பேருந்து வந்த திசையை ஆதி காண்பிக்க அது வந்த வேகத்தில், காயத்திரி சுதாரிக்கும் முன் அவர் மேல் அது மோதி வேகத்தில் அடித்து சில மீட்டர் தூரம் தள்ளி தரையில் விழுந்தார்.
“ம்மா-ஆஆ…” வார்த்தைகள் வர மறுக்க கால்கள் சிலையாகி போனது தார் சாலையில் கிடந்த அவர் தேகத்தை பார்த்து.
மஞ்சளும் பாலும் குழைத்து செய்த தேகத்தில் எப்பொழுதும் இருக்கும் மினுமினுப்பை அவர் குருதி மறைத்திருந்தது, நெற்றியிலிருந்து ரத்தம் ஆறாய் ஓட, இலக்கே இல்லாமல் விரிந்திருந்த அவர் கண்கள் வலியை காட்ட அவர் கொண்டு வந்த பணம் ஆங்காங்கு சிதறிக்கிடந்தது. மொத்தமாய் உலகம் இருண்டது போன்ற எண்ணம் வியாபிக்க துவங்க, காயத்திரியை மறைத்து மக்கள் கூட்டம் கூடும் பொழுது தான் தீவிரம் உணர்ந்து அவரை நோக்கி நடந்தான். கூட்டத்தை விழக்கி அவர் அருகில் சென்றவனுக்கு சொல்ல முடியாத வேதனை. அப்படியே அன்னை அருகில் அமர்ந்தவன் கதறி அழத் துவங்கினான்.
“ஐயோ… ம்மா” தலையில் அடித்து அழுதவன் மருத்துவமனை என்ற ஒன்றை அப்பொழுது மறந்திருந்தான்…
“ஆ… ஆதி… தமி… தமிழ்…” இந்நிலையிலும் தமிழை பற்றியே யோசிக்கும் அவரை இந்நிலையில் விட காரணமான தன்னை எப்படி தண்டிப்பது என்றே தெரியவில்லை.
“ம்மா… இல்ல மா அவனுக்கு… ஒன்னும்… ஒண்ணுமில்ல மா” வாய் விட்டு கதறி அழுதவன் அவர் கைகளை பற்றி மேலும் அந்த இடமே கதறும் வகையில் அழுதான், “ஐயோ அம்மா இப்டி பண்ணிட்டேன் ம்மா, ஐயோ அம்மா என்ன விட்டு போகாதீங்க ம்மா, போகாதீங்க ம்மா, அம்மா… அம்மா…”
“எப்பா என்னப்பா பேசிட்டு இருக்க, யோவ் எதாவது வண்டிய நிறுத்துங்க” ஒருவர் அந்த கூட்டத்தில் சுதாரிக்க சிலர் வாகனம் ஏதாவது பிடிக்கலாம் என்று சென்றனர்.
“ஆ… ஆதி…” கயாத்திரியின் முகம் வலியில் சுருங்க ஆதியின் கையை பிடித்துக்கொண்டார்.
“ம்மா… என்ன மா பண்ணுது… ம்மா… எனக்கு பயமா இருக்குமா… மா”
கண்கள் மெல்ல மெல்ல கயாத்திரிக்கு இருட்ட துவங்க, “பத்த… பத்தரம் ப்பா… உத… உதய்ய பா… பாத்துக்கோ…” விதியை கணித்தவர் கண்களில் இருந்து கண்ணீர் விழ, அது வலியிலா அல்லது வேதனையிலா என்று தெரியவில்லை அவனுக்கு.
“நான் பாத்துக்க மாட்டேன்… நீங்க தான் பாத்துக்கணும். இப்டி எல்லாம் பேசாதீங்க மா வாங்…”
“தம்பி எந்திரி, ஹாஸ்பிடல் தூக்கிட்டு போகலாம்” ஆதி நகரப்போவதில்லை என்று தெரிந்து அவனை விட்டு அங்கிருந்தவர்கள் காயத்திரியை ஒரு ஆட்டோவில் ஏற்ற வேகமாக உடன் ஏறி அமர்ந்துகொண்டான் உதய்… கயாத்திரியையே பாத்துக்கொண்டிருந்த ஆதியின் கண்கள் நண்பனை பார்க்க அதில் தெரிந்த அவன் கண்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் மடிந்தது ஆதியின் மனம்.
