தனக்குள் உருவான காதல் அவளுக்குள்ளும் மொட்டவிழ்வதற்காக காத்திருந்தான் தீபக்.
தீபக்கை பொருத்த வரை காயத்ரி இரவு நேர பனித்துளி போல அழகான தேவதை. அவனுக்கு சந்தோசத்தைக் கொடுக்கும் வெண்மையான முயல் குட்டி. அதனால் அவளுடைய காதலை விட இப்போதைய நட்பு அவனுக்கு முக்கியமாக பட்டது.
அதன் பின் லேப், மாடல் எக்ஸாம், பிராக்டிகல், பேரண்ட்ஸ் டீசர்ஸ் மீட்டிங் மீட், மற்றவரைக் கிண்டல் அடிப்பது, கிளாஸ் நடக்கும் போதே ஓப்பன் ஆகும் டிபன் பாக்ஸ், கிளாசில் டேன்ஸ் ஆடி மாட்டிக் கொள்ளுதல் என்று சந்தோஷமாக நாட்கள் நகர்ந்தது.
முதல் செமஸ்டர் எக்ஸாம் அறிவிப்பு வந்தது. கால் டிக்கட் வாங்கிக் கொண்டு அனைவரும் ஸ்ட்டடி லீவில் இருந்தார்கள்.
அப்போது ஒரு நாள் “டேய், குழந்தை நல்லா பிறக்கணும்னு, நான் அக்கா பேர்ல ஒரு பூஜை ஏற்பாடு பண்ணிருக்கேன். அதனால கோயில் வரைக்கும் போயிட்டு வரேன்”, என்று கிளம்பினாள் மீனாட்சி.
“அம்மா, அவளை இந்த நிலைமைல விட்டுட்டு போறேன்னு சொல்ற?”, என்றான் தீபக்.
“அடுத்த வாரம் தான் டா அவளுக்கு டேட் சொல்லிருக்காங்க. நீ வீட்ல தானே இருக்க, அப்புறம் என்ன? அவளை பத்திரமா பாத்துக்கோ. அப்பா வேற ஊர்ல இல்லை. ஏதாவதுன்னா எனக்கு, இல்லைன்னா உன் அத்தானுக்கு போன் பண்ணு”, என்று சொல்லி விட்டு கோவிலுக்கு சென்றாள் மீனாட்சி.
அவள் சென்று சிறிது நேரத்தில் ரேவதிக்கு வலி வந்து விட என்ன செய்ய என்று தெரியாமல் விழித்தான் தீபக். மீனாட்சி மேல் கொலை வெறியே வந்தது.
ரேவதியோ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். என்ன செய்ய என்று தெரியாமல் அம்மாவுக்கும் அத்தான் ரத்னவேலுக்கும் அழைத்தால் இருவருமே எடுக்க வில்லை.
உடனே தங்கள் வீட்டில் இருந்த காரை எடுத்தான். போகும் போதே மீண்டும் மீண்டும் தன்னுடைய தாய்க்கு அழைத்தான்.
கோவிலில் இருந்ததால் அவள் அதை கவனிக்கவில்லை. ரேவதியின் அழுகை அவனுக்கு பயத்தைக் கொடுத்தது. என்ன செய்ய என்று தெரியாமல் உடனே காயத்ரியை அழைத்து விட்டான்.
காயத்ரிக்கு போன் கிடையாது என்றும் அவள் பேசுவது அவளது அன்னையின் போன் என்றும் கூட மறந்து விட்டான். பதட்டதில் அவள் தன்னுடன் இருக்க வேண்டும் போல் தோன்றியது. அதனால் அவர்கள் வீட்டில் அவளுடைய அன்னை இருப்பார்கள் என்று கூட நினைவில்லாமல் அழைத்து விட்டான்.
தெரியாத நம்பர் என்பதால் அதை எடுத்து “ஹலோ”, என்றாள் கலாவதி.
