அறையை விட்டு வெளியே வந்த தேவா, ‘என்னமா நடிப்பை போட வேண்டி இருக்கு, இவளை வழிக்கு கொண்டு வர முன்ன, நான் ஒரு வழி ஆகிடுவேன் போல” புலம்பிக்கொண்டே படிகளில் இறங்கி வீட்டினரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
இளங்கோவன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெரிய கூட்டத்தின் ஒரு பக்கம் அமர்ந்திருந்த அய்யனார், இளங்கோவன் வரவும் விருப்பமில்லாமல் எழுந்து நின்று வணங்கினார்.
“உக்காருங்க ய்யா” தானும் ஒரு நாற்காலியில் அமர்த்த இளங்கோவன் கண்கள் அய்யனாரையும் அவரோடு நிற்கும் அவர் ஆட்களையும் நோட்டமிட்டு திசை மாறியது.
“பஞ்சாயத்தை கூட்டாம இது என்ன தினுசா இருக்கு” கைலியை இழுத்துக்கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்த நால்வர் அய்யனாரின் பக்கம் சென்று நிற்க அய்யனார் இன்னும் நெஞ்சை தூக்கி அமர்ந்தார்.
“உங்க இஷ்டத்துக்கு என்னடே பேசிட்டே போறிக, இங்க யார் யாரை வளச்சு போட அலைஞ்சிட்டு இருக்காங்க? சும்மா ராவ கூட்டாதிங்க அப்றம் நடக்குறதே வேற” தேங்காய் ஒரு மூடையை வீட்டில் இறக்க வந்த ஒருவர் இளங்கோவனுக்காக சண்டைக்கு வந்தார்.
“விடு சுப்பு அண்ணே, ஒடம்புல தெம்பில்லாதவன் அடுத்தவன் ரத்தத்தை குடிச்சு தானே உயிர் வாழுவான். இவனுங்க அவனுங்க மாதிரியே நம்மளையும் நினைச்சிட்டானுங்க போல” அய்யனாரை நேரடியாகவே பார்த்த வெற்றி கூற, அய்யனாரின் ஆட்களுக்கு ஆத்திரம் அடங்காமல் கரைபுரண்டோடியது.
“என்னடா ரெண்டு காசு பாத்ததும் உங்களுக்கெல்லாம் பேச சத்து வந்துடுச்சோ, என்னா துள்ளு துள்ளுறீங்க” அவர் எழுந்து வெற்றி பக்கம் சண்டைக்கு போக, சளைக்காமல் தானும் அந்த மனிதரை நோக்கி வெற்றி நடக்க, குணா தான் பிடித்து வைத்தான்.
“ஆமா இப்ப அதுக்கு என்னங்கிற? சொந்தமா உழைச்சு காசு சம்பாதிக்கிற நாங்க துள்ளுறதுல தப்பில்லை. இப்டியே பேச்ச மாத்தி விட்டு ரவுசா வந்த வேலைய திசை திருப்பி விட தான ஆள கூட்டுரிங்க?” – குணா
“தம்பி தேவையில்லாத பேச்சு எதுக்கு, விசயத்துக்கு வாங்க. முன் பணத்தை குடுத்து வச்சிருந்தோம் நாங்க, அது தெரிஞ்சும் நிலத்துக்காரனுக்கு பணத்தாசைய காட்டி நீங்க இடத்தை முடிக்க போனா என்ன அர்த்தம்?” பேச்சை திசை மாற்றி செல்வது அறிந்து நேரடியாக பிரச்சனைக்கு வந்தார் இளங்கோவன்.
“யார் பணத்தை காட்டி ஆசைய தூண்டுனது? உங்க பேரன் அடி மாட்டு விலைக்கு கேட்ருக்கான். வயித்து வலிக்கு விக்கிறவனுக்கு அதுவே போதும்னு யோசிச்சு அந்த நேரம் சட்டுனு சரின்னு சொல்லிட்டான்.
