“பேட் புடிக்க தெரியல இவனுக எதுக்குடா வெட்டி வீராப்போட சுத்துறானுக” கௌதமின் காதுப்படவே பேசிய ஒருவன் பந்தை வாங்கி, “பால்ல உருட்டி விட்டா கூட அடிக்க மாட்டானுக போல… பாரேன் ஒரே ஓவர்ல அஞ்சு விக்கெட் விழுகும்” அளவிற்கு மீறிய நம்பிக்கை அவன் நடையிலே தெரிந்தது.
முதல் பந்தே நூலிடையில் கெளதம் தப்ப மீண்டும் சிரிப்பொலி தான் அங்கே சிவாவின் கூட்டத்திடம்.
அடுத்த பந்தும் அதே போல் சிவாவின் நண்பன் போட, இந்த முறை பந்து மைதானத்தை விட்டு வெளியில் சென்றது. பந்து சென்ற திசையையும் கௌதமையும் பார்த்தவன் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருந்தான்.
“என்னா டா பேட்ட புடிக்க தெரியாம எந்த கிருகனாவது இருப்பானா?” அவனோ பதில் எதுவும் பேசவில்லை, “ஸ்ட்ரீட் கிரிக்கெட் தெரியுமா? ஸ்ட்ரீட் சாம்பியன் டா நாங்க…” கிரிக்கெட் மட்டையை தூக்கி தோளில் போட்டு அசால்டாக நடந்தவனை பார்த்து இன்னும் ஆச்சிரியம் தான் இருந்தது அவர்களுக்கு. சத்தியமாக இந்த பரிமாணத்தை நண்பர்களிடமிருந்து எதிர் பார்க்கவில்லை சிவாவின் கூட்டம்.
கௌதமை பார்த்து சிரித்த ஆதவன் அதே சிரிப்போடு பந்தை போட்டவனை பார்த்து ‘எதுக்கு இது?’ என்று சைகை செய்து தலையில் அடித்துக்கொண்டான் சிரிப்புடன்.
முக்கால்வாசி நேரம் நண்பர்கள் கூட்டம் கால்பந்தில் இருந்தால் மீதி இருந்த நேரம் உதய்யின் வீட்டின் அருகே இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் தான் விளையாடுவார்கள்.
அதில் ஓரளவிற்கு அனைவரும் விளையாடினாலும் கெளதம், ஆதவன் நன்றாகவே விளையாடுவார்கள். அடுத்த சில ஓவர்கள் கெளதம், ஆதவனின் கூட்டணியை உடைக்கவே இயலாமல் போனது, கொட்டும் மழையும், ஆறாய் காலுக்கு கீழ் ஓடிய மழை நீரும் சிறிதும் அவர்கள் ஆட்டத்தை பாதிக்கவில்லை. ஆனால் கெளதம் இருபத்தி ஓர் ரன்கள் எடுத்த பொழுது ஆட்டம் இழக்க, அடுத்து தமிழ் வந்து சிறிது முயன்றான். அடுத்து அவனும் ஆட்டம் இழக்க தன்னை களத்தில் விடுமாறு ஆதி ஆடி தீர்த்துவிட்டான்.
‘நீ கத்திகிட்டே இரு’ என்று உதய்யும் அவனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஆதியின் நேரம் அடுத்து ஆதவன், தமிழ் என இருவரும் வேகமாகவே ஆட்டம் இழக்க உதய்க்கு ஜோடியாக அவன் செல்ல வேண்டிய நிலை.
“இன்னைக்கு அவன் போடுற ஒவ்வொரு பாலும் உடைய போகுது பாருங்கடா… இவ்வளோ பெரிய பிளேயர ஏன் ஒலிச்சு வச்சோம்-னு இந்த உலகமே பீல் பண்ணும்” பக்கம் பக்கமாக வசனம் பேசி மைதானம் நோக்கி நடந்தவனை தமிழ் அழைத்தான்.
“சரி டா… சரி. பாத்து ஆடுறேன், அவனுக மனசு நோக்காத மாதிரி நடுல நடுல ஒரு ரன் ரெண்டு ரன் வேணும்னா அடிக்கிறேன். ஆனா சீக்ஸ், போர் அடிக்காம எல்லாம் இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” – ஆதி
“எப்டி?? இது இல்லாம கைலயே புடிச்சு புடிச்சு தூக்கி போடுவியா?” பேட்டை நீட்டி ஆதவன் கேட்கவும் தான் அப்படி ஒரு இருப்பதே அவனுக்கு நினைவு வந்தது.