“ஹலோ காயத்ரி, நான் தீபக் பேசுறேன். உடனே நீ எஸ்.கே ஹாஸ்பிட்டல் வரியா? அக்காக்கு திடீர்னு வலி வந்துருச்சு. அம்மா வேற வீட்ல இல்லை. டெலிவரி டேட்க்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. ஆனா இப்பவே வலிக்குதுன்னு அழுறா. எனக்கு என்ன
செய்யன்னு தெரியலை. ஹாஸ்பிட்டலுக்கு தான் கூட்டிட்டு போய்கிட்டு இருக்கேன். நீயும் வந்தா கொஞ்சம் தைரியமா இருப்பேன். ஆண்ட்டிக் கிட்ட சொல்லிட்டு நீ வாயேன்”, என்று படபடவென்று சொல்லி விட்டு வைத்து விட்டான். அந்த பக்கம் எடுத்தது யார் என்று கூட அவன் உணரவில்லை.
ஏனென்றால் சிறிது நேரத்துக்கு முன்பு காயத்ரியிடம் அவன் சேட் செய்து கொண்டிருந்ததால் அவள் கையில் தான் போன் உள்ளது என்று எண்ணி பேசி விட்டான்.
கலாவதி ஒரு நிமிடம் திகைப்பாக அமர்ந்திருந்தாள். பின் இப்போதைக்கு எதையும் யோசிக்க முடியாது என்பதால் “காயத்ரி இங்க வா”, என்று அழைத்தாள்.
“என்ன மா?”
“என்கூட கொஞ்சம் கிளம்பு. வெளிய போகணும்”
“அம்மா நான் படிக்கணும் மா”
“சொல்றேன்ல? வந்து படிச்சிக்கலாம். கிளம்பு”, என்று இறுக்கமான குரலில் சொன்னதும் குழப்பத்துடன் கிளம்பினாள்.
ஒரு பையில் தேவையான பொருள்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்த கலாவதி ஹாஸ்பிட்டலுக்கு போகச் சொன்னாள்.
“அம்மா ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு?”, என்று கேட்ட காயத்ரிக்கு கலாவதி எந்த பதிலும் சொல்ல வில்லை.
ஹாஸ்பிட்டலில் இறங்கியதும் “அம்மா இங்க எதுக்கு வந்துருக்கோம்? யாருக்கு என்ன ஆச்சு?”, என்று பதட்டமாக கேட்டாள் காயத்ரி. ஏனென்றால் அவள் முகத்தில் இருந்த இறுக்கம் காயத்ரிக்கு பயத்தைக் கொடுத்தது.
ஆனால் அப்போது அங்கே நின்ற தீபக்கை பார்த்து அவள் கண்கள் தெறித்து விடும் போல விரிந்தது.
அவளுமே பக்கத்தில் அம்மா இருக்கிறார்கள் என்ற நினைவே இல்லாமல் “தீபு, என்ன ஆச்சு? நீ என்ன இங்க இருக்க?”, என்று கேட்ட படியே அவனை நெருங்கினாள்.
இருவரையும் பார்வையாளராக மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் கலாவதி.
அவள் கேள்வியைக் கூட உணராமல் “திடீர்னு அக்காவுக்கு வலி வந்துருச்சு காயு. எனக்கு என்ன செய்யன்னே தெரியலை. அம்மா வீட்ல இல்லை. நானே தான் அட்மிட் பண்ணிருக்கேன். உள்ள டாக்டர்ஸ் பாத்துட்டு இருக்காங்க. தேங்க்ஸ் நான் சொன்ன உடனே வந்ததுக்கு. ஆமா நீ எப்படி வந்த? ஆட்டோலயா?”
“என்னது நீ போன் பண்ணியா?”, என்று கேட்டதும் அவனுக்கும் குழப்பமே. அப்போது தான் தன்னுடைய அன்னையின் நினைவு வந்து, கலாவதியைப் பார்த்து திரும்பினாள் காயத்ரி. அவனும் அவள் பார்வை போகும் பக்கம் பார்த்தான்.
அப்போது நிதானமான பார்வையுடன் அவர்களை நெருங்கினாள் கலாவதி.
