சிறைச்சாலையை விட்டு வெளியில் வந்த ஈஸ்வரன் முகம் எதையோ சாதித்த உணர்வில் திளைத்திருந்தது. தன்னுடைய பி.எ-வை பார்த்தவர் கை காட்டி வாகனத்தைத் திருப்பி வரக் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஜம்பமாக ஏறி முன்னிருக்கையில் அமர்ந்தார்.
வாகனம் மெதுவாகச் செல்ல, “ஏன்யா அவன் எவ்ளோ பெரிய ஆளு, மயிறு, மட்டுனு அந்த சீன் குடுத்த நீ? இப்போ என்னையா ஒரே பிளான்ல பொட்டுனு போய்ட்டான்” ஏளனமாகச் சிரித்தவர் அவன் தோளில் விளையாட்டாக அடித்தார்.
‘தரித்திரியம் புடிச்சவனே நீ சாகுறதும் இல்லாம என்னையும் கூடயே சேந்து குழில தள்ளு. மூடிட்டு வாடா’ மனதில் தான் நினைக்க முடிந்தது பி.எ-வால். வாயை விட்டு ஏதாவது பேசினால் இந்த கிழவனிடம் யார் அடி வாங்குவது. சிரித்துச் சமாளித்தான் அவன்.
“ம்ம்ம் அப்றம் என்ன சரியா மூணாவது நாள் என்ன வெளிய எடுத்திருக்க… குடும்பமே ஒரே கூப்பாடு போட்ருப்பானுகளே… பாக்க கண் கோடி வேணும். கருமாதி இன்னைக்கா?”
“சார்…” ஈஸ்வரனுக்குப் பதில் கூற முடியாமல் அமைதியாய் இழுத்தான் அவன் பி.எ.
“சும்மா சொல்லுயா… எதுக்கு இந்த பதட்டம்? என் மாமன் எப்டியும் இன்னும் நொந்து மூலைல போய் சுருண்டுருவான். அவன் தம்பிய ரெண்டு தட்டு தட்டிவிட்டா அடக்கிடலாம். என் மாப்பிள்ளை நான் ‘ம்ம்’ சொன்னா யோசிக்காம அப்டியே செஞ்சிடுவான்.
ஹரியை விட்டு தள்ளு, ஆதவன் உதய் இல்லனா வர மாட்டான். அந்த ஆதியைத் தான் என்ன பண்ணாலும் கொஞ்சம் கஷ்டம் பரவால்ல, கைய கால ஒடச்சு போட்டுடலாம்”
அத்தனையையும் இந்த மூன்று நாட்களில் யோசித்து வைத்தவர் போல் மனதிலிருந்த திட்டத்தை எல்லாம் வெளியில் உடைத்தார். வலது காதின் அருகே ஏதோ உரச, தன்னுடைய காதை துடைத்து அமைதியாய் இருக்க மீண்டும் அந்த காதில் உரசியது ஏதோ ஒன்று,
“தோ இங்க தான் இருக்கு ஒடச்சு காட்டு பாப்போம்” திடீரென பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்பி ஈஸ்வரன் பார்க்க இன்னும் இன்னும் அதிர்ச்சி.
தன்னுடைய ஆட்கள் தான் பின்னால் அமைத்திருக்கின்றனர் என்று எண்ணிய மனிதருக்கு, மூவர் இருக்கையில் நால்வர் அமர்ந்திருந்த ஆதி, கெளதம், தமிழ், ஆதவன் தான் தெரிந்தனர்.
‘என்ன என்ன பேசிவிட்டோம், நீயாவது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமேடா’ என்று தன்னுடைய பி.எ முகத்தைக் கோரமாய் பார்த்து வைத்தார்.
அவனோ உன்னைப் பார்த்தால் தானே பிரச்சனை என்று தெரியாமலும் அவர் பக்கம் திரும்பவில்லை. மீண்டும் ஆதி பக்கம் திரும்பும் பொழுது அவனின் ஷூ அவர் கன்னத்திலே பட உஷ்ணம் ஏறியது பன்மடங்கு.
