Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 32.1

ஒரு வாரம் கடந்திருந்தது சஹானாவிற்கு அந்த கோரமான விபத்து நடந்தேறி. மருத்துவ வளாகத்திலே ஆதவன் தங்கிவிட, ஆதியோ சகோதரியிருந்த அறையிலே தங்கிவிட்டான். கை கால்கள் எங்கும் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க எவர் பேச்சும் காதில் வாங்காமல் சகோதரியின் முகம் பார்த்தே அமைதியாக இருந்தான்.

பேச வில்லை எவரிடமும். பேசவும் மனம் வரவில்லை.

ஆறு நாட்கள் நெருப்பில் நிற்பது போல் இருந்தது அவனுக்குச் சகோதரியின் நிலை கேட்டு. மூன்று நாட்களுக்கு முன்னர் வரை சஹானா காதிற்கு அவள் கால் பற்றிய செய்து செல்லாமல் இருந்தது. ஆதியை நிறுத்தி வைத்திருந்தனர் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் அதற்கு மேல் சகோதரிக்குப் பொய் வார்த்தைகள் கூற மனம் ஒப்பாமல் கலங்கிய மனதோடு சென்று எவரது அபிப்பிராயமும் கேட்காமல் ஒரே மனதோடு அவளது நிலையை உடைத்தான் அண்ணன். சகோதரி அழுது வருந்துவாள், அவளுக்குத் தோள் கொடுக்க சகோதரனானவன் நினைத்திருக்க அதற்கு வேலையே உனக்கு வேண்டாம் என்று எண்ணினாள் போலும்.



Advertisement

“ஓ…” அமைதியாய் இருந்தவள் கால் கட்டை பார்த்து, “நான் ப்ராக்சர்-னு நெனச்சேன் ண்ணா” அவளது அமைதியான வார்த்தையில் சகோதரனான ஆதி துடிதுடித்துப் போனான்.

அழுபவளைக் கூட கட்டி தழுவி ஆறுதல் கூறிவிடலாம் ஆனால் அமைதியாகச் சிரிப்பவளுக்கு எந்த வகையில் ஆறுதல் கூற இயலும்? அவ்வளவு தான்…

துயரம் அடைந்த மனதைப் புகை வைத்து ஆற்றலாம் என்று செல்லும் அவனது இரண்டு நிமிடங்களும் அதன் பிறகு அவளை விட்டுச் செல்லாமல் மொத்தமாய் அந்த அறையிலேயே நிறுத்திக்கொண்டது.

Advertisement

ஷீலா, ஆதவனின் அன்னை உணவை மருத்துவமனை அனுப்பிவிட ஆண்கள் நாளில் இரண்டு முறை சஹானாவை வந்து பார்த்துச் சென்றனர். தமிழ், கெளதம் கட்டிட வேலைகளை நிறுத்தாமல் தொடர்ந்து செய்துகொண்டிருந்தனர்.

Advertisement

ஆதவன் தன்னவள் மேல் முழு உரிமையைக் காட்டக் கூட முடியாமல் கனமான இதயத்தோடு வளம் வந்தான். அதே நேரம் தன் பார்வை வட்டத்திற்குள் சஹானாவை வைத்திருக்கும் ஆதி மீதும் வருத்தமே வந்தது. என்ன பாடு படும் அவன் இதயம்?

உதய் மேல் தான் அத்தனை கோவமும் சென்றது.

நண்பனாக இருந்தாலும் தன் கையாலேயே அவனை ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அடங்கா ஆத்திரம் வற்றாமல் பெறுக, முதலில் தன்னுடைய துணையைத் தேற்றி தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு தந்தையிடம் முடிவாய் சஹானாவைப் பற்றிப் பேசிவிட்டான்.

Advertisement

தந்தை தன்னுடைய முடிவை சில நாட்களுக்குப் பிறகு கூறுவதாகக் கூறிவிட, எதற்கு இந்த தேவையற்ற அவகாசம் என்ற ஆதங்கத்தில் தந்தையிடம் சண்டையிட்டு வீட்டிற்கே செல்வதை நிறுத்திவிட்டான்.

“இங்க பாருங்க எனக்கு சஹானா தான் வாழ்க்கை… ஒரு கால் வேலை செஞ்சாலும் சரி, ரெண்டு காலும் வேலை செய்யலானாலும் சரி. அவ மட்டும் தான் என் பொண்டாட்டி. அவர்கிட்ட சொல்லிடுங்க” அதோடு வீட்டைத் துறந்து மருத்துவ சாலையில் புகுந்தவன் தான்…

தயக்கத்தோடு ஆதியின் அனுமதி பெற்றே சஹானாவைப் பார்ப்பான்.

