அத்தியாயம் 6_ 1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,633
அத்தியாயம் 6
வேண்டும் என்று தவிக்கும்
வரமும் நீ தான்,
வேண்டாம் என்று நினைக்கும்
சாபமும் நீ தான்!!!
விக்ரம் மற்றும் ரேகா இருவரும் அக்னியை வலம் வர ஆரம்பிக்கும் போது ஐயர் இருவரின் கைகளையும் பிணைக்க அந்த தொடுகையை இருவரின் மனதும் விரும்பியே ஏற்றது. அவளுக்கு அவன் மெட்டி அணிவித்ததும் “பெரியவங்க காலில் விழுந்து வணங்குங்க”, என்றார் ஐயர்.
பெரியவர்கள் காலில் விழும் போது சாரதா சேதுபதி காலில் தான் முதலில் விழுந்தார்கள். மருமகளை அனைத்து உச்சி முகர்ந்து “ரெண்டு பேரும் நூறு வருஷம் நல்லா இருக்கணும்”, என்று சொல்லி மனமார வாழ்த்தினாள் சாரதா. “நல்லா இருங்க”, என்று வாழ்த்தினார் சேதுபதி. அப்போது தான் அவரை முதன்முதலில் பார்த்தாள் ரேகா.
அதன் பின் விக்ரமின் உறவினர்களின் காலில் மணமக்கள் விழுந்தார்கள். மஞ்சுவின் மாமனார் மாமியார், ஆதித்யாவின் மாமனார் மாமியார் காலில் கூட விழுந்து வணங்கினார்கள். ஆனால் சங்கரன் குடும்பம் அங்கே எங்கயும் தென் படவில்லை. அவர்களை யாரும் தேடவும் இல்லை. கூடவே சங்கரன் குடும்பம் கண்ணில் படாதது ரேகாவுக்கு நிம்மதியாகவும் இருந்தது.
கண்டிப்பாக அவர்கள் தன்னை நன்றாக இருக்கும் படி வாழ்த்த மாட்டார்கள் என்று தெரியும். இதில் திருமணத்தை நிறுத்துவேன் என்று வேறு சொல்லி விட்டு இப்படிச் செய்ததால் அவர்கள் தன் மீது கொலை வெறியில் இருப்பார்கள் என்றும் அவள் அறிந்ததே. அதனால் கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தாள். கூடவே அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியும் இருந்ததால் அவளுக்கு அவர்களை எதிர்க் கொள்ள தைரியம் இல்லை.
அப்போது அங்கு வந்தார்கள் ரேகாவின் பெரியம்மாவும் பெரியப்பாவும். பின் அவர்களின் காலிலும் விழுந்து வணங்கினார்கள். ரேகாவின் மற்ற உறவினர்களும் வந்தார்கள். “இவங்க எல்லாம் எப்படி இங்க வந்தாங்க? இவங்களை எல்லாம் மாமா தான் கூப்பிட்டாரா?”, என்று எண்ணினாள் ரேகா.
சில நேரம் அவளது பெற்றோரை அதிகம் தேடியது அவளுக்கு. தன்னுடைய பெற்றோர்கள் கடவுளாக இருந்து தன்னை ஆசீர்வதிப்பார்கள் என்று எண்ணிக் மனதைத் தேற்றிக் கொண்டாள். அதனால் அவளுடைய சொந்தங்களின் வரவு அவளுக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் விக்ரமின் சொந்தங்கள் அதிகம் அவளுடைய கண்ணில் பட ரேகாவுக்கு கொஞ்சம் தனிமையில் இருப்பது போலவும் இருந்தது.
அருகில் இருந்த ரேகா கண் கலங்குவதை சில நேரம் விக்ரம் கவனித்தான் தான். ஆனால் அவளுக்கு எந்த ஆறுதலையும் அவன் சொல்ல வில்லை.
உனக்கு நான் இருக்கிறேன் என்று ஒற்றை வார்த்தை அவன் சொல்லியிருந்தால் அவள் தனிமை உணர்வு அவளை விட்டு விலகியிருக்கும். ஆனால் அவள் மேல் அவனுக்கு இருக்கும் கோபம் அவனை அவளிடம் பேச விட வில்லை.
இருவருமே மன உணர்வுகளால் போராடிக் கொண்டிருக்க ஐயர் சொன்ன சடங்குகள் மணமக்களின் மனநிலையை கொஞ்சம் மாற்றியது. சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர் மணமக்களை அருகில் இருந்த விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்தது.