“சாரி” என்றவன் மேலும் முறைத்து பார்த்த மூவரையும் பார்த்து, “கேவலமா பாத்தா நான் என்ன பண்றதாம்? ஒரு நல்ல பேட்ஸ்மேன்-கு அழகே என்ன மாதிரி ஒரு சிறந்த பௌலர்-கு பேட்டிங்ல வேலையே வைக்க கூடாது” – ஆதி
“கோதாவரி அந்த வெளக்கமாத்த எடு” – தமிழ் ஆதியை பார்த்து முறைக்க,
“தோ வந்துட்டேன் உதயா…” அசடு சிரிப்போடு உதய் இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.
“பாத்து ஆடு, சீக்ஸ் எல்லாம் ட்ரை பண்ண வேணாம். பால எனக்கு பாஸ் பண்ணி மட்டும் விடு” – உதய்
“சூழ்ச்சி பன்றானுக நாலு பேரும்”
ஆதி ஜாடை பேச, சிரிப்போடு, “போடா டேய்” அதே சிரிப்போடு உதய் சென்றான்.
பெரிதாக எல்லாம் இல்லை, இன்னும் பத்து ரன்கள் மட்டுமே பதினைந்து பந்துகளில். அதில் அடுத்த மூன்று பந்துகளில் ஆதி ஒரு ரன் மட்டுமே எடுக்க, உதய் சீக்ஸ் ஒன்றை அடித்தான். அடுத்த முறை ஆதி பந்துகளை சிந்திக்கவிருக்க இந்த முறையும் சொதப்பினான். ஆதியின் மேல் வந்து விழுந்த சிவாவின் கூட்டத்தின் சிரிப்பை பார்த்து அமைதியாய் ஆதி கடந்தது பார்க்க அனைவருக்குமே ஆச்சிரியம் தான்.
“ஆதி…” உதய்யின் கண்டன பார்வையை பார்த்து,
“மழை இப்டி கொட்டுது பால் எங்க வருதுன்னே தெரியல உதயா” ஆதி பேசுவது கூட தூரத்தில் நின்றவனுக்கு மெல்லிசாக தான் கேட்டது.
“அவன் கை கால் உடையனும்” தூறல்களின் சத்தத்தில் சல்மான் வேறு ஒருவனிடம் பேசியது அவர்களுக்கு சற்று அருகில் நின்ற உதய்க்கு பிசுறு தட்டாமல் கேட்டாலும் சிரிப்போடு மேலும் கவனித்தான், “பெரிய மயிறு மாதிரி ஆடுனான், இன்னைக்கு அவன் ஜெயிச்சாலும் பரவால்ல அந்த தே*** பய நம்ம கையால சாக…”
முழுதாக அவன் பேசி முடிக்கும் முன் முதுகில் பொறுக்க முடியாத வலியோடு சல்மான் தரையில் கிடந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தவன் தலையை சல்மானிடமிருந்து உயர்த்த அங்கு உதய் வெறிகொண்டு நின்றான். சல்மானை அடித்தது உதய் தான், அதுவும் பேட் வைத்து.
“என்ன சொன்ன? ஆஹ்… என்ன சொன்ன? திரும்ப சொல்லு” வலியில் துடித்து கிடந்தவனை நோக்கி உதய் மேலும் நகர அதற்குள் நிலையின் தீவிரம் உணர்ந்து கெளதம், தமிழ், ஆதவனும் உள்ளே வந்தனர். சிவாவின் நண்பர்களும் உடனே உதய்யை நோக்கி வந்த பின்னும் உதய் சிறிதும் அசையவில்லை.
“சொல்லுடா தைரியம் இருந்தா திரும்ப சொல்லு” மேலும் கோவம் அடங்காமல் இருக்க ஓங்கி மீண்டும் தாக்க, இந்த முறை அடி விழுந்தது அவன் முகத்தில்… ரத்தம், மழை நீரோடு ஓட உதய் மீது ஒரு கூட்டமே தாவியிருந்தது.
