அவர் எண்ணியது போல அன்று இரவு “என்னங்க மாமா ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டாள் வேணி.
“என்னோட பிரண்டு சுப்பு இருக்கான்ல? அவனோட பையனுக்கு நம்ம வீட்ல இருந்து பொண்ணு எடுக்கணும்னு ஆசை. அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன்”, என்று சொன்னதும் வேணி கண்கள் மின்னியது.
“இதுல என்னங்க மாமா இருக்கு? உடனே சித்ராவுக்கு பேசி முடிக்க வேண்டியது தானே?”
“நான் அந்த சம்பந்தத்தை கயலுக்கு முடிக்கலாமான்னு பாக்குறேன்”, என்று சொன்னதும் வேணி முகம் சுருங்கியது.
“சரி என்னமும் பண்ணுங்க. அதுக்கு எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்? அதான் முடிவு பண்ணிட்டீங்கல்ல?”, என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“அது இல்லை டி, எனக்கு தமிழையும் பிடிச்சிருக்கு. கயலுக்கு தமிழ் தான் பொருத்தமா இருப்பார்ன்னு தோணுது”, என்று சொன்னவர் அடி கண்ணால் அவளைப் பார்க்க “மாமா எனக்கு ஒரு யோசனை தோணுது. சொல்லவா?”, என்று நயமாக கேட்டாள்.
“அப்படி வா வழிக்கு”, என்று எண்ணிக் கொண்டு “சொல்லு வேணி”, என்றார்.
“கயலுக்கு அந்த தமிழ் பையனையே பாப்போம். சுப்பு அண்ணன் பையனை சித்ராவுக்கு பாப்போமா?”
“நல்ல யோசனை தான். ஆனா அந்த அம்மா அப்படி பேசுச்சே. அது சம்மதம் இல்லாம தான் முடிக்கணும். அப்படி முடிச்சா அங்க போன அப்புறம் ஏதாவது பிரச்சனை வராதா? கயல் வாழ்க்கை பாதிக்கப் படும்”
“அதெல்லாம் அவ புருஷன் பாத்துக்குவான். நீங்க அந்த தம்பி கிட்ட பேசி எப்படியாவது முடிச்சு வைங்க”
“சரி பேசுறேன்”, என்று சொன்னவர் உடனே மாடிக்கு சென்று தமிழுக்கு அழைத்தார்.
தமிழும் அதே நேரம் இரவு உணவை முடித்து விட்டு மொட்டை மாடியில் தான் அமர்ந்திருந்தான். ஏகாந்தமும் நிலவின் குளுமையும் சிறு அமைதியைத் தந்தாலும் மனதில் வெறுமையே நிறைந்திருந்தது. கயலுக்கு அழைத்து பேச ஆசை தான். ஆனால் என்ன பேச என்று தெரிய வில்லை. காதலியாக நினைத்து பேசவா? மனைவியாக நினைத்து பேசவா? அப்படி மனைவியாக நினைத்தால் திருமணம் நடைபெறுமா என்ற யோசனையில் உழன்றான்.
அப்போது தான் சமுத்திரத்திடம் இருந்து அழைப்பு வந்தது. “இவர் எதுக்கு கூப்பிடுறார்? கயல் கிட்ட பேசினது தெரிஞ்சிருக்குமோ?”, என்ற குழப்பத்தில் தான் அதை எடுத்தான்.
“ஹலோ தமிழ் தம்பிங்களா?”
“ஆமா சார், சொல்லுங்க”
“கல்யாணம் பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க?”
“எனக்கு சம்மதம் தான் சார். ஆனா நீங்க தான் முடியாதுன்னு சொல்லிட்டீங்களே? நான் ஒப்பனாவே சொல்றேன் சார். எங்க அம்மா சம்மதிக்கிறது எல்லாம் கஷ்டம். அவங்க குணம் அடியோட மாறிருச்சு. நான் உங்க பொண்ணை நல்லா வச்சிக்குவேன்னு நம்புங்களேன் சார். பிளீஸ் கொஞ்சம் யோசிங்களேன்”
“நல்லா யோசிச்சிட்டேன் தம்பி. உங்க அம்மா சம்மதிக்கலைன்னாலும் பரவால்ல. எனக்கு கயல் சந்தோஷம் தான் முக்கியம். அவ சந்தோஷம் நீங்க தான்னு தெரிஞ்சிருச்சு. எப்ப கல்யாணம் வச்சிக்கலாம்?”, என்று சொன்னதும் அவன் முகம் மலர்ந்து போனது.
