அத்தியாயம் 9
உந்தன் நாதத்தின் இசையினிலே
அழகான கானம் கேட்க
வந்தது மேகக் கூட்டங்கள்!!!
தீபக்கும் அப்போது காயத்ரி பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தான். முதன் முதலில் கவுன்சிலிங்க் போன போது தான் அவளைப் பார்த்தான்.
தீபக்குடன் அவனுடைய அன்னை மீனாட்சி தான் கவுன்சிலிங்க்காக சென்றிருந்தாள். தன்னுடைய சான்றிதழை சரி பார்த்துக் கொண்டிருந்த தீபக் மீனாட்சி அழைக்கவும் அவளை திரும்பி பார்த்தான்.
“என்ன மா, நொய் நொய்ன்னுட்டு இருக்க?”
“இப்ப எதுக்கு டா இவ்வளவு டென்ஷன்? நீ நல்ல மார்க் தானே வாங்கிருக்க? எப்படியும் சென்னைல தான் படிக்க போற? அப்புறம் ஏன் இப்படி பயந்து சாகுற? உனக்கு நல்ல காலேஜ் தான் கிடைக்கும்”
“புரியுது மா, ஆனாலும் பயமா இருக்கு”
“நீ ஏண்டா எப்படி இருக்க? இங்க இருக்குற எந்த பசங்களாவது டென்சனா இருக்காங்களா? நீ மட்டும் தான் அப்படி இருக்க? அங்க பாரு அந்த பொண்ணு கூட எவ்வளவு ஜாலியா சிரிச்சிட்டு உக்காந்துருக்கு”, என்று மீனாட்சி சொன்னதும் தான் அந்த பக்கம் திரும்பி பார்த்தான்.
பார்த்தவனுக்கு கண்களை தான் அவளிடம் இருந்து எடுக்க முடியவில்லை.
ஒள்ளியும் இல்லாமல் குண்டும் இல்லாமல் கொஞ்சம் கொழுக் முழுக்கென உடல்வாகு. ஐந்தரை அடி உயரம். செதுக்கி வைத்தது போல் அழகான முகம், தங்க நிறத்தை விட சிறிது குறைவு. காதில் சிறிய தோடு, கழுத்தை ஒட்டிய ஒரு குட்டி செயின், கைகளில் கண்ணாடி வளையல் மற்றொரு கையில் கருப்பு நிற வார் வைத்த வார்ச். இவ்வளவு தான் காயத்ரியின் அலங்காரம். எப்போதுமே இந்த எளிமை தான் அவளது சிறப்பே.
அதுவும் அவனை முதலில் கவர்ந்தது அவள் கரு விழிகள் தான். அழகாக அமைந்த அவளின் புருவம் அவள் கண்களுக்கு எடுப்பாக இருந்தது. அந்த விழிகள் ஏதோ அவனிடம் பேசுவது போலவே இருந்தது. தன்னுடைய தந்தையிடம் புன்னகையுடன் கதை பேசிய படியே அமர்ந்திருந்தாள் காயத்ரி. அவளையே பார்க்க ஆரம்பித்தான் தீபக்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில் அவனுடைய டென்ஷன் கூட காணாமல் போய் விட்டிருந்தது.
“அடேய், என்ன கனவு கண்டுட்டு இருக்க? நாம தான் போகணும். வா உள்ள போகலாம்?, என்று மீனாட்சி அழைத்ததும் காயத்ரியையும் அவளுடைய தந்தையையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.
மீண்டும் அவளைக் காணும் ஆவலில் அவன் வெளியே வரும் போது அவள் அந்த இடத்தில் இல்லை. தேடி தேடி அவன் கண்கள் பூத்துப் போனது.
வேறு வழியில்லாமல் தாயை அங்கே இருக்க வைத்து விட்டு மெடிக்கல் டெஸ்டுக்கு சென்றான்.
அங்கிருந்து வந்த பின்னரும் அவள் அவன் கண்ணில் படவே இல்லை.
“ஐயோ எங்க போனான்னு தெரியலையே. எந்த ஊர், பேர் எதுவுமே தெரியாதே. இந்த முகத்தை இனி மறக்க முடியுமா?”, என்று அவனுக்கு கவலையாக இருந்தது.
அவனுடைய சிந்தை முழுவதும் அவளே ஆக்ரமித்திருந்தாள்.
மெடிக்கல் டெஸ்ட் முடிந்ததும் “எல்லாம் முடிஞ்சிருச்சா டா? வீட்டுக்கு கிளம்பலாமா?”, என்று கேட்டாள் மீனாட்சி.