மருந்தின் வீரியம் பாதியிருக்க, மனதில் உடைந்த கனவை மறைக்கவும், தன்னுடைய எதிர்காலத்தை மட்டும் இறைவன் பறிக்காமல் சகோதரனின் வாழ்க்கையையும் உடன் பாதிப்படைந்ததை எண்ணி கலக்கம் கொண்டிருந்தவள் அதிகம் உறங்குவதைப் போல நடித்தே சுற்றத்தைப் புறக்கணித்தாள். அதனால் ஆதவனால் கூட அவளிடம் முழுதாக ஒரு நிமிடம் கூட மனம் விட்டுப் பேச முடியவில்லை.

தன்னை பார்ப்பதைத் தவிர்க்கும் பெண்ணின் மனதில் என்ன இருக்கிறதென்று கூட அறிய முடியாமல் ஆதவன் தான் அதிகம் வாடினான்.

ஆதியிடமும் அவன் காதலைப் பற்றிப் பேச முடியவில்லை. சஹானாவிற்கு உண்மை தெரியும் முன்னர் கூட ஓரிரு வார்த்தைகள் வர, அதன் பிறகு மொத்தமாய் கூட்டிற்குள் அடைந்த ஆமையாக வார்த்தைகளுக்குக் கடின ஓடிட்டு மூடிவிட்டான்.

இன்று மணிமேகலை சஹானாவை காண இரண்டாவது முறையாக வந்திருக்க முதல் நாள் அவள் வந்த பொழுது இருந்ததை போலவே அவள் முகத்தைக் கூட ஆதி பார்க்கவில்லை. ஏதேதோ எண்ணங்களால் அல்லோலப்பட்டிருந்தவன் அவள் வரவால் இன்னும் மனம் உடைய அமைதியாய் அவளைத் தவிர்த்தான். ஆனால் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை பெண்.

அவன் மனம் அறிந்தவளாயிற்றே…

சஹானாவிற்காகக் காலையிலிருந்து போராடி, வீட்டையே இரண்டாக்கி ஒரு பருப்பு சாதம் செய்து எடுத்து வந்திருந்தாள். அன்று பேசிய பொழுது தெரியாமல் வந்த வார்த்தை. அதற்காக ஆசையாகச் செய்து வந்த மணிமேகலை உண்டே ஆக வேண்டும் என்று போராடி சஹானாவைச் சம்மதிக்க வைத்தாள்.

கைகள் இரண்டும் கட்டிக்கிடக்க அதையும் தானே ஊட்டி விட்டவள் சஹானாவைச் சிறிது சிரிக்க வைத்தே கிளம்ப ஆயத்தமானாள். செல்லும் பொழுது அவனிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் செல்ல மனம் வரவில்லை… மனதில் உள்ளதை என்னிடமாவது கூறேன் என்று அவனுக்குத் தினமும் குறைந்தது நூறு குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுவாள் ஆனால் எதற்கும் மசியவில்லை அவன்.

அவளிடம் அவன் பேசி ஆறு நாட்கள் ஆகியது. அறையை விட்டுச் செல்ல இருந்தவள் நின்று அவனைக் கவலையோடு, “ஆதி…” என்று அழைத்தாள்.

தன்னை கவனி என்ற அழைப்பு அல்ல… ‘உன்னைத் தேற்ற நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வியோடு இருந்தது அவள் அழைப்பு.

அவனோ அவளை இப்பொழுதும் தலை தூக்கிப் பார்க்கவில்லை, “ம்ம்ம்… போ”

அவன் துறத்தலில் மனம் விசும்ப அங்கேயே சில நிமிடங்கள் அவனைப் பார்த்து நின்ற மணிமேகலைக்கு அதற்கு மேல் நிற்க முடியவில்லை. சில தினங்கள் செல்லட்டும் தேற்றிடலாம் என்ற எண்ணத்தில் வெளியேறினாள்.

ஆனால் இவற்றை எல்லாம் பார்த்த சஹானாவிற்கு அதுவே பெரும் பாரமாகிப் போனது. தங்கையின் முகம் வாடிப் போனதைப் பார்த்தவன் ஒரு முடிவோடு அடுத்த சில நிமிடங்களில் சஹானாவின் உடல்நிலையை ஆராயும் மருத்துவர் வரவிற்குக் காத்திருந்தான்.

சில நிமிடங்களில் மருத்துவர் வர அவரை தொடர்ந்து ஆதவனும் பின்னாலே வந்தான். இருவரையும் வெளியில் காத்திருக்கக் கூறி அவளை ஆராய்ந்த மருத்துவர்கள் இருவர் சில நிமிடங்கள் இருவரையும் உள்ளே விட வில்லை. மற்ற பெரியவர்களும் அந்த காலை நேரத்தில் இல்லை, இன்னும் சில நிமிடங்களில் தான் ஆதவனின் அன்னை காலை உணவோடு வருவார்.