“சார், நீங்க என்ன சொல்றீங்க?”, என்று அவன் ஆனந்த அதிர்வாக கேட்க கயல் அவனுக்காக பேசியதை எல்லாம் சொன்னார். தனக்காக இந்த அளவுக்கு பேசினாளா என்று வியப்பாக இருந்தது தமிழுக்கு.
“அவ மனசு எனக்கு புரிஞ்சிருச்சு தம்பி. நீங்க சொன்ன மாதிரி அவ உங்க கூட இருந்தா தான் சந்தோஷமா இருப்பா. எனக்கு கல்யாணத்துல பரிபூரண சம்மதம்”
“ரொம்ப சந்தோஷம் சார்”
“இன்னும் என்ன சார்ன்னு சொல்லிக்கிட்டு? மாமான்னு சொல்லுங்க மாப்ள”
“சரிங்க மாமா”
“கல்யாணம் எங்க வச்சிக்கலாம் மாப்ள?”
“முன்னாடி நாம பேசி முடிச்ச மாதிரியே கல்யாணம் வச்சிக்கலாம் மாமா”
“சரி மாப்பிள்ளை, எல்லா ஏற்பாடும் பண்ணுங்க. உங்க அம்மா மட்டும் ஏதாவது பிரச்சனை பண்ணாம பாத்துக்கோங்க. அப்புறம் நான் கல்யாணத்துக்கு சம்மதிச்ச விஷயத்தை நீங்களே கயல் கிட்ட சொல்லிருங்க. நீங்க சொன்னா அவ இன்னும் சந்தோஷப் படுவா”
“சரி மாமா, நானே அவ கிட்ட பேசிக்கிறேன். சிதம்பரம் மாமா கிட்ட எல்லாம் பேசிட்டு உங்களைக் கூப்பிடுறேன். அம்மாவை நான் பாத்துக்குறேன் மாமா”, என்று சொல்லி போனை வைத்தவன் சிதம்பரத்தை அழைத்து விஷயத்தைச் சொன்னான். அவருக்கும் சந்தோசமே. “நாளைக்கு எல்லாம் பேசலாம் டா”, என்று சொல்லி போனை வைத்தார். சேகருக்கும் அழைத்து தகவலைச் சொல்லி வைத்து விட்டான். சேகருக்கும் சந்தோசமே. ஆனால் அனைவரின் மனதிலும் சரோஜா என்ன செய்வாளோ என்று பயமாக தான் இருந்தது.
இரவு தூங்குவதற்கு முன் கயலை அழைத்தான் தமிழ். அதை எடுத்தவள் “சொல்லுங்க, சாப்பிட்டீங்களா?”, என்று கேட்டாள்.
“சாப்பிட்டேன் கயல், தூங்கிட்டியா?”
“இல்லை, தூக்கம் வரலை”
“ஏன் என்ன ஆச்சு?”
“ஏதோ தனிமைல இருக்குற மாதிரி இருக்கு. இவ்வளவு நாள் இப்படி தான் இருந்தேன். ஆனா இன்னைக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? முதல் நாள் பஸ்ல வச்சு பாத்தோமே? அன்னைக்கு தான் நான் நிம்மதியா தூங்கினேன். பொண்ணு பாக்க வந்த அன்னைக்கும் தான். ஆனா இப்ப தூங்க முடியலை”
“என் கிட்ட வந்துறியா கயல்? கண்டிப்பா உன்னை நல்லா பாத்துக்குவேன் டி”
“நீங்க நல்லா பாத்துக்குவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா என்னால வீட்டை விட்டு வர முடியாது. அந்த தைரியம் எனக்கு இல்லை”
“வேண்டாம் டி, நான் அப்ப அப்படி கேட்டது கூட தப்புன்னு புரிஞ்சிருச்சு. இனி கேக்க மாட்டேன்”
“அப்படின்னா… என்னை மறந்துருவீங்களா?”
