அத்தியாயம் 2_ 1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:2,543
அத்தியாயம் 2
உன் விழி பேசும்
பாஷைகளைக் கொண்டு
நான் வடித்த அரிச்சுவடி தான்
நம் காதல் என்ற புத்தகம்….
ரேகா ஏறி அமர்ந்ததும் அந்த மலைப் பாதையில் ஜீப் சென்று கொண்டிருந்தது. இப்போது மழை நின்றிருந்தாலும் முந்தய நாள் பெய்த மழையின் பாதிப்பு போகும் பாதையில் தெளிவாக தெரிந்தது. ஆங்காங்கே மண் சரிந்து அதிக மழை நீரால் ரோடெல்லாம் அரித்து கிடந்தது. இதை எல்லாம் சரி செய்வது கொஞ்சம் கடினம் தான் என்று எண்ணிக் கொண்டாள் ரேகா.
ஜீப் ஓட்டிக் கொண்டிருந்தவனை திரும்பி பார்த்தாள். அவன் கருமமே கண்ணாக ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் சிந்தனைக் கோடுகள் இருந்தன. அப்படி என்ன யோசிக்கிறான் என்று அவனையே பார்த்தாள். அவனைக் காணும் போது ஜீப் டிரைவர் என்று அவளுக்கு தோன்ற வில்லை. அவ்வளவு கம்பீரமாக இருந்தான் அவன்.
கிட்டத்தட்ட ஆறடி உயரம் இருப்பான். கோதுமை நிறத்தில் திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்தான். அடர்த்தியான சிகை அவன் நெற்றியை வருடி விளையாடியது. சிந்தனையில் இருந்ததால் அவன் கண்கள் சுருங்கி இருந்தாலும் அழகாக இருந்தது. இயற்கையிலே சிவந்த அவன் உதடுகள் அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று எடுத்துக் கூறியது.
ஒரு பெண் தனக்கு எப்படி ஒரு கணவன் வேண்டும் என்று ஆசைப் படுவாளோ அப்படி இருந்தான். அவன் என்ன செய்கிறான் என்று தான் அவனை முதலில் பார்த்தாள். பின் அவளையே அறியாமல் அவள் கண்கள் அவனை அளவிட்டது. அவனிடத்தில் மின்னிய கம்பீரத்தையும் அழகையும் பார்த்துக் கொண்டிருந்த ரேகாவுக்கு ஒரு அந்நிய ஆணை இப்படி பார்க்கிறோமே என்று கூட தெரியவில்லை.
“இவன் யாரா இருக்கும்? பாக்க டிப்டாப்பா இருக்கான்? இவன் உண்மையிலே ஜீப் டிரைவர் தானா? இருக்கும் இருக்கும். இந்த காலத்துல ஆபீஸ் போரவங்களை விட டிரைவர் தான் அழகா டிரஸ் பண்ணுறாங்க. இவனை இது வரைக்கும் நாம பாத்ததே இல்லையே? ஒரு வேளை மாப்பிள்ளைக்கு சொந்தகாரனா இருப்பானோ??”, என்று எண்ணிய ரேகாவுக்கு அப்போது தான் அவளுக்கு பாத்திருக்கும் மாப்பிள்ளை பற்றிய நினைவு வந்தது.
“எனக்கு பாத்திருக்குற மாப்பிள்ளை எப்படி இருப்பான்? இவனை மாதிரி அழகா இருப்பானா? இல்லை…. அடுத்த வீட்டு பொண்ணு தானேன்னு என் மாமா என்னை யாருக்கோ ரெண்டாம் தாரமா என்னை கட்டிக் கொடுக்க போறாங்களா? அவனுக்கு படிப்பு என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். அதான் நான் படிச்சிருக்கேனே? அவன் வேலையும் பாக்கலைன்னா கூட பரவால்ல. அவனுக்கும் சேத்து நான் சம்பாதிக்கிறேன். ஆனா கொஞ்சமாவது நல்லவனா இருக்கணும். கொஞ்சமாவது அழகாவும் இருக்கணும். அதை விட்டுட்டு ஏதாவது கிழவனை பாத்து வச்சிருந்தா அவன் கூட எப்படி என்னால வாழ முடியும்? கடவுளே மாப்பிள்ளை இந்த டிரைவர் மாதிரி கொஞ்சம் இருந்தாலாவது எனக்கு போதும்”, என்று எண்ணினாள்.
அவளுக்கு வந்த எண்ணத்தில் அவளே அதிர்ந்து போனாள். எதனால் மாப்பிள்ளை டிரைவர் மாதிரி இருக்க வேண்டும் என்று அவள் எண்ணினாள் என்று அவளுக்கே குழப்பமாக இருந்தது.
“கடவுளே, என்ன நான் இப்படி நினைக்கிறேன்? இவன் யார்னு கூட தெரியாது. இவனை மாதிரி மாப்பிள்ளை இருக்கணும்னு நான் ஏன் நினைச்சேன்? ஒரு வேளை நான் இவனை சைட் அடிக்கிறேனா? ஐயோ எதுக்கு என் புத்தி இப்படி எல்லாம் போகுது? கல்யாணம் அப்படிங்குற ஷாக்ல எனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு”, என்று மானசீகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டாள்.