“கால் எடு டா” என்றார் ஈஸ்வரன் ஆணையாக. அவனோ சிறிதும் அலட்டாமல் காலை நன்றாக ஆட்ட அவன் கால் மீண்டும் தன் முகத்தில் படாமல் இருக்கச் சற்று பின்னால் தள்ளி அமர்ந்தார்.
“டேய் வண்டிய நிறுத்து” வாகனம் நிற்கவில்லை.
மாறாக வேகமெடுத்தது நேஷனல் ஹைவேயில் அந்த வெள்ளி நிற ஆடி Q5. அதுவே தன்னுடைய பி.எ தன்னை சிறையில் வந்து சந்திக்காத பொழுது என்ன நடந்திருக்கும் என்று உறுதி கூறியது.
“ஏன்டா மாமா ரெண்டே வாரத்துல எளச்ச மாதிரி இல்ல?” – தமிழ்
“பின்ன அங்க போய் பத்து பாத்திரம் எல்லாம் தேச்சா…” கெளதம் இழுத்தான்.
“பாத்தரம் மட்டுமா கக்கூஸ் கூட கழுவனுமாம்… கழுவிருப்பாரு கழுவிருப்பாரு” – ஆதி
“கக்கூஸ் கழுவுற மாதிரியா இருக்காரு நம்ம மாமா? அவரு சல்மான் கான் மறு பிறவிடா… முகத்தை பாரு அந்த கெத்து உனக்கு வருமா?” – ஆதவன்
“அதுவும் சரி தான் கக்கூஸ் கழுவுறது கூட ஒரு தொழில் தானே… என்ன மாம்ஸ்?” துப்பாக்கி மட்டும் கையிலிருந்தால் நால்வரையும் நெற்றியிலே சுட்டு தள்ளும் ஆவேசம் அந்த மனிதருக்கு. அடக்கினார் அந்த நொடியில்.
“பேர் புகழ் பணம் பாதுகாப்புன்னு இருந்தவனையே ஒரே நாள்ல மண்ணுக்குள்ளே அனுப்புனேன். நீங்க எல்லாம் பொடி பசங்க… ஜாக்கிரதை”
நீ கூவிக்கொண்டே இரு என்று கைப்பேசியை எடுத்து ஹரியின் எண்ணிற்கு வீடியோ காலில் அழைத்தவன் ஈஸ்வரன் பக்கம் திரையை நீட்டினான். கட்டிலில் படுத்திருந்த உதய்யின் வலது பக்கம் அமர்ந்து உறங்கியவனின் தலையைக் கண்ணீர்த் துளிகளுடன் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தார் நளினி. அவனின் இடது பக்கம் ஏக்கத்தோடு யாழினியும் அருகில் சகோதரிகளும் சகோதரனின் ஒரு பார்வைக்காக ஏங்கிக்கொண்டிருந்தனர்.
“மெயின் பிச்சர காமிடா” ஆதி கூறவும் ஹரி திரையைத் திருப்பினான். உதய்யின் தந்தை, சித்தப்பா, விஷ்ணு என அத்தனை மனிதர்களும் அங்குச் சங்கமித்திருந்தனர்.
அதிர்ந்து முழித்த ஈஸ்வரனின் பார்வையே இது புடிக்கவில்லை என்று கூற, இணைப்பை துண்டித்தான் ஆதி.
“இவன்…” இழுத்தார் ஈஸ்வரன்.
“உயிரோட பத்தரமா அவன் குடும்பம் கைக்குள்ள இருக்கான்” – ஆதி
அவர் கையில் ஒரு பத்தரத்தையும் ஒரு பத்திரிகையையும் கொடுத்தான். இரண்டுமே அவர் சிறிதும் கனவில் கூட யோசிக்காதவை.
