“என்னடா வீரமானவனே… அவ்ளோ தானா உன் வீரம்? ஓ மறந்துட்டேன் பாரு… உனக்கு புட்பால் தான வரும் கிரிக்கெட் எல்லாம் வராதுல” அமைதியாக நின்ற ஆதியை பார்த்து நக்கலடித்தான் சிவா… வேறு பள்ளியை சேர்ந்தவன்
முன்னர் ஆதி புரட்டியெடுத்த கூட்டம் தான் சிவா மற்றும் அவன் நண்பர்கள். இப்பொழுது தங்களுடைய பள்ளியில் தங்கள் நண்பர்கள் மத்தியில் அவனை எப்படியேனும் அசிங்கப்படுத்தி துவைத்தெடுக்க வேண்டும் என்ற முடிவோடு வம்பிற்கு இழுத்தனர்.
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ஒன்றிற்கு வேறு பள்ளிக்கு சென்றிருந்த நண்பர்கள் கூட்டம் வழக்கம் போல் தீவிரமான பயிற்சியில் இருந்த நேரம், அந்த பள்ளியின் தாளாளருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக போட்டி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்த பொழுது தங்களது உடமைகளை எடுத்து கிளம்பிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மழை வேறு வெளுத்து வாங்க துவங்கியது. வளாகத்தை விட்டு கிளம்பிய நண்பர்களை வேண்டும் என்றே வம்பை வளர்க்க பேச்சையும் வளர்த்தனர்.
“என்ன டா சண்டைக்கு இழுக்குறியா?” ஆதவன் முந்திக்கொண்டு போக அவனை பிடித்து நிறுத்தினான் உதய்.
“சண்டைக்கு இப்ப யார் வந்தா? ஒரே ஒரு மேட்ச் ஆடுங்க அப்ப ஒதுக்குறேன் நீங்க வீரமான ஆம்பளைங்க-னு” – பரமன், சிவனின் நண்பன் பொறுமையாக சீண்டினான் அவர்களின் ஆண் கர்வத்தை.
“ஏன் மேட்ச் ஆடி தான் நாங்க வீரம்-னு நிரூபிக்கணுமா… பின்னாடி இருக்குற கிரௌண்ட்-கு வாங்க டா ஒத்தைக்கு ஒத்தை நின்னு பாத்துடலாம். அப்ப தெரியும்ல எவன் வீரமானவன்-னு” பல்லை கடித்து கொண்டு எந்த நேரத்திற்கும் சண்டைக்கு நான் தயார் என்ற நிலையில் நின்றான் தமிழ்.
“தமிழ் வேணாம்”
நண்பனை தடுத்த உதய், தங்களுக்கு முன் இருந்த பத்து மாணவர்களை பார்த்து, “தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க. இந்த தைரியம் உன் ஸ்கூல்-கு வெளிய இருக்குறப்பையும் வரணும்”
“தோடா… கேப்டன் சார் சொன்னா நாங்க கேட்கணுமா? ஏன் இவன் அன்னைக்கு எங்களை அடிச்சது உங்க ஸ்கூல்ல வச்சு தான, அப்ப அவன் தைரியம் இல்லாத மயிறுனு நெனச்சுக்கவா?” – சாலமன், ஆதியை சுட்டிக்காட்டி பேசி அமைதியாய் இருந்தவனை மேலும் தூண்டிவிட்டான்.
ஆனால் ஆதியோ உதய்யின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சிவந்த கண்களுடன் நின்றிருந்தான் முறுக்கிய கைகளோடு.
“பேச விட்டு வேடிக்கை பாக்க சொல்றியா உதய்? மூஞ்சி மொகரை எல்லாம் கிழியிற அளவு செய்யணும் இவனுகள”
எகிறிக்கொண்டு சென்ற கௌதமை பிடித்தி நிறுத்தி, “இப்டி எல்லாம் நடக்கணும்-னு தான் அவனுக பேசுறானுக. அமைதியா எல்லாரும் கிளம்புங்க”
ஆணையாய் உதய் கூற அந்த மாணவர்களை முறைத்துக்கொண்டு சென்ற நண்பர்களை பார்த்து ஏளன சிரிப்போடு, “கிரௌண்ட்ட தாண்டி போறவன் ஆம்பள இல்லனு அர்த்தம்” சிவாவின் நக்கல் பார்வையில் வெளியில் செல்ல சென்ற ஐவரும் அப்டியே நின்றனர்.