“இருக்குற பிரச்சனைல என் மூளை கண்டிப்பா லூசா மாறிருச்சு. இவன் பக்கமே இனி திரும்ப கூடாது பா”, என்று எண்ணி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.
ஆனாலும் சிறிது நேரத்தில் அவள் கட்டுபாடுகள் தளர்ந்து அவள் தலை அவன் பக்கம் திரும்பியது. எதற்கு அவனைப் பார்க்கிறோம் என்று தெரியாமலே அவனைப் பார்த்தாள். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க தன்னுடைய சிந்தனையில் இருந்து வெளியே வந்த அவன் அவளை திரும்பி பார்த்தான். இருவர் பாரவையும் ஒரு நொடி பின்னிக் கொண்டது. படக்கென்று தலை குனிந்து கொண்டாள். திடீரென்று அவன் இப்படி திரும்புவான் என்று அவள் கனவா கண்டாள்?
அவள் கை எல்லாம் நடுங்கியது. சேலை முந்தானையில் இருந்த நூலை பதட்டத்துடன் பிய்த்து கொண்டிருந்தாள். “நான் பாத்ததை பாத்துட்டானே? ஏதாவது நினைச்சிக்குவானோ?”, என்று பயந்தாள்.
தலை குனிந்து அமர்ந்திருந்த அவளையும் அவளுடைய செய்கையையும் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான் அவன்.
இப்போது தன்னை பார்க்கிறானா இல்லை, திரும்பி விட்டானா என்று அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க அவன் அவளையே ஆழ்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் உறைந்து போய் அவனை பார்த்த படியே இருந்தாள் ரேகா.
இது வரை அவள் பல ஆண்களைப் பார்த்திருந்தாலும் இப்படி யாரையுமே அவள் வைத்த கண் எடுக்காமல் பார்த்ததில்லை. இவன் மட்டும் அவள் அடி மனதை சலனப் படுத்தினான். அவன் விழிகள் பேசும் பாஷை புரியாது சிலை போல அமர்ந்திருந்தாள் ரேகா. அவன் பார்வையில் அவளுக்கு உடலும் உயிரும் சிலிர்த்தது.
அவளுக்கே புரியாத இன்ப உணர்வு ஒன்று அவள் மனதில் எழுந்தது. அவன் கண்கள் ஏதோ பேசியது போலவே அவளுக்கு தோன்றி வைத்தது. அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் திகைத்தவள் அவன் பார்வையை ஆராய்ச்சி செய்யும் தன்னையே வெறுத்தாள்.
“நான் எதுக்காக போய்கிட்டு இருக்கேன்னு மறந்துட்டேனே? இன்னும் கொஞ்ச நேரத்துல என் வாழ்க்கையே முடிய போகுது. இதுல இவன் பார்வையையும் இவன் முகத்தையும் பாத்துக்கிட்டு இருக்கேன். என்னை என்ன செஞ்சா தகும்?”, என்று எண்ணிய ரேகா முகத்தை திருப்பிக் கொண்டாள்.
என்ன தான் முகத்தைத் திருப்பினாலும் அவன் எதற்காக அப்படிப் பாத்தான்? அவனோட பார்வை சாதாரண பார்வையாக இல்லையே. அதே நேரம் கெட்ட பார்வையாகவும் இல்லை. அவன் பார்வையில் இருந்தது என்ன? கண்டிப்பாக கோபமான பார்வையும் இல்லை. அவன் பார்வையில் வெறுப்பும் இல்லை.
அப்படி என்றால் அவன் கண்களில் இருந்தது என்ன? காதலா, தேடலா, தவிப்பா என்று எண்ணி கலங்கிப் போனாள்.
என்ன தான் அவளையே அவள் திட்டிக் கொண்டாலும் அவன் பார்க்கிறானா என்று அவள் கண்கள் அவனை மீண்டும் திரும்பி பார்த்தது.
அவள் பார்வைக்காக காத்திருந்தது போல அவள் பார்த்ததும் அவன் கண்களில் மின்னல் வந்தது. அவன் கண்களில் வந்த மின்னலில் ரேகாவுக்கு தான் வெட்கம் வந்தது.
காதல் மனைவியை கணவன் பார்க்கும் பார்வை பார்த்தால் அவளுக்கு வெட்கம் வராமல் என்ன செய்யும்? “வெட்கம் … ஐயோ இவன் பார்வைக்கு நான் எதுக்கு வெக்கப் பட்டுட்டு இருக்கேன்?”, என்று மீண்டும் குழம்பினாள்.
ஏதோ மூச்சு முட்டிப் போன உணர்வு தான் ரேகாவுக்கு வந்தது. தலையை பிடித்துக் கொண்டாள். அவள் நிலையை அவனும் உணர்ந்தானோ என்னவோ? ஒரு டீக் கடை முன்பு வண்டியை நிறுத்தினான்.
