“நான் உங்களை சம்மதிக்க வைக்க என்ன பண்ணணும்னு சொல்லுங்க சார்? கயல் என் கூட இருந்தா தான் சந்தோஷமா இருப்பா. வேற யாராலயும் அவளை நல்லா பாத்துக்க முடியாது சார். பிளீஸ் புரிஞ்சிக்கோங்க”
“நீங்க நல்லவர் தான் தம்பி. ஆனா உங்க அம்மா…… அவங்க வந்து என் பொண்ணை உங்களுக்காக கேப்பாங்களா? அப்படிக் கேட்டா நான் கட்டி வைக்கிறேன். உங்க அம்மாவைக் கூப்பிட்டு வந்து கல்யாணம் பேசுங்க. இப்ப கிளம்புங்க”, என்று கை கூப்ப அதற்கு மேல் அவன் என்ன பேசுவானாம்? ஆனால் சரோஜா என்ன மனிதப் பிறவியா அவளை சம்மதிக்க வைக்க?
அடுத்து வந்த நாட்களில் பைத்தியக்காரன் போல திரிந்தான் தமிழ். அதை பார்த்த சரோஜா “என்னை என்னன்னு நினைச்ச? நான் உன் அம்மா டா. உன் வாழ்க்கை என் இஷ்டப் படி தான் அமையும்”, என்ற இறுமாப்புடன் சொன்னாள். இவளை திருத்துவது இயலாத காரியம் என்று புரிந்து போனது. சிதம்பரம் மற்றும் மீனாட்சிக்கு கூட கஷ்டமாக தான் இருந்தது. சிதம்பரமும் தொலைபேசியில் சமுத்திரத்திடம் பேசிப் பார்த்து விட்டார். ஆனால் எதுவும் மாற வில்லை.
“இந்த பய வாழ்க்கை ஏன் இப்படி இருக்கு? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மீனாட்சி. அந்த பொண்ணு எவ்வளவு அழகா அம்மன் சிலையாட்டம் இருக்குறா? ஆனா உன் மதினி இப்படி பண்ணுறாளே? ரொம்ப வேதனையா இருக்கு டி”, என்று மனைவியிடம் புலம்பினார்.
“அவ பண்ணுற அழிச்சாட்டியத்துக்கு அந்த கடவுளுக்கு அவ கணக்கு கொடுக்கணும்ங்க. பெத்த பிள்ளையை நிம்மதியா இருக்க விடலைன்னா அவ என்ன பொம்பளை? தமிழுக்கு கண்டிப்பா கடவுள் ஏதாவது வழி காட்டுவார்”, என்று கணவனுக்கு மட்டும் அல்ல தனக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டாள் மீனாட்சி.
இதற்கு ஒரே தீர்வு யாருக்கும் தெரியாமல் கயலை திருட்டுத் தனமாக திருமணம் செய்வது தான் என்று தோன்றியது தமிழுக்கு. சிதம்பரம் அவன் திருமணத்தை நன்றாக நடத்தி வைப்பார் தான். ஆனால் இப்போது இந்த திருட்டுக் கல்யாணத்தில் அவர் கலந்து கொண்டால் அவருக்கு வீணாக கெட்ட பெயர் வரும் என்பதால் தானே இதைச் செய்ய முடிவு எடுத்தான். ஆனால் இவ்வளவு பெரிய விசயத்துக்கு கயல் எப்படி சரி என்று சொல்லுவாள் என்று குழப்பம் வந்தது.
அவள் அவனை இரண்டு முறை பார்த்திருக்கிறாள். ஒரு முறை போனில் பேசியிருக்கிறாள். அப்படி இருக்க அவனை நம்பி பிறந்த வீட்டை விட்டு வருவாளா? அப்படி அவள் வர வேண்டும் என்று நினைப்பது கூட பேராசையாக தான் தோன்றியது.
அவளிடம் பேசிப் பார்க்க வேண்டும் என்று எண்ணி அவளை அழைத்தான் தமிழ்.
அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மொட்டை மாடியில் அமர்ந்து தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள் கயல். நீளமான தலை முடியை விரல்களால் சிக்கு எடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளது போன் அடித்ததும் எடுத்துப் பார்த்தாள். தமிழ் என்றதும் ஆர்வமாக அதை எடுத்து காதில் வைத்தவள் “ஹலோ”, என்றாள்.
அவள் குரலில் இருந்த துள்ளலில் மனம் நனைந்தவன் “என்ன பண்ணுறீங்க மேடம்?”, என்று கேட்டான்.
“என்னோட உயர் அதிகாரி கிட்ட இருந்து எப்ப டா கால் வரும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் போதுமா?”
“ஐயோ அப்படியா? நான் அப்றம் கூப்பிடவா?”
