அது சாப்பிட நன்றாக தான் இருந்தது. ஆசையாக தன் முகத்தை பார்த்து கொண்டிருக்கும் பஞ்சுவை பார்த்தவன் இன்னும் மூன்றை எடுத்து சாப்பிட்டான். “நல்லா தான் இருக்கு வர்ணா”, என்று சொல்லவும் செய்தான்.
“அப்ப சரி மாமா இருங்க, மிச்சத்தையும் கொண்டு வரேன். காலி பண்ணிரனும்”, என்று எழுந்தாள்.
“ஐயையோ இதுவே போதும்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் ஓடி விட்டான்.
அவன் பின்னாடியே, அதை எடுத்து வந்தவள் அவன் வாயில் வைத்தாள்.
“போதும் டி”
“வீணா போயிரும் மாமா”
“வீணா போகும் னு சொல்லி என் வயித்துக்குள்ள தள்ள, அது என்ன குப்பை தொட்டியா டி?”
“சரி ஒண்ணே ஒன்னு”, என்று சொன்னாள்.
“விட மாட்டியே”, என்று சொல்லி அதை வாயில் வைத்தவன், அவளுக்கு முத்தம் கொடுக்கிறேன் என்று பெயரில் அவள் வாயில் கொடுத்து விட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான்.
அன்று இரவும் நைட் ஷிப்ட்க்கு மாலை ஆறு மணிக்கு, ஹாஸ்பிட்டல் வந்தான் ஆதி.
அப்போது அங்கே சீனி அமர்ந்திருந்தான்.
“என்ன டா சீனி, வீட்டுக்கு கிளம்பலையா? பூவு தனியா இருப்பா டா”, என்றான் ஆதி.
“ஹ்ம்ம் போனும் டா”, என்று சோகமாய் சொன்னான் சீனி.
“எதுக்கு டா இப்படி சோகமா இருக்க?”
“அந்த கொடுமையை ஏன் கேக்குற? மனுஷனை பேசியே சாகடிக்கிறா டா. காது வலி உயிர் போகுது”
“ஹா ஹா அம்மா சாபம் பழிச்சிட்டு போல? அன்னைக்கே உன்னை விட அதிகமா பேசுறவ தான், உனக்கு பொண்டாட்டியா வருவான்னு சொன்னா. அப்படியே நடந்துட்டு டா சீனி”
“ஆமா டா ஆதி. சரி இன்னைக்கு வீட்ல அங்க என்ன நிலவரம்?”
“நிலவரமா? நிலவரம் இல்லை டா கலவரம்”
“என்னது கலவரமா? என்னடா சொல்ற?”
“அதை ஏன் கேக்குற? காலைல வீட்டுக்கு போறேன். அங்க அடிபுடி சண்டை நடக்குது. முடியை பிடிச்சி மட்டும் தான் டா சண்டை போடலை. ஒரு நிமிசத்தில் பீதியாகிட்டு. வர்ணா அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கணும்னு சொல்றா! அம்மா, என்னையும் என் பிள்ளையையும் பிரிச்சிருவியோன்னு கேக்கா”
“என்னடா சொல்ற? எதுக்கு இப்படி சண்டையாம்? கடைசில என்ன தான் நடந்தது?”
“என்ன நடந்ததா? கடைசியில் பாத்தா என்னை கோமாளியாக்கி, ரெண்டு பேரும் இப்படி ஒரு சீன நடிச்சு பாக்கணும்னு நடிச்சிருக்காங்க டா. சரி சீனி. நீ எப்ப வீட்டுக்கு வர அடுத்த வாரம் தானா?
“இல்லை இல்லை நாளைக்கே, பூவை கொண்டு வந்து பஞ்சு கிட்டயும் அம்மா கிட்டயும் விட்டா தான் எனக்கு சந்தோசம். அவ கூட எல்லாம் என்னால தனியா குப்பை கொட்ட முடியாது டா ஆதி”
“நீ ஏன் டா ரொம்ப சோகமா இருக்க? உன்னை பாத்தா பூவு பேசி மட்டும் உன்னை கொடுமை படுத்தின மாதிரி தெரியலையே டா சீனி”
“சரியா கண்டு பிடிச்சிட்ட டா. நேத்து கொஞ்சம் ரொமான்ஸா இருக்கட்டுமேன்னு எங்க வீட்ல இருக்குற சும்மிங் பூலுக்கு கூட்டிட்டு போனேன்”
“அதுல என்ன டா பிரச்சனை?”