விசயத்த கேள்விப்பட்டு நான் சரியான ரூவாய குடுத்தேன், எனக்கு இடத்தை குடுக்குறான். இதுல உங்களுக்கென்ன கஷ்டம்?” வந்ததிலிருந்து வேடிக்கை மட்டுமே பார்த்த அய்யனார் முதல் முறையாக வாயை திறந்தார்.
“என் பேரன் அடி மாட்டு விலைக்கு பேசுனானு எத வச்சு இவ்ளோ அழுத்தமா பேசுற அய்யனாரே. நிலத்துக்காரன் என்ன விலை சொன்னானோ அதே ரூவாய பேரம் பேசாம அப்டியே பேசி முடிச்சிட்டு கைல அட்வான்ஸ் தொகைய குடுத்தாந்தான்.
அவனுக்கு தெரியும் மண்ண மதிச்சவன் மனச எப்படி குளுருவிக்கணும்னு” நெஞ்சை நிமிர்த்து இளங்கோவன் தோளில் இருந்த துண்டை எடுத்து உதறி மீண்டும் தோளிலே போட்டார்.
“எப்பா உன்ன இப்ப யாரு அப்டி சொன்னது? நீயாட்டுக்கு வெரசா ஒரு முடிவுக்கு வந்து நீக்காத, நிலத்த விக்க போறவன் வந்து நிக்கட்டும் அப்ப தானே யார் சொல்றது உண்மைன்னு தெரிய வரும்” இருவருக்கும் பொதுவாக இருந்த ஒருவர் குரல் கொடுத்தார்.
“அவன் இன்னும் இங்க அஞ்சு நிமிசத்துல நிப்பான். இன்னைக்கே இடத்தை நான் முடிக்க வேண்டியது, இப்ப சமாச்சாரம் இங்க வந்து நிக்கிது, மழை காலம் முடியாகுள்ள நான் நிலைத்த உழுது சோழிய ஆரமிக்க வேணாம்?
இதுல இளங்கோவன் அய்யா பேரன் வேற இல்ல. இன்னைக்கே எனக்கு முடிவு தெரிஞ்சாகணும். நான் நாளைக்கு பத்திரம் எழுதியாகணும் சொல்லிட்டேன்”
அய்யனார் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே புல்லட்டின் ஹாரன் சத்தம் கேட்க, மொத்த கூட்டமும் திரும்பி சத்தம் வந்த திசையை பார்த்தது.
“இவன் எதுக்குடா இங்கன வந்தான்? கல்யாணம் ஆகியிருக்கு வர மாட்டான், பிரச்சனைய பெருசாக்காம முடிச்சிடலாம்னு சொன்னவன் எவன்டா?” தன்னுடைய ஆட்களிடம் திரும்பி பற்களை கடித்து கேட்டார் அய்யனார்.
“இவனுங்க தானுங்க அய்யா, சொன்னானுங்க” மாறி மாறி கையை காட்ட எரிச்சலடைந்த அய்யனார் தேவாவை பார்த்தார்.
எத்தனை நேரம் இவர்கள் பேச்சை எல்லாம் கேட்டு வேண்டும் என்றே அமைதியாக இருந்தானோ, அய்யனாருக்கு அவன் அமைதி ஆத்திரத்தை கொடுத்தது.
கூலிங் கிளாஸ் அணிந்து தன்னுடைய புல்லட்டில் அமர்த்திருந்தவன் கையில் ஒரு குல்பி ஐஸ் என பார்க்கவே கோவம் கனன்றது அய்யனாருக்கு.
“என்ன சாவாகாசம் தேவா இது? பெரியவங்க உனக்காக காத்துருக்கணுமா?” தாத்தா பேரனை பார்த்து கண்டிக்கவும் அமைதியாக வந்து தாத்தாவின் அருகில் நிற்க, இடத்தை விற்க முடிவெடுத்தவரும் வந்திருந்தார் அந்த நேரம்.
“என்ன சிவநேசா, உன் இடத்தை பத்தின பேச்சு நடக்குறப்போ நீ இவ்ளோ சாவகாசமா வர்ற?” பெரியவர் ஒருவர் கேட்டார்.