“மாம்ஸ் நீ இனி காலம் எல்லாமே சிங்கள் சிங்கமா இருக்கலாம். பொண்ணு இப்டி பட்ட ஒரு கேடு கெட்ட அப்பன் வேணாம்-னு லவ் பண்ண பையன கல்யாணம் பண்ணி சந்தோசமா போக போறா… பொண்டாட்டி, ஒரு கம்னாட்டி, கஸ்மாலத்த திரும்பியும் பாக்க மாட்டேன் னு ஒரே அடம்” – தமிழ்
“நாங்களும் எவ்வளவோ கெஞ்சி பாத்தோம் மாமோய் ஆனா மனம் கல்லா மாறிடுச்சு போல… முடிஞ்சா ஜெயில்ல கெடந்தே சாவட்டும்னு டிவோர்ஸ் கேக்குது…” – ஆதவன் பொய் பரிதாபம் காட்டினான் அவர் முன்னால்.
“அவ்ளோ சிகரம் நீ செத்தா எங்களுக்கு என்ன வேலை? நாங்க எதுக்கு இருக்கோமாம்?” குரலில் கேலியும் கண்களில் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் வெறியோடு பேசிய ஆதியின் முகம் முதல் முறை திகிலை பரவவிட்டது ஈஸ்வரன் ஆழ் மனதில்.
“அதான் பதமா பாத்து செஞ்சு வீட்டுக்கு அனுப்புறோம்னு சொல்லி உன்ன வெளிய எடுத்தோம்” – கெளதம்
அவர் கையில் ஒரு பேனாவை கொடுக்க கைகள் வாங்க மறுத்து சிலையாகி போனது.
“அப்றம் என்ன இனி செட்அப் கூட ஜாலியா சுத்தலாம்” – தமிழ்
“உனக்கு அந்த கதையே தெரியாதா தமிழு? அந்த அம்மா கிட்ட இந்த ஆளுக்கு எதுரா சாட்சி கேக்க போயிருந்தோம். ‘உங்களுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்’-னு ஜெயனகிட்ட வந்து ஒரசிட்டு நிக்கிது”
அன்று நிகழ்ந்த நினைவில் ஆதி வாய் விட்டு நண்பனின் தோளில் சாய்ந்து சிரிக்க, நண்பர்களும் அவனுடன் இணைந்தனர் சிரிப்பில்.
“அவன் மெரண்டுட்டு ஓடுறான். பாவம் மாமா மேட்டர்ல ரொம்ப சுமார் போல, மாமி இப்டி தாவுது” மீண்டும் ஆதி வயிற்று வலி ஏற்படும் அளவிற்கு ஈஸ்வரனை பார்த்து சிரிக்க அவன் சட்டை காலரை பிடித்து முகம் சிவக்க முறைத்தார்.
ஆனால் அவனோ குதூகலத்தில் அல்லவா இருந்தான் சாதாரணமாக அவர் கையை சட்டையிலிருந்து எடுத்தான்.
“யோவ் மாமா நீ என்ன பண்ணாலும் உருப்படியா பண்ண மாட்டியா? இப்போ பாரு எவன் எந்திரிக்கவே மாட்டான்னு சந்தோசமா துள்ளிட்டு இருந்த, அவனே உன் முன்னாடி நிக்க போறான்”
“அவன் வர்ற வரைக்கும் நாங்க உனக்கு கம்பெனி தர்றோம்” தமிழ் தொடங்கியதை ஆதவன் முடித்து வைத்தான் மனதில் ஏதோ நினைத்தவனாய்.
ஆதி அமைதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டான். “யோவ் என்னயா நடக்குது இங்க? இவனுக கார்ல தான் இருக்கானுங்கனு ஒரு வார்த்தை சொல்லாம வர்ற? கட்சி மாறிட்டியா?” வாகனத்தை சிரத்தையாக செலுத்திக் கொண்டிருந்தவனை பார்த்து கோவமாக கேள்வி எழுப்பினார்.
“உன் கட்சில இருந்தா தானேயா மாறுவான்?”