“இரு ஆதி சொல்றேன் ஆசையா குளிக்க ஆரம்பிச்சு சில ரொமான்சும் நடந்ததுன்னு வச்சுக்கோயேன். அப்ப உள்ள ஒரு பேப்பர் கிடந்தது. சரி அதை எடுப்போம்னு நினைச்சு குனிஞ்சு குனிஞ்சு எடுப்போம்னு ட்ரை பண்ணேன் டா. நான் உள்ள நீச்சல் தெரியாம முங்குறேன்னு நினைச்சு, என்னை காப்பாத்த போறேன்னு சொல்லிட்டு தண்ணி குள்ள வச்சு முக்கு முக்குனு முக்கிட்டா டா”
“ஹா ஹா மயிரிழையில் உயிர் தப்பிருக்கேன்னு சொல்லு”
“ஹ்ம்ம் ஆமா டா”
“ரொம்ப படுத்துறாங்க டா. இன்னும் பூவும் இங்க வந்துட்டான்னா நம்ம டவுசர் தான் கலரும். கலங்கடிக்க போறாங்க”
“என்ன டா செய்ய ஆதி, நம்ம தலை எழுத்து அப்படி”
“அதுக்கு தான், என்கிட்ட ஒரு பெரிய பிளான் இருக்கு டா”
“என்ன ஆதி? சீக்கிரம் சொல்லு”
“நம்ம பிள்ளைங்களை நாம அவங்க கூடவே சேர விட கூடாது டா”
“எதுக்கு டா நீயும் படுத்துற? எப்பவோ வர போற பிள்ளைகளை வச்சு இப்ப பிளான் போடுற?”
“நீ வேணும்னா பாரு டா, கண்டிப்பா என் பிளான் ஒர்க் அவுட் ஆகும்”, என்றான் ஆதி.
அப்போது அங்கே வேகமாக வந்தாள் அர்ச்சனா. அவளை பார்த்து இருவரும், தங்களுக்குள் பார்வையை பரிமாறி கொண்டார்கள்.
அவர்கள் முன்பு ஒரு பத்திரிகையை போட்டவள், “எனக்கு அடுத்த வாரம் கல்யாணம். என்ன சொன்ன? எனக்கு கல்யாணம் ஆகாதுன்னா. இரு கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்ந்து காட்டுறேன்”, என்று திமிராய் சொன்னாள் அர்ச்சனா.
அவளை பார்த்து சிரித்து கொண்டான் ஆதி.
“என்ன ஆதி சிரிக்கிற? மாப்பிளை யாரு தெரியுமா? அமெரிக்கால பெரிய டாக்டர். உன்னை மாதிரி பட்டி காட்டுல கல்யாணம் பண்ணலை. ஆமா சீனி, நீயும் அந்த பஞ்சு தங்கச்சியை தான் கல்யாணம் செஞ்சிருக்கியாம்? உங்க தலை எழுத்தை பாத்தீங்களா?”, என்று கிண்டல் அடித்தாள்.
கோபமாக பேச போன சீனியை, தடுத்தான் ஆதி.
“என்ன ஆதி இப்ப நினைக்கிறியா? என்னை மிஸ் பண்ணிட்டோம்னு”, என்று கேட்டாள் அர்ச்சனா.
“ஒரு நாளும் அப்படி நினைக்க மாட்டேன் அர்ச்சனா. இன்னும் சொல்ல போனால், எனக்கு உன்னை பிடிக்கவே பிடிக்காது. என்னோட குணத்துக்கு, நீ எல்லாம் சரி பட்டு வரவே மாட்ட. இதுல உன்னை மிஸ் பண்ணிட்டோம்னு நான் ஏன் நினைக்க போறேன்? நல்லதாப்போச்சு தப்பிச்சிட்டேன்னு தான் நினைப்பேன்”, என்று சிரித்தான்.
அர்ச்சனா முகம் கறுத்தது.
