“நீ பொழைச்சிக்குவ டா”, என்று சரவணன் சார் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரை வெளியே இருந்து பியூன் அழைக்க அங்கே சென்று விட்டார்.
“வாய் இல்லைன்னா உன்னை நாய் கூட மதிக்காது மச்சி”, என்று மதனை அவன் அருகில் அமர்ந்திருந்த தீபக் கலாய்த்தான்.
“சும்மா இரு டா, நானே மாட்டிக்க போறேன்னு பதட்டத்துல இருக்கேன்? ரெப் ஆனா என்னோட படிப்பு என்ன ஆகுறது?”, என்று கிசுகிசுத்தான் மதன்.
“அவ்வளவு நல்லவனா டா நீ? படிக்கிற முகரையைப் பாரு”
“ஏண்டா என் மூஞ்சுக்கு என்ன குறைச்சல்? நாங்க எல்லாம் படிக்க மாட்டோமா? என்னோட வேல்யூ உனக்கு தெரியலை டா. எத்தனை பொண்ணுங்க எனக்கு லவ் லட்டர் கொடுத்துருக்காங்க தெரியுமா?”, என்று மதன் கேட்கும் போது “அங்கே என்ன குசுகுசு?”, என்று கேட்டார் சரவணன்.
“அவன் அழகை புகழ்ந்துட்டு இருக்கான் சார்”, என்று தீபக் மெல்லமாக குரல் கொடுக்க மற்றவர்களும் சிரித்தார்கள்.
தீபக் இடுப்பில் கிள்ளி வைத்த மதன் “அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்”, என்றான்.
“சரி, நீ என்னோட சப்ஜெக்ட்ல புல் மார்க் எடுக்க உன்னை வாழ்த்துறேன். அதனால உனக்கு ரெப் பதவி வேண்டாம். ஆனா உனக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுக்க போறேன். நீ தான் கிளாஸ் ரெப்பை தேர்ந்தெடுக்கணும்? யாரையாவது சொல்லு. ஆனா அவங்களை செலக்ட் பண்ண காரணத்தையும் சொல்லணும்”, என்றதும் கண்கள் மின்ன தீபக்கை பார்த்தான் மதன்.
அவன் பார்வை தன்னை நோக்கி திரும்பியதும் “டேய், ஏண்டா என்னைப் பாக்குற? அங்குட்டு திரும்புடா. பொண்ணுங்க யாரையாவது கோத்து விடு மச்சி”, என்று அதிர்ச்சியாக அவனிடம் முணுமுணுத்தான் தீபக்.
“சார், தீபக் ரெப்பா இருக்கணும்னு நினைக்கிறேன் சார். அவனுக்கு படிக்கிற திறமை உண்டு. அவன் அஞ்சு சப்ஜெக்ட்ல செண்டம் சார். அவனால தான் எல்லா வேலையும் செய்ய முடியும், அதே நேரம் படிக்கவும் முடியும்”, என்று சொன்னதும் அவனை கொலை வெறியோடு முறைத்தான் தீபக்.
“தீபக் யாரு? எந்திரிப்பா”, என்றதும் எழுந்து நின்றான் தீபக்.
“நீயே ரெப்பா இரு. வேற யாருக்காவது ரெப்பா இருக்க ஆசை இருக்கா?”, என்று கேட்டார் சரவணன்.
“இல்லை சார்”, என்று கோரஸ் வந்ததும் “ஓகே தீபக் தான் இந்த கிளாசோட ரெப். நான் கிளாஸ்க்கு வரதுக்கு முன்னாடி போர்டு கிளீனா இருக்கான்னு பாத்துக்கோ. அப்புறம் சாக்பீஸ், டஸ்டர் எல்லாம் எடுத்து வச்சிறனும். அடுத்த கிளாஸ்ல பாக்கலாம்”, என்று அறிவித்தார்.