எப்பொழுதும் நிதானமாய் இருப்பவன் இப்பொழுது இவ்வளவு கோவப்படுவதிலே நண்பர்களுக்கு புரிந்தது. உதய் மீதி தாவிய கூட்டத்தில் ஒருவனை பிடித்து ஆதி அடிக்க, அதற்குள் ஆதவன், தமிழ் உதய்யை பிடித்திருந்த மற்றவர்களை பிரித்துவிட்டு சண்டையில் ஈடுபட்டனர். பத்து பேர் இருந்த கூட்டத்தை ஐவர் சமாளிப்பது கடினமாக இருந்தாலும் இரு பக்கமும் ஆக்ரோஷம் மட்டும் குறையாமல் அப்படியே இருந்தது. வாங்கிய காயங்களில், அடித்து கொட்டிய மழை பட்டு வலி அதிகம் இருந்தாலும் சிறிதும் மசியவில்லை எவரும்…
ஆதி தன் பங்கிற்கு மட்டையால் அடிக்க, தமிழ், ஆதவன் மாட்டியிருந்த ஸ்டெம்ப்பை பிடிங்கி அடித்தனர்… சில நீண்ட நெடிய சண்டைக்கு பிறகும் நிற்காமல் சென்ற சண்டையை அந்த பள்ளியின் பி.டி மாஸ்டர் வந்து தான் நிறுத்த வேண்டி இருந்தது.
“பொறுக்கி பசங்களா டா நீங்க? காட்டான் மாதிரி அடிச்சுக்குறிங்க” அவர் கத்தியதை கூற பொருட்படுத்தாமல் இன்னும் மாறி மாறி முறைத்துக்கொண்டிருக்க,
“உங்க ஸ்கூல்ல பேசிட்டேன். போங்க இருக்கு இன்னைக்கு” என்றவர் சிவாவின் கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்ல அப்பொழுதே உதய்யின் பள்ளியிலிருந்து வாத்தியார் வந்து,
“மாடு மேக்க போங்க அஞ்சுபேரும் அது தான் சரியா வரும்… காவாலி பசங்க மாதிரி இப்படியா வெளி ஸ்கூல்-கு போய் சண்டை போடுவிங்க? அசிங்கமா இருக்கு டா. பத்து நாள் சஸ்பெண்ட் பண்ண சொல்லிருக்காரு ஹெட் மாஸ்டர். அகைன் ஸ்கூல் வரப்ப பேரன்ட்ஸ் கூட்டிட்டு வாங்க” வாய்க்கு வந்தவை அனைத்தையும் கூறி அவர் திட்ட, அவர் பேசிய எதுவும் இவர்களை பாதிக்கவில்லை.
“சார் பசங்க எந்த தப்பும் பண்ணல” – காயத்திரி இடையில் வந்து நிற்க அவருக்கும் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தனி வகுப்பு நடந்தது.
விடுமுறையை தேடி தேடி அலைபவர்களுக்கு தானாக வந்து வைத்துக்கொள் என்று கூறியது போல் தான் இருந்தது அவர்களுக்கு தண்டனை. என்ன சிறிய பிரச்சனை பெற்றோரை சமாளிக்க வேண்டும்… அதற்கும் காயத்திரியை முன் வைத்து பேச முடிவெடுத்தனர். அடுத்த ஆறு நாட்கள் ஐவரும் ரெக்கை இல்லாமல் பறந்தனர், விளையாட்டு மைதானமே வீடாய் மாற, வீடு ஹோட்டலை போல் உண்பதற்கு மட்டுமே பயன்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று நண்பர்கள் அனைவரும் களைப்பில் அவரவர் இல்லத்திற்கு செல்ல, ஆதி தமிழை அழைத்துக்கொண்டு வீடியோ கேம் ஆடும் இடத்திற்கு சென்றான்.
