அத்தியாயம் 4_ 1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,865
அத்தியாயம் 4
உந்தன் விழி பேசும் அழகைக்
காண மட்டுமே எந்தன் இரு
விழிகளும் தவம் இருக்கின்றன!!!
கல்யாணத்தை நிறுத்த என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ரேகா. ஆனால் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா என்ன? கடவுள் என்ன வைத்திருக்கிறாரோ அது மட்டும் தான் நடக்கும் என்று அவளுக்கு யார் சொல்வது?
ரேகாவிடம் பேசி விட்டு வெளியே வந்த வேணி தன்னுடைய மகளான வர்ஷா அறைக்கு சென்றாள். அங்கே முகம் முழுவதும் கோபத்தில் அமர்ந்திருந்தாள் வர்ஷா.
“வர்ஷா, நீ என்ன இன்னும் கிளம்பாம இருக்க?”, என்று கேட்டாள் வேணி.
“போ மா, நானே சரி கடுப்புல இருக்கேன்? அந்த விக்ரம் என்னைத் தான் கட்டிக்குவான்னு கனவு கண்டேன். ஆனா அவன் என்ன டான்னா ரேகாவை கல்யாணம் பண்ண போறான்? எனக்கு எரிச்சலா இருக்கு. நான் கல்யாணத்துக்கே வரலை போதுமா?”
“இப்படி புத்தி கெட்ட தனமா யோசிப்பேன்னு தான் டி ஓடி வந்தேன்”
“என்ன மா சொல்ற?”
“ரேகா இந்த கல்யாணம் வேண்டாம், நிப்பாட்ட போறேன்னு சொல்றா டி”, என்று வேணி சொன்னதும் கண்கள் மின்ன “என்ன மா சொல்ற?”, என்று கேட்டாள் வர்ஷா.
“ஆமா டி, அவ கல்யாணத்தை நிறுத்த போறாளாம். உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கு டி வர்ஷா”
“அம்மா நிஜமாவா? இது நடக்குமா? எப்படி இந்த கல்யாணம் நிக்கும்? அப்படியே நின்னாலும் அந்த விக்ரம் என்ன சொல்வான்னு தெரியலையே?”
“அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம் டி. முதல்ல கல்யாணம் நிக்கட்டும். அதுக்கு நாம ரேகாவை தயார் படுத்தணும். வா அவ ரூம்க்கு”
“இப்ப வா?”
“ஆமா டி, இன்னும் பெண்ணழைக்க அவங்க வீட்ல இருந்து யாரும் வரலை. நீ வா நாம ரேகா கிட்ட பேசலாம்”, என்று வேணி சொன்னதும் அவள் பின்னே சென்றாள் வர்ஷா.
அதே நேரம் “நல்லதா போச்சு, அத்தைக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. அதனால நான் மணமேடைல வச்சு கல்யாணத்தை நிறுத்தினா எனக்கு தான் அவங்க சப்போர்ட் பண்ணுவாங்க. மாமாவும் எனக்கு விருப்ப பட்டு எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சிருக்க மாட்டார். அவர் ஏதோ ஒரு இக்கட்டுல மாட்டிருக்குறதுனால தான் அவர் மகளுக்கு கூட கல்யாணம் பண்ணாம எனக்கு பண்ணுறார். அதனால ஈஸியா கல்யாணம் நின்னுரும். எப்ப கல்யாணத்தை நிறுத்தலாம்? படத்துல எல்லாம் வர மாதிரி சரியா தாலி கட்டுற நேரத்துல எல்லார் முன்னாடியும் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லலாமா? சே சே அவ்வளவு தூரம் ஏன் போகணும்? அவ்வளவு நேரம் எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது. இந்த வீட்ல இருந்து கிளம்பும் போதே சொல்லிறனும். இங்க இருந்து கிளம்பவே கூடாது. எல்லாரும் காரணம் கேக்குறப்ப எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நான் வேற ஒருத்தரை விரும்புறேன்னு சொல்லிக்கலாம்”
“அப்படிச் சொன்ன உடனே யாரை விரும்புறேன்னு கேப்பாங்களே? அப்ப நான் யாரைச் சொல்ல முடியும்? அந்த டிரைவர் எங்க இருப்பான்? அந்த டிரைவரை எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா அவன் உண்மைலே காதலோட தான் என்கிட்ட அப்படி நடந்துகிட்டானா? முதல்ல எனக்குள்ள அவன் மேல இருக்குறது காதல் தானா? இல்லை வெறும் ஈர்ப்பா? வெறும் ஈர்ப்புன்னா இத்தனை வருசத்துல வேற யார் மேலயும் உருவாகலையே? அவன் கிட்ட நான் உன்னை விரும்புறேன்னு சொன்னா அவன் என்ன சொல்வான்? கோபத்துல போனானே? எதுக்கு கோபம்னு கூட அவன் கிட்ட கேக்கலையே? அவன் பேர் ஊர் எதையுமே கேட்டுக்கலையே?”, என்று மீண்டும் அவனைப் பற்றியே அவள் யோசித்துக் கொண்டிருக்க அப்போது அவளது வேணியும், வர்ஷாவும் உள்ளே வந்தார்கள்.
