அத்தியாயம் 8
பனித்துளி, மழைத்துளி
பிடிக்கும் என்ற நீ என்
கண்ணீர்த்துளி பிடிக்கும்
என்பதை சொல்லாமல்
சென்றது ஏனோ?!!!
“இந்நேரம் வந்துருக்க வேண்டியவங்களை இன்னும் காணுமே”, என்ற யோசனையில் தான் லிசாவின் எண்ணுக்கு அழைத்தான் ரெட்டி.
போனை எடுத்த யுவனோ அமைதியாக இருந்தான். அதற்கு நேர் மாறாக அவன் மனது கொதித்துக் கொண்டிருந்தது.
“ஹலோ, லிசா… லிசா எங்க இருக்க? எதுக்காக இவ்வளவு நேரம்? எங்க அந்த பொண்ணு?”, என்று பரபரப்பாக கேட்டான் ரெட்டி.
அவனுடைய கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் “என்ன ரெட்டி…. சௌக்கியமா?”, என்று நிதானமாக கேட்டான் யுவன் நாயக்.
லிசா எண்ணில் திடீரென்று ஒரு ஆண் குரல் கேட்கவும் அதிர்ந்த ரெட்டி “ஹலோ, யார் நீ? யாருன்னு கேக்குறேன்ல? எனக்கு அந்த பொண்ணு… சுசீலா வேணும். லிசா எங்க?”, என்று கேட்டான்.
“லிசாவா? இப்ப பரலோகத்துல இருக்குறா”
“என்ன? லிசா செத்துட்டாளா? அப்ப அந்த பொண்ணு எங்க?”
“என்கிட்ட தான் பத்திரமா இருக்கா?”
“உன்கிட்டயா? அப்படின்னா அன்னைக்கும் அந்த பொண்ணை நீ தான் கடத்துனியா?”
“யெஸ், நானே தான்”
“என்னோட தம்பியைக் கொன்னது?”
“நானே தான்”
“டேய்ய் … என்னோட தம்பியைக் கொன்ன உன்னைக் கொல்லாம விட மாட்டேன் டா”
“என்னைக் கொல்லுறதுக்கு நீ முதல்ல உயிரோட இருக்கணுமே?”
“ஹா ஹா என்னையெல்லாம் மிரட்டுற அளவுக்கு நீ பெரிய ஆளா டா?”
“பெரிய ஆளா சின்ன ஆளான்னு பொறுத்திருந்து பாரு ரெட்டி”
“உனக்கு என்ன டா வேணும்? ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ணை என்கிட்ட ஒப்படைச்சிட்டு உனக்கு தேவையானதை வாங்கிட்டு போய்கிட்டே இரு”
“நான் முடியாதுன்னு சொன்னா?”
“யார் டா நீ? நான் யாருன்னு தெரியுமா? எவ்வளவு திமிர் இருந்தா என்கிட்டயே விளையாடுவ? எங்க இருக்கன்னு சொல்லு. உடனே உன்னை பரலோகம் அனுப்புறேன்”
“என் பேரைச் சொன்னா உனக்கு தெரியுமான்னு டவுட் வருதே? ஆனா தெரியும். என்னோட பேர் உனக்கு மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன். என்னோட பேர் யுவன் நாயக்”
“என்ன? யுவன் நாயக்கா?”
“யெஸ் யெஸ், யுவன் நாயக்கே தான். என்ன எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? இல்லை அடிக்கடி கேள்விப் பட்ட மாதிரி இருக்கா?”
“நீ…நீ… ஏன் எப்பவும் என்னோட விசயத்துல தலையிடுற? கொஞ்ச நாளா இதையே தான் நீ செஞ்சிட்டு இருக்குற? என்னோட போதைப் பொருள் விசயத்துல குறுக்கிடுறது நீ தானே?”
“நானே தான்”
“அந்த ரமணா பாய் கிட்ட போன் பண்ணி என்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லிருக்க. நான் அவர் அனுப்பின சரக்கை எல்லாம் பதுக்கிட்டு போலீஸ் கொண்டு போய்ட்டாங்கன்னு அவர் கிட்ட பொய் சொல்லி பணம் கொடுக்காம இருக்கேன்னு போட்டுக் கொடுத்துருக்க. அவன் என்னை சந்தேகப் பட்டு எனக்கு சரக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டான். உன்னால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா? அது மட்டுமா? நான் தொழில் செய்யுற இடத்துல புகுந்து நிறைய பொண்ணுங்களை தூக்கிருக்க? என்ன நினைச்சிட்டு இருக்குற நீ? ஏண்டா இப்படி செய்யுற?”
