சலசலக்கும் சொந்தங்கள்
அத்தியாயம் 12
‘சொல்லு’ என்று அப்பா சொன்னதும், தயங்கிய பிறகு ஒரு மனதாக சொல்ல ஆரம்பித்தான்.
பீட்டருக்கும் ஜென்சிக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்ததும், அவனின் அம்மா அவனுக்கு போன் செய்து, ‘நீ சொன்னத நாங்க கேட்டதுவரை போதும், இனிமேல் நாங்க சொல்றததான் நீ கேட்கனும், உனக்கு ஜென்சிய பேசி முடிச்சாச்சு, நீ லேட் பண்றதால சின்னவனுக்கும் லேட்டாகுது”
பேட்ரிக்-ஜென்னி இருவரும் காதலிப்பதால், பீட்டருக்கு அதாவது பெரிய மகனுக்கு முடிக்காமல் சின்ன மகனுக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லாததாலேயே அவனின் அம்மா இப்படி பேசியிருந்தார்.
“அம்மா” என்று சத்தமிட்டு, மேலே பேசவிடாது நிறுத்திய பீட்டர், நம்ம வீட்டோட எங்கேஜ்மெண்ட் வச்சுட்டு, கல்யாணத்த வேணா பெருசா செய்துக்கலாம்” என்றிருந்தான். பீட்டர் ஒத்துக் கொண்டதால் இருவருக்கும் ஒரே நாளில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் என்று ஏற்பாடு செய்தனர்.
சரியாக நிச்சயத்திற்கு முன்தினம் வெளிநாட்டில் இருந்து வந்தவனுக்கு, ‘தனக்கு பார்த்திருந்த ஜென்சியிடம் பேச வேண்டும்’ என்று கூடத் தோன்றாமல், அசதி அதிகமாக இருக்க நன்றாக தூங்கினான். அவனை எழுப்ப மனமில்லாமல் விட்டுவிட்டு ‘மேரேஜ் பர்சேஸ்’ என்று அனைவரும் வெளியில் சென்றிருந்த போது, திடீரென யாரோ சண்டையிடும் சத்தம் கேட்கவும் எழுந்தவன், சத்தம் வந்த திசையில் இருந்த அறை கதவைத் தள்ளவும் திறந்து கொண்டது. அங்கு ஜென்சியும் இன்னொருவனும் நின்றிருந்தனர்.
பீட்டர், ‘யார் ஜென்சி’ எனக் கேட்க, அந்த இன்னொருவனோ, ‘நானும் ஜென்சியும் காதலிக்கிறோம், அவ உங்க வீட்ல சொல்ல பயப்படறா, ஏன்னா, நாங்க வேற மதம், ப்ளீஸ் நீங்கதான் எங்களுக்கு ஹெல்ப் செய்யனும்’ என்று கேட்கவும் கடுப்பானவன், நாளைக்கு நிச்சயத்த வச்சுக்கிட்டு விளையாடுறீங்களா, முதல்ல உன்ன யார் உள்ள விட்டது’ என்று கத்தினான்.
நாளைக்கு விழா இருந்ததால ஜென்சியை வீட்டில் இருக்க சொல்லியிருந்தனர். பீட்டர் வந்ததிலிருந்து சாப்பிடாம கூட தூங்குறதால, ஜென்சிய எழுந்ததும் அவனுக்கு சாப்பாடு கொடுக்க சொல்லி பெரியவர்கள் சென்றிருந்ததால், இங்கு வந்திருந்தாள். அந்த நேரம் பார்த்து, இவன் ஜென்சிக்கு போன் செய்து இங்கு வந்திருந்தான். ஜென்சி பீட்டரிடம், “மாமா, எனக்கு என்ன செய்றதுனே தெரியல”
அதற்கு அவன், “லவ் பண்ண தெரியுது, இப்ப என்ன செய்றதுனு தெரியாதோ” என்று குத்தலாக கூறவும், ஜென்சியின் காதலன் சுந்தர், “சார், ப்ளீஸ் கோவிச்சுக்காம, ஹெல்ப் செய்யுங்களேன்”.
