அத்தியாயம் 6_ 2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,696
அதன் பின்னர் இருவரையும் ரெஸ்ட் எடுக்க சொல்லி தனி தனி அறைக்கு அனுப்பி வைத்தார்கள். ரேகாவுடன் காயத்ரியும் மஞ்சுவும் இருந்தார்கள். ஏனோ அவர்கள் இருவரையும் நாத்தனாராகவும் சொக்காரியாகவும் ரேகாவால் நினைக்க முடியவில்லை. கூட பிறந்த சகோதரிகளைப் போலவும், தோழிகளைப் போலவும் தான் நினைக்கத் தோன்றியது.
“இந்தா இந்த நைட்டியை முதல்ல மாத்து. கச கசன்னு இருக்கும்”, என்று சொல்லி புது நைட்டியை தம்பி மனைவிக்கு கொடுத்தாள் மஞ்சு.
“அதுக்கு முன்னாடி இந்த நகை எல்லாம் கழட்டனும். இதை எல்லாம் வாடகைக்கு தானே வாங்கிருப்பாங்க. முதல்ல கொடுத்துறலாம். எனக்கு என் அம்மா நகையே போதும்”, என்று சொன்னாள் ரேகா. அவளுடைய அறியாமையான பேச்சை கேட்டு இருவரும் ரசித்து சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பை குழப்பமாக பார்த்தாள் ரேகா.
“ரேகா நீ போட்டுருக்குறது கவரிங் இல்லை. அது எங்க குடும்பத்து நகை. அதாவது என் பாட்டி என் அம்மாவுக்கு கொடுத்தாங்க. எங்க அம்மா உனக்கும் காயத்ரி அண்ணிக்கும் பகிர்ந்து கொடுத்துருக்காங்க. இது எல்லாமே தங்கம் தான். அம்மாவோட நகையும் அம்மா காலத்துக்கு அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் தான். நீங்க இதை உங்களோட மருமகளுக்கு கொடுப்பீங்க. இதெல்லாம் பல தலைமுறையா வரது”, என்று எந்த பொறாமையும் இல்லாமல் சொன்னாள் மஞ்சு.
“எல்லாம் தங்கமா?”, என்று வியந்து போய் கேட்டாள் ரேகா.
“ஆமா ரேகா, நாங்க கொடுத்த நகையை ஒண்ணு கூட விடாம உனக்கு போடணும்னு விக்ரம் உங்க அத்தையை மிரட்டினது உனக்கு தெரியாதா? அது மட்டுமில்லாம உன்னோட அம்மா நகை எல்லாம் உனக்கு உன் அத்தை கொடுத்ததுக்கு காரணமும் விக்ரம் தான்”, என்றாள் காயத்ரி.
அவள் அப்படிச் சொன்னதும் ரேகாவின் முகம் பல உணர்வுகளை பிரதிபலித்தது. கட்டாயம் அதை வார்த்தையால் வடிக்க முடியாது. அப்படி இருந்தது. அனைத்துக்கும் காரணம் விக்ரமா? தன்னுடைய வாழ்க்கையில் அவன் என்னவெல்லாம் செய்திருக்கிறான் என்று எண்ணி வியப்பாக இருந்தது.
அம்மா நகையை தனக்கு வாங்கிக் கொடுத்ததுக்காகவே அவனுக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும் என்று நினைத்தாள். அதன் பின் ரேகா எதுவுமே பேச வில்லை. அவள் நினைவுகள் முழுவதும் விக்ரமே நிறைந்திருந்தான். அவளுக்கு போட்டிருந்த அலங்காரத்தை கலைத்த மஞ்சுவும் காயத்ரியும் அவளை குளிக்கச் சொல்லி அவள் குளித்து முடித்து வந்ததும் அவளை தூங்கச் சொல்லி விட்டே வெளியே வந்தனர்.
“மாமா குடும்பம் யாருமே கண்ணில் படலை. எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டாங்களோ?”, என்று எண்ணிய ரேகா அந்த மெத்தையில் படுத்தாள்.
மனதில் வந்த நிம்மதியா? தன்னிடம் வந்து சேர்ந்த திருப்தியா? இனி விக்ரம் தனக்கு இருக்கிறான் என்ற நிறைவா? விருப்ப பட்டு முத்தமிட்டவனை மணந்த சந்தோஷமா? எதுவோ ஒன்று அவள் மனதை தென்றல் போல தாலாட்ட படுத்த உடன் ரேகா நன்கு தூங்கி விட்டாள். இரவு முழுவதும் அவள் தூங்க வில்லை என்பதால் அடித்துப் போட்டது போல தூங்க ஆரம்பித்தாள்.