“உன்னோட எல்லா இல்லீகள் வேலையிலயும் தலையிடுறது வேற எதுக்கும் இல்லை. உன்னை பரலோகத்துக்கு அனுப்ப மட்டும் தான் ரெட்டி. வேற எந்த காரணமும் இல்லை”
“ஹா ஹா இந்தா கொன்னுக்கோன்னு உன்கிட்ட தலையைக் கொடுத்துட்டு இருப்பேன் பாரு. அடப் போடா. உன்னைத் தான் என்னோட ஆட்கள் வலை வீசி தேடிட்டு இருக்காங்க. இனி அவ்வளவு ஈஸியா உன்னை விட்டு வைக்க மாட்டேன். நீ ஒளிஞ்சு இருந்து என்னை மிரட்டிப் பாக்குறியா? இதுக்கு நீ அனுபவிப்ப டா”
“என்ன ஒளிஞ்சு இருக்கேனா? அதுவும் உனக்கு பயந்தா? நான் எப்பவும் என்னோட கோட்டைக்குள்ள தான் இருக்கேன். இந்த மும்பைல இருக்குற அத்தனை பேருக்கும் என்னைப் பத்தி தெரியும். நேர்ல வா டா. நானே உன்னை பிடிக்க தான் காத்துருக்கேன்”
“ஹ நடக்காததைப் பேசாத. அந்த பொண்ணு விசயத்துல நீ எதுக்கு தலையிடுற? அவளுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?
அவ தென்னிந்திய பொண்ணு”
“தென்னிந்தியாவோ வடஇந்தியாவோ? முதல்ல அவ ஒரு பொண்ணு. அவளை உன்கிட்ட இருந்து காப்பாத்தியே தீருவேன்”
“நிறைய விசயங்கல்ல என்னோட லைன்ல குறுக்க வாறே நீ? உனக்கும் எனக்கும் என்ன பகை இருக்கு? என்கிட்ட இருந்து விலகிரு யுவன்”
“வெறும் யுவன் இல்லை. யுவன் நாயக் ரெட்டி. கண்டிப்பா உன்னை அழிக்காம உன்னை விட்டு விலகவும் மாட்டேன். அடங்கவும் மாட்டேன்”
“ஏன்? ஏன்? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னை அழிக்கணும்னு எதுக்கு துடிக்கிற? எங்கயாவது பகையை மிச்சம் வச்சிருக்கேனா? அதுக்கு தான் பழி வாங்க வந்துருக்கியா?”
“இருக்கலாம். உன்னை அழிச்சா தான் நிறைய பேரோட என்னால வாழ்க்கையை காப்பாத்த முடியும். அதனால தான் இந்த முடிவு”
“என்ன உளறல் இது?”
“உளறல் இல்லை ரெட்டி. உண்மை. உன்னை அழிக்கிறது மட்டும் தான் என்னோட நோக்கம். இந்த யுவனோட வேலை இதோட முடியாது. இனியும் தொடரும்”
“நீ என்ன செய்யுறேன்னு நானும் பாக்குறேன். அந்த பொண்ணை நீ எங்க அனுப்பினாலும் நான் தூக்குவேன் டா”
“அவ என்னோட கோட்டைக்குள்ள தான் பத்திரமா இருக்கா. முடிஞ்சா தூக்கி பாரு”
“நம்ம ரெண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தார் நேர்ல பாத்தது கூட கிடையாது. அப்படி இருக்குறப்ப நமக்குள்ள என்ன பகை?”
“உன்னை நேர்ல பாக்கும் போது இந்த கதை எல்லாம் சொல்றேன். அது வரைக்கும் காத்திரு ரெட்டி. பாய்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான் யுவன்.
தலையை பிடித்த படி அமர்ந்து விட்டான் ரெட்டி. இரண்டு முறை ஒரு பெண் அவனுடைய கைக்கு கிடைக்காமல் போய் விட்டாள். அவனைப் பொறுத்த வரை, இது கேவலமான தோல்வி. அது மட்டும் இல்லை. அவனுடைய தம்பியையும் இழந்து விட்டான்.
கப்பலில் இருந்து வந்த ரெட்டிக்கு சொந்தமான சரக்குகளை யுவன் இரண்டு முறை கை பற்றியிருக்கிறான். அது போக ரமணா பாயிடம் பேசி ரெட்டிக்கு சரக்கு அனுப்ப விடாமல் செய்திருக்கிறான். இவனுடைய கட்டுபாட்டில் இருக்கும் பெண்களை கடத்தியிருக்கிறான்.
எதனால் இவன் குறுக்கே வருகிறான் என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தவன் தன்னுடைய ஆட்களை அழைத்து யுவனின் கோட்டைக்குள் ஊடுருவ முடியுமா என்று கேட்டு திட்டம் தீட்டினான்.
யுவனின் கோட்டையைப் பற்றி தெரிந்த அவனுடைய ஆட்களோ அந்த கோட்டையின் பாதுகாப்பைப் பற்றி ரெட்டியிடமே புகழ்ந்து பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.
“இவனை நின்னு நிதானமா தான் அடிக்கணும்”, என்று எண்ணிக் கொண்டான் ரெட்டி.
——-
இப்போதெல்லாம் சுசீலா ஹிந்தி படிக்க ஆரம்பித்து விட்டாள். சாரு மாயா இருவரும் அவளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றால் சுமனும் கேசவும் கூட அவளுக்கு வாய் மொழியாக சொல்லிக் கொடுக்கிறார்கள்.