ஆதி உதய்யை திரும்பி பார்க்க அவனுக்கு பதில் எதுவும் கூறாமல் தங்களை சீண்டிய அந்த மாணவர்களிடம் சென்றவன், “தோத்துட்டா நான் சொல்றத செய்வியா?” சிவாவிடம் தீவிரமாய் கேட்டான் உதய்.
“அட்றா சக்கனான… இன்னைக்கு ஒரு சம்பவம் பண்ணாம இங்கேயிருந்து போறதா இல்ல…” நரம்பெல்லாம் புடைத்தது கௌதமின் கழுத்தில்.
“டேய் நீங்க ஜெயிப்பீங்க-னு நம்பிக்கை எல்லாம் இருக்கா?” நக்கலாய் சிரித்துக்கொண்டே பேசினான் சிவா.
“கேக்குறதுக்கு பதில் சொல்லாம சிரிச்சிட்டே ஏண்டா பயத்தை மறைக்கிற?”
படு நக்கலாய் அவனை விட உதய் பேச முகத்தை சீரியஸாக வைத்தவன் உதய் முன்னால் வந்து நின்று, “உங்க எல்லாரோடக் கால்லயும் நான்ன்ன் விழுகுறேண்டா” நான் என்பதில் அழுத்தம் அதிகம் வைத்து சிவா பேச,
“சிவா…” சிவாவின் மொத்தக் கூட்டமும் பதறிக்கொண்டு அவனை எச்சரித்தது.
அவர்கள் கோரஸில் வாய் விட்டு சிரித்த உதய், “டேய் மச்சான் பயந்துட்டானுக டா” நண்பர்களை பார்த்து சிரித்து மீண்டும் அந்த கூட்டத்தின் பக்கம் திரும்பி, “முடிவு கண்ணு முன்னாடி வந்து நிக்கிது போல?”
“சரிடா அவன் விழுவான்… ஆனா, நாங்க பத்து பேர் இருக்கோம், உன் பக்கம் பாருடா. உன் ஸ்கூல்ல இருந்து வந்த யாரும் இங்க இல்ல. எந்த நம்பிக்கைல எங்ககிட்ட மோதுற?” – சிவாவின் நண்பன் ஒருவன்.
நண்பர்களை திரும்பி பார்த்தவன், “இவனுகள விட எனக்கு வேற ஒருத்தனும் தேவையில்லை” – உதய்
“அடேய் முட்டா பயலே… பிட்ச் எல்லாம் கேம் பத்தி தெரிஞ்சவனுக்கு தான் கவலை, எங்களுக்கு இல்லடா வெண்ண” ஆதியின் குரலில் எகத்தாளம் வழிந்தோடியது.
காரமாய் அவனை முறைத்தவன், “ஸ்டார்ட் பண்ணலாம், அதே மாதிரி நீங்க தோத்தா நீ எங்க கால்ல விழுகணும்” – சிவா, உதய்யிடம் டீல் பேசினான்.
உதய்க்கு முன்னே முந்திக்கொண்டு வந்த ஆதி, “என்கிட்ட மோத தான இந்த ஆட்டம்… எனக்காக அவன் எதுக்குடா உங்கள மாதிரி சல்லி பயலுக கால்ல விழுகணும்? நான் விழுகுறேன். ஒவ்வொருத்தன் கால்லயும். அது மட்டும் இல்லாம இனிமேல் என் வாழ்க்கைல புட்பால்ல தொடவே மாட்டேன்… முடிஞ்சா தோக்கடிச்சு காட்டுடா பாக்கலாம்” உதய் திரும்பி ஆதியை முறைத்தான். ஆனால் எதுவும் பேசவில்லை நண்பர்கள் மீதுள்ள நம்பிகையில்.
