“ண்ணா! இதை விடு.. நான் பார்த்துக்குறேன்.. பேச வேண்டியவங்ககிட்ட பேசினா எல்லாம் சரி ஆகும்.. என்ன நினைச்சுட்டு இதெல்லாம் பன்றாங்கன்னு நான் பாக்குறேன்” சூர்யா கோபமாய் கூற,
“அப்போ இவரை என்ன டா பண்ணனும்? தெரிஞ்சே என்னை தூக்கி எரிய பார்த்த இந்த ஆளை நான் என்ன பண்ணனும்?” ஜெய்க்கு தாளவே முடியவில்லை.
வெறும் காகிதம்.. அந்த காகிதத்திற்காக தன்னை பனையம் வைக்க தயாராய் இருந்திருகிறார் தன் தந்தை என்ற ஒன்றை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“பிரகாஷ்!” என்ற பால நாதன் அழைப்பை கைநீட்டி ஜெய் தடுக்க,
“என்னவோ உன்னை சும்மா எங்கேயோ தள்ளி விட பார்த்த மாதிரி சொல்ற? ஒன்னும் இல்லாத இடத்துலயா போனா போகட்டும்னு விட இருந்தேன்? அவ்வளவு பெரிய பிசினஸ் மேன், அவரோட மருமகன்ற பேரும், அவரு பொண்ணை அவரே தர்றேன்னு சொல்லும் போது வேண்டாம்னு சொல்ல எனக்கு காரணம் இல்ல.. அதுக்கு அப்புறம் தான் அந்த பணம் எல்லாம்” இறுதி வார்த்தையை கூற கொஞ்சம் வார்த்தை தந்தியடிக்க தான் செய்தது.
“ம்மா! இப்பவே சொல்றேன்.. நிவிக்கு நான் பார்த்து சரினு சொன்னா மட்டும் தான் கல்யாணம்.. இதை யாரும் மறந்துடாதீங்க.. பையனை தூக்கி கொடுத்தவருக்கு பொண்ணு மட்டும் எம்மாத்திரம்?” என்று ஜெய் கேட்க,
“நீங்க பேசினதும் போதும்.. செஞ்சதும் போதும்..” என்று அழ,
“நான் பண்ணினது எல்லாம் உங்களுக்காக தான்னு உங்களுக்கு புரியவே இல்லை இல்ல?” என்று கூறி தன்னறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டார்.
அவருக்குமே பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. தன்னிடம் பணத்தை கேட்ட குணசீலன் தனக்கு கூறாமல் இப்படி ஒரு எண்ணத்தில் இருப்பார் என துளியும் எண்ணவில்லை.
“ஜெய்! இப்பவே இதுக்கு ஒரு முடிவு பண்ணிடலாம்.. அவரு பொண்ணு இங்கே தானே இருக்கா.. வா அவளை அவ வீட்டுல விட்டுட்டு ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு வருவோம்” பிரேமா கூறி, ஜெய் கைகளைப் பிடித்தார்.
அஞ்சலிக்கு யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கும் தைரியம் சுத்தமாய் இல்லை. பிரேமா பேசுவது காதுகளில் விழுந்த போதிலும் அவள் அழுகையில் உதடு கடித்து கண்ணீரை தேக்கி குனிந்த வண்ணம் நிற்க,
“நான் போறேன் ம்மா!” என்றான் சூர்யா.
“அவளை கூட்டிட்டு போ சூர்யா.. இவளால தான் எல்லா பிரச்சனையும்.. எல்லாம் பணம் தான்.. பணம் இருந்தா என்ன வேணா செய்யலாம்ன்ற எண்ணம்.. அவளை அவ அப்பா வீட்டுல குடுத்துட்டு அவளும் வேணாம் அவ பணமும் வேண்டாம்னு சொல்லிட்டு வா” என்று பிரேமா அஞ்சலியைப் பார்த்து கூற,
“சித்தி! யார் என்ன பண்ண முடியும்? நம்ம வீட்டு ஆளுங்க சரி இல்லைன்றேன்.. நீங்க அந்த வீட்டு பொண்ணை குறை சொல்லி என்ன ஆக போகுது? அவளை அனுப்பி என்ன ஆக போகுது? இப்ப அவ குணசீலன் வீட்டு பொண்ணு இல்ல சூர்யா மனைவி..” ஜெய் கூறவும் அஞ்சலி ஒரு நொடி திரும்பி அவனைப் பார்த்தவள் பின் வேகமாய் தன்னறைக்கு சென்றுவிட்டாள்.
“அவரு புத்தி கெட்டு போய் இப்படி பண்ணிட்டாரு.. நீ அதையே மனசுல வச்சுட்டு இருக்காத ஜெய்..” அஞ்சலி செல்வதை பார்த்த பிரேமா பின் ஜெய்யிடம் கூற, அவன் மீண்டும் சோஃபாவில் தளர்ந்து அமர்ந்துவிட்டான்.