பீட்டர், “ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோங்க” எனவும் ஜென்சி, “ஐயோ, யாருக்கும் தெரியாம திருட்டு கல்யாணமா?, அப்பா, அம்மா என்ன தொலைச்சுருவாங்க” அதற்கு பீட்டர், “இல்லன்னா, ஒருத்தன காதலிச்சு, இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீயா” என்று கேட்க, அவள் கண்ணீர் சிந்தவும், உச்சு கொட்டியவன், சுந்தரிடம் திரும்பி, இப்ப இருக்கற ஒரே வழி ரெஜிஸ்டர் மேரேஜ் மட்டும் தான், மத்தபடி வேற ஒண்ணும் செய்ய முடியாது”.
சுந்தர், “எனக்கு அதப் பத்தி எதுவும் தெரியாது, யார அப்ரோச் பண்ணனும், என்ன ஏதுனு எனக்கு தெரியாது”.
எரிச்சலான பீட்டர், “எனக்கு தெரிஞ்ச லாயர் இருக்காரு, அவர்கிட்ட போனா எல்லாம் அவரே பாத்துக்குவார்”
ஜென்சி, “அப்பா, அம்மா இத ஏத்துக்குவாங்களா, நான் எப்படி பிரிஞ்சு போறது, உங்க கல்யாணம் என்னவாகும், நாளைக்கு வேற நிச்சயதார்த்தம்”.
பீட்டர், “இதெல்லாம் நீ வீட்ல ஓக்கேனு சொல்லும் போது யோசிச்சுயிருக்கனும், இங்க பாரு, என் கல்யாணத்த பத்தி நீ கவலைப்பட வேண்டாம், நான் ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்றேன், அடுத்து கொஞ்ச நாள் கழிச்சு உங்க அப்பா, அம்மாட்ட பேசி சேர்த்து வைக்கிறேன், நாளைய விசேஷத்த தடுக்க முடியாது, அப்படியே விட்ற வேண்டியது தான்” என்று விட்டு, “மிஸ்டர், நீங்க எங்க கல்யாணத்துக்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கு, என்னோட கல்யாணம் பத்து நாள் முன்னாடி நின்னாதான், குறிக்கப்பட்ட அதே தேதியில என் லவ்வரை நான் கல்யாணம் பண்ணிக்க முடியும், அதனால இன்னும் அஞ்சே நாள்ல இவள கல்யாணம் செய்துக்கனும், புரிஞ்சுதா?.
அதே போல் சுந்தரும் ஏற்பாடுகளைச் செய்திருந்ததால், கிரேஸ் வீட்டிற்கு சமாதானம் பேச செல்லவிருந்த நாளில் வீட்டில் இருந்த பெரியவர்கள் வெளியேறியதும் ஜென்சியும் சென்று விட்டாள். ‘வேறொருத்தன காதலிக்கறவளை நல்லா தெரிஞ்சே கல்யாணம் பண்ண, எனக்கு பிடிக்கல, அதனால, ரெஜிஸ்டர் மேரேஜ் அரேஜ்மென்ட் எல்லாம் செஞ்சு தந்து, சுந்தருக்கு நான் ஹெல்ப் பண்ணேன்’, அதன் பிறகு நடந்ததுதான் உங்களுக்கு தெரியுமே.
சரியா என்னோட கல்யாணம் முடிந்து இரண்டு மாசம் கழித்து ஜென்சிகிட்ட இருந்து போன் வந்துச்சு, ‘அவ என்ன அப்பா, அம்மா கூட சேர்த்து வச்சுருவேனு சொன்னீங்க, என்ன ஏமாத்துறீங்களா’ என்று சண்டையிட்டாள். அவ மனசுல குற்றவுணர்ச்சி வரக் கூடாதுனு நான் சொன்ன பொய்தான், எனக்கு லவ்வர் இருக்குன்னது”. நானும் மாமாகிட்ட ஜென்சி பத்தி பேசினேன், ஆனா அவர் பிடிவாதமாக இருந்தார், கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப அவர்கிட்ட ஜென்சி பத்தி பேசனும்னு நினைச்சிருந்தேன், அதுக்குள்ள நிம்மிகிட்ட தேவையில்லாம பேசி வச்சுட்டா, அதுவுமில்லாம ஜென்சி இப்ப கர்ப்பமா வேற இருக்கா, அதனால அவள மன்னிச்சு ஏத்துக்கோங்க மாமா”.