நிமிடங்களில் செவிலியர் வந்து ஆதியை உள்ளே அழைத்துச் செல்ல மருத்துவர், “எல்லாமே கொஞ்சம் பலமான அடி தான் ஆனா கொஞ்சம் கொஞ்சமா காயம் ஆறிட்டே இருக்கு… வயிற்றுல போட்ட தையல் கூட நல்லா குணமாகிட்டு இருக்கு. தையல் இன்னைக்கே பிரிச்சிடலாம். காலுக்கு மட்டும் ரொம்ப ஸ்ட்ரைன் குடுக்காதிங்க. மத்தபடி எல்லாமே நார்மல் தான். இன்னைக்கு காலுக்கு ஒரு ஸ்கேன் எடுக்கணும் பத்து மணி போல எடுத்துடுங்க” என்றார்.

“ஓகே டாக்டர்…” என்றவன் மேலும் தயக்கமாக, “டிஸ்சார்ஜ் எப்போ பண்ணலாம்?” என்றான் ஆதி.

“வீட்டுல நல்லா பாத்துக்குவீங்கன்னா இன்னைக்கே கூட பண்ணலாம். வாரம் ரெண்டு தடவ செக்அப் மட்டும் கூட்டிட்டு வாங்க” – மருத்துவர்

“ஆதி…” ஆதவன் ஏதோ பேச வரக் கையை தூக்கி அவனை நிறுத்தினான். மருத்துவர் இருப்பதால் அவனும் பேசாமல் நின்றுவிட்டான்.

“அப்ப இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் டாக்டர்” என்கவும் அடுத்து நடக்க வேண்டிய வேலைகளை உடனே துவங்கினார்கள் மருத்துவர்கள்.

மருத்துவர்கள் வெளியில் சென்றதும், “ஆதி ஏண்டா அவசர படுற? இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்தா டாக்டர்ஸ் நல்லா பாத்துக்குங்க… அவளுக்கும் கொஞ்சம் நல்லாகிடும்ல…”

“இல்லடா இங்க வேணாம் நாங்க வீட்டுக்கு போறோம்” – ஆதி

ஆதவனுக்கு ஆத்திரம் பொங்கியது, “அவ என்ன நீ ஆட்டி வக்கிர பொம்மையா… இன்னும் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ இங்கையே இருக்கட்டும்” என்றான் கோவமாக.

எப்படி கூறுவான் தன்னுடைய சகோதரியின் மனநிலையை? நலம் விசாரிப்பு என்னும் பெயரில் அவளை நோக்கி விழுகும் கருணை பார்வை சகோதரியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காவு வாங்குகின்றதென்று…

“இல்ல டா நாங்க கெளம்புறோம்” மனதில் நினைத்ததை வாய் விட்டுக் கூறியிருக்கலாமோ என்னமோ.

“சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னா நீ சொல்றதுக்கு உடனே நாங்க தலை ஆட்டுவோம்னு இல்ல ஆதி. சஹானாவைப் பத்தி மட்டும் யோசி… வீட்டுல லேடீஸ் யாரும் இல்ல எதுவும் தேவனா துணைக்குக் கூட யாரை எதிர் பாத்துட்டு போவா?” – ஆதவன்

அத்தனையையும் யோசித்தே ஆதி கழகத்திலிருந்தான் பல நாட்களாக. அமைதியாய் ஆதி இருக்கவும் யோசிக்கிறான் என்று ஆதவன் நினைக்க ஆனால் ஆதி உறுதியாய் தான் இன்னும் இருக்கிறான் என்று தெரியவில்லை பாவம்.

“வீட்டுக்கு போகலாம் ண்ணா…” அமைதியைக் கிழித்து வந்தது சஹானாவின் மெல்லிய குரல்.

சகோதரனை இது போன்று உடைந்த நிலையில் அவளால் பார்க்க முடியவில்லை. ஏக பெருமூச்சு விட்ட ஆதவன் பொறுமையாய் அவளிடம் வந்தவன் ஆதிக்குத் தெரியாமல் அவள் கை பற்றிட, இத்தனை நாள் அடக்கிய கண்ணீர் ஒரே துளியாய் வந்து முட்டி நின்றது.