மணமக்கள் மேடையை விட்டு இறங்கியதும் கோவிலுக்கு செல்வதற்கு கார் தயாராக இருந்தது. முதலில் விக்ரம் ஏறி அமர்ந்தான். அதன் பின் அவன் அருகே ரேகா ஏறி அமர்ந்ததும் கார் கிளம்பியது. மற்றவர்கள் வேறு காரில் சென்றார்கள்.
காரில் செல்லும் போது விக்ரம் மற்றும் ரேகா இடையே ஆழ்ந்த மௌனமே நிலவியது. சிறிது தூரம் சென்றதும் அவனை திரும்பி பார்த்தாள். மறுபடியும் அவன் முகம் இறுக்கமாக தான் இருந்தது. இப்போது அவனிடம் பேசவா வேண்டாமா என்று யோசித்து ஒரு வழியாக “வந்து உங்க கிட்ட… கொஞ்சம் பேசணும்”, என்று ஆரம்பித்தாள் ரேகா.
“வாயை மூடிட்டு வா. டிரைவர் இருக்குறது கண்ணுக்கு தெரியலை”, என்று அடி குரலில் அவன் வார்த்தைகளை கோபமாக சிதற விட அவள் வாய் கப்பென்று மூடிக் கொண்டது. முகத்தில் அடிப்பது போல அவன் பேசியதும் அவள் முகமும் வாடிப் போனது.
“டிரைவர் இருக்கார்னு அமைதியா சொல்லிருக்கலாம்ல? இப்படியா கத்தணும்? சரியான சிடுமூஞ்சி. இப்படி பேசுறவன் என்னமோ என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணின மாதிரியே எல்லாரும் சீன் போடுறாங்க”, என்று அவளால் நினைக்காமல் இருக்க முடிய வில்லை. அப்படி கத்திய பின் அவனுடன் பேச அவளுக்கு என்ன பைத்தியமா? அதனால அமைதியாக இருந்தாள்.
அவர்கள் கோவிலுக்கு வரும் முன்னே அங்கே காயத்ரி, மஞ்சு, ஆதித்யா, சுதாகர் நால்வரும் இருந்தார்கள். குருக்கள் பூஜை செய்ய அனைவரும் கடவுளை வணங்கினார்கள். பின் மீண்டும் வீட்டுக்கு கார் கிளம்பியது. வீட்டுக்கு வந்ததும் மஞ்சு தான் அவர்களுக்கு ஆலம் சுற்றினாள்.
வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்த ரேகா மனதில் சந்தோஷமும், அவன் பாரா முகத்தால் வந்த வருத்தமும் கலந்து இருந்தது.
“ரெண்டு பேரும் முதல்ல சாமி கும்பிடணும். வாங்க”, என்று பூஜை அறைக்கு இருவரையும் அழைத்து சென்ற மஞ்சு “இந்தா ரேகா, விளக்கேத்து”, என்று சொல்லி தீப்பெட்டியை அவள் கரத்தில் கொடுத்தாள்.
கருணை பொங்கும் அந்த பழனி ஆண்டவனைப் பார்த்தவள் “நான் விரும்பினவனையே எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்ட. நன்றி கடவுளே. நாங்க நல்ல படியா எங்க வாழ்க்கையை வாழனும். அதுக்கு நீ தான் துணையா இருக்கணும்”, என்று வேண்டினாள்.
தங்கள் வீட்டுப் பூஜையறையில் அவள் விளக்கேற்றுவதையும் தன்னருகே நின்று அவள் கரம் கூப்பி சாமி கும்பிடுவதையும் விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் அவள் திரும்பி தன்னைப் பார்த்ததும் பாராதது போல முகத்தை திருப்பிக் கொண்டான்.
அதன் பின்னர் அவனையும் அவளையும் சோபாவில் அமர வைத்து காயத்ரியும் மஞ்சுவும் அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்தார்கள். ஒரே ஸ்பூனை வைத்து மஞ்சு இருவருக்கும் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.
“பாத்தீங்களா மச்சான், சின்ன வயசுல இருந்து என் தம்பி அடுத்தவங்க எச்சில் பட்ட எதையும் சாப்பிட மாட்டான். ஆனா இன்னைக்கு ஒரே ஸ்பூன்ல சாப்பிடுறாங்க. இது தான் காலக் கொடுமை போல?”, என்று சொல்லி சிரித்தான் ஆதித்யா.
அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தார்கள். “அடுத்தவங்க எச்சியும், பொண்டாட்டி எச்சியும் ஒண்ணா மச்சான்? அதெல்லாம் மாற வேண்டிய நேரத்துல மாறி தானே ஆகணும்? அப்படி தானே விக்ரம்?”, என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சுதாகர்.
தன்னுடைய மானத்தை கப்பலேற்றும் அண்ணன் மற்றும் அக்கா கணவனை முறைத்த விக்ரம் பின் சிரித்து விட்டான். ரேகாவுக்கோ யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது. அவள் வெட்கத்தை ரசித்துப் பார்த்தான் விக்ரம். அவன் ரசனையான பார்வை அவள் கண்களுக்கு தெரியவில்லை.
அதன் பின் இருவரும் மணமேடைக்கு சென்றனர். நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் அனைவரும் இருவரையும் வாழ்த்தி பரிசுப் பொருள்களும், மொய்க்கவரும் கொடுத்தார்கள். உறவினர்கள் நகைகளை போட்டார்கள்.
ஆதித்யா மற்றும் காயத்ரி இருவரும் மணமக்களுக்கு பிரேஸ்லெட் போட்டு விட்டார்கள். மஞ்சு மற்றும் சுதாகர் இருவரும் அவர்களுக்கு மோதிரம் போட்டு விட்டார்கள்.
“என்ன அக்கா மாமா, வெயிட்டா செய்வீங்கன்னு பாத்தா ஒத்த பவுன்ல மோதிரத்தை போட்டு ஏமாத்திட்டீங்க?”, என்று சொல்லி சிரித்தான் விக்ரம்.
“டேய், உன் பொண்டாட்டிக்கு தாலி மட்டும் இல்லை, பதினொரு பவுன்ல தாலிசெயினும் அவர் தான் டா எடுத்தார்”, என்று அவசரமாக சொன்னாள் மஞ்சு.
“ஐயோ அக்கா விளையாட்டுக்கு தான் சொன்னேன்”, என்று விக்ரம் சொன்னதும் மஞ்சுவும் சிரித்தார்கள்.
“சீக்கிரம் எனக்கு மருமகனை பெத்துக் கொடுங்க. அவனுக்கு வெயிட்டா செஞ்சிறேன்”, என்று சொல்லி சிரித்தான் சுதாகர்.
சபாபதி மற்றும் சாரதா இருவரும் ரேகா கழுத்தில் ஒரு வைர நெக்லசைப் போட “அம்மா உங்க மருமகளுக்கு மட்டும் தானா? எனக்கு இல்லையா?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
“நம்ம வீட்டாள்களைத் தவிர வேற சொந்த பந்தம் எல்லாம் உனக்கு தான் எல்லாம் போடுறாங்க. அதனால நான் என் மருமகளுக்கு மட்டும் தான் போடுவேன்”, என்று சொல்லி சிரித்தாள் சாரதா.
“உன் சொந்தத்தில் இருந்து யாருமே உனக்கு எதுவும் போட வில்லை”, என்று குத்திக் காட்டாமல் அன்பாக பேசும் சாராதவைக் கண்டு நெகிழ்ச்சியில் கண் கலங்கினாள் ரேகா.
“ப்ச், என்ன இது? அவங்க உனக்கும் அம்மா தான். எப்பவுமே அவங்க உன் மேல அன்பா தான் இருப்பாங்க”, என்று யாருடைய கவனத்தையும் ஈர்க்கமல் அவளுக்கு ஆறுதல் சொன்னான் விக்ரம்.
அந்த ஒற்றை ஆறுதல் அவளுக்கு ஆயிரம் யானையின் பலத்தைக் கொடுத்தது. கண்கள் மின்ன, உதடுகள் சிரிப்பில் மலர அவனை பார்த்தால் அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
அதன் பின்னர் மதியம் இரண்டு மணி போல் மணமக்களுக்கு உணவு கொடுத்தார்கள். அங்கேயும் சுதாகர் மற்றும் ஆதித்யா இருவரின் கிண்டல் பேச்சு விக்ரமை தொடர்ந்தது.
போட்டோகிராபர் இருவரிடம் மாற்றி மாற்றி ஊட்டி விடச் சொல்ல இருவருமே சந்தோஷமாக அதை செய்தார்கள். உணவு முடிந்ததும் மறுவீட்டுக்கு செல்வது தான் வழக்கம். ஆனால் சங்கரன் அவர்களை அழைக்க வில்லை. அழைத்தாலும் விக்ரம் அங்கே சென்றிருப்பானா என்பது சந்தேகமே? அதனால் மணமக்கள் வீட்டுக்குள் சென்றனர்.