ஜென்சி அப்பா, “நாங்களும் அத யோசிச்சோம், ஏன்னா, அவ குழந்தை நல்லபடியாக வளரனும், கட்டாயம் இந்த மாதிரி நேரத்துல பெண்பிள்ளைகளுக்கு அம்மாவோட அரவணைப்பு தேவை, ஜென்சி தன்னோட அம்மாவ தேடுவா”.
மேலும் அவர், “பீட்டர், ஜென்சி இப்படி உனக்கு தொந்தரவு கொடுத்து இருப்பானு நாங்க நினைக்கல, இனி நிர்மலாகிட்ட அவ தேவையில்லாம பேசு மாட்டா, நாங்க பாத்துக்குறோம்”
ஜென்னி அம்மா, “அவ உண்மைய சொல்லி இருந்தா யோசிச்சு இருந்திருப்போமோ என்னவோ, ஆனாலும் அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”.
சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு பேட்ரிக், “ஆனா அன்னைக்கு போன உடைச்சு, டைலாக் விட்ட பாரு நிம்மி, சூப்பர்”.
நிம்மி, “மாம்ஸ் ஏத்தி விடுறீங்களா?, இருங்க அக்காவ விட்டு உங்க தலைய உடைக்கிறேன்”.
அவனோ, “ஏன் நீ ஒரு ஆளு இருக்கறது போதாதா, ஜென்னிய உன் கூட கூட்டு சேக்குறீயா” என்றவன் ஜென்னியிடம் திரும்பி, “ஜென்னிம்மா, இதோட தப்பி தவறி கூட சேர்ந்துறாத, மீ பாவம்”.
அவனின் இலகுப்பேச்சில், அவ்விடம் சற்று இதமாக மாறியது.
அவனின் அப்பாயி, “போன் விக்கற விலையில எதுக்கு உடைச்ச, அது வேற ஆப்பிளு, ஆரஞ்சுனு சொல்றாங்க”
அனைவரும் சிரிக்க நிம்மி, “அம்மாச்சி, நான் என்ன லூசுனு நெனச்சீங்களா? விவரமாக்கும், உடைஞ்ச போன் உங்க அருமை பேரனோடது, என் கையிலேயே தான் என் போன் இருந்துச்சு, ஆனா, அவரு போனதான விட்டெறிஞ்சேன், ஹாஹா”
பீட்டர் அப்பாயி, “இருந்தாலும் உனக்கு இம்புட்டு கொழுப்பு ஆகாதுடி”
அவளோ, “உங்க பேரன கேள்வி கேட்டீங்களா”
அப்பாயியோ, “புருஷன்-பொண்டாடிக்கு இடையில நாங்க எதுக்கு?”
நிம்மி, “அப்ப இப்பவும் அப்படியே இருங்க” என்றவள் தன்னவனை பார்க்க அவனோ புதிதாய் வாங்கிய போனைப் பார்த்து கொண்டிருந்தான். ‘கோபமா இருக்காங்க போலவே, ஐயோ’ என்று நினைத்தாள்.
‘எல்லாரும் இங்கேயே சாப்பிடலாம்’ என்று ஜென்னி அம்மா கூறியவுடன், பீட்டர் இனிமேல் சமைச்சா டைம் எடுத்துக்கும், அதனால ஆர்டர் செஞ்சு சாப்பிடலாம் எனக்கூறி, பேட்ரிக்கை ஆர்டர் கொடுக்கச் சொல்லி, அவை வந்ததும், உண்டு, விடைப் பெற்று, தங்கள் வீட்டிற்கு உறங்க சென்றனர் அனைவரும்.
பீட்டர் தங்கள் அறையில் தன் பின்னே வந்தவள் உள்நுழைந்ததும், காற்றுபுகக் கூட இடம் கொடாதபடி, அவளை எலும்புகள் நொறுங்க இழுத்து அணைத்தவன், “ஏன்டி என்ன விட்டு போன”.