“புரிஞ்சிக்கோ டா… அவன் உன்ன எப்படி பாத்துக்க முடியும்? இங்க நர்ஸ், அம்மா, ஷீலா ம்மா எல்லாம் ஹெல்ப் பண்ணுவாங்க. கொஞ்சம் ஒடம்பு தேரிக்கோ அப்றம் கண்டிப்பா வீட்டுக்கு போகலாம்”

அவன் கையிலிருந்த தன்னுடைய கையை வலியையும் பொருட்படுத்தாது எடுத்தவள் கண்களில் கண்ணீர் வந்தாலும் மீண்டும், “அண்ணா வீட்டுக்கு போகலாம்” ஆதவனைப் பார்க்கவில்லை பெண்.

சகோதரியின் வார்த்தைகளில் கர்வம் தலைதூக்க வில்லை அவனுக்கு, மேலும் வருத்தம் கூடத் தான் செய்தது.

“யாரவது வந்ததும் நான் போய் பணத்தை அரேஞ் பண்ணிட்டு வர்றேன்”

ஆதியின் வார்த்தை கேட்டு பொறி தட்ட உடனே ஆதவன், “ஆதி பணம் தான் பிரச்னைனா நான் பே பண்றேன்டா… காசு பத்தி நீ யோசிக்காத” என்றான்.

“இல்லடா வேணாம் விடு” – ஆதி

“ரொம்ப யோசிக்காத ஆதி, நான் செய்யாம வேற யார் செய்வா? விடு நான் டாக்டர்கிட்ட பேசுகிறேன்”

ஆதவன் பேச சரியாக ஆதவனின் அன்னை காலை உணவோடு அறைக்குள் நுளைந்தார், “இவன் சஹானாவை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றான் மா” அன்னையிடம் புகார் கூற அதைப் பொருட்படுத்தவில்லை ஆதி.

“நீ எதுக்குடா என் தங்கச்சிக்கு செய்யணும்?”

அதிர்ந்தாலும் இன்றே பேசிவிடலாம் என இடம் பொருள் பார்க்காது, “சஹானாவை நான் லவ் பன்றேன்னு உனக்கும் தெரியும் ஆதி…” உண்மையை உரைத்தான் ஆதவன்.

“ஆமா ஆதி நானே இத பத்தி பேசணும்னு தான் நெனச்சிட்டு இருந்தேன்” என்றார் பெரிய மனிதராக.

“இல்ல மா வேணாம்” என்றான் மெதுவாக.

ஆதவன் அதிர்ந்து சஹானாவைப் பார்க்க அவளோ வேறு பக்கம் தலை சாய்த்து கண்களை மூடியிருந்தாலும் கண்களிலிருந்து நிற்காமல் வழிந்த கண்ணீர் எனக்கும் இதற்குச் சம்மதமே என்று கூற நொறுங்கிப்போனான் ஆடவன்.

“என்ன ஆதி பேசுற? என் லைப் அவ தான்னு முடிவு பண்ணி ரொம்ப நாள் ஆச்சு… இப்ப வந்து மாட்டேன்னு சொல்ற?” அவள் இல்லாமல் ஒரு நாளை கூட அவனால் சிந்திக்க இயலவில்லை.

“பழகிக்கோ. இனிமேல் பழகிக்கோ” விட்டெதெரியாக ஆதி பேச என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை அவனுக்கு. உடன் நின்று பேச வேண்டியவளே முகத்தைத் திருப்பிவிட எந்த உறுதியின் தான் அவனும் பேசுவான்?

“ஏன் ஆதி இப்டி பண்ற?” வலியோடு ஆதவன் பேச அன்னைக்கும் தாங்கவில்லை மகனது வேதனை.

“தம்பி எடுத்தோம் கவுத்தோம்னு பேசுற விசியம் இல்ல இது… பொறுமையா பெரியவங்களா பேசுனா போதும். இப்ப விடு சஹானா மனசு கஷ்டப்படும் அவ முன்னாடி எதுவும் பேச வேணாம்” உறுதியாக நிதானித்தார் ஆதவன் அன்னை.

ஆனால் இதை விடும் முடிவில் அவன் இல்லை, கை எடுத்து அவரை கும்பிட்டவன், “என் தங்கச்சிக்கு நீங்க ரொம்ப அதிகமாவே உதவி பண்ணிட்டீங்க இத எல்லாம் நான் எப்படி திரும்ப அடைப்பேன்னு கூட தெரியல. ரொம்ப ரொம்ப நன்றி… ஆனா போதும், இனிமேல் உங்க பையன் என் தங்கச்சிய மறக்க சொல்லுங்க”

ஆதவனும் கவனித்துத் தான் வருகிறான், ஒரு முறை கூட இங்கிருந்த நாட்களில் நண்பர்களிடமோ தன்னிடமோ ஆதி எதுவும் பேசவில்லை, ஏன் பெயரைக் கூட வாய் திறந்து பேசவில்லையே அவன்.