“அப்புறம் என்ன சொன்ன? பட்டி காட்டு பொண்ணா? அவங்க ரெண்டு பேர் கூட நாங்க எவ்வளவு சந்தோசமா இருக்கோம்னு தெரியுமா? வாழ்க்கை சுவாரசியமா போகுது. நீ அமெரிக்கா மாப்பிள்ளையை கட்டி கிட்டு மெஷின் வாழ்க்கை தான வாழ போற? அதுக்கு எங்களோட ஆழ்ந்த அனுதாபங்கள். அப்புறம் பத்திரிகை எப்படியும் அதிகமா விலை கொடுத்து தான் அடிச்சிருப்ப. அதை எங்களுக்கு கொடுத்து வீணாக்காதே. நாங்க எப்படியும் வர மாட்டோம். உன் கல்யாணத்துக்கு வந்தா என் பொண்டாட்டி என்னை துரத்தி துரத்தி அடிப்பா”, என்று சிரித்து கொண்டே சொன்ன ஆதி “வா சீனி போகலாம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
“எப்படி பொண்டாட்டியும், புருசனும் ஒரே மாதிரி மட்டம் தட்டுறாங்க?”, என்று நினைத்து கொண்டாள் அர்ச்சனா.
பூவும், சீனியும் ஆதியின் வீட்டுக்குள் வந்தவுடன் இன்னும் சந்தோசமாக இருந்தது அனைவருக்கும்.
எல்லாமே நல்ல படியாக தான், போய் கொண்டிருந்தது.
அப்போது தான் ஒரு நாள் ஆதியின் பேப்பர்க்கு ஒரு அவார்ட் கொடுக்க பட்டது. பாரின் சென்று அந்த விருதை வாங்கி வந்தான் ஆதி.
அதுக்காக அவனுக்கு ஒரு பாராட்டு விழா, இங்க ஹாஸ்ப்பிட்டலில் ஏற்பாடு செய்ய பட்டது.
அந்த விழாவுக்கு வீட்டில் இருந்து எல்லாரையும் அழைத்து வர சொன்னார்கள். “எல்லாரும் கிளம்புங்க”, என்று கிளம்ப வைத்தான் ஆதி.
அங்கு இருந்த பிரம்மாண்டத்தையும், அங்கு இருந்த மனிதர்களையும் பார்த்து வியந்து போனார்கள் பூவும் பஞ்சுவும்.
“எப்படி இருக்கு பாரு பஞ்சு, இந்த இடம்?”, என்று வியந்தாள் பூங்கோதை.
“ஆமா பூவு, இப்படி எல்லாம் நான் படத்திலே கூட பாக்கலை”, என்று சொன்னாள் பஞ்சு.
அவனுக்கு கொடுக்க பட்ட விருதும், அதுக்கு எல்லாரும் கொடுத்த பாராட்டையும் பார்த்த பஞ்சுவுக்கு சந்தோசமாகவும் அதே சமயம் மனது கஷ்டமாகவும் இருந்தது.
“இப்படி உயரத்தில் இருக்கும் மாமாக்கு நான் தகுதியானவள் தானா? நான் மாமாக்கு கொடுத்தது தொல்லைகள் தான்”, என்று நினைத்து கொண்டாள்.
அதே விழாவுக்கு, அர்ச்சனாவும் தன்னுடைய கணவனுடன் வந்திருந்தாள்.
சீனியும், ஆதியும் டாக்டரிடம் பேசி கொண்டிருந்தனர். சகுந்தலா, பூவை அழைத்து கொண்டு டாய்லெட்க்கு சென்றாள்.
அப்போது தனியாக இருந்த பஞ்சு அருகில் வந்த அர்ச்சனா, “ஏய் பட்டிக்காடு”, என்று அழைத்தாள்.
முன்னே ஒரு முறை இப்படி அவள் அழைத்த போது அவளால் தைரியமாக வாயாட முடிந்தது.
இப்போது பஞ்சு மன குழப்பத்தில் இருந்தாள். “நான் மாமாக்கு பொருத்தம் இல்லையோ?”, என்பது தான் அவள் மனதில் ஓடி கொண்டிருந்தது. இந்த மன நிலையில் இருந்தவளுக்கு அர்ச்சனாவிடம், பேச கூட விருப்பம் இல்லை.