ஆதவனின் கேள்வியில் அதிர்ச்சி கூடியது ஈஸ்வரனுக்கு, “உன் மேல சந்தேகம் வந்த நாள்ல நானே அவனை உனக்கு வேலைக்கு சேத்து விட்டேன். என்ன நீ யாரையும் நம்பாம நீயா எல்லாத்தையும் செஞ்சதால அவனால பெருசா எதுவும் பண்ண முடியல”
“உன்ன எவ்ளோ நம்புனேன்… ஏமாத்திட்டியேடா பாவி” அவன் மேல் காய்ந்தவருக்கு பதில் இப்பொழுதும் வரவில்லை.
“ஏமாத்துறத பத்தி நீ பேசலாமாடா சொட்ட” ஆத்திரத்தில் நாக்கை மடித்து அவர் தலையிலேயே ஒன்று வைத்தான் ஆதி.
“டேய் மரியாதை…” எச்சரித்தவர் கன்னத்தில் ஒரு அடி வைத்து,
“உனக்கெல்லாம் என்னடா மரியாதை மானம் கெட்ட பயலே” – தமிழ்
மொத்தமாய் தன்னை வெள்ளம் சூழ்ந்திருந்த பொழுதும் கோவம் மட்டுமே அந்த மனிதரின் ஆயுதமாக இருந்தது, “நான் யாருனு தெரியாம கை வச்சு நீயே உன் சமாதிக்கு வழி…”
மறு கன்னத்தில் செல்லமாக தட்டிய கெளதம் அவன் கன்னத்தை பற்றி கிள்ளி, “நீ பெரிய பிஸ்கோத்தாவே இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்ல மாம்சு” கொஞ்சி மிரட்டினான்.
அவன் பற்றிய அழுத்தத்தில் வெண்ணை வைத்து செய்திருந்த அவரது கன்னம் வலியில் சிவந்துவிட மீண்டும் அதை அழுத்தி அடித்தான், “நீ என்ன அமுல் பேபியா இப்டி கொழு மொழு-னு ஒடம்ப வச்சிருக்க?” என்றான்.
“ஓசில தின்னு வளந்தா…” – தமிழ்
“பாவத்துல நாளைக்கு நரகத்துக்கு போனா நம்ம கக்கா எல்லாம் சாப்பிடணும், அதுக்கு இப்ப கொஞ்சம் பாலும் பலமும் நெய்ல கொலச்சு சாப்பிடணும்னு ஆசை இருக்கும். விடுங்கடா” சிறிது ஆன்மிக புத்தகங்களின் அனுபவத்தால் பேசினான் ஆதி.
நால்வரும் மாறி மாறி அவரை வெறுப்பேற்றிக்கொண்டிருக்க அமைதியாக வந்த வாகனம் ஒரு கிளை பாதையில் பிரிந்து காட்டுவழியினுள் பல மீட்டர் சென்று தனித்திருந்த ஒரு சிறிய குடில் முன்னால் வண்டி நின்றது. மொத்த இடமும் வறண்ட காடு தான்…
சுற்றிலும் மனித நடமாட்டம் கூட இல்லை. வாகனத்தில் இருந்து இறங்கிய நண்பர்கள் நால்வரும் சோம்பல் முறித்து உள்ளே செல்ல, அங்கிருந்து உதய்யின் ஆட்கள் சிலர் வெளியில் வர, ஈஸ்வரனுக்கு மனதில் ஏதோ கௌரி கத்தியது பயத்தில். இறுதியாக ஜெயன் வர, ஈஸ்வரன் மேல் அவன் கண்கள் பதிந்த வீதத்தில் கோவம் ஏறி அவனிடம் கோவத்தை காட்டினார்,
“என்னடா முறைக்கிற? நாய குளிப்பாட்டி நடு வீட்டுல அந்த பரதேசி வச்சான் பாரு…” அடுத்த வார்த்தை தொண்டையில் அடைத்தது. அவருடைய கழுத்தை பற்றி வாகனத்தில் அடித்து நிறுத்தினான் ஜெயன்.
“என்ன பேசிட்டே போற? சங்க அறுத்து போட்டுடுவேன். அவரை பத்தி பேசவே நீ தகுதியிலாதவன்” உஷ்ணமாய் அவன் உறும பயத்தில் மொத்தமும் நடுங்கி போனார் ஈஸ்வரன்.