“என்னடா யாரோ மாதிரி பேசுற?” எத்தனை வேதனையைத் தான் அவனும் தங்குவான்… மனம் உடைந்தான் ஆதவன் நண்பனின் அந்நிய பார்வையில்.

“ஒன்னுமில்ல… என் தங்கச்சியோட நிம்மதி எனக்கு எல்லாத்தையும் விட முக்கியம்” – ஆதி

“எங்க வீட்டுல சஹானா கஷ்டப்பட மாட்டா ப்பா… நீ ஏன் இப்டி யோசிக்கிற?” – ஆதவன் அன்னை.

“கஷ்டம் இருக்காது ஆனா நிம்மதி இருக்கும்னு உங்களால உறுதியா சொல்லிட முடியுமா? இவன் பாத்துக்குவான், ஆனா ஏதோ ஒரு சூழ்நிலைல வாய் தவறி வார்த்தை வந்துட்டா அத என் தங்கச்சியால எந்த காலத்துலையும் தாங்கிக்க முடியாது” சகோதரியின் நிலை அண்ணன் அவனை அழுகத் தூண்டியது.

“யாரும் அவளை குறையா சொல்லல டா… சஹானா தான் என்னோட லைப்னு தெரிஞ்சு அவளை அவளா தான் அக்சப்ட் பண்ணிருக்காங்க ஆதி” – ஆதவன்

“ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு கூடயே இருந்த உன் அப்பா, அவளால நடக்க முடியாதுனு தெரிஞ்ச அப்றம் ஏன் ஒரு தடவ கூட வரல?”

ஆதியின் கேள்வியில் இருவருமே அமைதியாகிவிட அதுவே உறுதியளித்தது ஆதியின் சந்தேகத்தை. அது வரை அடங்கியிருந்த அழுகை கூட சஹானாவால் கட்டுப்படுத்த முடியாமல் போக அவளது மெல்லிய விசும்பல் சத்தம் ஆதியை உடைத்தது.

“டேய் வெளிய போடா” ஆதி சத்தமாய் ஆதவனை விரட்ட அதிகம் உடைந்தான் அவன்.

“அப்பா ஏதோ தெரியாம பேசுறாங்க ஆதி” – ஆதவன்

“அவர் ஒரு கூறுகெட்ட மனுஷன் ஆதி. அவர் பேச்ச கேட்டுட்டு புள்ளைங்க வாழ்க்கையை நாம வீணாக்கிட கூடாது. அவரை நான் பேசி சம்மதம் வாங்குறேன்” ஆதியின் தோள் தொட்டு சமாதானம் செய்தார்.

“ஒரு கல்யாணம் ரெண்டு குடும்பம் சந்தோசமா நடத்தி வைக்கணும் ம்மா… நீ நல்லவன் தான்டா ஆனா மனசு ஒரு கொரங்குல… உங்க கல்யாணம் அப்ப ஒரு பேருக்கு அங்கிள் வந்து நின்னுட்டு போனா, அதை பாக்குற இவன் ஏதோ ஒரு கோவத்துல சஹானா மேல காட்டிட்டா…

இல்ல நீங்களே என் தங்கச்சிய பாத்துக்க முடியாம வார்த்தை விட்டா கூட அதை யார்கிட்டயும் சொல்லாம மனசுலையே வச்சு அழுவா. என்ன பாத்து ‘ஏன் அவசரப்பட்ட’-னு சஹானா ஒரு வார்த்தை கேட்டா கூட அந்த இடத்துலயே நான் செத்துடுவேன்.”

சஹானா அழுக அழுக அவள் உடல் குலுங்க அதைப் பார்க்க முடியாத ஆதி அவள் அருகே சென்று சகோதரியின் கை பற்றினான்.

“வேணாம். விட்டுடுங்க. இத்தனை வருஷம் அவளை பாத்துக்குட்ட என்னால இனியும் பாக்க முடியாதா? நான் பாத்துக்குவேன் டா. நான் வாழுறதுக்கு காரணமா இருக்குறவ என்னோட அவசரகால வருத்தப்பட்டா நான் வாழுறதுக்கு என்ன அர்த்தம்? உங்க பையனுக்கு உங்க தகுதிக்கு ஏத்த இடமா பாத்து கல்யாணம் பண்ணி வச்சுக்கோங்க”

அவ்வளவு தான் பேச்சு என்று சகோதரியைச் சமாதானம் செய்ய ஆதி சென்றுவிட, செய்வதறியாமல் வெளியில் சென்று அமர்ந்துவிட்டான் ஆதவன் தலையில் கை வைத்து.