“ஆனா என்னோட ரூல்ஸ் எல்லாத்துக்கும் சரின்னா இப்பயே ஆரமிக்கலாம், இந்த மழை வெயில் எதுவும் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல” – ஆதி
“போடுங்க பாய், தாராளமா போடுங்க…” நண்பர்கள் பக்கம் திரும்பி தலையை அசைத்தவன் மேலும் தொடர்ந்தான், “ரூல் நம்பர் வன் – பீல்டிங்-கு நீங்க பத்து பேர் கூட இருந்துக்கோங்க, ஆனா பேட்டிங்கு அஞ்சு விக்கெட் தான்” – ஆதி
“உங்களுக்கு அடி பட்டா கூட நின்னு ஆடணும் எந்த சாக்கும் சொல்ல கூடாது” – சிவா
“அவ்ளோ தான சரி போடல… அப்ப அம்பயர் எங்க ஆள் ஒருத்தன் தான் இருப்பான்” – சிவா
“இது எந்த ஊர் நியாயம்? ஏற்கனவே களவாணித்தனம் பண்ணி தான் ஒரு வருஷம் உங்கள எந்த மேட்ச்லயும் சேக்கல, இந்த லட்சணத்துல நீங்க அம்பயர் வேறயா?” – ஆதவன்.
“அப்டிங்களா? அப்ப உங்க பசங்க யாராவது கூப்புடுங்க. நடு நாயகமா நிக்கட்டும்” – சிவாவின் நண்பன் ஒருவன் கிண்டலடித்தான்.
“தேவையில்லாத பேச்சு எதுக்கு? அம்பயர் வேணாம்” – உதய் முடித்தான்.
“ஆமா, மொத்தம் பத்து ஓவர். எங்க டீம் கேப்டன் உதய், டாஸ் போட்டு மேட்ச் ஆரமிங்க” ஆதவன் கூற ஒருவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்து கொடுக்க டாஸ் போட உதய்யின் கையில் நாணயம் வந்தது.
“தல… தலை சொல்லு” சிவாவின் நண்பன் ஒருவன் கூற சிரிப்போடு உதய் நாணயத்தை சுண்டிவிட்டான்.
“தலை” சிவா கூற சரியாக அவர்கள் நேரம் தலையே விழுந்தது, “போடு…” சிவா நண்பர்கள் ஆர்ப்பரிக்க, உதய் திரும்பி நண்பர்களை பார்த்தான்.
நால்வரும் இவன் திரும்பி பார்க்கவும் ஒரே போல் தோளை குலுக்கி, ‘எது வந்தா என்ன?’ என்பதை போல் முகத்தையும் வைக்க சிரிப்போடு உதய் சிவாவை பார்த்தான், “பேட்டிங் நாங்க”
சரியென நண்பர்கள் அருகே வந்தவன் சிவாவின் கூட்டம் தயாராகட்டும் என்று அமைதியாய் சென்று அமர்த்துவிட, “மேட்ச் ஜெயிச்சாச்சா தமிழு?” குதூகலமான குரலில் ஒரு கையில் குடை, மற்றொரு கையில் ஹரி, விஷ்ணுவுக்கு திண்பண்டங்கள் என மழையில் நனைந்ததை கூட மறந்து சிறு பிள்ளையாய் கேட்டார் உதய்யின் அன்னை, காயத்திரி.
“என்ன மழைல நனஞ்சுட்டு வந்துருக்கீங்க?” – ஆதி
“இன்னைக்கு நீங்க மேட்ச் போறிங்கனு சொன்னேன், ஒரே அடம் அது தான் பெரிய கார்ல வந்தேன், மேட்ச் முடிஞ்சதும் உங்களையும் கூட்டிட்டு போய்டலாம்ல” – காயத்திரி
“டேய் சுபிணி சப்புணி லாலிபாப் வாங்குனோமா வீட்டுக்கு போனோமா-னு இல்லாம எதுக்குடா இங்க வந்திங்க?” எழுந்து இருவரின் தலையிலும் அடித்தவன், தான் அமர்ந்திருந்த இடத்தில் காயத்திரியை பிடித்து அமர்த்தி அவர் கையிலிருந்த பெரிய பொட்டலத்தை வாங்கினான் ஆதி.
