இச்சிரிப்பில் மேலும் மேலும் அவனை திண்பது போல் பார்க்க வாழ்க்கையில் முதல் முறையாக.. கோபத்தில் மட்டுமே சிவக்கும் அபயின் பால் வண்ண வதனம் வெட்கத்தில் சிவக்க ஆரம்பித்தது..
அதனைக் கண்டு மேலும் அவனை பார்த்து மயங்கியவள்.. காதல் மேலோங்க அவளே அன்றைய கூடலுக்கான அத்தியாயத்தை முதலில் ஆரம்பித்தாள்..
இருவரும் மயங்கி கிறங்கி தங்களுக்குள் மூழ்கியிருந்தனர்.. ஆனால் அபய் அம்மயக்கத்திலும் அவளின் காயத்தின் பொருட்டு அதிகம் வன்மையைக் கையாளாமல் பதமாக ஆள.. அவளும் இதமாக அவனுக்கு ஒப்புக்கொடுத்தாள்..
அபய் எப்பொழுதும் போலவே இருந்தான்.. என்ன ஒரு மாற்றம் முன்பு முகத்தில் எவ்வித உணர்வுமின்றி அவளை பார்த்துக்கொள்பவன்.. இப்போது அவள்க்குறித்தான தன் உணர்வுகளை முகத்தில் காண்பிக்கிறான்… மற்றொன்று முன்பு சிற்பியின் காதல் பார்வைகளை இனம் காண முடியாமல் முழிப்பவன்.. இப்பொழுது அவள் விழி செல்லும் போக்கில் வைத்தே அவளின் மனதை படிக்கிறான்..
சிற்பியும் தன் இயல்பு மாறாமல் அவனோடே தன் நேரத்தைக் கழித்தாள்.. மறுநாள் ரூபாலி அஜய் இருவரும் ஊருக்கு கிளம்பினர்.. ஒருவாரம் காயம் சற்று ஆறி.. பிளாஸ்திரி மட்டும் கழுத்தில் இருக்க.. மற்றவர்களுக்கான தண்டனையை வழங்குவதற்காக அவளை அழைத்துக் கொண்டு கோயம்புத்தூர்க்கு வந்திருக்கிறான்..
காரில் இருக்கும் போதே அங்குள்ளவர்களின் மனநிலையை கணித்துவிட்டான்.. அதுவும் சிற்பிகாவின் சிரிப்பைக் கண்டு அவர்களின் சிரிப்பு தொலைந்ததை எண்ணி உள்ளுக்குள் விஷமமாக புன்னகைத்தான்..
முதலில் நீரஜாவிலிருந்து தன் ஆட்டத்தை ஆரம்பித்தான் அபய்.. மேலே சென்ற தன் மகள் இன்னும் வராததைக் கண்டு.. என்னவோ ஏதோ என்று பயந்து மேலே வந்த அபிராமி தான் கண்ட காட்சியில் திகைத்துப்போய் நின்றுவிட்டார்…
அரசனின் தோரணையில் அபய் அமர்ந்திருக்க.. அவன் அருகில் அரசனுக்கேற்ற ராணியாய் அவன் மார்பில் சாய்ந்து அவன் முகத்தை பார்த்தவாறு சிற்பிகாவும்.. அவள் காலடியில் அமர்ந்து அவர்களின் சேடிப்பெண்ணாய் சிற்பிகாவின் காலை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள் நீரஜா..
அதைக்கண்டு அபிராமியின் மனம் கொதிக்க ஆரம்பித்தது.. என்னோட பொண்ணு இவக்கால பிடிக்கணுமா என கோபம் கொண்டவர் வார்த்தைகளை விட ஆரம்பித்தார்… நீரஜா.. என்ன பண்ற.. நீ ஏன் இவ கால பிடிச்சுக்கிட்டு இருக்க.. என்றவர் அபயை காண தவிர்த்து சிற்பிகாவை பார்வையால் பொசுக்க ஆரம்பித்தார்..
அடுத்து அவர்கள் பேசுவதற்கு இடம் கொடுக்காது.. நீரஜாவை அழைத்துக் கொண்டு கீழே வந்தவர்.. அண்ணா அந்த சிறுக்கி நாம பண்ணதெல்லாம் சொல்லிட்டா போலயிருக்கு.. அவன் ஒரு முடிவோடதான் வந்துருக்கான்.. இப்போ என்ன பண்றது.. என பயத்தில் கேட்க.. அவரும் குலை நடுங்கி போய் நின்றார்..