அவர் சென்றதும் “வாழ்த்துக்கள் மச்சி”, என்று அனைவரும் வாழ்த்த “அடேய், ரெப்னா பெரிய பதவியா டா? போர்டு துடைக்கவும் சாக்பீஸ் எடுத்து வைக்கவும் தான் டா. என்னமோ எனக்கு அவார்ட் கொடுக்குற மாதிரி வாழ்த்து சொல்றீங்க? எல்லாம் இவனால தான். எதுக்கு டா என்னை கோத்து விட்ட”, என்று மதனைப் பார்த்து கடுப்பாக கேட்டான் தீபக்.
“நான் பீதில நின்னுட்டு இருக்கும் போது நீ என்னை எப்படி
கலாய்ச்ச? அதான் உன்னை போட்டுக் கொடுத்தேன்? எப்படி ஏன் திறமை? எனிவே வாழ்த்துக்கள் மச்சி. உன்னை நம்பி பெரிய பருப்பை…. சி சி… பெரிய பொறுப்பைக் கொடுத்துருக்காங்க. நீ தான் செஞ்சு முடிக்கணும். நம்ம புது ரெப்புக்கு எல்லாரும் ஓ போடுங்க”, என்று மதன் குரல் கொடுக்க சுற்றி இருந்தவர்கள் ஓ போட மாணவிகளின் கவனம் கூட இவர்கள் பக்கம் திரும்பியது.
“கம்முன்னு இருங்க டா. எல்லாரும் பாக்குறாங்க. கூட்டி பெருக்குற வேலைக்கு ஓ ஒண்ணு தான் குறைச்சல்?”
“விடு மச்சி, விடு மச்சி இதெல்லாம் ஒரு கெத்து தானே டா?”, என்று கேட்டான் மதன்.
“ஏன் அந்த கெத்து உனக்கு வந்தா என்னவாம்? நான் தான் உனக்கு கிடைச்சேனா?”, என்று கேட்டான் தீபக்.
“மச்சான் விடு டா. நீ எங்க போனாலும் உனக்கு துணைக்கு நானும் வருவேன் டா. நீ செய்ய மறந்த வேலையைக் கூட நான் செய்வேன் டா”, என்று மதன் சொல்லும் வரை தீபக் அவனை திட்டிக் கொண்டே இருந்தான்.
அவன் குடைச்சலில் கடுப்பான மதன் “பேசாம நானே ரெப்பா இருந்துருக்கலாமோ?”, என்று நினைத்தான். அந்த அளவுக்கு இருந்த்து தீபக்கின் டார்ச்சல்.
அடுத்த இரண்டு பீரியடும் சாதாரணமாக சென்றது. மதியம் உணவு இடைவேளை நேரத்தில் நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் என எட்டு சீனியர்ஸ் இவர்கள் கிளாசுக்கு வந்தார்கள்.
“ஹாய் ஜூனியர்ஸ், நாங்க செகண்ட் இயர். நீங்க சாப்பிடுற நேரத்தை நாங்க வேஸ்ட் பண்ண விரும்பலை. ஒரு விஷயம் சொல்லிட்டு போயிறோம்”, என்று ஆரம்பித்தான் வினித்.
அனைவரும் இவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்று ஆர்வமாக அவர்களை கவனித்தார்கள்.
“இந்த கிளாஸ் ரெப் யாரு?”, என்று கேட்டான் சீனியர் தீனா.
தீபக் எழுந்து நின்று “நான் தான் அண்ணா”, என்றான்.
“உன் பேர் என்ன தம்பி?”
“தீபக்”
“வெளிய வாப்பா தம்பி. அப்புறம், இன்னும் நாலஞ்சு பேர் வேணுமே? வாலண்டியர்ஸ் யாராவது வறீங்களா?”, என்று கேட்டான் வினித்.
எதற்கு என்று தெரியாமல் யாரும் முன் வரவில்லை. “டேய் எழுந்து வாங்க டா”, என்று தன்னுடைய நான்கு நண்பர்களை அழைத்தான்.
அவர்களோ “யாருப்பா நீ?”, என்ற ரியாக்சனை கொடுத்தார்கள்.
“அடப்பாவி”, என்று எண்ணி அவர்களை முறைத்து பார்த்தான் தீபக். அதை அவர்கள் கண்டு கொண்டால் தானே?