“அண்ணா அது எனக்கு வாங்குன கூஸ்பெர்ரி…” ஹரி சினுங்க, அவனை பொருட்படுத்தாமல் ஆதியுடன் இணைந்து தமிழும் ஆதவனும் கொறிக்க துவங்கினர்.
“இந்தா பால்” ஒருவன் வந்து ஆதவன் கையில் கிரிக்கெட் பந்தை கொடுத்துச் செல்ல அதைப் பார்த்த காயத்திரி,
“என்ன ஆதவா இது பந்து குட்டியா இருக்கு. இனிமேல் இத வச்சு தான் விளையாடணுமா?”
சகோதரர்களை அருகில் இருந்த டேபிள் டென்னிஸ் அறைக்குள் அனுப்பிவிட்டு வந்த உதய், “இது புட்பால் இல்ல மா… ஒரு சவால் விட்டானுங்க இவன் முன்னாடி வம்பு இழுத்தவனுக” ஆதியை சுட்டிக்காட்டி கூறினான், “அதுக்கு தான் இப்ப கிரிக்கெட் விளையாடுறோம்”
வெடுக்கென ஆதி பக்கம் திரும்பி, “இது என்னடா புது பிரச்சனையா?” சந்தேகமாக காயத்திரி கேள்வி எழுப்பினார்.
“இல்ல மா போன வருஷம் மேட்ச்ல என்ன கீழ தள்ளி விட்டானுகள்ல? அவனுக தான் முன்னாடி நடந்தத மனசுல வச்சிட்டு வம்பு பன்றானுக” – ஆதி
“உன் கைய ஒடச்சு விட்ட பசங்களா?” காயத்திரி அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.
“கை ஒடஞ்சது அவனுக்கு. இவனுக்கு இல்ல. இவன் நல்ல மாடு மாதிரி தான் நின்னான் உங்க கண் முன்னாடி…” உதய்க்கு தெரியும் அவன் அன்னை எப்படியும் தவறே ஆதி மேல் இருந்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார் என, “இவனுக்கு சின்ன அடி தான் பட்டுச்சு. ஊர்ல இருக்குற ஒருத்தன விடுறது இல்ல எல்லாரோடையும் வம்பு இழுத்து கை கால ஒடச்சிட்டு வந்தா இப்டி தான் எங்க போனாலும் நிம்மதியாவே இருக்க முடியாது. அதுக்கு நீங்களும் சப்போர்ட் பண்ணுங்க” இருவரையும் வசைபாடினான் உதய்.
“நடந்து முடிஞ்சத எதுக்கு இப்ப பேசணும்? அவனுக பத்து பேர், நாம அஞ்சு பேர் தான் இருக்கோம். அத பத்தி பேசலாமா?”
கெளதம் நினைவூட்ட, “டேய் இந்தா இந்த பப்ஸ் சூடா இருக்கு சாப்புடு” அவன் பேசியதை பொருட்படுத்தாமல் தமிழ் பேச்சை மாற்றினான்.
“ஆதி, என்ன வேணாலும் தைரியமா பண்ணு… அம்மா இருக்கேன்”
ஆதியின் காதில் காயத்திரி கிசுகிசுக்க அவரை பார்த்து முகம் எல்லாம் பல்லாய் சிரித்தவன் அவர் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து, “இன்னைக்கு மேட்ச்ல பாருங்க சிக்ஸ், போர் மட்டும் தான் பறக்கும்” அன்னை தந்த வார்த்தைகள் ஆதியை நம்பிக்கையில் உச்சாந்தியில் நிறுத்தியது.