உள்ளே வந்ததும் முதல் வேலையாக “அம்மா சொல்றது எல்லாம் உண்மையா ரேகா?”, என்று கேட்டாள் வர்ஷா.
“இவ என்ன கேக்குறா? அத்தை என்ன சொன்னாங்க?”, என்று யோசித்த ரேகா “நீ என்ன கேக்குற வர்ஷா, எனக்கு புரியலை”, என்றாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த கல்யாணம் வேண்டாம், நிறுத்த போறேன்னு சொன்ன தானே? அதை தான் வர்ஷா கேக்குறா”, என்றாள் வேணி.
“ஆமா, நான் நிறுத்த தான் போறேன் அத்தை”, என்று தீர்மானமாக சொன்னாள் ரேகா.
“இங்க பாரு ரேகா, இது விளையாட்டு இல்லை. என்னோட வாழ்க்கை பிரச்சனை. நான் விக்ரமை ரொம்ப விரும்புறேன். நீ சொல்றதுல தான் என்னோட வாழ்க்கையே இருக்கு”, என்றாள் வர்ஷா.
“நீ பேசுறது எனக்கு சுத்தமா புரியலை வர்ஷா. நீ விக்ரமை விரும்புறதுக்கும் எனக்கும் என்ன சம்பம்ந்தம்? விக்ரம்னா யாரு?”, என்று கேட்டாள் ரேகா.
“போச்சு டா, உனக்கும் இன்னும் அவர் பேர் கூட தெரியலையா? அவர் தான் உனக்கு பாத்திருக்க மாப்பிள்ளை. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு அவர் கூட தான் கல்யாணம். இப்ப வந்து விக்ரம்னா யாருன்னு கேக்குற?”, என்று எரிச்சலாக சொன்னாள் வர்ஷா.
“ஆமா ஆமா, நீங்க அவன் யாரு, என்ன, அவன் விலாசம் என்ன, அவன் தான் மாப்பில்லைன்னு எல்லாம் என்கிட்ட சொன்னீங்க பாருங்க?”, என்று நக்கலாக கேட்க எழுந்த உதடுகளை நிறுத்தியவள் “அப்பாடி நீ தானே அவரை விரும்பிருக்க. நீயே அவரைக் கல்யாணம் பண்ணிக்கோ”, என்றாள் ரேகா.
“அது எப்படி நடக்கும்? எங்க ரெண்டு பேருக்கும் இடைல தான் நீ நிக்குறியே? அவர் முதல் முறையா என்னை தான் பொண்ணு பாக்க வந்தார். ஆனா உன் போட்டோவை பாத்துட்டு நீ தான் வேணும்னு சொல்லிட்டார்”
“என்ன சொல்ற நீ?”