“நான் உங்களைத் தான் சொன்னேன்”, என்று அவள் சிரிக்க “ஹா ஹா”, என்று தமிழும் வெகு நாட்களுக்கு பிறகு மனம் விட்டுச் சிரித்தான்.
“நான் இப்படி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு கயல். எல்லாம் உன்னால தான். தேங்க்ஸ்”, என்று அவன் சொல்ல “இங்கேயும் அதே கதை தான்”, என்றாள்.
“எனக்கு தெரியும் கயல். எல்லாம் சேகர் அண்ணா சொன்னாங்க. இனி உனக்கு கவலையே வராது டி. நான் உன்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவேன்”
“நமக்கு கல்யாணம் நடக்குமா? நடத்தி வைப்பாங்களா? அப்பா வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. (https://wbctx.com) இப்ப உங்க கூட பேசுறது வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு கூட தெரியலை. ஆனா என்னால உங்க கிட்ட பேசாம இருக்க முடியலை”
“கயல் நான் ஒண்ணு சொல்லட்டா? பேசாம நாமளே கல்யாணம் பண்ணிக்கலாமா? நான் இப்படி கேக்குறது தப்புன்னு எனக்கே தெரியும். ஆனா எனக்கு வேற வழி தெரியலை கயல். வாழ்க்கைல நிறைய போராடிட்டேன். இதுக்கு மேல போராட எனக்கு தெம்பு இல்லை. எங்க நீ எனக்கு இல்லாம போயிருவியோன்னு பயமா இருக்கு டி”, என்று சொல்ல அவள் எதுவுமே பேச வில்லை. என்ன சொல்வாளாம்? அதிர்ச்சியாக அமர்ந்திருந்தாள். அவன் எளிதாக சொல்லி விட்டான். ஆனால் உடனடியாக செய்யக் கூடிய விஷயமா இது?
“என்ன கயல் பதில் சொல்ல மாட்டிக்க? நம்ம கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையா? எனக்கும் வேற வழி தெரியாம தான் டி கேக்குறேன். நீ சம்மதிக்கிறதும் கஷ்டம் தான். கண்டிப்பா உனக்கு பயம் இருக்கும். என் பக்கமும் அப்படி தான். நான் திருட்டுக் கல்யாணம் பண்ணினா என்னோட தங்கச்சிகளை கட்டிக் கொடுத்த வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை. எங்க அம்மா என்ன பிரச்சனை பண்ணும்னு தெரியலை. மாமா, சேகர் அண்ணா எல்லாரும் என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை. ஆனா யார் என்ன சொன்னாலும் எனக்கு நீ வேணும் போல இருக்கு டி”, என்று சொல்ல அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவள் அமைதி அவனைக் கொன்று கொண்டிருந்தது தான். ஆனால் அவள் மனதும் அவனுக்கு புரிந்தது. “நான் உன்னைக் கட்டாயப் படுத்தலை கயல். எனக்கு கேக்கணும் போல இருந்துச்சு. அதான் கேட்டுட்டேன். விருப்பம் இல்லைன்னா விட்டுரு. நாம வேற ஏதாவது யோசிக்கலாம். சரி நான் அப்புறம் பேசுறேன்”, என்றான்.
அதற்கும் அவள் அமைதியாக இருக்க “சாரி கயல், கஷ்டப் படுத்திட்டேனா?”, என்று கேட்டான்.
“அப்படி எல்லாம் இல்லை, ஆனா என்னால முடிவு சொல்ல முடியலை”
“புரியுது டி. விடு பாத்துக்கலாம். நைட் பேசுறேன்”, என்று சொல்லி வைத்து விட்டான்.
“எனக்கும் உங்க கூட இருக்கணும் போல இருக்கு. நீங்க கூப்பிட்டதும் உங்க பின்னாடி வந்துறனும் போல இருக்கு. ஆனா பயமா இருக்கே? நான் என்ன பண்ண?”, என்று எண்ணி அழுது கொண்டிருந்தாள். அப்போது யாரோ தன்னை உத்துப் பார்க்கும் உணர்வு வர தலையை திருப்பிப் பார்த்தாள். அவளைக் கூர்மையாக பார்த்த படி நின்றிருந்தார் சமுத்திரம்.
அவரைக் கண்டதும் திகைத்து அவசரமாக கண்ணீரைத் துடைத்து விட்டு தலை குனிந்து நின்றாள். “எப்ப வந்தார்ன்னு தெரியலையே? போன்ல யாருன்னு கேட்டா என்ன சொல்ல? போன் பேசினதைக் கேட்டாரா? எதுக்கு அழுதேன்னு கேட்டா என்ன சொல்ல?”, என்று பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தது.
நிதானமாக அவளை நெருங்கிய சமுத்திரம் அவள் அருகே ஒரு பார்சலை வைத்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தார். அவள் குனிந்த படி இருக்க “யாரு கயல் போன்ல?”, என்று கேட்டார்.