தன்னுடைய அன்னை இருந்தால் கூட இவ்வளவு பாசமாய், ஆதரவாய் எப்பொழுதும் பக்க பலமாய் இருந்திருப்பாரா என்றால் சந்தேகம் தான் என்று ஆதியால் அடித்து கூற முடியும். சிறு வயதில் இருந்தே, கயாத்திரிக்கு ஆதி என்றால் இயல்பாகவே பிரியம் அதிகம், இப்பொழுது பெற்றோரை இழந்து உறவுகளின் ஆதரவு எதுவும் இல்லாமல் தன்னுடைய வேதனைகளை மொத்தமாய் மறைத்து சிரிப்போடு நிற்பவனை ஒரு நாளில் இரு முறையாவது பார்க்காவிட்டால் அவர் நாளே ஓடாது.
“பாக்கலாம் டா… வாயிலேயே வடை சுடாம வா… நீ தான் முதல் ஓவர் போடணும்” ஆதவன் அவன் கையில் பந்தை போட்டான். சிவாவின் கூட்டம் ஏற்கனவே மைதானத்தில் இறங்கி இருந்தது.
“பாத்து விளையாடுங்க ப்பா…” காயத்திரி கூற அவரின் கன்னம் கிள்ளி, கொஞ்சி என ஆளுக்கு ஒரு விதமாக அவருக்கு நம்பிக்கை கொடுத்து செல்ல,
இறுதியாக நின்ற உதய், “தோத்துட்டா அவன் புட்பால் இனிமே விளையாட மாட்டேன்-னு சொல்லிட்டான் மா”
மைதானத்திற்குள் அந்த சிறிய கிரிக்கெட் பந்தை கால் பந்தாக நினைத்து எத்தி ஏத்தி விளையாடி சென்றி கொண்டிருந்தவனை எட்டி பார்த்த காயத்திரி, “அப்டியா சொன்னான் அவன்?” கோவமாக கேட்டார்.
ஆம் என்று தலையை ஆட்டியவன் அன்னை முன் முட்டி போட்டு அமர்ந்து அவர் கைகளை பற்றி, “ஜெய்க்கலனா என்ன மா பண்ணுவேன் நான்? அவன் பிடிவாதம் தான் உங்களுக்கு தெரியுமே”
சிறு பயம் சில நிமிடங்களாக இருந்தது உதய்க்கு. அவன் தலையை தடவியவர், “உங்க மேல இருக்குற நம்பிக்கைல தான் தம்பி அவன் அப்டி பேசிருப்பான். ஜெயிச்சு குடு உதயா அவனோட சந்தோஷத்துக்காக”
சிறு சிரிப்போடு எழுந்தவனின் கை பிடித்து நிறுத்தியவர், “எல்லாரும் விளையாட்டு பசங்க உதயா நீ தான் பொறுப்பா பாத்துக்கணும்”
தன் கையை பற்றியிருந்த அவர் கையை அழுத்த பற்றி விடுவித்தவன், “பாத்துக்குறேன் மா” என்று மைதானத்தை நோக்கி சென்றான்.
உள்ளே நுழைந்ததும் நண்பர்கள் நால்வரும் ஏதோ தீவிரமான ஆலோசனையில் இருந்தனர், “ராஜா டேய் கரெக்ட்டா ஸ்டெம்ப்ப பாத்து போடுடா… பேட்ல போடாத அப்றம் அவனுக வெளுத்துடுவானுக” தமிழ் ஆதியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
“மாமே நீ கவலையே படாத முதல் பாலே நடு ஸ்டெம்ப் நச்சுனு போல்ட் ஆகும் பாரு… அய்யா கண் கூர்மை அப்டி டா…” விசயமே இல்லை என்றாலும் காலரை தூக்கிவிட்டு பெருமை பேசுவதில் ஆதிக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
“சும்மா இருடா தமிழு… ஆதி உனக்கு எப்படி போடணுமா அப்டி போடு… நோ பால், வைட் இல்லாம மட்டும் போடு. ரெண்டு ஓவர் சமாளிச்சா போதும் அப்றம் நாங்க பாத்துக்குறோம்” கெளதம் நண்பனை தட்டிக்கொடுத்து செல்ல உதய்யை பார்த்து தோளை குலுக்கி வந்து வீச தயாரானான் ஆதி.