ஆனால் தன்னுடைய அறைக்குள் வந்த விக்ரமுக்கு தான் தூக்கம் வந்த பாடில்லை. எல்லாவற்றையும் நினைக்கும் போது அவனுக்கு எரிச்சலாக வந்தது. “என் கிட்ட முத்தம் வாங்கினவ எப்படி வேற ஒருத்தனை கட்டிக்க தயாராகலாம்? அவ மனசுல நான் இருந்துருந்தா அவ என்ன சொல்லிருப்பா, என்னை எங்கயாவது கூட்டிட்டு போங்கன்னு தானே சொல்லிருப்பா. அதை விட்டுட்டு என்னைப் பேசக் கூட விடலையே? அப்ப என் கூட கொஞ்சி குலாவுனதுக்கு என்ன அர்த்தம்? நான் அவளை தொட்டது சாதாரண விஷயம் தானா? இப்ப நான் தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்ச பின்னாடி பல்லைக் காட்டுறா. இதுவே நான் இல்லாம இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பா? இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணி சராசரியான வாழ்க்கை தானே வாழ ஆரம்பிச்சிருப்பா. அப்ப இவ எப்படி பட்ட பொண்ணா இருப்பா? சரியான சுயநலவாதி, சந்தர்ப்பவாதி, யாருன்னே தெரியாத என்னை முத்தம் கொடுக்க வச்ச துரோகி. இவளையா உருகி உருகி காதலிச்சேன்? இவளை அடையுறதுக்கா அத்தனை திட்டம் போட்டேன்?”, என்று வேதனையாக எண்ணிக் கொண்டான்.
அவள் புறம் பொங்கி ததும்பும் காதலும், அளவிட முடியாத வெறுப்பும் என இரண்டு விதமான மனநிலையில் தத்தளித்தான் விக்ரம். அவனும் முந்தைய நாள் இரவு முழுவதும் தூங்க வில்லை தான். தன்னவளைக் காணப் போகிறோம் என்ற ஆவல் அவனை தூங்க விட வில்லை. அதிகாலையில் குளித்து கிளம்பி அவளை அழைக்க சென்றால் அவளோ அவனை பேசவே விடாமல் துரத்தி அடித்தாள். அதில் இருந்து அவனுக்கு நிம்மதி என்பதே இல்லை. பின்னர் தூக்கம் எங்கிருந்து வரும்? அந்த அறையிலே கூண்டுப் புலி போல உலாவிக் கொண்டிருந்தான்.
விக்ரமுக்கு இரவு எப்போது வரும் என்று இருந்தது. அவளை நாக்கைப் பிடிங்கிக் கொள்வது போல கேள்வி கேட்க வேண்டும் என்று குறியாக இருந்தான்.
வார்த்தை என்னும் கொடூர ஆயுதத்தால் விக்ரம் என்ற புலி தன்னை குத்திக் கீற காத்திருக்கிறது என்று தெரியாமல் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தாள் ரேகா.
அன்று மாலை ஏழு மணிக்கு வரவேற்பு என்பதால் ஐந்து மணிக்கு அவளை எழுப்பினாள் மஞ்சு. அவசரமாக எழுந்த ரேகாவுக்கு முதலில் எங்கே இருக்கிறோம் என்று கூட புரிய வில்லை.
“நேரம் ஆச்சு ரேகா. அதனால தான் எழுப்பினேன். நல்லா தூங்கினியா?”, என்று கேட்டாள் மஞ்சு.
“ஆமா அண்ணி, சாரி. ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல? அப்புறம் இது யாரு? உங்க பொண்ணு அஞ்சலியா?”, என்று அவள் கரத்தில் இருந்த குழந்தையைக் காட்டிக் கேட்டாள்.
அவளைத் தூக்கி உச்சி முகர்ந்த ரேகா “அழகா இருக்க குட்டி மா. அண்ணி, உடனே என் கிட்ட ஒட்டிக்கிட்டா. எல்லார்க் கிட்டயும் சேந்துக்குவாளா?”, என்று கேட்டாள்.