நிம்மி, “நான் எங்க விட்டு போனேன், என் பிளானே வேறயா இருந்துச்சு, உங்களையும் கூட்டுட்டு போலாம்னு, நீங்க அடிக்கவும், எனக்கு கோபம் வந்தா என்ன பேசுவேனே தெரியாது, என் கோபத்துக்கு எதாவது ஏடாகூடமா பேசி எதுக்கு பிரச்சனைய உண்டாக்குனும்னு, பேசாம அம்மா வீட்டுக்கு போகலாம்னு போனேன்”.
அவன், “சாரிடா” என்றவன் முகமெங்கும் முத்தமிட்டு, வலியில்லா கன்னத்தைத் தடவி “ரொம்ப வலிக்குதா” என்றானே. ‘இல்லை’ என்னும் விதமாய் அவள் தலையசைத்தாலும் விடாது, முத்தமிட்டு அவளின் இதழின் சுவையைச் சுவைத்தான், அவள் இதழ்தான் அவனுக்கு பஞ்சுமிட்டாய் ஆயிற்றே. ‘கோவப்படுவான்னு பாத்த என்ன வேலை பாக்குறான் பாரு’ என்று உள்ளுக்குள் உருகியவள், அவனைத் தள்ளி, “போதும் அத்தான், நான் வீட்டுக்கு வந்ததுலே இருந்து ஒரு வார்த்த பேசல, கோபமாயிருக்கீங்கனு ரொம்ப பயந்து போயிருந்தா, நீங்க செய்ற வேலைய பாருங்க”.
அவன், “நீ ரொம்ப பயந்தவதான், இத நான் நம்புவேனு நீ நெனைக்குற, உண்மையா உன்மேல கடுப்பாதான் இருந்தேன், ஆனா உன்ன பார்த்ததும் பாதி போச்சு, மீதி நீ பேசுனத கேட்டதும் போயிடுச்சு”.
அவள், “சரி வாயெல்லாம் வலிக்குது, நீங்க கொஞ்சம் பேசுங்க”.
அவன், “விடாம பேசுனா வலிக்காம என்ன செய்யும், அதா எனக்கும் சேர்த்து நீ பேசுறீயே, அப்பறம் என்ன, நான் ஒன்லி ஆக்ஷன்” என்றவாறு அவளை இறுக்கி அணைக்கவும், அவள், “எல்லார்கிட்டயும் சொன்ன பொய்ய சொல்லாம, இப்ப சொல்லுங்க உங்க லவ் கதைய”.
அவன், “நீ நம்பலையா?”. எனவும், “இல்ல, சொல்ல போறீயா, இல்லயாடா” என்று அவள் கேட்க, சிரித்து கொண்டே, “புருஷன ‘டா’ போட்டு பேசுற, மரியாதையே இல்ல” என வழவழக்கவும், “எக்கேடோ கெட்டு போங்க” என உரைத்து போயி படுத்து கொண்டாள்.
அவளைப் பார்த்து சிரித்தவன், அவள் அருகில் படுத்து, முதுகுக் காட்டியிருந்தவளை தன்புறம் திருப்பி, அவள் நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்து பெருமூச்சு விட்டவன், “இன்னைக்கு ஒண்ணுமில்லையா, இரண்டு நாள் சுத்தல்ல விட்டுட்ட, கருணைக் காட்டேன்டி”.
அவள், “நீங்க முதல்ல என்னப் பத்தி, நம்மள பத்தி சொல்லுங்க” என்றதும் விலுக்கென நிமிர்ந்து, அவளை நோக்கியவன், “உனக்கெப்படி”, அவளோ, “நீங்க ஃப்ஸ்ட் சொல்லுங்க, அப்பறம் நான்”
அவன், “அதுக்கப்பறம்…”, “ம்ம்ம்…சப்பரம், பேச்சயா வளக்குறீங்க” என்று வலிக்காமல் ஒரு அடி வைத்தாள். “ஸ்ஸ்..” என்று வலிப்பது போல் நடித்தவனை அவள் முறைக்கவும், ‘இதுக்கு மேல வெறுப்பேத்துனா, உண்டு இல்லன்னு செய்தாலும் செய்திடுவானு’ மனசாட்சி சொல்லவும், எழுந்து உட்கார்ந்து சொல்ல தொடங்கினான்.