தெருவிலே ஆசையாது நின்றவனை ஒரு கூட்டம் பிடித்து சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு பத்திரமாக இருக்கும்படி அறிவுரைகள் கூறி சென்றது. கீழே கிடந்த பண தாள்களை ஒருவர் எடுத்து ஆதியின் கையில் பத்திரமாக கொடுத்து சென்றார். எவ்வளவு நேரம் அவன் அப்படியே இருந்தான் என்று தெறியவில்லை, இடத்தை மறந்து தெருவிலே அமர்ந்தவனுக்கு கயாத்திரியின் நிலை மட்டுமே கண் முன்னாள் வந்து நிற்க ஒவ்வொரு நொடியும் மாண்டான்.
“ஆதி… காயத்திரி மா-கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு டா… வா போகலாம்” வேக வேகமாக வந்த தமிழ் ஆதியின் தோளை பிடித்து உலுக்க அசைவில்லாது இருந்தவன் அழுது வீங்கிய கண்களுடன் தமிழை ஏறிட்டு,
“நான் தான் தமிழு எல்லாத்துக்கும் காரணம். பணத்துக்காக உனக்கு ஆக்சிடென்ட்-னு பொய் சொல்லி அவங்கள வர வச்சு இப்டி பண்ணிட்டேன்” உயிர் நீங்கிய குரலில் பேசியவனைக் கண்டு உடல் அதிர்ந்தது தமிழுக்கு.
“ஆதி…” அதிர்ச்சியில் தமிழுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.
தன் கையிலிருந்த பணத்தை தமிழிடம் உயிரே இல்லாமல் கொடுத்தான், “தப்பு பண்ணிட்டேன் தமிழு… என் காயத்திரி ம்மா-வ நானே இப்டி ஆகிட்டேன் டா” நண்பனின் காலை பிடித்து கட்டி கதறியவனை பார்க்க பாவமாக இருந்தாலும் அதை மீறிய கோவம் தான் வந்தது.
“நீ இப்டி பண்ணுவ-னு கொஞ்சம் கூட நான் எதிர் பாக்கல டா” ஏமாற்றமாக கூறியவன் ஆதியின் தோளை பிடித்து எழ வைத்தான்.
“வா ஹாஸ்பிடல் போகலாம். ஒன்னும் ஆகியிருக்காது…” ஆதியின் கை பிடித்து இழுக்க சிறு பிள்ளை போல், “நல்லா தான தமிழு காயத்திரி மா இருப்பாங்க?”
“நல்லா இருப்பாங்க டா” தன்னுடைய சைக்கிளில் ஏறி அமர்ந்தவன், “ஒக்காரு போகலாம்” ஆதியும் அமைதியாக ஏறி அமர மனதின் பாரத்தை மட்டும் அவனால் அடக்க முடியவில்லை.
மருத்துவமனை செல்லும் வழி எல்லாம் உதய்யின் குடும்பத்தை பற்றியும், காயத்திரியை பற்றியும் மட்டுமே புலம்பிக்கொண்டே வந்தவனை தமிழால் அமைதியாக்க முடியவில்லை. ஆனால் மருத்துவமனை வந்ததும் உள்ளே வராமல் வெளியிலேயே பிடிவாதமாய் நின்றான்.
“ஆதி இப்ப வர போறியா இல்லையா?” தமிழ் இறுதியாக கேட்கவும், “அங்க இருக்குற யார் முகத்தையும் என்னால பாக்க முடியாது டா. நான் வர மாட்டேன்” அழுத்தமாக கூறியவனை அதற்கு மேல் வற்புறுத்தாமல் தமிழ் உள்ளே சென்றான்.
தமிழ் உள்ளே சென்ற சில நொடிகளில் ஆதி வாசலையே ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே இருக்க தமிழ் சென்ற வேகத்திலே மீண்டும் வெளியில் வந்தான். சைக்கிளை எடுத்து மீண்டும் ஆதி முன் வந்து, “ஏறு” என்றான் இறுகிய முகத்துடன்.