“நாளைக்கு வரலாம் ஆதி, எனக்கு அசதியா இருக்கு டா” – தமிழ்
“புதுசா ஆரமிச்ச கடை தமிழு அது ப்லே ஸ்டேஷன் எல்லாம் புதுசா இருக்காம். அதுவும் ப்லே ஸ்டேஷன் த்ரீ. செம்மயா இருக்காம் டா. என்னமோ நேர்ல ஆடுற மாதிரி இருக்காம். இன்னைக்கு கிரௌண்ட்ல எல்லாம் அதே தான் பேச்சு. அப்ப முடிவு பண்ணேன் இன்னைக்கு அத பாத்தே ஆகணும்னு” – ஆதி
“ஆனாலும் உனக்கு பிடிவாதம் அதிகம் ஆதி” – தமிழ்
“ஒரு மணி நேரத்துக்கு அஞ்சு ரூபா தான், ரெண்டு மணி நேரம் ஜாலியா இருக்குறோம். உன்கிட்ட காசு இருக்கா?” – ஆதி
“ஒரு கோடி ரூபா இருக்கு போதுமா? – தமிழ்
“அடிச்சேன் தெரு கோடில போய் விழுவ. பத்து ரூபாய்க்கு எவ்ளோ நேரம் ஆட முடியுமோ மஜா பண்றோம்” – ஆதி
“ரொம்ப ஆசை காட்டி கூட்டிட்டு வர்ற, நல்லா இல்லாம இருந்தா நீ தான் என்கிட்ட செத்த” இருவரும் பேசிக்கொண்டே ஆதி கூறிய இடத்திற்கு வர வழிந்தோடிய கூட்டத்தில் சில நிமிடங்களுக்கு பிறகு தான் இவர்களுக்கு இடம் கிடைத்தது.
முக்கால் மணி நேரத்திற்கு மேல் விளையாடியவர்கள் வெற்றி பெற வேண்டிய ஒரு விளையாட்டில் தோற்றிட அதில் வெறியான ஆதி கோவத்தில் தங்களுக்கு முன்னிருந்த சிறிய மர பலகையை ஓங்கி அடித்துவிட்டான். அவன் அடித்த வேகத்திலும் அழுத்தத்தாலும் அந்த சாதாரண பலகை தாக்கு புடிக்க முடியாமல் உடைந்து விழ அதன் மீதிருந்த அந்த ப்லே ஸ்டேஷனும் கீழே விழுந்து பலமாக உடைத்திருந்தது.
கோவத்தின் வீரியத்தை அப்பொழுது தான் உணர்த்தவனை, “அட பைத்தியமே” தமிழ் திட்டி முடிக்க, “என்னடா இது என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா நீ வாடுக்கு அடிச்சு உடைக்கிற… காசு எடு” என்றான் கடையின் முதலாளி வேகமாக.
“அண்ணே தெரியாம விழுந்துடுச்சு…” – தமிழ்
“தெரியாம விழுந்துடுச்சா? நானும் இங்க தான இருக்கேன் பாத்தேன் டா இவன் தான் ஒடச்சான். காச வச்சிட்டு இடத்தை காலி பண்ணு” என்றான் அவன் விடாப்பிடியாக.
“யோவ் தர்றேன்யா” எப்படி தர போகிறோம் என்ற சிறு யோசனையும் இல்லை ஆனால் செய்யவேண்டும்.
“வா தமிழு” என்று தமிழையும் ஆதி உடன் அழைக்க, “இவனையும் கூட்டிட்டு ஓட பாக்குறியா. பணத்தை எடுத்துட்டு வந்து இவன கூட்டிட்டு போ” என்றான் இறுதியாக.
பற்களை கடித்து அந்த முதலாளியை பார்த்தவன், “இருடா வர்றேன்” தமிழிடம் கூறி வெளியில் வந்தான். யோசனையோடு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவனுக்கு உதய்யை தவிர வேறு எந்த வழியும் இல்லை. அருகில் இருந்த ஒரு டீ கடைக்கு சென்றவன் அங்கிருந்த போன் பூத்தில் ஒரு ரூபாய் காயினை போட்டு உதய்யின் இல்லத்திற்கு அழைத்தான்.
“இல்ல ஆதி ஏன் இப்ப தான் வீட்டுல எல்லாரும் அவங்க அப்பா ஆபீஸ் போனாங்க” – காயத்திரி
“சரி மா நான் வச்சறேன்” ஆதி இணைப்பை துண்டிக்க அப்டியே தலையில் கை வைத்து நின்றுவிட்டான்.