“யார் கூட வேணும்னாலும் சேந்துருவா ரேகா. அதனால தான் நான் பிரியா இருக்கேன். சமத்து பாப்பா. சரி ஏழு மணிக்கு ரிசப்ஷன். நாம ஆறு மணிக்கு எல்லாம் கிளம்பணும். ரிசப்ஷன் மெயின் ஏரியால உள்ள மண்டபத்துல வச்சிருக்காங்க. அங்க தான் அப்பாவோட ஆபீஸ் ஸ்டாப் எல்லாரும் வர முடியும்? அதனால தான். மணி இப்பவே அஞ்சு ஆகிருச்சு. நீ இப்ப குளிச்சு கிளம்பினா தான் மேக்கப் பண்ண சரியா இருக்கும். அஞ்சு குட்டி அம்மா கிட்ட வாங்க. அத்தை உன்னை அப்புறம் தூக்குவாங்க சரியா?”, என்று சொல்லி அஞ்சலியை வாங்கிக் கொண்டாள் மஞ்சு.
“சரிங்க அண்ணி”, என்று சொல்லி ரேகா குளிக்க கிளம்ப “இதோ இந்த பேக்ல உனக்கு தேவையானது எல்லாம் இருக்கு ரேகா. நீ குளிச்சிட்டு வா. நான் காயத்ரி அண்ணி கிட்ட உன்னோட ரிசப்ஷன் டிரெஸ் இருக்கு, வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
அந்த பேகைத் திறந்து பார்த்தாள் ரேகா. அதில் அவளுக்கென்று சோப், துண்டு, பேஸ்ட், பிரஸ், உள்ளாடை என அனைத்துமே இருந்தது.
தனக்காக பார்த்து பார்த்து செய்யும் குடும்பம் கிடைக்கத் தான் கடவுள் தன்னை இத்தனை வருடம் தனிமையில் தத்தளிக்க வைத்தாரா என்ற எண்ணம் வந்தது ரேகாவுக்கு.
இந்த சந்தோஷம் அத்தனைக்கும் காரணமான விக்ரமிடம் பேச வேண்டும் என்றும் அவன் மார்பில் தலை சாய்க்க வேண்டும் என்றும் அவள் நாடி நரம்புகள் அனைத்தும் துடித்தது. அவனுடைய அன்பும் கிடைத்து விட்டால் போதும் என்று எண்ணினாள்.
அவன் மார்பில் சாய்ந்த நொடி, அவன் வாசனை, அவன் தன்னை முத்தமிட்ட தருணம், அவன் விரல்களின் பரிசம் என அனைத்தும் நினைவில் வந்து அவள் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது.
தன்னவனைப் பற்றிய கற்பனையில் அவள் ஆழ்ந்திருக்கும் போது “அடடே நீ இன்னும் குளிக்கவே போகலையா? என்ன கனவா?”, என்று கேட்ட படி அங்கே வந்தாள் மஞ்சு.
அவள் அருகே ஒரு பையுடன் நின்ற காயத்ரி “அவங்க வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்ததை ஆசையா பாத்துட்டு இருக்குறவளுக்கு நீ குளிக்க சொன்னதே மறந்து போயிருக்கும். அப்படித் தானே ரேகா?”, என்று சிரிப்புடன் கேட்டாள்.
“ஆமா…. இல்லை…”, என்று உளறிய ரேகா “சாரி அக்கா, சாரி அண்ணி ஏதோ யோசனையில் நின்னுட்டேன். அஞ்சு நிமிசத்துல வந்துறேன்”, என்று புன்னகையுடன் சொன்னாள்.
“அந்த ஏதோ ஒரு யோசனை விக்ரம் பத்தி தானே?”, என்ற காயத்ரியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னுடைய சிவந்த முகத்தை பாத்ரூமுக்குள் புகுந்து மறைத்துக் கொண்டாள் ரேகா.
இந்த சின்ன சின்ன பொருள்கள் கூட அவன் தான் தனக்கு வாங்கித் தந்தானா என்று எண்ணி அவள் மனது சந்தோசத்தில் விம்மியது. அதன் பின் அவளுக்கு நிற்க நேரம் இல்லை. அவள் குளித்து முடித்து வந்ததும் அவளுக்கு அலங்காரம் ஆரம்பித்தது.
மாம்பழக்கலரும் பச்சைக் கலரும் சேர்ந்த பட்டுப் புடைவையில் தயாராகி இருந்தாள் ரேகா. ரிசப்சனுக்கு என்று அவளை தனித்துவமாக அலங்கரித்திருந்தார்கள் மஞ்சுவும் காயத்ரியும்.