“விடுடா ஜெயன்… அவனை உள்ள கூட்டிட்டு போ…” ஆதியின் பேச்சை கேட்டு ஈஸ்வரன் கழுத்தை பிடித்தே குடில் உள்ளே தள்ள சுவற்றில் முட்டி கீழே விழுந்தார்.
இனி தன்னுடைய வாழ்க்கையில் அவமானமும் வலியும் மட்டுமே வியாபித்திருக்கும் என்ற எண்ணம் அப்பொழுதே வந்துவிட்டது. மனதிலிருந்த பயத்தை வெளியில் காட்டவில்லை. அடுத்த சில நிமிடங்களில் உள்ளே நுழைந்த உதய்யின் ஆட்கள் குண்டுக்கட்டாக ஈஸ்வரனை தூக்கி ஒரு அறையினுள் அடைத்து விட்டனர். மொத்தமும் இருட்டாக இருந்த அறையில் மனதை உடைக்கும் அமைதி. சுற்றிலும் ஏதேனும் பற்றுக்கோளுக்கு ஏதேனும் உள்ளதா என்று தேடியவர் கைகளுக்கு சுவற்றை தவிர எதுவும் இல்லை.
“ஜெயன் லைட் ஆன் பண்ணு… ஆதி… ஆதவன்” ஒவ்வொருவரையும் அழைத்தவர் காலுக்கடியில் ஏதோ நகர்வது போல் தெரிய எலியோ என்ற ஐயம் வர நிற்கவே பயமாக இருந்தது.
“எங்கடா கூட்டிட்டு வந்துருக்கீங்க? என்ன என்னமோ ஓடுது…” காலை உணவை கூட சிறைச்சாலையில் எடுத்துக்கொள்ளவில்லை வெளியில் வரும் ஆர்வத்தில்.
அது வேறு உணவிற்கு பஞ்சமே வைக்காத உடலுக்கு மயக்கத்தை தர பயத்தோடு தான் கால்களும் தடுமாறியது. கெஞ்சினார் ஒவ்வொருவரின் பெயரையும் அழைத்து, பதில் தான் வரவில்லை.
“நான் பெயில்ல தான் வெளிய வந்துருக்கேன்… தெரியும்ல? ஜெயில் வெளிய கேமரால என்ன தேடுனா நீங்க செத்திங்க…”
“ஆதவன்… டேய் நானும் உன் மாமா மாதிரி தானே? செஞ்ச தப்புக்கு உதய் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறேன்… வெளிய விடுடா…” சுவற்றில் தட்டினார் கதவை தேடி… நேரம் சென்றுகொண்டே இருக்க பசி மயக்கத்தில் மயங்கினார் தரையில்.
சூரியனின் வெளிச்சத்தை ஒத்த ஒளி கண்களை கூச செய்ய தன் மீது மீண்டும் ஏதோ ஊர்வது போல் இருந்தவர் கண்களை நன்றாக திறந்து பார்த்தவர் அரண்டு போனார்.
காலுக்கடியில் ஒரு நாகம் வட்டமிட்டுக்கொண்டிருக்க, ஒரு பச்சை நாகம் தன் மேலே ஊர்ந்து கடந்து சென்றது. ‘பொத்’ சத்தம் கேட்க சந்தம் வந்த திசையில் பார்த்தவருக்கு சிகப்பு நிற நாகம் ஒன்று கீழே விழுந்தது தெரிய, கண்ணில் பட்ட இரண்டு கதவில் ஒன்றை ஓங்கி அடித்தார்…
“யாரவது இருக்கீங்களா? ஆதி… ஜெயன்… பயமா இருக்கு பா… காப்பாத்துங்க பா” நாகங்கள் அதன் வாக்கில் தன்னுடைய வேலையை செய்துகொண்டிருந்தது.