மகனது நிலை பார்த்துக் கலங்கிய கண்களோடு அன்னை அவன் கை தொட, “இந்த காசு பணம் எனக்குச் சொந்தமா இல்லாம இருந்தா இந்நேரம் சஹானா எனக்கு கெடச்சிருப்பாளா மா?” எங்கேயோ வெறித்து அமர்ந்திருந்த மகனை என்ன கூறி தேற்றுவதென்று தெரியாமல் அவன் தோளிலே சாய்ந்து அழுதார் அன்னை.

“நான் கொஞ்ச நேரம் முன்னாடி போயிருந்தா என் சஹானா இந்த நிலைமைக்கு வந்துருக்க தேவையில்லல?”

“அவ எப்படி இருந்தாலும் அவளை என்னால யோசிக்காம இருக்க முடியலையே மா… கால் இருந்தா என்ன இல்லனா என்ன ம்மா… ஏன் நான் அவளை பாத்துக்க மாட்டேனா? நமக்கு நல்ல நாள்க்கு டிரஸ் எடுக்க போறப்ப எல்லாம் அவளுக்கும் இத்தனை வருசமா டிரஸ் எடுத்து வச்சிட்டு இருக்கேன் மா…”

“அவ்ளோ தான் அவனுக்கு என் மேல இருக்க நம்பிக்கையா ம்மா?”

“என்கிட்டே வேகமா வந்துடுவேன்னு சொன்னவளும் இன்னைக்கு என் முகத்தை கூட பாக்க மாட்டிக்கிறா? எங்க மா நான் தப்பானேன்?” அவனது ஒவ்வொரு கேள்வியிலும் அன்னையானவர் அதிகம் மனம் கலங்கினார்.

மகனின் விருப்பத்தை சில நாட்களுக்கு முன்னர் தெரிந்திருந்தால் கூட இந்நேரம் திருமணத்தையே நடத்தி வைத்திருக்கலாமே என்ற எண்ணம். ஆனால் ஆதி கேட்ட கேள்விகள் அவரை வாயடைக்க வைத்திருந்தது, அவருக்கும் கூட இதில் சிறு சஞ்சலம் இருக்கத் தான் செய்தது, மகனின் விருப்பத்திற்கு மட்டுமே மனம் இறங்கி வந்தார்.

இன்று உடைந்து அமர்ந்திருந்த ஆதவனின் நிலையைப் பார்த்ததும் அவன் வாழ்க்கையின் அவள் இடத்தை பார்த்தவருக்கு விதியை மட்டுமே குறை சொல்ல முடிந்தது.

நிமிடங்கள் கரைய ஷீலாவோடு தமிழ் வரவும் தான் அறையை விட்டு வெளி வந்த ஆதி, “சஹானா தூங்கட்டும் ம்மா” என்று வெளி நடந்தான்.

அவன் சென்றதும் ஆதியின் பிடிவாதத்தை அவர்களுக்குக் கூறிய ஆதவனின் அன்னை அழ அவரை தேற்றுவதிலே ஷீலாவிற்கு நேரம் செல்ல ஆதவனை என்ன கூறியும் தலையை நிர்மித முடியவில்லை. விறுவிறுவென வேலைகள் நடக்க அடுத்த மூன்று மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்வதற்காக சஹானாவிற்கு ஸ்கேன் எனச் சென்றுவிட ஆதவனின் தந்தை கூட விஷயம் கேள்வியுற்று வந்துவிட்டார். ஆனால் எதற்கும் மசியவில்லை ஆதி.

“எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசிட்டு இருக்கான்… இப்ப தங்கச்சி சுமையா தெரியமாட்டா நாளைக்கு அவனுக்கே கல்யாணம் ஆச்சுன்னா பொண்டாட்டி புள்ளைங்கள பாப்பானா இல்ல தங்கச்சிய பாப்பானா?”

அவன் காதுப்படவே ஆதவனின் தந்தை பேசியதற்கு, “என் தங்கச்சிய என்ன விட்டு தள்ளி வக்கிர அப்டி ஒரு கல்யாணமே எனக்கு வேண்டாம்” அவரை பார்த்துப் புன்னகைத்தவன் அடுத்த வேலைகளைத் துவங்கினான். சகோதரிக்கு எந்நேரமும் உடன் இருக்கும்படி இரண்டு செவிலியர்களை நியமித்தான்.

சகோதரிக்காக சிறுக சிறுக சேமித்திருந்த நகையைச் சென்று அவள் மருத்துவத்திற்கு அடமானம் வைக்கும் பொழுது அவன் அனுபவித்த வேதனை சொல்லில் அடங்காதது. எத்தனை ஆசை ஆசையாக அவள் திருமணத்திற்கு வாங்கியது… அதைத் திருமணத்தில் அவள் கழுத்தில் போட்டு அழகு பார்க்கவேண்டும் என்று எத்தனை நாள் உண்ணாமல் சேமித்த பணம்… அதற்கு வேலையே இல்லை என்றான பொழுது வீட்டில் மடிந்து அமர்ந்து அழுதான் ஆண்மகன்.