“அது…. அது வந்து….”, என்று அவள் நடுங்க “எனக்கு உண்மை வேணும்”, என்று உறுதியாக வந்தது அவர் குரல்.
“தமிழ் தான் பேசினாங்க”
“நான் தான் தெளிவா சொல்லிட்டேனே? அப்புறம் எதுக்கு உனக்கு கால் பண்ணுறான்? சரி என்ன சொன்னான்?”
…..
“உன் கிட்ட தான் கேக்குறேன் கயல். அவன் என்ன சொன்னான்?”
“அது… கல்யாணம்…. கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டாங்க…”
“எவ்வளவு திமிர் இருந்தா அப்படி கேட்டுருப்பான். எவ்வளவு படிச்சு படிச்சு சொல்லிருப்பேன்? ஆனாலும் இப்படி பேசி சின்னப் பொண்ணு மனசை கலைக்கப் பாக்குறானா? இன்னைக்கு இருக்கு அவனுக்கு? நான் நேர்ல போய் சத்தம் போட்டுட்டு வரேன். இந்த கல்யாணம் நடக்கவே நடக்காதுன்னு அவனுக்கு புரிய வச்சிட்டு வரேன்”, என்று கோபத்துடன் சொன்னவர் அங்கிருந்து செல்லப் பார்க்க “அவரைக் கேள்வி கேக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?”, என்று நிறுத்தி நிதானமாக கேட்டாள் கயல்.
கயல் அப்படிக் கேட்டதும் ஒரு நொடி அதிர்ந்த சமுத்திரம் திரும்பி அவளைப் பார்த்து “இப்ப நீ என்ன சொன்ன?”, என்று கேட்டார்.
“தமிழை சத்தம் போட உங்களுக்கு என்ன உரிமை இருக்குனு கேட்டேன்? இந்த கல்யாணம் நடக்காதுன்னு நீங்க எப்படிச் சொல்லலாம்? முதல்ல நீங்க எனக்கு யாரு?”, என்று அவ்வளவு தீர்க்கமாக அவரை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள். இத்தனை நாள் அப்பா என்று அவரிடம் உரிமையாக பேசியதில்லை தான். எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று அவரிடம் கேட்டதில்லை தான். ஆனால் இப்போது அவள் பேசியாக வேண்டும். தமிழை அவர் ஏதாவது சொன்னால் அவள் எப்படி அதை பொறுத்துக் கொள்வாள்? அதனால் தான் கோபத்தில் கத்தி விட்டாள்.
“நான் யாரா?”, என்று திகைப்பாக கேட்டார் சமுத்திரம்.
“ஆமா நீங்க எனக்கு யாரு?”
“நான் உன்னைப் பெத்த அப்பா கயல்”
“உயிர் கொடுத்தவன் எல்லாம் அப்பா ஆகிற முடியாது”
“கயல்…. நான் ….”
“வேண்டாம், எதுவும் சொல்ல வேண்டாம். கவலைப்படாதீங்க நான் உங்க சம்மதம் இல்லாம தமிழைக் கல்யாணம் பண்ண மாட்டேன். ஏன்னா நான் வீட்டை விட்டுப் போனா கயல் ஓடிப் போய்ட்டான்னு சொல்ல மாட்டாங்க. சமுத்திரம் பொண்ணு ஓடிப் போய்ட்டான்னு தான் பேசுவாங்க. அந்த கெட்ட பெயரை உங்களுக்கு கொடுக்க மாட்டேன். ஏன்னா இத்தனை நாளும் எனக்கு சாப்பாடு போட்டு இருக்க இடம் கொடுத்து கவனிச்சிக்கிட்டவங்களுக்கு நன்றியோட இருக்கணும்னு எனக்கு தெரியும். ஆனா நீங்க தமிழைக் கேள்வி கேக்க கூடாது. அவரை அவன் இவன்னு பேசினா நான் அதை கேட்டுட்டு இருக்க மாட்டேன். இது வரைக்கும் நீங்க எனக்கு அப்பாவா இருந்தது இல்லை. இனியும் அப்படியே இருங்க. திடீர்னு அப்பாவா மாற முயற்சி செஞ்சா எனக்கு நெஞ்சு வெடிச்சிரும். இப்ப நீங்க போகலாம். இன்னும் ஒரு நிமிஷம் நீங்க இங்க இருந்தாலும் உங்க மனைவியும் மகளும் இங்க தேடி வந்துருவாங்க. நான் கொஞ்சம் தனியா இருக்கணும்”, என்று சொல்லி முகம் திருப்பி நின்றாள்.