“ஏண்டா, ஏதாவது மருந்து வாங்கணுமா? என்கிட்டே காசு இல்லையே” பிதற்றியவனை தண்டிக்கும் நிலையில் கூட தமிழின் மன நிலை இல்லை.
“ஆதி இப்ப வர போறியா இல்ல நான் போகவா?”
பித்து பிடித்தவன் போல் அமைதியாக வந்து அமர்ந்தவன் செல்லும் வழி எங்கும், “எங்க போறோம் தமிழ்? காயத்திரி மா நல்லா இருக்காங்களா? உதய் என்ன உள்ள வர கூடாதுனு சொல்லிட்டானா?” கேள்வி கணைகளை மாறி மாறி தொடுக்க சைக்கிள் உதய்யின் இல்லம் நோக்கி செல்வதை பார்த்தவன், தமிழின் சட்டையை இறுக்கி பிடித்தான்.
வீதியின் நுழைவாயிலிலே கூட்டம் கூடியிருக்க சைக்கிளில் இருந்து தமிழ் நிறுத்தும் முன் இறங்கியிருந்தான் ஆதி.
“தமி… தமிழ்… தமிழ் ஏன் டா எல்லாரும் வீட்டு முன்.. முன்னாடி நிக்… நிக்கி… நிக்கிறாங்க?”
பேச கூட முடியவில்லை, மனதில் உத்தித எண்ணங்கள் அத்தனையும் பொய்யாகவோ கனவாகவோ இருக்க வேண்டும் என்று தனக்கு தெரிந்த அத்தனை தெய்வங்களின் காலிலும் மனதிலே விழுந்தான்.
கண்கள் வாசலிலே இருந்தாலும் கேள்விகள் தமிழுக்கு, “காயத்திரி மா எங்க தமிழு?” வீடு வரை இருந்த தைரியம் தமிழுக்கு வீட்டின் வாசலை பார்த்த பின்பு மறைந்தது எதுவும் பேசவில்லை ஆதியிடம். உள்ளே சென்றான்.
வீட்டிற்குள் நுழைந்த தமிழை தொடர்ந்து செல்ல முடியவில்லை ஆதியால். வாசலை அடைந்தவன் கால்கள் உள்ளே கேட்ட ஓலத்தின் ஓசையில் தரையில் மடங்கி அமர்ந்து கதறினான். பெற்றோரை இழந்தவனுக்கு, பெற்றோரை விட மேலாக இருந்த அவனுடைய காயத்திரி அம்மா இன்று தன்னால் தன்னை விட்டு மொத்தமாக பிரிந்துவிட்டார் என்ற எண்ணமே இறப்பை தேடி அலைய மனம் ஆட்டம்போட்டது. தலையில் அடித்து அழுத்தவனை மொத்த கூட்டமும் விசித்திரமாய் பார்த்தாலும் அவர்கள் பார்வை கூட அவனுக்கு தெரியவில்லை, அனைத்தயும் விட பெரிய இழப்பை சந்தித்து நிற்கிறானே…
கதறினான் மணி கணக்கில், அவனை அடக்க கெளதம், ஆதவன், தமிழ் அல்லது அவர்கள் குடும்பத்தினர் எவர் வந்தாலோ உள்ளே செல்லாமல் வெயில் எதையும் பார்க்கவில்லை, அதே இடத்தில் கிடந்தவனை பார்க்க பரிதாபமே பிறந்தது. ஆனால் தெரிந்த உண்மை எதையும் பெரியவர்களிடம் இளையவர்கள் பகிர்ந்துகொள்ளவில்லை.
சடங்குகள் அனைத்தும் முடிந்து கயாத்திரியின் உடலை எடுத்து மொத்த கூட்டமே வந்த சமயம் வற்றிய கண்ணீர் எல்லாம் அன்னையை இறுகிய முகத்துடன் பார்த்துக்கொண்டு வந்த உதய்யை பார்த்ததும் மீண்டும் வேதனை அதிகமாகியது. கயாத்திரியின் உடலை பார்த்தவன் அருகில் செல்ல கூட உடல் கூசியது.
