“இவனா? அப்ப அவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்க?”
“ஏலேய் முத்து, நீ என்ன வீட்டுக்கு போகாம இங்க இருக்க?”, என்று கேட்டார் தர்மதுரை.
“இல்லைங்க ஐயா, இங்க கொஞ்சம் வேலை இருந்தது. அதான் இங்கயே தூங்கிட்டேன்”
“சரி தேன்மொழியை பாத்தியா?”
“சாயங்காலம் போல பாத்தேங்க. இங்க தான் இருந்துச்சு. நான் வரும் போது மோட்டார் ரூம்ல லைட் எரியவும் திருடன்னு நினைச்சு வந்தேன் ஐயா. அது நம்ம சின்னம்மான்னு தெரிஞ்சதும் என்னமா இந்த நேரத்துல இங்க இருக்கீங்கன்னு விசாரிச்சேன். மனசு சரியில்லை முத்துன்னு சொல்லுச்சு. இன்னேரத்துல இங்க இருக்காதீங்கம்மான்னு வீட்டுக்கு போக சொன்னேங்க”, என்றான் முத்து.
இங்கேயும் தங்கள் பிள்ளை இல்லை என்று தெரிந்ததும் மறுபடியும் அனைவரும் அழ ஆரம்பித்தார்கள்.
இங்கே பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது கதிர், அன்னத்துக்கு போனைப் போட்டு, “பாட்டி உன் வேலையை ஆரம்பி”, என்றான்.
வீட்டை விட்டு வெளியே வந்த அன்னம் யாராவது கண்ணுக்கு தெரிகிறார்களா என்று எண்ணி பார்வையை சுழல விட்டாள்.
அப்போது அங்கு தோப்பு வேலைக்கு வந்திருந்த அமுதாவிடம் “எதுக்கு டி, இவ்வளவு சீக்கிரம் வந்துருக்க?”, என்று பேச்சு கொடுத்தாள் அன்னம்.
“மடையை திறந்து விட வந்தேன் பாட்டி. போய் தான் சமையல் செய்யனும்”
“எங்க டி உன் புருஷன்? நீ மட்டும் வந்துருக்க?”
“என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க? உங்களுக்கு விஷயமே தெரியாதா?”
“என்ன விஷயம் ஆத்தா? நீ தான் சொல்லேன்”
“உங்க பேத்தியைக் காணும்னு அங்க ஊரே கூடியிருக்கு”
“என்ன டி சொல்ற?”
“ஆமா பாட்டி, நம்ம தேன்மொழியை காணும்னு எல்லாரும் ராமுழுக்க தேடிட்டு இருக்காங்க. அப்ப ஒருத்தன் அவளை அவங்க தோப்புல பாத்ததா சொல்ல, ஊரே அங்க தான் பாக்க போயிருக்கு. என் புருஷன் அதான் இன்னும் வரலை”
“அட கூறு கெட்டவளே, என் பேத்தி என்கூட தான இருக்கா? மனசு சரி இல்லை பாட்டி. நான் நைட் இங்க தங்கிக்கிறேன்னு வந்தா. வரும் போதே எங்கயோ விழுந்துட்டா போல? நல்ல சுழுக்கு பிடிச்சிருக்கு. நடக்க முடியாம படுத்துருக்கா”, என்று சொல்லி விட்டு அவள் முகத்தைப் பார்த்தாள்.
அதிர்ந்து போய் பார்த்த அமுதா அடுத்த நொடி தகவல் சொல்ல சிட்டாய் பறந்திருந்தாள்.
அங்கே அனைவரும் ஆள் ஆளுக்கு பேச ஆரம்பித்தார்கள். “இந்த பொண்ணு ஓடிப் போயிருச்சா? யார் கூட ஓடியிருக்கும்?”, என்று பேச ஆரம்பித்தார்கள். மொத்த குடும்பமும் வாயை மூடி அழுது கொண்டிருந்தார்கள்.
[the_ad id=”6605″]அப்போது அங்கே ஓடி வந்த அமுதா “நம்ம தேன்மொழி நம்ம மதி ஐயா தோட்டத்துல இருக்குங்க”, என்று சொன்னது தான் தாமதம் அவள் மீதி விவரம் சொல்வதற்கு முன்பே அனைவரும் அங்கே செல்ல ஆரம்பித்தார்கள்.
அப்போது அங்கு நடந்து வந்து கொண்டிருந்த மதியழகனைக் கண்டு அவரிடம் பாய்ந்து சென்ற ராஜேந்திரன் மதியின் சட்டையைப் பிடித்து “எங்க வீட்டுப் பொண்ணை எதுக்குய்யா நீ ஒளிச்சு வச்சிருக்க?”, என்று கேட்டு நல்லவனாய் நடித்தான்.