“உன்னை விட அழகா பிறக்காதது என் தப்பா? எனக்கு விக்ரம் வேணும். நீ விட்டுக் கொடு”
“இங்க பாரு வர்ஷா, என் மனசுல வேற ஒருத்தர் இருக்கார். இந்த கல்யாணத்தை நிப்பாட்ட தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன். நீ இப்ப வந்து பேசாம இருந்திருந்தாலும் நான் இந்த கல்யாணத்தை நிறுத்திருப்பேன்”, என்று ரேகா சொன்னதும் தாயும் மகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“நீ என்ன ரேகா சொல்ற? உன் மனசுல வேற ஒருத்தன் இருக்கானா? இது என்ன புதுக் கதை?”, என்று கேட்டாள் வேணி.
“ஆமா அத்தை, என் மனசுல வேற ஒருத்தர் இருக்கார். நான் கண்டிப்பா கல்யாணம்னு ஒண்ணு பண்ணினா அவரைத் தான் பண்ணிக்குவேன். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். இந்த கல்யாணம் நின்னா இப்ப இருக்குற மாப்பிள்ளைக்கு அவமானம் வரும்னு நினைச்சேன். ஆனா நல்லதா போச்சு. வர்ஷா அவரை விரும்புறா. அதனால நான் கல்யாணத்தை நிறுத்தின உடனே கண்டிப்பா அந்த விக்ரமுக்கும் வர்ஷாவுக்கும் கல்யாணம் நடக்கும்”, என்று ரேகா சொன்னதும் வர்ஷா மற்றும் வேணி முகம் மின்னியது.
“நீ உண்மையை தான் சொல்றியா ரேகா? எனக்கு விக்ரம் கிடைப்பாரா?”, என்று கேட்டாள் வர்ஷா.
“கண்டிப்பா கிடைப்பார். நான் இன்னொருத்தரை விரும்புறதைச் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திறேன் போதுமா? அத்தை, கல்யாணம் நின்ன உடனே நீங்க என் மகளை கட்டிக்கோங்கன்னு வர்ஷாவை கை காட்டுங்க. கல்யாணம் நின்ன கவலைல இருக்கும் போது அந்த விக்ரம், கண்டிப்பா வர்ஷாவைக் கட்டிக்குவார்”
“பிளான் நல்லா தான் இருக்கு ரேகா. ஆனா நீ எப்ப இன்னொரு ஆளை விரும்புறேன்னு சொல்லுவ? தாலி கட்டுறதுக்கு முன்னாடியா?”, என்று கேட்டாள் வேணி.
“இப்ப கல்யாணம் கோயில வச்சு தானே அத்தை? நான் கோயிலுக்கு போன உடனே சொல்லிறேன்”, என்றாள் ரேகா.
“கல்யாணம் கோயில்ல இல்லை. அவனோட வீட்ல வச்சு”
“அத்தை கண்டிப்பா அவர் வர்ஷாவோட கணவர் தான். அதனால உங்க மாப்பிள்ளையை அவன் இவன்னு பேசாதீங்க”, என்று ரேகா சொன்னதும் அழகாக வெட்கப் பட்டாள் வர்ஷா.
“சரி சரி, மரியாதையைப் பத்தி எல்லாம் அப்புறம் பேசலாம். நீ இப்ப கல்யாணத்தை நிறுத்துற வழியை முதல்ல யோசி ரேகா”, என்றாள் வேணி.
“யோசிச்சிட்டேன் அத்தை, இப்ப என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக வருவாங்கல்ல? அப்ப அவங்க சொந்தக்காரங்க கிட்ட சொல்லிறேன் போதுமா?”, என்று கேட்டாள் ரேகா.
“காரியத்தைக் கெடுத்த போ. நீ நம்ம வீட்ல வச்சே அப்படி சொல்லிட்டா நாம எப்படி அவங்க வீட்டுக்கு போக முடியும்? அப்படினா வர்ஷா கல்யாணம் எப்படி நடக்கும்? அதனால உன்னை அங்க அழைச்சிட்டு போன அப்புறம் சரியா பொண்ணைக் கூப்பிடுங்கன்னு ஐயர் சொல்வார்ல? அப்ப நீ எல்லார் கிட்டயும் உன் காதலைப் பத்தி சொன்னாப் போதும்”
“சரி அத்தை அப்படியே செய்றேன்”
“கண்டிப்பா செஞ்சிருவ தானே? ஏதாவது சொதப்பிற மாட்டியே?”, என்று கேட்டாள் வர்ஷா.