ஆதி அருகில் வந்த ஆதவன், “வாடா வந்து அம்மாவை கடைசியா பாரு” ஆதவனின் கையை உதறி முடியவே முடியாது என்று பிடிவாதமாய் இருந்தவன் இறுதி சடங்கிற்கு மின்மயானம் சென்றும் தூரத்திலிருந்து கயாத்திரியின் முகத்தை பார்த்து துடிதுடித்து போனான்.
“எல்லாமே போச்சு… அவ்ளோ தான் ஆதி, இனி உனக்கு அம்மா யாரும் இல்லடா.. அவ்ளோ தன். முடிஞ்சது. மொத்தமா போச்சு எல்லாமே. காயத்திரி ம்மா இல்ல..”
தன்னாலே புலம்பினான் மயானத்தின் வெளியில் நின்று. உள்ளே தெரிந்த அவர் முகத்தின் சாந்தம் தன்னால் காணாமல் போனதே என அங்கேயும் சாலையில் மடிந்து கதறினான், “காயத்திரி ம்மா… ம்மா” என்ற பிதற்றலுடன்.
இனி அவர் எங்கே வருவார்? சென்றுவிட்டாரே…
அடுத்து வந்த நாட்களில் உதய் வீட்டை விட்டு வெளியில் வராமல் தன்னுடைய குடும்பத்தை கூட மொத்தமாக தவிர்க்க, நண்பர்களுடன் கூட அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. முற்றிலும் அனைவரையும் தவிர்த்தான். ஆதியோ அதை விட மோசமாக உணவை முற்றிலும் தவிர்த்து மருத்துவமனை கூட சில முறை சென்று வந்தான் தமிழின் தந்தையின் மிரட்டலில்.
ஒரு முறை உதய்யை பார்க்க சென்ற கௌதமை கட்டி அணைத்து ஏதேதோ அன்னையை நினைத்து அழுத உதய்யின் மண நிலையை கேட்ட ஆதிக்கு அதற்கு மேல் இருப்பு கொள்ளாமல் உதய்யின் வீட்டிற்கே சென்றான், அங்கு அவனுக்கு அடுத்த அதிர்ச்சியாக அவன் கையிலே உதய்யின் பள்ளி பரிமாற்ற சான்றிதழை, “மேல தான ஆதி போற, உதய் கேட்டான் குடுத்துடு”
வாழ்க்கையையே தொலைத்திருந்த உதய்யின் தந்தையை பார்த்ததே ஆதியால் பொறுக்க முடியவில்லை அதையும் தாண்டி இவர்கள் வீட்டிற்குள் நுழைவதை பார்த்ததுமே வந்து ஆசையாய் பேசி வயிற்றை நிறைத்து அனுப்பும் கயாத்திரியின் நடை இல்லாத அந்த வீட்டின் வெறுமையை பார்த்ததுமே அங்கு நிற்கவே அவனுக்கு கால்கள் கூசியது.
ஆதியின் தயக்கத்தையும் நடுக்கத்தையும் உணர்த்த நண்பர்கள் கூட்டம் அவன் கை பிடித்து மேலே இழுத்து சென்றனர் உதய்யின் அறைக்கு.
கதவு தாழிடாமல் இருக்க, நண்பனின் அனுமதி இல்லாமலே மூவர் உள்ளே செல்ல தயங்கி தயங்கி தலையை தூக்காமல் உள்ளே வந்தான் ஆதி. உதய் அவன் அறையில் இருந்த பால்கனியில் அமர்ந்து எல்லையே இல்லாத வானத்தை வெறித்து அமர்ந்திருந்தான்.
“உதய்…” அவனுக்கு கௌதமின் அழைப்பு தெளிவாக கேட்டது என்பதை இறுகி போன அவன் உடலே சொன்னது.
“உதய் உன்கிட்ட பேசணும்” தமிழ் அழைக்க முகத்தை திரும்பி பார்த்தவன் ஆதியையும் கவனித்து அமைதியாக எழுந்து வந்து ஒரு ஓரத்தில் கை கட்டி நின்றான்.
“உதயா…” தழுதழுத்த ஆதியின் குரலில் கண்கள் சிவக்க கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டு முகத்தை திருப்பி நின்றான் உதய்.