“என்ன டா எவனும் வர மாட்டுக்கீங்க? அந்த அளவுக்கு படிப்சா? சரி இந்த ஒரு வாரத்துல யார் நம்ம ஸ்டாப் கிட்ட பணிஷ்மெண்ட் வாங்கிருக்கா?”, என்று கேட்டான் வினித்.
அன்று வெளியே நின்றவர்கள் எல்லாம் எழுந்து நின்றார்கள். “மாட்டுனீங்களா?”, என்று எண்ணி நக்கலாக அவர்களைப் பார்த்தான் தீபக். நந்தினியும் காயத்ரியும் கூட எழுந்து நின்றார்கள்.
“சூப்பர் டா, இதெல்லாம் தனித் திறமை. நின்னுட்டு இருக்குற எல்லாரும் நாளைக்கு காலைல நம்ம டிபார்ட்மெண்ட் ஸ்டாப் ரூம் வந்துருங்க”, என்று வினித் சொன்னதும் “மச்சி பொண்ணுங்க ரெண்டு பேர் தான் டா நிக்குறாங்க. இன்னும் ரெண்டு பேராவது வேணும்”, என்றான் முத்து என்ற சீனியர்.
“அப்படியா? ஏமா பொண்ணுங்களா, ஒரு ரெண்டு பேர் எந்திரிங்களேன். யாருக்கு எல்லாம் ரங்கோலி கோலம் போட தெரியும்?”, என்று கேட்டதும் அஞ்சலி, சாரோஜினி இருவரும் எழுந்து வந்தார்கள்.
“சூப்பர் ஒன்பது பேரும் காலைல வந்துருங்க. உங்க எல்லாருக்கும் நாளைக்கு முதல் ரெண்டு பீரியட் ஓடி. நம்ம எல்லாரும் பிரேஷர்ஸ் டே பத்தி டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருக்கு. அப்புறம் உங்க கிட்ட எல்லாம் நிறைய பேசணும். வேற எப்பவாது டைம் கிடைக்கிறப்ப பேசலாம். ஓகே வா?”, என்று தீனா கேட்க “ஓகே சீனியர்”, என்று அனைவரும் கத்தினார்கள்.
“ஓகே பாய்”, என்று சொன்ன தீனா தீபக் தோள் மீது கை போட்டு வெளியே அழைத்து சென்றான்.
“தீபக்”
“சொல்லுங்கண்ணா”
“எழுந்து நின்ன எல்லாரையும் கூட்டிட்டு வந்துரு ஓகே வா?”
“சரிண்ணா, ஆனா மேம் கிட்ட இன்பார்ம் பண்ணனுமே? காலைல கவிதா மேம் அப்புறம் துரை சார் கிளாஸ் இருக்கு”
“அவ்வளவு தானே? நாங்க பெர்மிசன் வாங்குறோம். எடுக்கும் ரெப்பா நீ காலைல அவங்களுக்கு இன்பார்ம் பன்னிரு. பிரசர்ஸ் டே முடிஞ்ச அப்புறம் ஓடி லாட்டர் கொடுத்துறலாம். பாய் டா”, என்று வினித் சொன்னதும் அனைவரும் சென்று விட்டார்கள்.
தீபக் மட்டும் உள்ளே வந்தான். உள்ளே வந்து அவன் ஏதாவது சொல்லுவான் என்று எதிர் பார்க்க அவனோ அவனுடைய இடத்தில் சென்று அமர்ந்தான்.
அவனுடைய நண்பர்கள் அவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். பின் அனைவரும் அவர்களுடைய உணவை சாப்பிட ஆரம்பிக்கும் போது எதற்கோ தீபக் பெண்கள் பக்கம் திரும்பினான்.
அப்போது காயத்ரி அவனையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. அவன் அப்படி பார்ப்பான் என்று தெரியாமல் அவள் தடுமாற அவள் முகத்தை பார்த்து என்ன நினைத்தானோ அவளைப் பார்த்து கண்களை சிமிட்டி விட்டான்.
அவன் செய்கையில் விதிர்த்து போய் தலை குணிந்தாள் காயத்ரி. அவனிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை அவள் எதிர் பார்க்கவே இல்லை.