மீண்டும் காலில் ஏதோ உரச கீழே குனிந்து பார்த்தவர் சுவற்றோடு ஒன்றி போனார். நெளிக்க முடியாமல் நீண்டு படுத்திருந்தது அந்த பெரிய சாம்பல் மலை பாம்பு. நிச்சயம் உணவை முக்கால்வாசி செரித்திருந்தது அதன் வடிவிலே தெரிந்தது.
உடல் படுத்திருந்தாலும் வெளிச்சத்திலும் பளபளக்கும் கண்கள் தன்னை முழுமையாக நோட்டமிடுவது தெரிந்து. இன்னும் சில மணி நேரங்களில் தான் தான் இரையாக போகின்றோம் என்பது தெரியாது என்ன செய்து இந்த இடதிர்லிருந்து தப்பிப்பது என்று தெரியவில்லை. முற்றிலும் சுவர் மட்டுமே இருக்க எப்படி தான் தப்பிப்பது? உடல் மொத்தமும் பயத்தில் வியர்த்தது… தட்டினார் கதவை, தட்டிக்கொண்டே இருந்தார்…
அவருடைய அலறல் சத்தமும், பயத்தில் வெளிறி கன்றி கிடந்த முகத்தையும் கேமரா மூலம் சாவகாசமாக கையில் தேனீர் கோப்பையோடு பார்த்துக்கொண்டிருந்தனர் நண்பர்களும், ஜெயனின் ஆட்களும்.
“குட்டி அனுப்பு ஜெயன்” ஆதி சொல் கேட்டு ஒரு சிறிய துவாரத்தின் வழியாக பத்து பதினைந்து குட்டி பாம்புகளை அனுப்பிவிட்டான் ஜெயன்.
ஏற்கனவே பயத்தில் உறைந்திருந்தவர் இதயத்தை இந்த சுறுசுறுப்பான பாம்புகள் அழவே வைத்தது…. அந்த சிறிய பாம்புகளோ மனித வாடையில் விறுவிறுவென அவரது மேல் ஏற துவங்கியது…
“டேய் கடிச்சிட போகுது… அஞ்சே நிமிசத்துல செத்துடுவான்” – ஆதி
“இதுல எதுக்கும் விஷம் இல்ல… பல்லு புடுங்குன பாம்புக தான்” ஆதவன் கூறினான் விஷம சிரிப்போடு.
அங்கு நாகங்கள் மொத்தமும் தன்னுடைய உடலில் ஏற ஈஸ்வரனின் அலறலும், அழுகையும், உளறலும் நண்பர்களுக்கு இதமாய் மாறி போனது… அதோடு நிற்காமல் பயத்தில் உடலில் இருந்த சட்டையை ஒவ்வொன்றாக பாம்புகளோடு இணைந்து தூக்கி எரித்தவர் எந்த பாம்பின் மீதும் கால் படுகிறதா இல்லையா என்றும் பாராமல் மற்றொரு கதவு இருந்த பக்கம் ஓடி சென்று தட்டினார்.
அவர் நிற்க அந்த நாகங்களுக்கு வசதியாகி போனது, சிறு நாகங்கள் உடையை தாண்டி உள்ளே செல்ல, பச்சை நாகம் ஒன்று அவர் கால்களை பின்னி உடலில் மேலும் முன்னேற, பயத்தில் தைரியம் பெற்றவராக பச்சை நாகத்தை தூக்கி எறிந்தார்…. அதற்குள் ஆடைக்குள் நுளைந்த சிறு நாகங்கள் சாதாரணமாக ஊர்ந்தாலும் தன்னுடைய நிலையில் அவை அனைத்தும் தன்னை கொத்துவது போலவே பிரமை இருந்தது.
எஞ்சிய கால்ச்சட்டையையும் அவிழித்து போட, “அடேய்… அந்த கதவை அன்லாக் பண்ணி விடுடா… இவன் அம்மணமா இருக்குறத பாக்க முடியாது” முகத்தை மூடி கெளதம் காத்த சிரிப்போடு ஜெயன் அந்த கதவை இங்கிருந்தே திறந்து விட்டான்.