அத்தனையையும் ஆதி தனியே பார்த்தான், டிஸ்சார்ஜ் செய்யும் வேலை, பணம் செலுத்த, ஸ்கேன் அழைத்துச் செல்ல என மொத்தமும் எவரையும் அருகில் கூட விடவில்லை அவன். ஷீலா கூட அவனைப் பார்த்து மனம் தாங்காமல் அழுகத் துவங்கிவிட்டார்.

எப்படிக் கலகலப்பாக இருந்த குடும்பம், இன்று சிரிப்பிற்கே பஞ்சமாய் இருக்க மனம் கன்றியது. ஒரு வண்டியைப் பிடித்து நிறுத்தி மருத்துவமனையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே ஆதி வர, உதவச் சென்ற தமிழ், கௌதம் என எவரையும் அனுமதிக்கவில்லை, “விடு” என்றதோடு தானே செல்ல,

ஆதி சென்ற அந்த சிறு இடைவேளையைப் பயன்படுத்தி சஹானா மட்டுமே இருந்த அறைக்குள் நுழைந்தான் ஆதவன். கண்களை மூடி படுத்திருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் ஆதி என்று பார்க்க, ஆதவனை பார்த்ததும் கண்களை மூடி தலையைத் திருப்பி அமைதியாகப் படுத்தாள்.

அவளைப் பார்த்ததும் அடக்கிய துன்பம் மேலோங்க அவள் அருகே வந்து மண்டியிட்டு முகம் பார்த்து அமர்ந்தான். அவன் வாசனை உணர்த்தும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திப் படுத்திருக்க உடல் முழுதும் கட்டுடன் கிடந்தவள் அழகு அந்த நொடியும் அவனுக்குத் தெவிட்டவில்லை…

“பேபி டால்” ஏகமாய் வலியோடு ஆதவன் அழைத்த அழைப்பில் உணர்ச்சி பெருக்கெடுத்து கண்ணீர் விழ அவள் கண்கள் திறந்தாள் தன் முன்னே அமர்த்திருப்பவனைப் பார்க்க.

அவளது ஏக்கத்தை அந்த கண்ணீர் கூறிவிட, பட்டும் படாமல் அவள் கண்ணீரைத் துடைத்தான் விரல் கொண்டு. “என்கிட்ட வேகமா வந்துடுவேன்னு சொன்னது எல்லாம் பொய்யாடி?”

அவன் கை பிடித்து நடக்க ஆசைகொண்டிருந்த மனதை அவனிடம் கூறத் தான் முடியுமா அவள் இருந்த நிலையில்? ஏற்கனவே வசதி படைத்தவன் என்ற எண்ணம் அவளுள் இருந்த பொழுது, இனி தன்னால் நடக்க முடியாது என்று அறிந்த பின்னர் தன்னை வைத்து அவனுக்கு என்றுமே சிரமம் தான் என்று உறுதியாக நம்பிவிட்டாள் மனதளவில். பேசினால் மனம் சாயும் அவனிடத்தில் என்று அமைதியாகக் கண்ணீரை உள்ளடக்கிக் கொண்டாள்.

“ஆனா நான் பொய் சொல்லல, எனக்கு என்னோட பேபி டால் மட்டும் தான் வேணும்… அவ இல்லனா வேற யாரும் வேணாம்…” சற்று தலை தூக்கி அவள் நெற்றியின் இதழ் பதித்தவன், “வந்துடுவல டால் என்கிட்ட?”

வழக்கத்தை மீறாமல் தானாக அவனின் இந்த கேள்வியில் இன்றும் அவள் தலை ஆட, அதை கண்டும் காணாமலும், “வந்துடு டா…” கெஞ்சலோடு அவள் கண்களைப் பார்த்துப் பேசியவன் அமைதியாய் எழுந்து வெளியில் செல்ல, அவனைப் பார்த்தவள் உடலோடு சேர்ந்து மனமும் அதிகம் அடிவாங்கியது.

பத்தே நாட்களில் அவனுடைய காதலை சஹானாவின் மனதில் ஆழமாய் விதைத்திருந்தவன் அவனுடைய உலகில் அவள் எவ்வளவு முக்கியமென்று ஒவ்வொரு நாளும் தவறாமல் பதியவைத்திருந்தான் அவள் மனதில்.

“சஹானா கெளம்பலாமா டா?”