“அது என் உயிர் இருக்குற வரைக்கும் முடியாது. இந்த ஜென்மத்துல மட்டும் இல்லை. எல்லா ஜென்மத்துலயும் நீ தான் என்னோட பொண்டாட்டி. அதுவும் நம்ம கல்யாணம் கண்டிப்பா உங்க அப்பா சம்மதத்தோட தான் நடக்கும்”
“நிஜமா நடக்குமா? அப்பா சம்மதிக்கலைன்னா என்ன பண்ண?”
“என்ன பண்ணனு நீ தான் சொல்லணும். என்னை மறந்துட்டு வேற ஒரு நல்ல அழகான பையனைக் கல்யாணம் பண்ணிக்கோ”, என்று அவன் சொல்ல அடுத்து அவளிடம் இருந்து பதிலே இல்லை.
“கயல் லைன்ல இருக்கியா?”, என்று அவன் கேட்க அவளது விசும்பல் ஒலி தான் கேட்டது.
“அழுறியா கயல்? சாரி டி. நான் அப்படிச் சொல்லிருக்க கூடாது. கவலைப் படாதே கயல். நமக்கு அந்த நிலைமை வராது. கண்டிப்பா உங்க அப்பா சம்மதிப்பாங்க”
“நிஜமா சம்மதிப்பாங்களா?”, என்று ஏக்கமாக கேட்க “கண்டிப்பா சம்மதிப்பாங்க. அப்புறம், நாளைக்கு வீட்ல இருந்து கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி திருநெல்வேலி வரியா? பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணுறேன். உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ஒரு பத்து நிமிஷம் தான்”, என்று கேட்டான்.
“சரி வரேன்”, என்று உடனடியாக சம்மதம் சொன்னாள்.
“என்ன டி உடனே சரின்னு சொல்லிட்ட? கண்டிப்பா நீ முடியாதுன்னு சொல்லுவேன்னு நினைச்சேன். உங்க வீட்ல ஏதாவது சொல்லுவாங்கன்னு உனக்கு பயமா இல்லையா?”
“பயமா இருக்கு தான். ஆனா அதை விட உங்களை பாக்கணும்னு ஆசையா இருக்கு. அதான். உங்களைப் பாக்குற சந்தோஷம் போதும். அதுக்கு அப்புறம் வீட்ல மாட்டினா என்ன? சித்தி சூடு போடுவாங்க. அது எனக்கு என்ன புதுசா?”, என்று அவள் சிறு சிரிப்புடன் கேட்க அவனுக்கு தான் வேதனையாக இருந்தது.
“சேகர் அண்ணா சொன்னாங்க டி. உன் சித்தி உன்னை ரொம்ப அடிப்பாங்களா கயல்?”
“சே சே, அடிக்கவே மாட்டாங்க. என்னை அடிச்சு அவங்க கையை எப்படி புண்ணாக்கிக்குவாங்க? சூடு மட்டும் தான் வைப்பாங்க”, என்று சொல்ல அடுத்து அவனுக்கு வார்த்தையே வர வில்லை.
ஏதோ இப்போது அவளுக்கு அடி பட்டது போல அவன் உள்ளத்தில் வேதனை எழுந்தது. ஒரு சிறு பெண்ணை இந்த அளவுக்கு டார்ச்சல் செய்த வேணியை ஏதாவது செய்ய வேண்டும் என்று வெறி உள்ளுக்குள் எழுந்தது.
அடுத்த நாள் காலை கொஞ்சம் சீக்கிரம் எழுந்து எல்லா வேலையையும் முடித்து விட்டு கிளம்பினாள் கயல். எப்போதும் அவளது ஈ.பி அலுவலகம் இருக்கும் ஸ்டாப்பில் இறங்குபவள் இன்று பஸ் ஸ்டாண்ட் சென்று நின்றாள்.
இறங்கி நின்று அவனை அழைத்தவள் “நான் வந்துட்டேன். நீங்க எப்ப வருவீங்க?”, என்று கேட்டாள்.
“கொஞ்சம் திரும்பி பாரு”, என்று சொல்ல ஆவலாக திரும்பி பார்த்தவள் அவனைக் கண்டு மேலும் மலர்ந்தாள்.