“கண்டிப்பா உன் கல்யாணம் அந்த விக்ரம் கூட இன்னைக்கு நடக்கும் வர்ஷா”, என்று ரேகா உறுதியாக சொன்னதும் “சரி நீ இரு. நாங்க ஆக வேண்டிய வேலையைப் பாக்குறோம். இப்ப உன்னைக் கூப்பிட ஆள் வந்துருவாங்க”, என்று சொல்லி விட்டு சென்றாள் வேணி.
“எதையும் சொதப்பிறாத ரேகா. என்னோட வாழ்க்கையே உன் கைல தான் இருக்கு”, என்று மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டு அவள் பின்னேயே சென்றாள் வர்ஷா.
அவர்கள் இருவரும் வெளியே சென்றதும் அப்பாடா என்று கட்டிலில் அமர்ந்தாள் ரேகா. இவ்வளவு நேரம் அவளுக்கு இருந்த மனக்குழப்பம் அனைத்தும் தீர்ந்து உல்லாச மனநிலையில் இருந்தாள். கல்யாணம் நின்று விடும் என்ற சந்தோசத்தில் அவளுக்கு துள்ளிக் குதிக்க வேண்டும் போல இருந்தது.
“அப்பாடி எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. இந்த கல்யாணம் நின்ன அப்புறம் நான் அந்த ஜீப் டிரைவரை பாத்து பேசணும். அவன் கிட்ட நீ தான் என் மனசுல இருக்கேன்னு சொல்லணும். அவன் யாரா இருந்தாலும், அவன் படிக்கவே இல்லைனாக் கூட எனக்கு அவன் தான் வேணும். அவன் கிட்ட இருந்தா தான் நான் நானா இருக்கேன். எனக்கு அவனைப் பாக்கும் போதெல்லாம் அப்பா கூட இருக்குற மாதிரியே இருக்கு”, என்று எண்ணியவள் “கண்டிப்பா நீ எங்க இருந்தாலும் உன்னைத் தேடி வருவேன். உன்னைக் கண்டு பிடிக்க முடியலைன்னா கூட மாமா கிட்ட கேட்டு உன்னைக் கண்டு பிடிச்சிருவேன்”, என்று வாய் விட்டே சொன்னாள்.
தன்னுடைய அறைக்கு வேணி சென்றதும் “அம்மா நாம நினைக்கிறது நடக்குமா? இந்த ரேகா சொதப்பிற மாட்டாளே?”, என்று கேட்டாள் வர்ஷா.
“இது வரை எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சு வர்ஷா. ஆனா எப்ப அவ இன்னொருத்தனை விரும்புறேன்னு சொன்னாளோ அப்பவே அவ இந்த கல்யாணத்தை நிப்பாட்டிருவான்னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு. நீ தான் கல்யாணப் பொண்ணு. அந்த விக்ரம் பொண்டாட்டி நீ தான்”
“நடக்குமா மா?”
“கண்டிப்பா நடக்கும் தங்கம். இன்னும் கொஞ்ச நேரத்துல நீ தான் விக்ரமுக்கு மனைவி. ஐயோ நேத்தே உன்னை பியூட்டி பார்லர்க்கு அனுப்பிருக்கணும். இப்ப ஒண்ணும் செய்ய முடியாதே. சரி பரவால்ல. கல்யாணம் முடிஞ்ச அப்புறம் உன் வீட்லே ஒரு பியூட்டி பார்லர் வச்சிக்கோ. நீ தானே பொண்ணு. அதனால அம்மா உனக்கு தேவையானதை எடுத்து வைக்கிறேன். அவசரக் கல்யாணம்னா அங்க உனக்கு ஒண்ணும் இல்லாம போயிறக் கூடாது”, என்று சந்தோசமாக வேணி சொன்னதும் வர்ஷா கண்களும் கனவில் மிதந்தது.