“நான் தா உதயா அம்மாவை கொன்னுட்டேன். தெரியாம பண்ணிட்டேன் டா… என்ன மன்னிக்க வேணாம். என்ன தண்டிக்க மட்டும் செய் டா…” தரையில் முட்டி போட்டு அமர்ந்து யாசித்த ஆதியின் மேல் அங்கிருந்த எவருக்கும் இரக்கம் பிறக்கவில்லை.
தன்னுடைய உலகமே நண்பர்கள் என்று இருந்தவனுக்கு அந்த உலகமே இப்பொழுது இல்லை என்றான பின்பு எதற்கு உயிரோடு இருக்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே.
“உன்ன தண்டிச்சா காயத்திரி ம்மா வந்துடுவாங்களா?” சில நாட்களாக தன்னுடைய முகத்தை கூட பார்க்காமல் அமர்ந்திருந்த ஆதவனின் கோவ கேள்விகளுக்கு பதில் அவனிடம் இல்லையே… மௌனமாய் மட்டுமே இருந்தான் உதய்.
“ச்சை இவ்ளோ கேவலமா நீ பண்ணுவ-னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல ஆதி… எதுல விளையாடுறது-னு ஒரு விவஸ்தை வேணாம்?” – கெளதம்
“தெரிஞ்சு பண்ணல டா நானு” – ஆதி
“பொய் சொல்றப்ப மனசு உருத்தலயா? இல்ல பதறிட்டு உன்ன பாக்க வந்த காயத்திரி ம்மா வ பாத்தப்ப கூட மனசு உருத்தலயா?” – தமிழ்
“டேய் அத விடு டா… என்ன சொன்னாலும் நம்புவாங்கனு தெரிஞ்சும் உயிரோட விளையாண்டு கடைசில அவங்க உயிரையே எடுத்துட்டியே டா” அடக்க முடியாமல் ஆதவன் கேட்க முட்டி போட்டு அமர்த்திருந்தவன் காதுகளை பொத்தி கதறினான் ஆதி.
ஆதவன், “எவ்வளவு நம்பிருப்பான் இவன் உன்ன? இவன விட உன் மேல தானேடா பாசம் அதிகம் வச்சாங்க. உன் அம்மாவா இருந்தா இப்டி எல்லாம் பேசியிருக்க மாட்ட… நல்ல வேளை உன் அம்மா அப்பா இல்ல, இருந்தா அவங்கள நினைச்சும் நாங்க பயந்துருக்கணும்”
சரமாரியாக கேள்விகள் நாலா பக்கமும் இருந்து வர உதய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஏன் ஆதியின் பக்கம் திரும்ப கூட இல்லை.
கண் உதய்யின் மேல் இருந்தாலும் அனைவர் பேசிய வார்த்தைகளும் ஆதியின் மனதை உயிரோடு கிழித்து கொன்றது.
அனைவரையும் புறக்கணித்தான், தன் நண்பன் தன் மேல் கோவமாக மட்டுமே இருப்பான் ஆனால் நிச்சயம் புரிந்து கொள்வான் என்று ஆசையில், “உதயா…” கலங்கிய விழிகளோடு நண்பனை அழைத்தவன் தெரியவில்லை நண்பனின் செயல் அவனை மொத்தமாய் வதைக்க போவதை.
“உதயா… செத்து கூட போறேன் டா ஆனா நீ மட்டும் என்ன புரிஞ்சு மன்னிச்சிடுடா” ஆதி பேசிய அடுத்த நொடி வேகமாக தன்னுடைய அறையிலிருந்த ஒரு அலமாரி ஒன்றை திறந்தவன் தமிழ் சில தினங்களுக்கு முன்னர் கொடுத்த பணத்தை எடுத்து ஆதியின் முகத்திலே தூக்கி எறிந்தான்.
உதய்யின் செயலை பார்த்த அனைவருக்குமே ஆச்சிரியமாக இருந்தாலும், தன் முகத்தில் பட்டு சிதறி விழுந்த பணக் காகிதங்களில் இருந்த காயத்திரியின் ரத்தம் ஆதியின் மனதை கூறு போட்டு தின்றது.
‘என் அம்மாவை நீ இதுக்காக தான கொன்ன?’