பச்சை வண்ண காட்டன் சுடிதார் அணிந்து தோளில் ஹேன்ட் பேகும் மற்றொரு கையில் லஞ்ச் பேகுமாக அவள் நிற்க அந்த எளிய தோற்றம் கூட அவனைக் கவர்ந்தது.
“நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா?”
“இல்லை, இப்ப தான் வந்தேன். ஊர்ல இருந்தே நான் வர பஸ்ல தான் உன்னை வரச் சொல்லணும்னு நினைச்சேன். ஆனா நம்ம ஊர்க்காரங்க யாராவது பாத்தா தேவையில்லாம பேச்சு வரும். அதான்”
“அதுவும் சரி தான்”, என்று சொன்னவளுக்கு அப்போது தான் அவன் முகத்தில் இருந்த சோர்வு கண்ணில் பட்டது. “உடம்புக்கு முடியலையா? ஏன் சோர்வா இருக்கீங்க?”
“காலைல இருந்து லேசா காச்சல் அடிக்கிற மாதிரி இருந்துச்சு. ஆனா உன்னைப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான் உன் கிட்ட எதுவும் சொல்லலை”
“ஐயோ காச்சலா? ஆஸ்பத்திரி போகலாமா?”, என்று கேட்டுக் கொண்டே அவனை நெருங்கி அவன் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள்.
அவள் தொடுகை அவனுக்கு ஜில்லென்ற குளிரைத் தான் கொடுத்தது. உடலில் இருந்த வெம்மை இன்னும் அதிகமான உணர்வை அடைந்தான். அவன் முகத்தில் இருந்த திகைப்பையும் அவன் கண்களில் இருந்த ஆர்வத்தையும் கண்டவளுக்கு தான் தொட்டது அவனுக்கு பிடித்திருக்கிறது என்பதை புரிய வைத்தது. அது அவளுக்குள் சிறு குறுகுறுப்பை தந்தது.
அவள் தடுமாற்றம் புரிந்து “இப்ப காச்சல் இல்லை டி, லேசா தலைவலிக்கு அவ்வளவு தான். சரி வெளிய இருக்குற ரெஸ்டாரண்ட் போகலாமா?”, என்று கேட்டான்.
“சரி”, என்று சொன்னதும் அவனுடன் நடந்த படி “நீங்க இன்னைக்கு வேலைக்கு போகலையா?”, என்று கேட்டாள்.
“ரெண்டு மணி ஷிப்ட் போகணும்”, என்று சொல்லி அழைத்துச் சென்றான்.
ரெஸ்டார்ண்டில் அமர்ந்ததும் “என்ன சாப்பிடுற?”, என்று கேட்டான்.
“நான் வீட்ல சாப்பிட்டுட்டு வந்துட்டேன். நீங்க தான் டயர்டா இருக்கீங்க. சாப்பிடுங்க”
“இல்லை, வேண்டாம்”
“நான் சாப்பிட்டா சாப்பிடுவீங்களா?”, என்று கேட்க ஆம் என்று தலையசைத்தான்.
“சரி எனக்கு ரெண்டு இட்லி. உங்களுக்கும் அதையே சொல்லுங்க”, என்று சொல்ல அவனும் ஆர்டர் செய்தான்.
உணவு வந்ததும் அமைதியாக உணவு உண்டு கொண்டிருந்தாலும் அவள் புருவங்கள் உயர்ந்திருப்பது அவள் எதையோ யோசிப்பதை உணர்த்த “என்ன கயல்? சாப்பிடும் போது என்ன யோசனை?”, என்று கேட்டான்.
“இல்லை எனக்கு நினைவு தெரிஞ்சு முதன்முதலா ஹோட்டல்ல உக்காந்து சாப்பிடுறது இப்ப தான். எங்க வீட்ல என்னை எல்லாம் ஹோட்டல்க்கு கூட்டிட்டு போக மாட்டாங்க. அதை தான் நினைச்சேன்”, என்று சொல்ல அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.
அவன் அவளை வேதனையாக பார்க்க சிறு சிரிப்புடன் அவனைப் பார்த்தவள் “சாப்பிடுங்க”, என்றாள்.