“கயல் இந்த அளவுக்கு பேசுவாளா?”, என்று வியந்து போய் நின்றார் சமுத்திரம். இது வரை கயலின் குரல் அந்த வீட்டில் ஒலிக்கவே செய்யாது. ஏதாவது கேள்வி கேட்டால் ஆம் இல்லை என்ற பதில் தான் வரும். இந்த அளவுக்கு அவளுக்கு நீளமாக பேசத் தெரியும் என்று கூட அவருக்கு இப்போது தான் தெரியும்.
தமிழை இவளுக்கு இந்த அளவுக்கு பிடிக்குமா என்று வியப்பாகவும் இருந்தது. அப்பா என்ற உறவின் மேல் அவளுக்கு இவ்வளவு வெறுப்பா என்று அதிர்ச்சியாகவும் இருந்தது.
“சரி கயல், நான் போறேன். அந்த பையனை நான் எதுவும் சொல்லலை. மசாலா பூரி வாங்கிட்டு வந்தேன், அதையாவது சாப்பிடு”
அவரை குழப்பமாக திரும்பிப் பார்த்தவள் “இது என்ன புதுசா? நீங்க எது வாங்கித் தந்தாலும் உங்க கைல இருந்து ஒருநாளும் என் கைக்கு வந்தது இல்லை. இனியும் அப்படியே இருக்கட்டும். எப்பவும் போல கிச்சன்ல வச்சிருங்க. முதல்ல இதை எனக்கு கொடுக்க வர உங்களை எப்படி அனுமதிச்சாங்கன்னு தெரியலையே?”, என்று நக்கலாக கேட்டாள்.
“நீ பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு கயல். நான் உன் அப்பா டா. ஆனா உன் கோபம் எனக்கு புரியுது. தயவு செஞ்சு இதைச் சாப்பிடு மா”
“நான் இதை சாப்பிட மாட்டேன்னு சொல்லவே இல்லையே? நீங்க கிச்சன்ல இதை எப்பவும் போல வச்சிருந்தா நான் இது கடவுள் எனக்கு கொடுத்ததுன்னு நிம்மதியா சாப்பிடுவேன். ஆனா உங்க கையால வாங்கினா ஏதோ தெரியாத ஆள் கிட்ட பிச்சை எடுத்த மாதிரி இருக்கும்”, என்று சொல்ல அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் அந்த பார்சலை எடுத்துக் கொண்டு கீழே வந்து விட்டார்.
பார்சலுடன் திரும்பி வந்தவரை வேணியும் சித்ராவும் வியப்பாக பார்த்தார்கள். ஏனென்றால் சற்று நேரத்திற்கு முன் அவர் அதை வாங்கி வந்ததும் அவர்களிடம் கொடுத்து விட்டு “இது கயலுக்கு”, என்றார்.
“அதை அங்க கிச்சன்ல வைங்க. அவ அப்புறம் சாப்பிட்டுக்குவா”, என்று சொன்னாள் வேணி.
“இது சூடா சாப்பிட்டா தான் வேணி நல்லா இருக்கும். மாடில தானே இருப்பா? நான் போய்க் கொடுத்துட்டு வரேன்”
“அது எப்படி இருந்தாலும் சரி, நீங்க எதுக்கு கொண்டு போகணும்?”
“அப்ப நீ கொண்டு போ. இல்லைன்னா சித்ரா கொண்டு போகட்டும்”
“நாங்க போக மாட்டோம். அவ பெரிய மகாராணி”, என்றாள் சித்ரா.
“அப்ப நான் போய் கொடுத்துட்டு வரேன். சூடு ஆறிருச்சுன்னா நல்லாவே இருக்காது”, என்று விவாதம் செய்து தான் மேலே வந்திருந்தார். அதை சரியாக புரிந்து கொண்டு வார்த்தை என்னும் வாள் கொண்டு அவரை விளாசி விட்டாள் அவரது மகள்.
அடுத்து வந்த நிமிடங்கள் முழுவதும் யோசனையில் ஆழ்ந்து விட்டார் சமுத்திரம். கயல் வாழ்க்கைக்கு ஏதாவது வழி வகை செய்ய வேண்டும் என்று அவர் மனது முடிவு செய்தது. என்ன என்ன செய்ய வேண்டும் என்று மனதுக்குள் பட்டியல் இட்டார். அவள் பேசியதை வைத்தே அவளுக்கு தமிழை எந்த அளவுக்கு பிடித்து விட்டது என்று புரிந்தது. அது மட்டுமில்லாமல் தமிழும் அந்த அளவுக்கு கயலுக்காக தன்னிடம் கெஞ்சியதை எண்ணிப் பார்த்தார்.
ஒரு தந்தையாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தயார் ஆனார். அன்று இரவே வேணியிடம் அதை பற்றி பேச முடிவு எடுத்தார். அவர் சரி என்று சொன்னால் அவள் ஏதாவது குழப்புவாள் என்பதால் வேறு மாதிரி பிளான் செய்தார்.