“கொஞ்சம் வேலை இருந்ததுங்க அய்யா” என்றார் இளங்கோவனை தலை தூக்கி கூட பார்க்காமல்.
“என்ன தம்பி கோடி ரூவா குடுத்தாலும் கைக்கு அகப்படாம போற இடம் அது, அந்த இடத்தை கம்மியான விலைக்கு கேக்குறதா பேச்சு வருதே, அப்போ சிவநேசன் ஜாஸ்தி பணம் குடுக்குறவங்களுக்கு தானே இடத்தை ஒப்படைப்பான்?”
“ஆயிரம் ரூவா கம்மியா குடுத்தா புள்ளகுட்டி காரன் அவனும் என்ன தான்யா பண்ணுவான், நல்ல முடிவு தான. நானா இருந்தாலும் அங்கன அதே தான் யோசிப்பேன்” பேசியவர் முன்னே வந்து நின்ற தேவாவை பார்த்து,
“இப்ப எங்க தம்பி போச்சு உங்க வீராப்பு?” – அய்யனார்
“தப்பு தா, அவசரத்துக்கு இடத்தை குடுக்குறேனு சொன்னதும் முத ஆளா போய் நின்னு ஐநூறு ஓவாய்க்கு பேசி முடிச்சது…”
“டேய் மாப்பிள்ளை” “
தேவா” என நண்பர்கள் இருவரும் இடையில் புக, “நிறுத்துங்கடா, பேசிட்டு இருக்கேன்ல” நண்பர்களிடம் கோவமாக பேசியவன் சிவநேசனிடம் திரும்பி,
“மன்னிச்சுக்கோ ண்ணே, பெரிய மனுஷன் நீ உன் கால்ல கூட நான் விழுவேன், ஆனா அவரு சொன்னதை விட நூறு ரூவா சேத்து தாரேன், இந்த சபைல வச்சு எனக்கே இடத்தை தர்றேன்னு சொல்லு.
அமைதியா கெளம்பி போய்கிட்டே இருப்பேன். இல்லையா இந்த இடத்தை நீ விக்கவே முடியாத மாதிரி ஒரே நாள்ல என்னால பண்ண முடியும்”
ஏற்கனவே கோவத்தில் இருந்த தேவாவிற்கு தவறே செய்யாமல் தன் மேல் வீண் பலி ஏற்கவே முடியவில்லை, “ஆமாண்டா மிரட்ட தான் செய்றேன், முடிஞ்சா குடலை உருவு பாக்கலாம்” தானும் எகிறிக்கொண்டு சண்டைக்கு செல்ல, நண்பர்கள் அவனை பிடித்து நிறுத்தினர்.
“டேய் மாப்பிள்ளை, என்ன இது நிதானத்தை இழந்துட்டு?” வெற்றி நண்பனை அதட்டி பிடித்தான்.
“பின்ன என்னடா, இவனுங்களுக்கு நேர்மையா எது செஞ்சாலும் புடிக்காது, இப்டி மெரட்டுனா தான் சரி வரும் போல”
“சபைல பேசுற பேச்சா தேவா இது?”
“சரி நான் பேசல, நான் கேக்குற ரேட்க்கு எனக்கு இடத்தை தர சொல்லுங்க பாப்போம்” – தேவா
“அவன் கேக்குறதும் நியாயம் தானே ய்யா, உனக்கு இன்னும் ரெண்டு லட்சம் காசு பாத்த மாதிரி அச்சுல சிவநேசா”
“அதெல்லாம் முடியாதுங்க, நாங்க தான் இடத்தை பேசி அட்வான்ஸ் குடுத்துட்டோம்ல. இனி அந்த இடம் எங்க அய்யாக்கு தான்” – அய்யனார் ஆள்
“அப்போ அவன் அட்வான்ஸ் போட்ட இடத்தை நீ எதுக்கு நொட்டுன?” – சபையில் ஒருவர்.