கைகள் இரண்டும் அசைவில்லாமல் கட்டிக்கிடக்கக் கண்ணீரைத் துடிக்க முடியாமல் பரிதவித்தவள், “போலாம் ண்ணா” என்க.

சகோதரியின் நிலை பார்த்து, “உன் கால சரி பண்றது மட்டும் தான் இனி என்னோட வேலைடா… நீ கலங்காத என்னைக்கு இருந்தாலும் ஆதவன் தான் உன்னோட வாழ்க்கை… அதே நேரம் என்னால உன்னோட சந்தோசத்தை அடகு வைக்கவும் முடியல. என் மேல நம்பிக்கையோட வா” அதற்கு மேல் சகோதரி எதுவும் யோசிப்பாளா என்ன? மறு வார்த்தை பேசாமல் சகோதரனோடு இல்லம் திரும்பினாள்.

***********************

எப்பொழுதும் பரபரப்பாக நிற்க நேரமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் அந்த அலுவலகத்தில் இன்று பேச்சுக்கு கூட பஞ்சமாகி போனது. அட்மின் டீமிலிருந்து மேனேஜர் ஒருவர் உதய் பிரத்தேயேகமாய் பயன்படுத்தும் கணினியின் கடவுச்சொல்லை மாற்றிக்கொண்டிருக்க அருகில் நின்று கவனமாய் பார்த்துக்கொண்டிருந்தான் உதய்.

அவனுக்கு உதவி புரிந்துகொண்டிருந்த ஜெயன் செயலில் வேகமும் இல்லை.

“சார் இது ஒன் டைம் பாஸ்ஒர்ட்… ச்சர்மேன் மெயில்க்கு சென்ட் பண்ணிட்டேன்… அவரு ச்சேஞ் பண்ணிக்கலாம். அதே அப்றம் இனிமேல் நீங்க இந்த கம்பெனில எதையும் ஆக்ஸஸ் பண்ண முடியாது… ச்சர்மேன் பெர்மிசன் இருந்தா உங்களுக்கு ஒரு ஆக்சஸ் கிரியேட் பண்ணி தர்றேன்” என்றார் இருக்கையிலிருந்து எழுந்து.

“இருக்கட்டும் ஞானமூர்த்தி இனிமேல் எனக்கு இங்க வேலை இல்லை. தேங்க்ஸ் உங்க வேலை டைம்ல எனக்கு வந்து ஹெல்ப் பண்ணதுக்கு”

அவரோடு கைகுலுக்கியவனை பார்த்து அந்த மனிதரால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பல ப்ராஜெக்ட் சார்பாக அவனுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்த போதும் சரி, இப்பொழுதும் சரி அவனது அணுகுமுறை இதுவரை அவர் வேலை செய்த பல அலுவலகங்களை விட மாறுபட்டிருக்கும்.

சாதாரண தொழிலாளரிடம் முதல் மேல் தட்டு தொழிலாளர்கள் என அத்தனை மனிதர்களிடமும் மரியாதையாக வார்த்தை விடாமல் முடிந்த மட்டும் தன்னுடைய எச்சரிக்கையையும் கூட அழுத்தமாக வரம்பு மீறாமல் எச்சரிக்கை கூறி கடந்துவிடுபவன் மேல் அத்தனை பேருக்கும் மரியாதை அவன் மேல் சற்று அதிகம்.

“நைஸ் ஒர்கிங் வித் யூ சார்” என்றவர் பாரமான மனதோடு விலகினார்.

“கையோட வால்ட்ஸ் பாஸ்ஒர்ட ச்சேஞ் பண்ணிடலாம் ஜெயன்” தன்னுடைய அறையை விட்டு அந்த வேலையையும் கூறியவன் மொத்த இண்டஸ்ட்ரியையும் பார்வையிட்டு எங்கெங்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்ற நீண்ட பட்டியலை கொடுத்தவன் அடுத்த ஒரு வருடம் தேவையான அத்தனை ப்ராஜெக்ட் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பை வால்டில் வைத்து அதன் கடவுசொல்லையும் மாற்றி தந்தைக்கு அந்த தகவல்களையும் அனுப்பி வைத்துவிட்டான்.

இறுதியாக தன்னுடைய அறைக்குள் வந்தவன் ஒரு பெரிய அட்டைப்பெட்டியுள் பல கோப்புகளை அடுக்கி ஜெயன் கையில் கொடுக்க அதை எல்லாம் கசந்த புன்னகையுடன் வாங்கி வைத்துக்கொண்டான் அவன். அடுத்து தன்னுடைய சில பொருட்களை ஒரு அட்டை பெட்டியில் உதய் அடுக்க அவனுக்கு எதுவும் பேசாமல் உதவி செய்துகொண்டிருந்தான் ஜெயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!