அடுத்த நொடி எங்கிருந்து தான் வந்தான் என்று எல்லாரும் விழிக்க அங்கு வந்த கதிர் “யார் மேல டா கையை வச்ச?“, என்று கேட்டு அவனை அடித்து துவைத்து விட்டான்.
அனைவரும் அவனை விலக்கி விட்டார்கள். முகத்தில் ரத்தம் வடிய் கிழிந்த சட்டையுடன் நின்றான் ராஜேந்திரன். அவன் முகம் கதிரிடம் அடி வாங்கிய அவமானத்தால் சிறுத்துப் போனது. கண்ணில் கொலைவெறியுடன் கதிரைப் பார்த்தவன் அடுத்த நொடி அங்கிருந்து சென்று விட்டான்.
“ஐயோ நான் சொல்றதை முழுசா கேளுங்க. தேன்மொழி அங்க இருக்குறது மதி ஐயாவுக்கு தெரியாது. அங்க நம்ம அன்னம் பாட்டி இருக்குது. அந்த பாட்டியைப் பாக்க தான் தேன்மொழி போயிருக்கா”, என்றாள் அமுதா.
அடுத்த நொடி அனைவரும் அந்த பண்ணை வீட்டின் முன்பு நின்றார்கள்.
வெளியே நின்று “தேன்மொழி வெளியே வா”, என்று கர்ஜித்தார் ராஜதுரை. அவரை அமைதி படுத்தினார் தர்மதுரை.
வெளியே தன்னுடைய தந்தையின் குரல் கேட்கவும் “போச்சு, நாம
நினைச்ச நேரம் வந்துருச்சு. இன்னைக்கு செத்தோம்”, என்று பயந்து போய் அமர்ந்திருந்தாள் தேன்மொழி. அவளால் காலையும் அசைக்க முடிய வில்லை.
அப்போது “எவன் டா என் வீட்டு முன்னாடி நின்னு காட்டு கூச்சல் போடுறது?”, என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள் அன்னம்.
அன்னத்தைப் பார்த்ததும் ராஜதுரை வாய் மூடிக் கொண்டது. “அம்மா”, என்று அழைத்தாள் சகுந்தலா.
“யாருடி உனக்கு அம்மா? என் புருஷன் செத்த அன்னைக்கே என் பொண்ணும் செத்துட்டா. யாரும் உறவு சொல்லிக்கிட்டு வந்து நிக்க வேண்டாம்”
[the_ad id=”6605″]“பெரியம்மா எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசாதீங்க. அவங்க மகளைக் காணும்னு தவிச்சு போய் வந்துருக்காங்க. தேன்மொழி உங்க பேத்தியும் கூட. அவ இங்க தான் இருக்குறதா அமுதா சொன்னா. அதான் கேக்க வந்தோம்”, என்றார் ஊர் பெரியவர்.
“ஆமா இங்க தான் இருக்கா. அதுக்கென்ன?”, என்று அன்னம் சர்வசாதாரணமாக சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
“ஏமா, உங்க மகளை மகளே இல்லன்னு சொல்றீங்க? அப்புறம் எதுக்கு உங்க பேத்தியை மட்டும் கூட்டி வச்சுருக்கீங்க?”, என்று கேட்டாள் ரேகா.
“என் புருசனைக் கொன்னவனோட பொண்டாட்டி தான நீ? உன் மூஞ்ச என்கிட்ட காட்டாத. சுடு தண்ணியை மூஞ்சுல ஊத்திருவேன்”
“அம்மா என்ன இது? எதுக்கு தேவை இல்லாம பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க? அவங்க மகளை அவங்க கூட்டிட்டு போக வந்துருக்காங்க. தேன்மொழி இங்க தான் இருக்காளா?”, என்று கேட்டார் மதியழகன்.
“ஆமா மதி”
“அப்ப வெளியே கூப்பிடு. தேன்மொழி வெளிய வா மா”, என்று அழைத்தார் மதியழகன். கதிர் அனைத்தையும் வேடிக்கை பார்த்த படி நின்றான்.
கண்ணனும், செந்திலும் அடுத்த நொடி “இப்ப வெளிய வரப் போறியா இல்லையா தேனு?”, என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்து விட்டனர்.
அங்கே முகம் முழுவதும் கலவரத்துடன் அமர்ந்திருந்த தேன்மொழி அண்ணன்களைக் கண்டு எச்சில் விழுங்கினாள்.
“இங்க நைட் முழுக்க எங்களை பதற வச்சிட்டு சொகுசா காலாட்டிக்கிட்டு படுத்து கிடக்க?”, என்று கேட்டுக் கொண்டே அவள் கையைப் பிடித்து இழுத்தான் கண்ணன்.
