அத்தியாயம் 4
உன்னிடம் கரை
சேரவே துடிக்கிறது
எந்தன் காதல் அலைகள்!!!
“அக்கா நீ என்ன சொல்ற? யாரால? உன்னை யார் என்ன செஞ்சா?”, என்று ஆர்வமாக கேட்டாள் சௌமி.
“வேற யாரு? எல்லாம் அந்த லூசு தான்”, என்றாள் காயத்ரி.
“இப்படிச் சொன்னா எனக்கு எப்படி புரியும்? நீ யாரைச் சொல்ற? தெளிவா சொல்லேன்”
“அதான் முதல் நாள் ஒருத்தன் காமெடி பண்ணினானே அவனைத் தான் சொல்றேன்”
“பைல்ஸ் பத்தி பேசினான்னு சொன்னியே, அந்த சீனியரைச் சொல்றியா?”
“அவனுங்களை இல்லை டி. எங்க கிளாஸ் தீபக் இருக்கானே? அவனைத் தான் சொல்றேன்”
“அந்த அண்ணாவா? முதல் நாளே உன்னை காப்பாத்த தானே செஞ்சாங்க? அவங்க மேல கோப படுற அளவுக்கு என்ன செஞ்சாங்க?”
“என்ன செஞ்சானா?”, என்று ஆரம்பித்து இன்று கேண்டீனில் நடந்த கதையை சொன்னாள்.
“அவனுக்கு இது தேவையா டி? அவனை யார் கூப்பிட்டா? வந்தவன் பெரிய ஹீரோ மாதிரி சீனியரை அடிக்கிறான். பிரேக் டைம் முடிஞ்சதுனால அங்க அதிகம் பேர் இல்லை. இல்லைன்னா அங்க பெரிய சண்டையே வந்துருக்கும். பேச்சு பேச்சா இருக்கும் போது கை வைக்கலாமா? அதுவும் சீனியர்ஸ் மேல?”
“அக்கா நீ என்ன தான் சொன்னாலும் தப்பு உன் மேல தான்”
“என்ன டி சொல்ற?”
“பின்ன உனக்காக சப்போர்ட் பண்ணி பேச வந்தவங்களை சம்மந்தம் இல்லாம திட்டிட்டு வந்துருக்க? அது தப்பு தானே?”, என்று கேட்டாள் சௌமி.
“நீ வேற புரியாம பேசாத டி? நான் அப்ப திட்டலைன்னா அங்க கைகலப்பா ஆகிருக்கும் சௌமி. நான் கத்துனதுனால தான் அப்போதைக்கு பிரச்சனை முடிஞ்சது. ஆனாலும் பயமா தான் இருக்கு. நந்து கூட நீ சொன்ன மாதிரியே தான் சொன்னா”
“அவங்க உங்க டிபார்ட்மெண்ட் சீனியரா? இல்லை வேற டிபார்ட்மெண்ட்டாக்கா?”
“வேற தான்னு நினைக்கிறேன்”
“சரி, உன்னை கிண்டல் பண்ண வந்ததுக்கு தீபக் தான் உன்னை அவங்க கிட்ட இருந்து காப்பாத்திருக்காங்க. தீபக்கை சீனியர்ஸ் கிட்ட இருந்து காப்பாத்துறதுக்கு நீ தீபக்கை திட்டிட்டு வந்துட்ட. எல்லாம் இதெல்லாம் ஓகே தான். ஆனா ஒரு விஷயம் புரியலை”
“என்ன டி?”
“இப்ப நீ எதுக்கு கண்ணாடி முன்னாடி நின்னு ரொம்ப நேரமா பாத்துட்டு இருக்க? ஊருக்கு எங்கயாவது கிளம்பனும்னாலே ஒரு கண் மை கூட போட மாட்ட. இன்னைக்கு அந்த அளவுக்கு கண்ணாடி பாக்கணும்னு என்ன இருக்கு?”
“அதுக்கப்புறம் நடந்த கதையை நீ கேக்கலையே? லேட்டா கிளாஸ்க்கு போய் அந்த மேடம் எங்களை வெளிய நிறுத்திட்டாங்க. அது மட்டுமில்லாம ஹெச்.ஓ.டி பாக்கணும்னு வேற சொல்லிட்டாங்க. சரி மதியம் சாப்பிட்டு முடிச்சதும் எல்லாரும் ஹெச்.ஓ.டி பாக்க போகணும்னு சொல்லிருந்தோம். மதியம் லஞ்ச் பெல்லும் அடிச்சது. அப்ப இந்த தீபக் எதுக்கோ என்னைக் கூப்பிட்டான் டி. நான் என்னன்னு கேட்டா, நந்துவை கூப்பிடச் சொன்னான். சரின்னு நானும் அவளைக் கூப்பிட்டேன். பாத்தா ரெண்டு பேரையும் ஹெச்.ஓ.டி பாக்க வரச் சொல்லிருக்கான் டி. அதை அவன் என்கிட்டயே சொல்லிருக்க வேண்டியது தானே? எதுக்கு என் கிட்ட நேரடியா சொல்லாம அவளைக் கூப்பிட்டு மட்டும் சொல்லணும்?”