“ஆமா மா, போகலாம்”
“இரு டா, நான் பாத்ரூம் போயிட்டு வரேன்”
“இவ்வளவு நேரம் சும்மா தானே இருந்த? இப்ப தான் போகனுமா?”, என்று கேட்டான் தீபக்.
“வரும் போது தானே டா போக முடியும். உனக்காக நான் இவ்வளவு நேரம் வெட்டியா உக்காரலையா? நீ எனக்காக கொஞ்ச நேரம் உக்காந்தா குறைஞ்சா போவ?”, என்று சொல்லி விட்டு சென்றாள் மீனாட்சி.
அப்போது “தம்பி, உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் முடிஞ்சிருச்சா?”, என்று யாரோ கேட்கும் சத்ததில் திரும்பி பார்த்தான் தீபக்.
அங்கே காயத்ரியின் தந்தை முருகேசன் தான் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு அவன் அகமும் முகமும் மலர அவர் அருகில் சென்றவன் “முடிஞ்சிருச்சு அங்கிள்”, என்று சொல்லி புன்னகைத்தான்.
அவனது புன்னகை அவரை மேலும் அவனிடம் பேச வைத்தது.
“எந்த காலேஜ் தம்பி எடுத்துருக்கீங்க?”, என்று கேட்டதும் ஆவலாக அவரிடம் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
அவன் காலேஜ் பெயர் சொன்னதும், ஆச்சர்யமானவர் “அப்படியா? என் மகளும் அந்த காலேஜ் தான் தம்பி எடுத்துருக்கா. நீங்க எந்த டிபார்ட்மெண்ட்?”, என்று கேட்டார்.
அதற்கும் பதில் சொன்னதும் “தம்பி என் மக காயத்ரியும் உங்க கிளாஸ் தான். அவளை நீ தான் பா பத்திரமா பாத்துக்கணும்”, என்று அப்பாவிற்கே உரித்தான அக்கறையுடன் சொன்னார். கூடவே அவனுடைய வீடு எங்கே இருக்கிறது என்றெல்லாம் கேட்டார்.
அனைத்துக்கும் பதில் சொன்னவன் “நீங்க பயப்படாதீங்க அங்கிள். நான் பாத்துக்குறேன்”, என்று உண்மையான அக்கறையுடன் சொன்னான் தீபக். அவனுக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் வாயில் விழுந்தது போல இருந்தது.
அப்போது அங்கே வந்த மீனாட்சி “கிளம்பலாமா டா?”, என்று கேட்டதும் அங்கே இருந்த இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் தீபக்.
அவரிடம் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு “வரேன் அங்கிள்”, என்று அவரிடம் சொல்லி விட்டு கண்களில் அவள் தென்படுகிறாளா என்று பார்த்த படியே மீனாட்சியுடன் சென்றான்.
போகும் போது “உன்னை யாரு மா சீக்கிரம் வரச் சொன்னது? கொஞ்சம் நேரம் கழிச்சு வந்துருக்கலாம்ல?”, என்று கேட்டான் தீபக்.
.
அவனை ஒரு மார்கமாக முறைத்த மீனாட்சி. “உனக்கு என்னவோ ஆச்சு டா. மாத்தி மாத்தி பேசுற? வீட்டுக்கு வா உனக்கு இருக்கு”, என்று சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தாள்.
“கொஞ்சம் நேரம் இங்கயே இருப்போமா மா?”
“டேய், படுத்தாம கிளம்பு டா. உங்க அக்காவை போய் பாத்துட்டு தான் வீட்டுக்கு போகணும். நேரம் ஆகிரும்”, என்று அழைத்து சென்று விட்டாள்.
அதன் பின் அடிக்கடி அவளை நினைத்திருக்கிறான். எப்போது காலேஜ் திறக்கும் என்று ஆவலாக காத்திருந்தான். அதே போல காலேஜ் முதல் நாள் அவளைப் பார்த்ததும் அவ்வளவு ஆவலாக அவளிடம் பேச வந்தான். அப்போது தான் சீனியர் ரேகிங்கில் அவள் மாட்டிக் கொள்ள நேரடியாக அவளிடம் போய் நின்றான்.
அதன் பின்னால் அவளிடம் பேச ஆசை தான். ஆனால் வழிகிறான் என்று நினைத்து விடுவாளோ என்று எண்ணி அவளிடம் புதிராக நடந்து கொண்டான்.