கோவத்தின் உச்சத்தில் இருந்த உதய்யின் கண்கள் சாட்டிய குற்றத்தில் சிறிதும் யோசிக்காது உதயனின் காலை கட்டி மௌனமாய் கதறிய ஆதி வார்த்தைகள் எதுவும் பேசாமல் உதய்யின் முகத்தை ஒருமுறை வலி, வேதனை, கண்ணீர் நிறைந்த மூடி அவன் காலடியில் கிடந்தான்.
“அவன் பண்ணது தப்பு தான் அதுக்காக நீ பண்ணுனது ரொம்ப பெரிய தப்பு உதய்” மொத்த உயிரும் வடிந்தது போல் சென்ற ஆதியின் நிலை உயிரை கிள்ளியது கௌதமிற்கு.
“அப்ப இத்தனை நாள் உன் கூட இந்த காசுக்காக தான் இருக்கோம்-னு நெனச்சியா உதய்?” – தமிழ்
ஆதி உதய்யின் காலை பிடித்து கதறியது அனைவருக்கும் கஷ்டமாய் இருந்தாலும் உதய்யையும் கட்டாயப்படுத்த முடியவில்லை.
உதய்யின் அமைதி அர்த்தம் புரியவில்லை அவர்களுக்கு, “ஆமா-னு சொன்னா இனிமே அவனை எங்க முன்னாடியே வராம பாத்துக்குவீங்களா?”
ஆதவன் வார்த்தைகள் விட அதில் கோவம் வந்த தமிழ், “எத்தனை நாள் டா இதெல்லாம் மனசுல வச்சிட்டு இருந்த? சந்தர்ப்பம் வந்ததும் உண்மை வெளிய வருது..”
கசந்த புன்னகையோடு இன்னும் அழுது கொண்டிருந்த ஆதியின் தோளை பிடித்து இழுத்தான், “வா” என்ற அதட்டலுடன்.
“உதயா… என்ன மன்னிச்சிருடா” மந்திரம் போல் அதே வார்த்தையை திரும்ப திரும்ப பேசிய ஆதியின் நிலை ஆதவனுக்கும் கண்ணீரை வரவழைக்க ஆதியை நெருங்கி வந்தவனை தடுத்தான் கெளதம்.
“அவனுக்கு பைத்தியம் புடிச்சாலும் பத்தரமா அவனை பாத்துக்க எங்களுக்கு தெரியும்”
“உதயா…” ஆதியை பிடித்து கௌதமும் தமிழும் இழுத்து செல்ல உதய்யின் பெயர் ஆதியின் நாமம் ஆனது, வலி, வேதனை, கண்ணீர் கலந்த கண்களோடு இறுகி பாறையாய் மாறி தன்னுடைய உலகமாய் இருந்த அன்னையை இழந்த உதய்யின் தோற்றத்தை பார்ப்பது அதுவே இறுதியாக இருக்கும் என்று அன்றே ஆதியின் மனதில் உத்தித ஒரு சலனம் தான்.
இன்று
தன் மடியில் படுத்திருந்த உதய்யின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை யாழினியின் மனம் சிறிதும் எதிர் பார்க்கவில்லை, ஏதோ அவன் வலி தனக்கே உரியது போல் கண்ணீர் சுரந்தது அவளுக்கும். உதய்யின் திமிரையும், நிதானத்தை மட்டுமே பார்த்து பழகியவளுக்கு அவன் கண்ணீர் பொறுக்க முடியாததாக இருந்தது.
ஆனால் அதையும் தாண்டி, அன்னையை எண்ணி வரும் கண்ணீரா இல்லை நண்பனை எண்ணி வரும் கண்ணீரா என்ற கேள்வியும் உடன் எழுந்தது. தயக்கத்துடன் அவன் கண்ணீரை அவள் துடைக்க அந்த கைகளை அள்ளி தன்னுடைய கைகளுக்குள் கோர்த்துக்கொண்டான்.