மறுபடியும் “இங்க தனியா என்ன பட்டிகாடு செய்ற?”, என்று கேட்டாள் அர்ச்சனா.
ஏற்கனவே மன குழப்பத்தில் இருந்த பஞ்சு, இந்த முறை மனம் தடுமாறி நின்றாள்.
அவளை எதிர்த்து பேசி அவள் மூக்கை உடைக்க வேண்டும் என்பதையும் மறந்தாள். அவள் அமைதிக்கு மற்றொரு முக்கிய காரணம், பக்கத்தில் நின்றிருந்த அர்ச்சனாவின் வெள்ளை கார கணவனும் தான்.
“அவன் முன்னாடி என்ன பேச?”, என்று மெளனமாக அர்ச்சனாவை பார்த்தாள் பஞ்சு.
ஏனோ அந்த இடத்தில், தன்னை அதிகமாக கீழாக நினைத்தாள் பஞ்சு.
“இது யாரு?”, என்று ஆங்கிலத்தில் விசாரித்தான் அர்ச்சனாவின் கணவன்.
“இவ படிக்காத பட்டிக்காட்டு பொண்ணு. அந்த மெண்டல் ஆதியோட பொண்டாட்டி. நான் சொன்னேன்ல, அவன் சரியான லூசுன்னு. அங்க பாருங்க, அவன் எப்படி இருக்கான்னு.இந்த விழாவோட ஹீரோவே அவன் தான் ஆனா அவனுடைய பொண்டாட்டி எப்படி நிக்குறா. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இவளுக்கு ஒரு வார்த்தை கூட இங்கிலீஸ் தெரியாது”, என்று அவனுக்கு ஆங்கிலத்தில் சொல்லி விட்டு, பஞ்சுவை பார்த்து “நான் இப்ப என்ன பேசுனேனு கூட உனக்கு தெரியாதுல்ல?”, என்று ஆரம்பித்து தமிழிலும் சொன்னாள்.
மெளனமாக நின்றாள் பஞ்சு. அவளுக்கு அழ வேண்டும் போல் இருந்தது. தன்னுடைய கணவனை அத்தனை பேரும் பாராட்டியதை பார்க்க தான் செய்தாள். இப்போது இந்த அர்ச்சனா சொல்வது உண்மை தான்.அவனை எல்லாரும் பாராட்டுவது அவளுக்கு பெருமை தர தான் செய்தது.
ஆனால், அவர்கள் என்ன புகழ்ந்தார்கள் என்று கூட தெரியாமல் இருப்பது, அவளுக்கு வருத்தத்தை அளித்தது. அந்த மனநிலையில் இருந்தவளை மேலும் புண் படுத்தினாள் அர்ச்சனா.
“அவங்க எல்லாரும் ஆதியை என்ன சொல்லி புகழ்றாங்கன்னு கூட உனக்கு தெரியலை. நீயெல்லாம் அவனுக்கு பொண்டாட்டி. உனக்கு கிடைச்ச வாழ்வு, வளமான வாழ்வு தான். அனுபவி. ஆமா உனக்கே, மனசு கூசலையா டி? அவன் பக்கத்துல நிக்க கூட உனக்கு அருகதை இல்லை. அதுக்கு தான் சொன்னேன். அவனை விட்டு எங்கயாவது ஓடிருன்னு”, என்று சிரித்து விட்டு செல்ல போனாள் அர்ச்சனா.
அவள் நகர பார்த்ததும் தான், பஞ்சு என்ற சிலைக்கு உயிர் வந்தது. “இவ்வளவு கேவலமா பேசிட்டு போறவளை சும்மா விடணுமா? உன்னோட கவலையை மூட்டை கட்டி வச்சிட்டு, அவளை ஒரு கை பாரு பஞ்சு”, என்று தனக்குள் சொல்லி கொண்டு நிமிர்ந்து நின்றாள்.
இரண்டு அடி நடந்த அர்ச்சனா, சொடக்கு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அங்கே பஞ்சு அவளை கை சொடுக்கி அழைத்து கொண்டிருந்தாள்.
அவள் அப்படி அழைப்பது சிறிது அதிர்ச்சியை கொடுத்தாலும், அவளை திரும்பி பார்த்து நின்றாள் அர்ச்சனா.