“அது இடத்துக்காரனுக்கு கட்டல, என்கிட்ட கை நீட்டிட்டான், அவன் விருப்பம் தானே அது முழுக்க முழுக்க” – அய்யனார்
“நல்லா இருக்குலே உங்க நியாயம். உனக்கு ஒரு சட்டம், ஊருக்கு ஒரு சட்டமா?”
பெரியவர் அய்யனாரிடம் கோவமாக பேசினார், “அவன் தான் நூறு ரூவாய்க்கு மேல கேக்குறான்ல, சிவநேசனுக்கு விருப்பம்னா அவன் வாங்கிக்கணும்” என்றார்.
“அது எப்படிங்க…” என துவங்கிய அய்யனாரை தடுத்தார் இளங்கோவன்,
“அய்யனாரே, நீ இந்த ஊருக்கு தலைவன் தான். அதுக்காக நீயா சட்டம் ஒன்னு உருவாக்கி, நீயே அத உன் இச்சட்டத்துக்கு மாத்தி குட்டைய கெளப்புற பெரிய மனுசன் பண்ற வேலை இல்லை. உன் அப்பன நம்பி உனக்கு இந்த பதவியை குடுத்தேன், அத கெடுத்தன்னு வை, தோலை உருச்சிடுவேன் ஜாக்கிரதை”
“ஒ கூப்டு வச்சு குடும்பமா மெரட்டுறீங்களா?” அவமானமாய் இருந்தது அய்யனாருக்கு, “நான் ஏமாத்துனேனு சொல்றிங்களா? சரி அந்த இடத்தை சதுரடி ரெண்டாயிரத்துக்கு வாங்குறேன். இந்த ஊர்ல ஒரு இடமும் அந்த விலைக்கு இல்லை.
“என்ன மன்னிச்சிடுங்க அய்யா, என்னால நீங்க சொல்ற விலைக்கு அந்த இடத்தை குடுக்க முடியாது” கை எடுத்து அய்யனாரிடம் மன்னிப்பு வேண்டினார் சிவநேசன்.
“எனக்கு என்னோட இடத்துக்கான காசு மட்டும் போதும்ங்க”
தேவாவிடம் திரும்பி, “எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க, தேவா தம்பி ஆயிரத்தி இருநூறுக்கு அட்வான்ஸ் குடுத்துச்சு. அப்றம் தலைவர் வந்து கேக்கவும் கை நீட்டி காசு வாங்கிட்டேன். தலைவர் தான் எங்க கேட்டாலும் ஐநூறுன்னு சொல்ல சொன்னாங்க” உள்ளே சென்றது சிவநேசன் குரல்.
“என்ன அய்யனாரே இது, உன் பதவியை காட்டி அடுத்தவள கெட்டவனா மாத்துறியா?”
“சிவநேசா” அய்யனார் அவரை நோக்கி குரலை உயர்த்த அவருக்கு முன் வந்து நின்றான் தேவா.
“எதுக்கு தலைவாரே இந்த கோவம்?” கிண்டலாக சிரித்தவன், “இப்போ என்ன உனக்கு இந்த இடம் வேணுமா, சரி நீயே வச்சுக்கோ” அதில் இன்னும் கேலி ஒளிந்திருக்க தேவாவின் சட்டையை பிடித்தார் அய்யனார்.
“என்னடா பிச்சை போடுறியா எனக்கு? நீ போடுற பிச்சைல தான் அந்த இடம் எனக்கு கெடைக்கணும்னா அந்த இடம் எனக்கு சுடுகாட்டுக்கு சமம்டே”
தோளில் இருந்த துண்டை எடுத்து காற்றில் ஆவேசமாக உதறியவர் அவ்விடத்தை விட்டு அகல, இதற்காகவே காத்திருந்த தேவாவின் இதழ்களில் புன்னகை.
“தலைவரே, நடந்தே வந்த மாதிரி இருக்கு, வண்டில வந்து வீடு வர விடவா?” உரக்க பேசிய தேவாவின் வார்த்தைகளை காதில் கேட்டு மேலும் தன்னுடைய வேகத்தை கூட்டினார் அய்யனார்.