சங்கரன் கூறியதை கேட்டதில் இருந்து அத்தனை தவிப்பு அவன் மனதில். மகனை உயிரோடு தூக்கிக் கொடுக்கும் அளவுக்கு பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா தந்தை? என்ற எண்ணம் மட்டும் இப்போது வரை அவன் மனதில் இருந்து அழியவில்லை. இனியும் அது மாறும் என்றும் தோன்றவில்லை.
“சங்கரன் பிஏ லிங்கம் மூலமா தான் பெரியப்பா கடன் வாங்கினது எனக்கு தெரியும் ண்ணா.. ஆனா அது இவ்வளவு இருக்கும்னு எதிர்பார்க்கல.. என்ன சொல்றதுன்னே தெரியல” பக்கத்தில் அமர்ந்து சூர்யா கூற,
“எல்லாரும் அந்த ஆளை மாதிரி தான் இருப்பாங்கன்னு நினைப்பு.. நான் போறேன்.. இன்னைக்கு இருக்கு அந்த ஆளுக்கு” என்றான் சூர்யாவும்.
“சரி பண்ணனும் சூர்யா.. எல்லாமே சரி பண்ணனும்” என்ற ஜெய் அங்கே ஓரமாய் அமர்ந்திருந்த தங்கையைப் பார்த்தான்.
நிவி கல்லூரி படிக்கும் பெண் என்றாலும் அந்த வீட்டில் குழந்தை தான். அனைவரின் பேச்சிலும் அவள் வெகுவாய் பயந்து ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள்.
அவளை அருகே கை நீட்டி அழைக்க, அண்ணன் அருகில் வந்து அமர்ந்தாள். மல்லிகா நின்ற இடத்திலேயே அமர்ந்திருக்க, அவரால் கணவரின் செயலை ஜீரணிக்கவே முடியவில்லை.
வந்தவளை தன் ஒற்றை பக்கமாய் கையோடு அணைத்துக் கொண்டான் ஜெய். தான் இருக்கிறேன் என்பதாய் இருந்தது அவளுக்குமே.
நிவியின் தலையில் கை வைத்து ஆறுதலாய் கலைத்த சூர்யா எழுந்து தன் அறைக்கு சென்றான்.
வெளியே அடக்கி இருந்த அழுகையை அறைக்குள் வந்து அழுது தீர்த்திருந்தாள் அஞ்சலி.
முகம் வீங்கி அழுத கண்கள் சிவந்து மெத்தையில் அமர்ந்திருந்த அஞ்சலியை பார்த்த சூர்யாவிற்கு முதன் முதலாய் பாவமாய் தோன்றியது.
நிச்சயமாய் அவள் அழுகையில் பொய்யில்லை என்று தோன்றினாலும் அன்னை கூறியது போல அவளின் தவறும் இதில் இல்லாமல் இல்லையே என்று தான் கீழே பேசாமல் நின்றான்.
அவளருகே வந்து சூர்யா அமர, அது தெரிந்தாலும் கண்களை துடைப்பதும் மீண்டும் உற்பத்தி ஆகும் கண்ணீரை அடக்கவும் என மீண்டுமாய் அழுகையை அடக்க முயற்சித்தாள்.
“இப்ப என்ன? எதுக்கு இந்த அழுகை?” நீண்ட நேரமாய் அழுது, அடக்கவும் முடியாமல் அவள் போராட, அதைக் கண்டவன் கேட்டு வைத்தான்.
“உன்னை யாரு என்ன சொன்னாங்க? அப்படி சொல்லி இருந்தாலும் அதெல்லாம் உன் அப்பா மேல இருக்குற கோபம்.. புரியலையா உனக்கு?” நிதானமாய் கூறியவனை திரும்பி சந்தேகமாய் பார்த்தாள்.
சூர்யா உள்ளே வரவுமே அவள் மனம் இன்னும் வெதும்பியது. ஏற்கனவே சொல்லி சொல்லி காயப்படுத்துபவன்.. இப்பொழுது என்னவெல்லாம் பேசி குத்தி காண்பித்து கோபத்தை காட்ட போகிறானோ என தான் நினைத்திருக்க, அவன் அமைதியாய் பேசியதே அவளை திரும்பிப் பார்க்க வைத்தது.
“என்ன?” என்றான் அவள் பார்வையில்.
கொழகொழவென அவள் பேச்சு புரியாமல் போக, “அழுது முடிக்க எவ்வளவு டைம் ஆகும்னு சொல்லு.. ஒன்னும் புரியல” என்றான் அவள் அழுகையை நிறுத்தும் பொருட்டு.