மெதுவாக அதே நேரம் கம்பீரமாக நடந்து, இவள் அருகில் வந்தாள் பஞ்சு.
“என்ன டி பேசிட்டே போற? கேள்வி கேட்ட உனக்கு, பதில் தெரிய வேண்டாமா?ஆமா, இப்ப எதுக்கு என்கிட்ட வந்து இப்படி நீ பேசுற?”, என்று கேட்டாள் பஞ்சு.
“எதுக்கா? எதுக்குன்னா கேக்குற? போயும் போயும் உன்னை போய் கல்யாணம் செஞ்சிருக்கானே. அந்த வயித்தெரிச்சல் டி. அவன் கூட நீ வாழுறன்னு வயிறு எரியுது. இது எனக்கு கிடைச்சிருக்கு கூடிய சந்தர்ப்பம். அங்க நிக்குறான் பாரு ஆதி. எப்படி இருக்கான்? அவனை என் வாழ்க்கையில் இழந்துட்டேனே, அப்படிங்குற வலி. நீ மட்டும் நிம்மதியா இருக்கலாமா? ஆனா நான் ஒன்னும் பொய் சொல்லலையே. உண்மையை தான சொன்னேன்”
தன் கணவனுக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து தைரியமாக பேசினாள் அர்ச்சனா.
“அட கேடு கெட்டவளே! நீ இன்னுமா இப்படி பேசிட்டு திரியுற? பக்கத்துல உன் புருஷன் நிக்கான். ஆனா நீ இன்னொரு ஆம்பளையை பத்தி பேசிட்டு இருக்க? வெக்கமா இல்லையா உனக்கு?”, என்று கேட்டாள் பஞ்சு.
“ஏய் என்ன இப்படி பேசுற? கொஞ்சமாவது டீசெண்டா பேசு”
“உன்கிட்ட என்ன டி டீசென்ட்? அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்க நினைக்கிறவங்க, எல்லாம் கேடு கெட்டவங்க. கேவலமானவங்க. நீ அந்த வகை தான். அப்புறம் என்ன சொன்ன பட்டிக்காடா? ஒன்னு நல்லா நினைவு வச்சிக்கோ. நான் பட்டிக்காடு தான். ஆனா உன்னை மாதிரி அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கணும்னு நினைக்கலை. கண்டிப்பா நான் நல்லா இருப்பேன். அங்கே பாக்க சொன்னியே, அங்க அத்தனை பேருக்கு மத்தியில் பேரும் புகழோடும் இருக்குறது என்னோட புருஷன். இங்க அத்தனை பேரும் பாராட்டுறது டாக்டர் ஆதித்யா. அவர் யார் தெரியுமா? எனக்கு தாலி கட்டி என் கூட அன்போடும், காதலோடும் வாழ்ந்துட்டு இருக்குற என்னோட புருஷன்”
…..
“இன்னொரு தடவை என் புருஷனை நீ மனசில் நினைச்சாளோ, அவரை பத்தி பேசினாளோ எந்த இடம்னு கூட பாக்க மாட்டேன். அந்த இடத்திலே செருப்பை கழட்டி அடிப்பேன். எனக்கு படிச்சவங்க மாதிரி நாசுக்கு எல்லாம் பாக்க தெரியாது. வாயில் கெட்ட கெட்ட வார்த்தையா வந்துரும். ஒழுங்கு மரியாதையா, என் புருசனுக்கு நடக்குற பார்ட்டில… எப்படி எப்படி என்னோட புருசனுக்கு நடக்குற விழாவில் கொடுக்கும் சாப்பாடை நல்லா கொட்டி கிட்டு, வாயை மூடிட்டு போற. அப்படி இல்லாம என்னை வந்து சீண்டிக்கிட்டு இருந்த, துடைப்ப கட்டை பிஞ்சிரும்”, என்று சொல்லி விட்டு திரும்பினாள் பஞ்சு.
அப்போது அர்ச்சனாவின் கணவன் “நீ ஆதியை லவ் பண்ணியா அர்ச்சனா?”, என்று சுத்த தமிழில் கேட்டான். அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் அர்ச்சனா.
காதல் மலரும்….