சிவாவின் அணிக்கு ஏக குஷி ஆதி பந்தை பிடித்திருந்த விதத்தை பார்த்தே… ஆட்டம் விரைவில் ஆரம்பமாக ஆதி பந்தை வீசிய பொழுதெல்லாம் அவர்கள் அடித்து ஆட, கிரிக்கெட் தெரிந்தவர்களை வீழ்த்த அவனால் முடியாமல் போனது.
அதையும் மீறி கெளதம் இரண்டு பேரை வீழ்த்த, ஆதவன், உதய் ஒருவனையும் வீழ்த்தினார். பத்து ஓவர்கள் முடிவில் சிவாவின் அணி அறுபத்தி ஏழு ரன்கள் எடுத்திருக்க உதய்யின் அணிக்கு அறுபத்தி எட்டு ரன்கள் தேவைப்பட்டது.
முதலில் கௌதமும், ஆதவனும் களம் இறங்க காத்திருக்க, சிவாவின் அணியிலிருந்து ஒருவன் இரண்டு மட்டையை கொடுத்தான். அதை பார்த்த ஆதிக்கு அடக்க முடியாமல் கோவம் தான் வந்தது. காரணம் எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் இருந்தது அவை.
“செத்தானுக இன்னைக்கு என் கைல” எகிறிக்கொண்டு செல்ல இருந்த ஆதியை பிடித்து நிறுத்தவே பெரும் பாடாக போனது.
“தம்பி உதயா இது சரியா வருமான்னு பாரு?” பின்னால் இருந்து குரல் வர, காயத்திரியை திரும்பி பார்த்த உதயனுக்கு சிரிப்பு தான் வந்தது. கையில் மூன்று மட்டை பந்துகளை சுலபமாக தூக்கி வந்தார் ஆராய்ந்துகொண்டே.
அதை பார்த்த பொழுதே தெரிந்தது நிச்சயம் விலை உயர்ந்ததாக தான் இருக்கும் என.
ஆதியின் தோள் தட்டி, “பேட் வந்துடுச்சு” நண்பனிடம் கூறி அன்னை அருகில் சென்றவன் மட்டையை வாங்கி, “ஏன் மா இதெல்லாம்?” சிரித்தவாறே கேட்டான்.
“பேட் உங்கட்ட இல்லையே தம்பி, அதுக்கு தான் நம்ம டிரைவர் கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொன்னேன்… சரியான்னு பாரு”
“நீங்க வாங்குனது என்னைக்கு தப்பாகிருக்கு?” அன்னை-கு அது போதும் சிரிப்பை வரவழைக்க, இன்முகமாய் சரி என தலையை ஆட்டி சென்றுவிட்டார்.
ஆனால் அவர்களுக்கான அடுத்த சவால் மழை. முதலில் சிறு சிறு தூறலாக வந்தது, நேரம் கடக்க கடக்க வேகம் பிடித்தது. மைதானத்தினுள் முதலில் வந்து நின்ற கௌதமிற்கும் ஆதவனுக்கும் பிம்பம் தெளிவாக தெரியவில்லை.
மைதானத்திற்கு வெளியிலே, “ஒரு நல்ல பேட்ஸ்மேன திறமையை வெளி காட்ட விடாம முடக்கி வச்சிருக்கீங்க” – ஆதி
“இவன் ஒருத்தன்… உதய் என்னடா இப்டி மழை பெய்யிது, பால் ஒழுங்கா வேற வராதே…” – தமிழ்
“வழி இல்ல தமிழ். அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆடணும்” – உதய் கண்கள் மைதானத்தை விட்டு நகரவில்லை.
“நான் வேணா போகவா, ஒரே ஓவர்ல ஆட்டைய முடிச்சிட்டு வந்துடுவேன்” தன் வாக்கில் புலம்பிய ஆதியை கண்டுகொள்ளவே இல்லை இருவரும்.
அங்கு உள்ளே, “அடிச்சு ஆடு கெளதம், பாத்துக்கலாம்” – ஆதவன்
“தோ இப்ப பாரு” தெனாவெட்டோடு பேசிய கெளதம் இடத்தில் நின்று பேட்டை அவன் பிடித்த விதத்தை பார்த்து அங்கிருந்த மொத்த கூட்டமும் சிரித்தது.