அவளுக்கென்று ஒரு போனை மாயா மூலம் வாங்கிக் கொடுத்திருக்கிறான் யுவன். மொத்தத்தில் அவள் வீடு போல் சுதந்திரமாக அங்கே இருந்தாள்.
அவளுக்கு தெரிந்த சமையலிலும் அவள் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்து அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கினாள். அது மட்டுமல்லாமல் அவள் சாருவை மிகவும் அன்போடு கவனித்துக் கொண்டாள்.
அவளுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை, எதற்கெடுத்தாலும் யுவனைப் பற்றி அதிகம் அவள் யோசிப்பது தான். நினைக்க கூடாது என்று எண்ணினாலும் அவளால் முடிய வில்லை.
ஏதாவது சமைத்தால் கூட இது யுவனுக்கு பிடிக்குமா என்று தான் அவள் சிந்தனை செல்கிறது. இப்போதும் அறைக்கு வந்த உணவை உண்டு விட்டு கட்டிலில் படுத்தவளை அவன் நினைவு தான் ஆக்ரமித்தது.
பல பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றிய அவன் மேல் ஒரு இனம் புரியாத பாசம் அவளுக்கு உருவானது. அது மட்டுமல்லாமல் அஸ்வதி கூட அவளிடம் அவனைப் பற்றி வெகுவாக புகழ்ந்து பேசினாள். அவள் இப்போது ஒரு ஆஸ்ரமத்தில் நிம்மதியாக இருப்பது தெரிந்து சுசிலாவுக்கு மிகவும் சந்தோஷம்.
அவளை சென்று பார்க்க சுசிலாவுக்கும் ஆசை தான். ஆனால் யுவன் தான் “இப்போதைக்கு வெளிய போக வேண்டாம். கொஞ்ச நாள் ஆகட்டும்”, என்று சொல்லியிருந்தான்.
அவனைப் பற்றி எண்ணியதும் அவள் முகம் புன்னகையை தாங்கியது. மெதுவாக எழுந்து அவளுடைய அறையின் ஜன்னலின் வழியே வெளியே வேடிக்கை பார்த்தாள்.
சுற்றி இருந்த பசுமை அவள் மனதுக்கு அமைதியைத் தந்தது. அப்போது அங்கு நின்ற யுவனின் கார் கண்ணில் பட்டது. வெளிநாட்டுக் கார், கோடியிலோ பல லட்சங்களிலோ இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.
ஏனோ இந்த பணமும் செல்வாக்கும் யுவனுக்கும் அவளுக்கும் இடையில் இருப்பது போல பட்டது.
“என்ன உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கா? அவன் யார் தெரியுமா? அவனோட ரேஞ்ச் என்ன? உன்னோட இப்போதைய நிலை என்ன? அவன் காப்பாத்திய பல பெண்களில் நீயும் ஒருத்தி. அவ்வளவு தான். அதை விட்டுட்டு ரெண்டு பேருக்கும் இடையே பணம் இருக்குன்னு யோசிக்கிற. இது தப்பு. வேற எதுவும் யோசிக்காத”, என்று இடித்துரைத்தது அவள் மனசாட்சி.
“அதானே நான் யாரு, யுவன் யாரு? நான் ஏன் எப்ப பாத்தாலும் அவனைப் பத்தியே யோசிக்கிறேன். அவனைப் பாத்து கொஞ்ச நாள் தான் ஆச்சு? உடனே அவனை பிடிச்சிருமா? என்னைக் காப்பாத்தினதுக்கு நான் அவனுக்கு நன்றிக் கடனைத் தான் காட்டனும். இனி தேவையில்லாமல் யோசிக்க கூடாது”, என்று தன்னையே கடிந்து கொண்டு சாரு அறைக்குள் சென்று விட்டாள்.
சும்மா இருந்தால் தானே மனம் அவனைப் பற்றியும் அவன் தன்னைக் காப்பாற்றியதைப் பற்றியும் நினைக்கும் என்று எண்ணி சாருவைப் பார்த்துக் கொள்வதில் தன்னுடைய கவனத்தை செலுத்தினாள்.
அப்போது சாருவின் அறைக்குள் வந்தான் யுவன். அவனைக் கண்டதும் மனதுக்குள் ஒரு பனிச்சாரலை உணர்ந்தாள் சுசீலா. அவன் அவளிடம் ஒரு புண் சிரிப்பைக் கொடுத்து விட்டு சாருவிடம் செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.
அவனையே பார்த்த படி அமர்ந்திருந்தாள் சுசீலா. நீல கலர் முரட்டு ஜீன்சும் கார்கோ ஷர்ட்டுமாக அட்டகாசமாக இருந்து தொலைத்தான் அவன். அடர்ந்து கிடந்த அவனுடைய கருப்பான தலை முடி அவன் முன் நெற்றியில் படிந்து தனி ஒரு கவர்ச்சியைத் தந்தது.
அதுவும் சாருவிடம் உரையாடும் போது அவனுடன் சேர்ந்து சிரிக்கும் அவனுடைய கண்கள் சுசிலாவை வெகுவாக ஈர்த்தது.