அவள் வேண்டும் என்றா படுத்திருக்கிறாள்? நைட்டாவது நொண்டி நொண்டி நடக்க முடிந்தது. இப்போது அவளால் காலை அசைக்க கூட முடியவில்லை.
அவன் இழுத்ததும் “ஆ அம்மா, அண்ணா வலிக்குதுண்ணா விடு”, என்று அலறினாள் தேன்மொழி.
[the_ad id=”6605″]“கண்ணா, அவள் காலுல அடி பட்டுருக்கு போல”, என்றான் செந்தில்.
“ஆமாண்ணா, காலுல சுழுக்கு பட்டுருக்கு. காலை அசைக்க முடியலை. வலிக்குது”, என்றாள். அவள் கண்களிலும் கண்ணீர் வந்தது.
அந்த கண்ணீரில் அண்ணன்களுக்கு உருகி விட்டது. அடுத்த நொடி இருவரும் வெளியே சென்று விட்டார்கள்.
“என்ன டா உன் தங்கச்சி உள்ள இருக்காளா?”, என்று கேட்டார் தர்மதுரை.
“உள்ள தான் இருக்காப்பா. அவ கால்ல நல்ல அடி பட்டுருக்கு. அவளால காலை அசைக்க கூட முடியலை. அதான் வீட்டுக்கு வராம இருந்தா போல?”, என்றான் கண்ணன்.
அடுத்த நொடி சகுந்தலாவும் செல்வியும் வீட்டுக்குள் சென்று விட்டார்கள்.
தன்னுடைய மகளைக் கண்டதும் அவர்களை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தார்கள் இருவரும்.
“நைட்டு முழுக்க பதற வச்சிட்டியே. எங்க உயிரே எங்க கிட்ட இல்லை”, என்று அழுதாள் செல்வி.
“காலுல அடி பட்டுருக்கேன்னு பாக்குறேன். சரியாகட்டும் உனக்கு இருக்கு. வீட்டை விட்டு வெளிய வர அளவுக்கு பெரிய மனுசியா ஆகிட்டியோ? ஒத்த பொண்ணை பேத்து வச்சுருக்கேன் டி. நடுங்க வச்சிட்டியே. செத்து பிழைச்ச மாதிரி இருக்கு”, என்று சொல்லி அழுதாள் சகுந்தலா.
“என்ன மா ஆச்சு? தேன்மொழி எப்ப இங்க வந்தா?”, என்று கேட்டார் மதியழகன்.
“நைட் போல மனசு சரி இல்லைன்னு இங்க வந்தா. வரும் போதே நொண்டிட்டு தான் வந்தா. அப்புறம் தான் சுழுக்குன்னு தெரிஞ்சது. அதான் தடவி விட்டு கட்டு போட்டு விட்டேன்”, என்றாள் அன்னம்.
“எனக்கு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல மா? அவங்க வீட்ல பொண்ணைக் காணும்னு தவிச்சிருப்பாங்கல்ல?”
“ஏன் சொல்லணும்? எதுக்கு சொல்லணும்? அவங்க ஆகாத குடும்பம்னு ஆகி போச்சு. அப்புறம் அவங்க எப்படி போனா எனக்கென்ன? நான் ஒரு மனிதாபிமானத்துல தான் உதவி செஞ்சேன். அவங்க பொண்ணை கூட்டிட்டு போக சொல்லு மதி”, என்று சொன்னாள் அன்னம்.
“இப்ப எப்படி இருக்கு கண்ணு?… ரொம்ப வலிக்குதா?… அண்ணன் தூக்கிகிடட்டுமா?”, என்று ஆள் ஆளுக்கு தாங்கினார்கள் தேன்மொழியை.
கண்ணன் அவளை தூக்கிக் கொண்டான். வெளியே வரும் போது கதிரை அவள் கண்கள் தேடியது. தான் எதிர்பார்த்த நிலை என்ன? இப்போது நடப்பது என்ன? அனைத்தையும் மாற்றி விட்டானே. காரித் துப்பும் நிலைமையை மாற்றி அனைவரையும் தாங்க வைத்து விட்டானே?
எதுவுமே நடக்காதது போல அனைத்தையும் மறைத்து விட்டான். இதில் அவனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று ஒருவரும் அறியாமல் செய்து விட்டான்.
“பாட்டியைப் பாக்க வந்ததுக்கு திட்டுவாங்க தான். ஆனா அந்த சேது கிட்ட இருந்து கதிர் காப்பாத்தாம போயிருந்தா மொத்த குடும்பமே காரி துப்பிருக்குமே”, என்று எண்ணிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவளைப் பார்த்துக் சிரித்துக் கொண்டே கண்களைச் சிமிட்டினான் கதிர். அவனை இமைக்காமல் பார்த்த படியே அங்கிருந்து சென்றாள் தேன்மொழி.
காதல் தீயை, நீர் அணைக்குமா….