நிச்சயம் அந்த ப்லே ஸ்டேஷன் இருவதாயிரத்தை தாண்டும். எங்கு செல்வான் அந்த பணத்திற்கு? தந்தை இருந்தால் கூட இரண்டு அடி வாங்கி கெஞ்சலாம் ஆனால் இப்பொழுது என்ன செய்வது? வேறு வழியே இல்லை காயத்திரி மட்டும் தான் ஆனால் என்ன கூறுவது? ஏற்கனவே அவன் கோவத்தை அதிகம் கண்டிப்பவர் இதை கூறினால் நிச்சயம் உதவ மாட்டார், சரி ஏதாவது ஒரு பொய் கூறி, பணத்தை வாங்கிய பிறகு உண்மையை கூறி விடலாம் என்ற முடிவில் மீண்டும் கயாத்திரிக்கு தான் அழைத்தான்.
“மா இருவதாயிரத்தை எடுத்துட்டு ஒடனே எங்க ஸ்கூல் கிட்ட இருக்க மெயின் ரோடுகு வாங்க” – ஆதி
“எதுக்கு ஆதி இந்த அவசரம், அதுவும் ஏன் இவ்ளோ பணம்?” கண்டிப்போடு தான் கேள்வி வந்தது.
“தமிழுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு மா”
“என்ன ஆதி சொல்ற? எங்க இருக்கீங்க? அடி ரொம்ப பெருசா? இப்ப எப்படி இருக்கான்?” படபடப்பாக கேள்வி கேட்டுக்கொண்டே அவர் செல்ல, இப்படிப்பட்ட நல்ல மனிதரை மனம் வருத்தப்பட வைக்கிறோமோ என்ற குற்றவுணர்வை சிறிது நேரம் புடிக்க முடிவெடுத்தான்.
“பெரிய அடி இல்லமா ஆனா காசு குடுத்தா தான் அட்மிட் பண்ணுவாங்கலாம்”
“என்னடா இப்டி சொல்ற? ஐயோ வீட்டுல வேற யாரும் இல்லையே. நான் என்ன பண்ணுவேன்… ஆதி நிஜமா நல்லா இருக்கான்ல தமிழ்? அவன் வீட்டுல எதுவும் சொல்லிடாத சரியா? நான் வந்து பக்குவமா அவங்க வீட்டுல பேசுறேன்”
“மா வாங்க மா அப்றம் பேசிக்கலாம்” தன் மீது தான் கோவம் அதிகம் வந்தது ஆதிக்கு.
ஆதியிடம் பேசிவிட்டு பணத்தை எடுத்து செல்லவிருந்தவரை மீண்டும் அலைபேசி தடுக்க மீண்டும் ஆதியாக இருக்குமோ என்ற பயத்தில், “ஹலோ ஆதி என்னப்பா ஆச்சு?”
“மா நான் உதய், என்ன ஆச்சு ஏன் இப்டி படபடப்பா இருக்கீங்க?”
“உதயா… உதயா தமிழுக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு ஆதி போன் பண்ணான், நீ உங்க ஸ்கூல் மெயின் ரோடு கிட்ட வாந்துடு. நான் போறேன்” அதோடு வேகமாக வீட்டை விட்டு காயத்திரி செல்ல வீட்டில் எந்த காரும் இல்லாமல் போனது.
வழிந்துகொண்டே இருந்த கண்ணீரை துடைத்தவர் சாலையில் கிடைத்த முதல் ஆட்டோவை பிடித்து ஆதி கூறிய இடத்திற்கு விரைந்தவர் ஆதியை தெருவின் அந்த பக்கம் பார்த்தார்.
“தம்பி அந்த பக்கம் போங்க” என்றார் ஆட்டோ ஓட்டுனரிடம்.
“அப்டி நேரடியா போக முடியாது மா… சுத்தி தான் அந்த பக்கம் போகணும், போலீஸ் இருக்காங்க” என்றார் ஆட்டோ ஓட்டுநர்.
போக்குவரத்தை பார்த்தவர் ஆட்டோவிலிருந்து இறங்கி நெரிசல் அதிகமிருந்த சாலையை கடந்தவர் ஒரு பாதியை கடந்து மறு பாதி சாலையை கடக்கும் பொழுது தூரத்தில் வந்த பேருந்து ஒன்றை கவனிக்காமல் போக அதை தூரத்திலே பார்த்துவிட்ட ஆதி வேகமாக, “ம்மா…. பஸ்…”