“இந்த குழப்பத்துக்கும் நீ கண்ணாடி பாத்ததுக்கும் என்ன சம்பந்தம்?”
“அவன் வேணும்னே என்னை இன்சல்ட் பண்ணுறான் டி. எதுக்கு அவன் என்கிட்ட கேக்கலை? அப்ப அவனுக்கு என்கிட்ட பேச பிடிக்கலைன்னு தானே அர்த்தம்? அப்ப அந்த அளவுக்கு நான் மட்டமா இருக்கேனோன்னு யோசிச்சிட்டு இருக்கேன்”
அழகின் மொத்த உருவமாய் இருக்கும் அவள் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை நினைத்த சௌமிக்கு சிரிப்பு வந்தது. கூடவே காயத்ரியின் மனநிலையை நினைத்து குழப்பமும் வந்தது.
எப்போதுமே காயத்ரி தன்னுடைய அழகைப் பற்றி பெரிதாக எண்ணவே மாட்டாள். அவளுக்கு பெரிதாக ஒப்பனை செய்ய கூட தெரியாது. அவளுக்கு அது பிடிக்கவும் செய்யாது. சௌமியாவது தான் ஏதாவது செய்து விடுவாள். அடர்த்தியாக, நீளமாக இருக்கும் முடியைக் கூட சரியாக பின்ன மாட்டாள். எப்போதுமே ஏனோ தானோ என்று தான் இருப்பாள். ஒரு வேளை அவளுடைய அந்த எளிமையே அவளை அழகாக காட்டுகிறதோ என்று கூட சௌமி நினைப்பாள்.
அப்படி இருக்க இன்று ஒருவன் அவளிடம் பேச வில்லை என்பதற்காக அவளுடைய அழகைப் பற்றி கவலைப் பட ஆரம்பித்து விட்டாளே? அவனும் தான் ஏன் இப்படி செய்ய வேண்டும்? காலேஜ் சென்ற முதல் நாளும் இவளை குழப்பியிருக்கிறான். இப்போதும் இவளை குழப்பியிருக்கிறான். இதை எப்படி சரி செய்ய என்ற குழப்பம் வந்தது சௌமிக்கு.
“அக்கா, நீ அந்த அண்ணாவை திட்டி விட்டல்ல? அதனால தான் உன்கிட்ட பேச வேண்டாம்னு நினைச்சிருப்பாங்க. நீ அவங்க கிட்ட திட்டினதுக்கு உண்மையான காரணம் சொன்னா புரிஞ்சிருப்பாங்க. கவலைப் படுறதை விடு. ஓகே வா?”
“ஆமா ஆமா நீ சொல்ற மாதிரி தான் இருக்கும். தீபக் பிரண்ட்ஸ் கூட என்னைப் பாத்து முறைச்சாங்க. ஆனாலும் இந்த தீபக் புரியாத புதிரா தான் டி இருக்கான். அவனுக்கு எப்படி என்னை முன்னாடியே தெரியும் அப்படிங்குற கேள்வியைக் கூட அவன் கிட்ட கேக்க முடியலை. அப்படி இருக்க அவன் கிட்ட நான் எப்படி உண்மையைச் சொல்ல? தினமும் எங்க கிளாஸ்ல தான் இருக்கான். என்கூட தான் காலைலயும் சாயங்காலமும் பஸ்ல வரான். ஆனா என்கிட்ட அவன் பேசுனது இல்லை. நான் எப்பவாது அவன் முகத்தை பாத்தாக் கூட அவன் முகத்தை திருப்பிட்டு போனா நான் எப்படி பேசவாம்?”
“சரி பேசாத. இதை இதோட விட்டுரு. அவங்களே முகத்தை திருப்பிட்டு போனா நீயும் அவங்களை கண்டுக்காத”
“ஆனா அந்த அத்தை பையன்னு எதுக்கு சொன்னான்னு இன்னும் தெரியலையே டி? என் பேரைக் கூட சரியா எப்படிச் சொன்னான்?”, என்று பழைய கதைக்கு சென்றாள்.
“ஐயோ, அதை விடுக்கா. எப்பவாது டைம் கிடைச்சா அவங்க கிட்டயே கேட்டுக்கோ”, என்று சொல்லி அந்த பேச்சை விடுத்து வேறு பேச ஆரம்பித்து விட்டாள் சௌமி. காயத்ரியும் அதற்கு ஒத்துளைத்தாள். அக்காவின் மனநிலை மாறியதும் சௌமிக்கும் நிம்மதியே.
அடுத்த நாள் காலேஜில் முதல் பீரியட் மேக்ஸ் பீரியட் என்பதால் சரவணன் சார் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அனைவரும் மௌனமாக கிளாஸ் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த பீரியட் முடிவதற்கு ஐந்து நிமிடம் இருக்கும் போது கிளாசை நிறுத்தி “கிளாஸ் ரெப் யாரு?”, என்று கேட்டார் சரவணன் சார். அவர் அப்படிக் கேட்டதும் அனைவரும் திருதிருவென்று விழித்தார்கள்.