ஒரு வழியாய் அதில் அழுகையை விழுங்கியவள்,. “சத்தியமா எனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது.. நான் ஜெய்யை கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டது உண்மை தான்.. ஆனா அதுக்கு அப்பா இப்படி பண்ணி இருப்பார்னு எனக்கு தெரியாது” விம்மியபடி அவள் கூற,
“தெரிஞ்சிருந்தா என்ன பண்ணி இருப்ப?” என்றான் அலட்டாமல்.
அவனைப் பார்த்து விழித்தவள் அதை யோசிக்கும் பொழுது, அவளுக்கு ‘தெரிந்திருந்தாலுமே பெரிதாய் அதை நினைத்திருக்க மாட்டோமோ?’ என்ற எண்ணம் தோன்ற பதில் கூறாமல் தலை குனிந்தாள்.
“இம்பக்ட் என்னனு தெரிஞ்ச பின்னாடி தான் அது தப்புன்னு தெரியுது இல்லை?” என்றவன் கேள்வியில் மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க,
“உன்னை சொல்லி எதுக்கு? அப்படியே குணசீலன் கேரக்டர்ஸ்.. அதை மாத்த முடியாதே.” என்றதும் இன்னும் இன்னும் விம்மினாள்.
“உனக்கு நான் புரிய வைக்க ட்ரை பண்ணின ஒவ்வொண்ணுமே உன் வாழ்க்கைக்காக தான்.. உன் அப்பா மாதிரி நீயும் இருந்தின்னா பிரச்சனை உனக்கு தான்..” என்றவன் பேச்சை முதல் முறையாய் அமைதியாய் கேட்டாள்.
“கீழே எல்லாரும் பேசினது எல்லாம் கோபத்துல பேசினது.. அதுவும் உன் அப்பா மேல இருக்குற கோபம்.. புரியுது தானே?” என்று கேட்க, அவள் தலையாட்டினாள்.
“இப்ப அவருக்கு என்ன தண்டனை கொடுக்குறது?” என்று சூர்யா கேட்டபடி,
“ஓகே! ரிலாக்ஸ்!” என்றவன் ஏதோ யோசித்தபடி அருகில் இருக்க, அவனைப் பார்க்கவும் குனிவதுமாய் இருந்தாள் அஞ்சலி.
“என்ன?” என்று கேட்டவன் அவளை திரும்பிப் பார்த்திருக்கவில்லை. ஒன்றுமில்லை என்பதாய் அவள் தலையசைக்க,
“பரவால்ல சொல்லு!” என்றான் அவள் ஏதோ கூற வருவதை கணித்து.
“ஆண்ட்டி சொன்னது…?” என்று அவள் இழுக்க,
“என்ன சொன்னாங்க?” என்றான் அவள் எதை கூறுகிறாள் என தெரியாமல்.
“என்னை அனுப்ப சொல்லி சொன்னாங்களே!” என்று மெதுவாய் கூறிய அஞ்சலி சில நிமிடங்களுக்கு முன் வரையானால் ‘விட்டால் போதும்’ என்று சென்றிருப்பாள்.. இப்பொழுது அப்படி தோன்றவில்லை.
என்னவோ மனம் சுணங்கியது.. அனுப்பி விடுவானோ என்று அடித்தும் கொண்டது.. அவளுக்கே அது ஏனென்று புரியவில்லை.
“விட்டா ஓடிடலாம்னு தானே கேட்குற?” என்று சூர்யாவும் கேட்டே விட, அவன் பதிலில் தான் இருந்தது அவள் கவனம் முழுதும்.
“சரி முகத்தை கழுவிட்டு வந்து கிளம்பு” என்று எழுந்து கொண்டவன்,
“அப்படியே பேகையும் எடுத்து வச்சுக்கோ” என்று கூறிவிட்டு அவன் கீழே செல்ல,
அதிர்ந்த அஞ்சலி மணியைப் பார்க்க, அது பதினொன்றைக் காட்டியது. சூர்யா கூறியது நிஜமா என்ற சந்தேகம் கூட வேண்டாம் என்பதை தான் அவன் பையையும் எடுத்துக் கொள்ள சொல்லி இருக்கிறான் என்பதும் உணர்த்தி இருந்தது.
கீழே வந்தவன் பிரேமா மல்லிகாவை சமாதானப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்த்தவன் மணியைப் பார்த்துவிட்டு அண்ணன் அருகே சென்றான். நிவி ஜெய் அருகேவே தூங்கி இருந்தாள்.
“ப்ச்! இப்படி இருக்காத டா.
மனசுக்கு கஷ்டமா இருக்கு.. தப்பு பண்ணினவன் எல்லாம் நல்லா தான் இருக்கான்.. நாம தான் பிரச்சனைன்னா நொந்து போயிடுறோம்” ஜெய்யிடம் கூற, அவனிடம் அசைவு இல்லை.
சில நொடிகளில் ஜெய் மொபைல் சிணுங்க, அழைப்பு ஜனனியிடம் இருந்து.