“ஒரு பொண்ணுக்கு மட்டும் தான் அம்மாவோட அரவணைப்பு வேணுமா யாழினி? பசங்களுக்கும் தேவை தான? அதுவும் பிசினஸ் தான் தன்னோட உலகம்-னு நினைக்கிற என்னோட அப்பா மாதிரி இருக்குறவங்ககிட்ட இருந்து பசங்க எப்படி பாசத்தை வாங்குவாங்க? அது தான் என்னோட அம்மாவை மட்டுமே சுத்தி இருந்துச்சு என் உலகம், அந்த உலகம் ஒரே நாள்ல இருந்த தடயமே இல்லாம போச்சுன்ன உடனே என் மனசு எவ்ளோ வேதனை பட்டு கதறுச்சுன்னு எனக்கு மட்டுமே தெரிஞ்சது யாழினி…
ஒரு வருஷம் சுத்தமா தூக்கம் இல்ல, சாப்பாடு சாப்புட முடியல… ஒருத்தரோட அருமை இல்லாதப்ப தான் தெரியும் ஆனா என் அம்மாவோட அருமை அவங்க என் பக்கத்துல இருந்த ஒவ்வொரு நிமிஷமும் தெரிஞ்சது, அதுனால தான் என்னமோ அவங்கள சார்ந்தே நான் இருக்க கூடாதுனு என்ன விட்டுட்டு போய்ட்டாங்க”
உதய்யின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க தன் கையை பற்றியிருந்த அவன் கையில் அழுத்தம் கொடுத்து ஆறுதல் தர முயன்றாள் யாழினி தன்னுடைய கண்ணீரை முடக்கி.
“எனக்கு தெரியல சார்… யாரா இருந்தாலும் உணர்ச்சிவசத்துல அந்த நேரத்துல அப்டி தான் பண்ணிருப்பாங்க” – யாழினி
“நான் உணர்ச்சி வசத்துல பண்ணல யாழினி, தெளிவா தான் இருந்தேன். இப்ப வர அவன் மேல எனக்கு கோவம் கொஞ்சம் கூட குறையல. அவன் தெரிஞ்சு செஞ்சானோ தெரியாம செஞ்சானோ ஆனா என்னோட உலகமே என்னோட அம்மா, ஆதி மட்டும் தான் என் குடும்பம் கூட அதுக்கு அடுத்து தான்…
அவன் நினைச்சிருந்தா அம்மா ரோடு கிராஸ் பண்ணப்ப உண்மைய சொல்லி அவங்கள நிறுத்தியிருக்கலாம். ஆனா அவன் அப்டி பண்ணல. என் நம்பிக்கையை ஒடச்சவன் இனிமே எனக்கு வேணாம்-னு தோணுச்சு யாழினி ஆனா அவன் என் அம்மாவோட மேள் வெர்ஷன், என் முகத்தை பாத்தே மொத்தமா என்ன புரிஞ்சுக்குறவன். அப்டி ஒருத்தன என்னால எப்பயும் பிரிஞ்சு, வெறுத்து இருக்க முடியும்-னு தோணல…”
“புரியுது சார்… அதுக்காக தான் அவர் மேல பொய்யா கோவத்தை காமிச்சிட்டு அவரோட வளர்ச்சியை தூண்டி விடுறிங்க”
ஆமாம் என்று தலையை ஆட்டியவன் எழுந்து, “சாப்ட போகலாம்” இயல்பாக இருக்க விரும்பி உதய் பேச, அவன் உணர்வை புரிந்து அவளும் அவனுடன் இணைந்து மதிய உணவை முடித்து விட, “வீட்டுக்கு போ இன்னைக்கு, நாளைக்கு வா” என்கவும் மன பாரத்துடன் உதய்யின் வீட்டை விட்டு சென்றாள்.
மெயின் ரோட்டிற்கு சென்றவள் ஆட்டோவை தேடிக்கொண்டிருந்த நேரம் அவள் கைபேசி அலறிக்கொண்டே இருக்க தங்கையின் அழைப்பு என்றதும் ஏற்றாள், “சொல்லு குழல்…”
“அக்கா.. அக்கா… எங்க க்கா இருக்க?” தங்கையின் பதட்ட குரல் யாழினியை பயம் கொள்ள செய்தது.
“என்ன ஆச்சு குழல்?”
“அப்பாவை அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க க்கா… ஏதோ கொலை, கொள்ளை-னு சொல்றாங்க… எனக்கு பயமா இருக்கு க்கா. எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல… வா க்கா…”