“ராஸ்கல், என்ன காரியம் செஞ்சிட்டான்? இவன் என்னைப் பத்தி என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்? சே இவன் பக்கம் இனி திரும்பவே கூடாது”, என்று எண்ணிக் கொண்டு உணவை அளைந்து கொண்டிருந்தாள்.
“ஏய் காயு என்ன சாப்பிடாம யோசிச்சிட்டு இருக்க? சீக்கிரம் சாப்பிடு. எனக்கு கை காஞ்சு போயிரும் போல?”, என்று நந்தினி சொன்னதும் அவசர அவசரமாக உணவை உள்ளே தள்ளினாள். ‘
அதன் பின் வெளியே சென்று கை கழுவி அமர்ந்த பின்னரும் கூட அவன் இருக்கும் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை. ஆனால் அவள் மனம் முழுவதும் ஒரே குழப்பம் தான்.
“இவன் ஏன் இப்படி எல்லாம் பண்ணுறான்? முதல் நாள் அவனா வந்தான், என் பேர் எல்லாம் சொல்லி குழப்பினான். அப்புறம் கேண்டீன்ல வச்சு அவனா வந்து சீனியர்ஸ் கிட்ட பிரச்சனை பண்ணுனான். அப்புறம் என்கிட்ட பேச பிடிக்காம நந்தினி கிட்ட பேசினான். இப்ப என்னைப் பாத்து கண்ணடிக்கான். இவன் என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்? ஐயோ இவனை நினைச்சாலே குழப்பமா இருக்கே? பேசாம அவன் கிட்டயே கேட்டுறலாமா? ஆனா எப்படிக் கேக்க? இவன் எப்ப என்ன பண்ணுவான்னே தெரிய மாட்டிக்கே. சோடாபுட்டி பாக்க அப்பாவி மாதிரி இருந்துட்டு என்ன காரியம் எல்லாம் செய்ற? ஒரு நாள் என்கிட்ட மாட்டுவல்ல? அப்ப உனக்கு இருக்கு டா”, என்று மனதுக்குள் தீர்மானம் எடுத்தாள்.
அவள் எண்ணியது போல அடுத்த நாளே அவளிடம் சிக்கினான் தீபக்.
அன்று மாலை காலேஜ் முடிந்ததும் அனைவரும் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நந்தினியும் காயத்ரியும் கூட கிளம்பிக் கொண்டு தான் இருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் வந்தான் தீபக்.
அருகில் ஏதோ நிழல் ஆட திரும்பி பார்த்த காயத்ரி அவனைக் கண்டு திகைத்து பின் நந்தினி புறம் திரும்பியவள் “நந்து, உன்னைக் கூப்பிடுறாங்க. நீ என்னன்னு கேட்டுட்டு வா. நான் வெளிய நிக்குறேன்”, என்று சொல்லி விட்டு அவன் முகத்தைக் கூட பார்க்காமல் வெளியே சென்று விட்டாள்.
உதடுகளில் மலர இருந்த புன்னகையை மறைத்தவன் “நந்தினி”, என்று அழைத்தான்.
“கங்கிராட்ஸ் ரெப் ஆனதுக்கு”, என்று சொல்லி சிரித்தாள் நந்தினி.
“அதை விடு நந்தினி”, என்று சிரித்தவன் “நாளைக்கு ஓடிக்கு நான் போய் ஸ்டாப் கிட்ட பெர்மிசன் வாங்குனா போதும்னு சீனியர்ஸ் சொன்னாங்க? ஆனா அப்புறம் மத்தவங்க ஏன் வரலைன்னு ஸ்டாப் ஏதாவது சொல்லிரக் கூடாது. அதனால காலைல எல்லாரும் சேந்து ஸ்டாப் கிட்ட சொல்லிறலாம் ஓகே வா?”, என்றான்.
இருவரும் சிரித்த படியே பேசிக் கொண்டிருப்பதை பார்த்த காயத்ரிக்கு தீபக் மேல் எரிச்சலாக வந்தது. அவனையும், அவனுடைய செய்கைகளையும் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினாள்.
காதல் தொடரும்!!!