இதையெல்லாம் நினைத்த படி அமர்ந்திருந்தான் தீபக். அப்போது “என்ன டா பேசி முடிச்சிட்டியா?”, என்று கேட்ட படி வந்தாள் ரேவதி.
“பேசிட்டேன்க்கா, எல்லாத்தையும் சொல்லிட்டேன். நாங்க இனி பிரண்ட்ஸா ஆகிட்டோம்”
“ஹா ஹா நம்பிட்டேன் நம்பிட்டேன். சரி சாப்பிட வா”, என்று சொல்லி அழைத்து சென்றாள்.
அதே நேரம் காயத்ரியிடம் சௌமியும் விசாரித்துக் கொண்டிருந்தாள். அவன் பேசியதைச் சொன்னதும் “அப்படியா, அப்பா தான் உன்னைப் பத்தி சொல்லிருக்காங்களா? சரி சரி சாப்பிட வா”, என்று சொல்லி அவளை அழைத்து சென்றாள்.
இரவு உணவின் போது “அப்பா, நீங்க அக்கா கவுன்சிலிங்க் அப்ப, யார் கிட்டயாவது பேசுனீங்களா?”, என்று கேட்டாள் சௌமி.
“ஐயையோ என்ன இவ இதைப் பத்தி இப்ப பேசுறா? அப்பா ஏதாவது நினைச்சிக்குவாங்களே?”, என்று பயந்த காயத்ரி அவளை முறைத்தாள்.
“அட ஆமா. ஒரு தம்பி உங்க கிளாஸ்னு தான் சொன்னான். பேசினானா அந்த பையன்?”, என்று கேட்டார் முருகேசன்.
“ஆமாப்பா, அந்த அண்ணன் தான் அக்காவை சீனியர் ரேகிங்க்ல இருந்து காப்பாத்திருக்காங்க”
“அப்படியாமா? எனக்கு அந்த பையனைப் பாத்தப்பவே ரொம்ப நல்ல குணமா தெரிஞ்சது”, என்றார் அவர். அவர் அப்படிச் சொன்னதும் தான் நிம்மதியாக இருந்தது காயத்ரிக்கு.
அடுத்த நாள் காலேஜ் செல்லும் போது அவனை எப்படி எதிர் கொள்ள என்று ஒரு மாதிரி இருந்தது. இவ்வளவு நாள் வேறு. ஆனால் இன்றோ அவனிடம் போனில் பேசிவிட்டு நேரில் பேசுவது எப்படியோ இருந்தது. அந்த உணர்வை அவளால் வரையறுக்க முடியவில்லை.
தடுமாற்றத்துடனே தான் பஸ்ஸில் ஏறினாள். ஏறியதும் அவள் பார்வை தன்னால் பின்னே சென்றது.
அதற்காகவே காத்திருந்த தீபக் அவள் திரும்பியதும் அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தான். அந்த புன்னகை அவள் உயிர் வரை தீண்டியதால் லேசாக சிரித்து விட்டு திரும்பி விட்டாள்.
இருவரின் பார்வையையும் கவனித்துக் கொண்டிருந்த கௌதம் “டீப் லவ் போல ரெண்டு பேருக்கும். பாத்த உடனே சிரிச்சிக்கிறாங்க? அவங்க காதாலாவது ஒண்ணு சேரட்டும்”, என்று எண்ணிக் கொண்டான்.
அதன் பின் தீபக் காயத்ரி நட்பில் முன்னேற்றம் தான். கிளாசில் வைத்து இருவரும் பேச மாட்டார்கள். ஆனால் திடீரென்று எப்போதாவது அவனை திரும்பி காயத்ரி பார்த்து விட்டால் அவன் அவளையே தான் பார்த்துக் கொண்டிருப்பான்.
“இவன் என்ன நான் பாக்கும் போது எல்லாம் என்னையே பாத்துட்டு இருக்குற மாதிரி இருக்கு? உண்மைலே அவன் என்னையே பாத்துட்டு இருக்கானா? இல்லை நான் திரும்பினப்ப தான் அவன் பாத்தானா?”, என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. ஆனால் அதை அவனிடம் அவளால் கேட்க முடியாது.
“நீ என்னையே தான் பாத்துட்டு இருக்கியா?”, என்று எப்படி அவளால் கேட்க முடியும்?
அடுத்த நாள் மாலை பஸ்ஸில் வைத்து கையை காதருகே கொண்டு சென்ற தீபக் “போன் செய்”, என்னும் விதமாய் சைகை செய்தான்.