“ரெப் யாருன்னு தானே கேட்டேன்? ஏதோ நான் பார்முலா கேட்ட மாதிரி முழிக்கிறீங்க?”
“இன்னும் ரெப் யாருன்னு முடிவு பண்ணலை சார்”, என்றாள் மாலதி என்ற பெண்.
“காலேஜ் ஆரம்பிச்சு ஒரு வாரம் ஆச்சு, இன்னும் முடிவு பண்ணலையா? டூ பேட். இதுக்கெல்லாமா சார் வரணும்? சரி இன்னைக்கு முடிவு பண்ணிருவோம். டுவல்த் மேக்ஸ்ல செண்டம் வாங்கினது யாரு? வாங்கினவங்க எல்லாம் எழுந்துகோங்க”, என்று கேட்டதும் பலர் எழுந்து நின்றார்கள்.
“இவ்வளவு பேரா? வெரி குட். வெறி குட். அப்ப இந்த செமஸ்டர்ல என் சப்ஜெக்ட்ல இவ்வளவு பேர் செண்டம் வாங்கி எனக்கு பெருமை சேர்க்கப் போறீங்க, அப்படி தானே?”, என்று சரவணன் கேட்டதும் கோரசாக “சார்……”, என்று இழுத்தார்கள்.
“ஏன் இப்படி இழுக்குறீங்க? உங்களால முடியாதா? நீ சொல்லுப்பா”, என்று ஒரு பையனிடம் கேட்க அவனோ “சார், இப்ப உள்ள மேக்ஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு. பாஸ் ஆனாலே போதும்”, என்றான். மற்றவர்களும் ஆமா சார் என்று கத்தினார்கள்.
“இப்படி நெகட்டிவா பேசக் கூடாது ஸ்டுடண்ட்ஸ். உங்களால முடியும்னு நம்புங்க. சரி இப்ப ரெப் விசயத்துக்கு வருவோம். நிக்குற இத்தனை பேர்ல இருந்து நான் எப்படி ஒரு ஆளை செலக்ட் பண்ண? சரி நாம வித்தியாசமா யோசிப்போம். மேக்ஸ்ல கம்மி மார்க் யார் எடுத்தா?”, என்று கேட்டதும் கொஞ்சம் பேர் எழுந்து நின்றார்கள்.
அவர்களிடம் மார்க் விசாரிக்கும் போது அங்கே இருந்தவர்களில் குறைவாக மார்க் வாங்கியது மதன் மட்டுமே.
“நீ தான் மேக்ஸ்ல கம்மியா வாங்கிருக்க பா? அதை கம்மின்னு சொல்ல முடியாது. இருநூறுக்கு நூத்தி எண்பது மார்க் ஒண்ணும் கம்மி கிடையாது. மத்தவங்களை விட குறைவா வாங்கிருக்க அவ்வளவு தான் ஓகே வா?”, என்று கேட்டார் சரவணன்.
“ஓகே சார்”, என்று பாவமாக சொன்ன மதனுக்கு அனைவரும் அவனையே பார்ப்பது ஒரு மாதிரி இருந்தது.
“மத்த சப்ஜெக்ட்ல எவ்வளவு மார்க்?”, என்று கேட்டதும் தன்னுடைய மார்க்கை சொன்னான் மதன்.
மேக்ஸைத் தவிர மற்ற மூன்று பாடங்களில் மதன் செண்டம் வாங்கியிருந்தான்.
“அடப்பாவி ஏண்டா இப்படி? மேக்ஸ் மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு. மேக்ஸ்ல நீ எதுக்கு செண்டம் வாங்கலை?”
“தெரியலை சார். மேக்ஸ் மட்டும் பிடிக்கவே மாட்டிக்குது”
“அதை என்கிட்டே சொல்ற பாத்தியா? உனக்கு தைரியம் தான். சரி சரி இனி நீ தான் இந்த கிளாஸ்க்கு ரெப். ஓகே வா?”
“சார் இது அநியாயம்”, என்று அதிர்ச்சியாக சொன்னான் மதன்.
“ஏண்டா?”
“ஸ்கூல்ல தான் மேக்ஸ்ல செண்டம் வாங்க முடியலை. காலேஜ்லயாவது ஃபுல் மார்க் வாங்கலாம்னு பாத்தா விட மாட்டீங்க போலயே?”
“எதுக்கு இப்படி சொல்ற?”
“பின்ன, ரெப்னா நிறைய வேலை இருக்கும் தானே? உங்க கிளாசை கவனிக்க முடியாத நிலைமை கூட எனக்கு வரலாம். மாங்கு மாங்குன்னு கவனிச்சாலே எனக்கு மேக்ஸ் வரலை. இதுல நான் ரெப்பா இருந்தா எப்படி சார் உங்க சப்ஜெக்ட்ல பாஸ் ஆக முடியும்? எனக்கு ரெப் பதவியை விட கணக்கு தான் சார் முக்கியம்”, என்று மதன் ஏற்றம் இறக்கமாக சொன்னதும் கிளாசில் இருந்த அனைவரும் அவன் பேச்சைக் கேட்டு சிரித்தார்கள்.