திடீரென்று வண்டி நின்றதும் அவள் அவனை திரும்பி பார்த்தாள். அவளைப் பார்த்து அவன் புன்னகைக்க அவள் கண்களில் சிறிது வெட்கத்தைக் கண்டான். அதில் அவன் உதடுகள் மேலும் மலர்ந்தது.
அவன் அவளையே ஊடுருவது போல பார்க்க ஆரம்பித்தான். “நான் சைட் அடிக்கிறேன்னு நினைச்சு இவன் என்னைப் பாக்குறானா? இல்லை வேற எதுவும் காரணமா?”, என்று குழம்பிய ரேகா அவனையே பார்க்க அவன் கண்களில் ஒரு வித மின்னல் தெறித்தது.
ஏனோ அவன் கண்களுக்குள்ளே போய் விடுவோம் போல இருந்த அந்த ஈர்ப்பான பார்வையில் அவள் தான் திணறிப் போனாள். அவள் திணறலை உணர்ந்தவனின் பார்வையில் மேலும் ஆர்வம் உண்டானது. ஆர்வமான பார்வை சிறிது நேரத்தில் ரசனைப் பார்வையாக மாறியது.
அதை கண்டு கொண்ட ரேகா “போச்சு டா, இவன் என்ன இப்படி பாத்து வைக்கிறான். இவனுக்கு தெரியாதா கொஞ்ச நேரத்துல எனக்கு கல்யாணம்னு?”, என்று எண்ணினாள்.
அப்போது “அவன் தான் மாப்பிள்ளைன்னு நினைச்சு அவனை அடிக்கடி பாத்து வச்ச. அதனால தான் அவனும் உன்னைத் திருப்பி பாக்குறான். தப்பு உன் மேல தான்”, என்று அவளை திட்டியது அவள் மனசாட்சி.
மனசாட்சி கேட்கும் நியாயமான கேள்விக்கு அவளால் எப்படி பதில் சொல்ல முடியும்? அவனுடைய ஆர்வமான பார்வையில் அவளுக்கு கோபம் வராமல் தவிப்பு வந்தது தான் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதை தான் ரேகாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
பல ரோட் சைட் ரோமியாக்கள் அவள் காலேஜ் படுக்கும் போதும், வேலைக்கு செல்லும் போதும் அவளை சைட் அடித்திருக்கிறார்கள். நடக்கும் போது அவள் பின்னாலே நடந்து வந்து காதல் சொல்லியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவர்களை கண்டு ரேகா முறைக்க தான் செய்வாள். அவர்களும் அவள் பார்வையை புரிந்து கொண்டு விலகிச் சென்று விடுவார்கள்.
ஆனால் இன்று ரேகாவால் இவனை முறைக்க முடியவில்லை. முறைப்பது என்ன? அதை விட கொடுமையான விஷயம், இவளும் அவனுக்கு பதில் பார்வையைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். பதில் பார்வை கூட இல்லை. முதலில் அவனை பார்க்க ஆரம்பித்ததே இவள் தான். இவள் பார்வைக்கு தான் அவன் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளையே அறியாமல் அவள் பார்வை அவனைத் தான் சுற்றி வந்தது. “தப்பு செய்கிறோமோ?”, என்று தவித்துப் போனாள்.
அவன் பார்வையின் தீவிரம் கூடிக் கொண்டே போகவும் “பிளீஸ் இப்படி பாக்காதேயேன்”, என்று அவள் கண்கள் அவனிடம் கெஞ்ச ஆரம்பிதத்து. அவன் பார்வை அவளையே மொய்த்துக் கொண்டிருக்க அவளுக்குள் ஜில்லென்ற ஒரு குளிர் பரவியது. அது என்ன உணர்வு என்று அவளால் வரையறுக்க முடியவில்லை.
இருவரும் நடு ரோட்டில் ஜீப்பை நிறுத்தி விட்டு பார்வை பரிமாற்றம் நடத்திக் கொண்டிருக்க முதலில் நடப்புக்கு வந்தது அவன் தான். “டீ குடிச்சா உனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். இரு நான் போய் வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றான். போகும் அவனையே பார்த்த படி அமர்ந்திருந்தாள்.
“யார் இவன்? இவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? முதல் முறை பார்க்கும் இவன் கூட ஏதோ ஒரு பிணைப்பு உருவாகுதுன்னு தோணுது. இது மத்த நேரமா இருந்தா நல்லது தான். ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல வேற ஒருத்தன் கூட கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்ப போய் இவனோட பார்வையில் நான் மயங்கினால் இதுக்கு என்ன அர்த்தம்? நான் செய்றது எவ்வளவு பெரிய தப்பு? ஆனா இந்த தப்பை என் மனசு எதுக்கு ரசிச்சு செய்யுது?”, என்று அவள் குழம்பிக் கொண்டிருந்தாள்.