அதைப் பார்த்து விட்டு படக்கென்று குனிந்து கொண்டவள் வீட்டுக்கு செல்லும் வரை அவன் நினைப்பிலே இருந்தாள்.
வீட்டுக்கு சென்றதும் “எதுக்கு போன் செய்ய சொன்னான்? எப்படி பேசுறது? சௌமி ஏதாவது சொல்வாளோ?”, என்ற யோசனையில் இருந்தவளிடம் “அக்கா, அந்த அண்ணன் உன் கிட்ட பேசினாங்களா?”, என்று சௌமியாவே தீபக் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஆமா டி, ஆனா நேரா பேசலை. போன் செய்ய சொல்லி சைகை செஞ்சான்”
“அப்படியா? இரு அம்மா போனை சுட்டுட்டு வரேன்”
“பயமா இருக்கு சௌமி”
“சரி அப்ப பேசாத, மெஸ்ஸேஜ் பண்ணு”, என்றதும் சரி என்று சொன்னாள்.
சௌமி போனை எடுத்துக் கொண்டு வந்ததும் “ஹாய்”, என்று அவனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள் காயத்ரி.
அதை எதிர்பார்த்தவன் போன்று “ஹாய், என்ன மெஸ்ஸேஜ் பண்ணுற? போன் பண்ண மாட்டியா?”, என்று கேட்டான் தீபக்.
“போன் பேச முடியாது. எதுக்கு பேச சொன்ன? சொல்லு”, என்றாள் காயத்ரி.
“சும்மா தான் பண்ண சொன்னேன்”
“என்னது சும்மாவா? நான் ஏதாவது முக்கியமா இருக்கும்னு நினைச்சேன்”
“அப்படி எல்லாம் இல்லை, இன்னைக்கு கிளாஸ் உனக்கு எப்படி போச்சு. மேக்ஸ் புரியுதா?”, என்று ஆரம்பித்து அப்படியே அவர்கள் சேட்டிங்க் தொடர்ந்து சென்றது.
அதன் பின் இருவருக்கும் உரையாடல் சகஜமாக இருந்தது. அவன் இவள் வீட்டைப் பற்றி கேட்க அவள் அவன் வீட்டைப் பற்றி கேட்க இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள். ஒருவருக்கொருவர் கிண்டல் அடித்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது.
தினமும் ஒரு மணி நேரம் சேட்டிங்க், அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போன் என்று அவர்களின் நட்பு தொடர்ந்தது. அவர்களுக்கு நட்பு வளர பாலமாக இருந்தவர்கள் சௌமியும், ரேவதியும் தான்.
அன்று கிளாசில் நடந்த நகைச்சுவைகளை சொல்லி அவளை சிரிக்க வைப்பான். அவனுக்கு இணையாக அவளும் அவனிடம் சந்தோஷமாக பேசினாள்.
இருவருக்குள்ளுமே இனம் புரியாத ஒரு ஈர்ப்பு விசை உருவாகியிருந்தது. அவள் பேசுவதே தீபக்க்கு போதுமானதாக இருந்தது.
கிளாசில் வைத்து இருவரும் ஒருவரையொருவர் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அவன் மனதில் காதல் இருந்தாலும் அவன் அதை வெளிப்படுத்த வில்லை. அவளோ தூய்மையான நட்புடன் தான் பழகினாள். ஆனால் சில நேரம் அவனுடைய ஆழ்ந்த பார்வைக்குள் அவள் அமிழ்ந்து போவது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்படும்.
அவனுக்கோ அவளுடைய தோழமை உணர்வு சில நேரம் பயத்தைக் கொடுக்கும். தன்னுடைய காதலை அவள் மறுத்துவிடுவாளோ என்ற பயம் அவனுக்கு அடிக்கடி வரும். காதலை சொல்லலாம் என்று எண்ணினாலும் அவளுடைய நட்பு இல்லாமல் போய்விடுமோ என்று பயம் வரும்.
அதையும் மீறி அவளுடனான வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று கற்பனையில் சில சமயம் ஆழ்ந்து விடுவான் தீபக்.
சில நேரம் அவனுடைய காதலைச் சொல்ல அவன் மனம் பறபறக்கும். அதன் பின் நட்பே இல்லாமல் போய் விடும் என்று எண்ணி வாயை மூடிக் கொள்வான்.
தன்னிடம் காதலை சொன்ன பெண்களை திட்டியதற்கு தான் காதலை சொல்ல முடியாமல் கஷ்டப் படுகிறேனோ என்று கூட அவனுக்கு தோன்றும்.