சாப்பிட்டு முடித்த பிறகு அவளுக்கு டீ வேண்டுமா என்று கேட்டு அவள் வேண்டாம் என்றதும் அவனுக்கு மட்டும் டீ சொன்னான். டீ வரவே அதை குடிக்க ஆரம்பித்தான். “இப்பவாது சொல்லுங்களேன், எதுக்கு என்னை வரச் சொன்னீங்க? ஏதோ முக்கியமான விசயம்னு வேற சொன்னீங்க?”, என்று கேட்டாள்.
“அதுவா? என்னைக்கு கல்யாணம் பண்ணலாம்னு கேக்க தான் வரச் சொன்னேன். டேட் பிக்ஸ் பண்ணனும். உன்னோட வசதியைப் பாத்து சொல்லு”
“என்ன? விளையாடுறீங்களா? கல்யாணமா?”
“ஏய் நிஜமா தான் டி சொல்றேன். இனி எல்லாம் உன்னை அங்க விட்டு வைக்கிறதா இல்லை. இனி என் கூடவே தான் நீ இருக்கணும். அதுக்கு சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கணும். நான் முடிவு பண்ணிட்டேன்”
“நீங்க சொல்றது எல்லாம் சரி தான். ஆனா நமக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? எங்க வீட்லயும் சரி உங்க வீட்லயும் சரி ஒத்துக்கலையே?”
“யார் சொன்னா? நேத்தே உங்க அப்பா என்னை மாப்ளன்னு கூப்பிட்டு நாள் குறிக்க சொல்லிட்டார்”
“என்னது?”, என்று கேட்டவளின் கண்கள் விரிந்தது.
“ஆமா டி, இதைச் சொல்ல தான் கூப்பிட்டேன். இப்ப உன் கண்ணு அதிர்ச்சியில் விரிஞ்சிருக்கு பாத்தியா? இதை நேர்ல பாக்க தான் வரச் சொன்னேன்”
“நிஜமாவே அப்பா சரின்னு சொன்னாங்களா?”
“ஆமா?”
“எப்படி? திடீர்னு எப்படி சரின்னு சொன்னாங்க?”
“எல்லாம் உன்னால தான்”
“என்னாலயா?”
“ஆமா, நீ உன் அப்பா கிட்ட பேசினியாமே? அதைக் கேட்டு எனக்கு கால் பண்ணி சரின்னு சொல்லிட்டார். நானும் எங்க மாமா கிட்ட சேகர் அண்ணன் கிட்ட பேசிட்டேன். நீ இப்ப தேதி பாத்து சொன்னா நான் போய் சொல்லிருவேன்”, என்று சொல்ல அவளால் இன்னும் நம்பவே முடிய வில்லை.
“உண்மையாவா? என்னால நம்ப முடியலை”
“இப்ப நம்புவ பாரேன்”, என்று சொன்னவன் டேபிள் மீதிருந்த அவளது கையில் மெதுவாக கிள்ளி வைத்தான்.
“ஆ”, என்றவள் மலர்ந்து சிரித்தாள். ஏதோ உலகையே உள்ளங்கையில் அடைத்த திருப்தி வந்தது அவளுக்கு.
“இப்ப சொல்லு டி, என்னைக் கட்டிக்க சம்மதமா? உன்னோட ஆயுள் முழுக்க என் கைக்குள்ள ஆயுள் கைதியா இருக்க சம்மதமா சொல்லு?”, என்று அவன் கேட்க அவள் உடல் சிலிர்த்தது.
“இதை விட பெரிய சந்தோஷம் எனக்கு என்ன இருக்க போகுது? சம்மதம் சம்மதம் சம்மதம் போதுமா?”, என்று சிரித்தாள்.
அதற்கு பின்னரும் சிறிது நேரம் பேசி விட்டு பஸ் ஏறினார்கள். அவளை அவளது ஆபிஸ் இருக்கும் ஸ்டாப்பில் இறங்கச் சொன்னவன் தன்னுடைய வீடு நோக்கி பயணமானான். மனதிலோ ஒரு பைக் வாங்கணும் என்று மனதில் குறித்துக் கொண்டான்.
தொடரும்……