காயத்ரிக்கு நடந்த விஷயம் தெரிய வர, தீபக்கும் தன்னுடைய தவறை அப்போது உணர்ந்தான்.
கலாவதியை நேருக்கு நேராக பார்த்து “என்னோட பேர் தீபக் ஆண்ட்டி. காயத்ரி கிளாசில் தான் படிக்கிறேன். திடீர்னு அக்காக்கு இப்படி ஆன உடனே என்ன பண்ணனு தெரியாம தான் அவளை கூப்பிட்டுட்டேன். ஆனா போனை எடுத்தது நீங்கன்னு தெரியாது”, என்றான் தீபக்.
காயத்ரியோ தன்னுடைய அன்னையை எதிர்க் கொள்ள முடியாமல் திகிலுடன் நின்றாள். “இவ்வளவு நாள் இவனைப் பத்தி வீட்ல எதுவும் சொல்லலை. இவன் கூட போன் பேசுறது வேற தெரியாது. ஆனா இன்னைக்கு அம்மா என்ன நினைச்சிருப்பாங்க? நான் இன்னைக்கு செத்தேன்”, என்ற யோசனையில் இருந்தாள் காயத்ரி.
கலாவதிக்கும் அதே நினைப்பு தான். மகள் தன்னுடைய போனை எடுத்து இவனுக்கு போன் பேசியிருக்கிறாள் என்ற உண்மை கூட தெரியாமல் வீட்டில் இருந்திருக்கிறோமே என்று அவளுக்கு கவலையாக இருந்தது.
அந்த கவலையை தனக்குள் மறைத்த கலாவதி தீபக் புறம் திரும்பி “அக்காவுக்கு ஒண்ணும் ஆகாதுப்பா. நாங்க தான் இருக்கோமே. நீ இப்ப உன்னோட அம்மா அப்பாவுக்கு போன் பண்ணு. உனக்கு பதட்டமா இருந்தா நான் வேணும்னா பேசுறேன்”, என்று சொன்னதும் தான் நிம்மதியானான் தீபக்.
“தேங்க்ஸ் ஆண்ட்டி, நானே சொல்றேன்”, என்று சொல்லி விட்டு ஒவ்வொருவருக்கும் போன் செய்தான்.
அப்போதும் அவனுடைய போனை யாரும் எடுக்க வில்லை என்றதும் எரிச்சலானான். அவனுக்கு ஆறுதலாய் காயத்ரியும் கலாவதியும் இருந்தார்கள்.
அப்போது வெளியே வந்த டாக்டர் அவங்களுக்கு “ஆண் குழந்தை பிறந்திருக்கு. குழந்தையும் அம்மாவும் நல்லா இருக்காங்க”, என்றார்.
அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். “சுக பிரசவம் தானே டாக்டர்?”, என்று கேட்டாள் கலாவதி.
“யெஸ் யெஸ்”
“நாங்க பாக்கலாமா?”
“நர்ஸ் குழந்தையை குளிக்க வச்சு எடுத்துட்டு வருவாங்க. எப்படி பாத்துக்கணும்னு நர்ஸ் சொல்லுவாங்க. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் ஒரு லேடீஸ் கூடவே இருக்கணும்”, என்று சொல்லி விட்டு சென்றார்.
சந்தோசத்தில் தீபக் கண்களில் கண்ணீர் வடிந்தது. அப்போது மீனாட்சி அவனை அழைக்க பொரிந்து தள்ளி விட்டான்.
“உனக்கு இப்ப தான் சாமியை பாக்க போகனுமா? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?”, என்று கண்களில் நீருடன் பேசினான் தீபக்.
“என்ன ஆச்சு டா? நான் போன் வந்ததை கவனிக்கலை? ஒண்ணும் பிரச்சனை இல்லை தானே?”
“உன் தலை, திடீர்னு அக்காவுக்கு வலி வந்துருச்சு”
“என்ன டா சொல்ற?”
“ஆமா இப்ப கேளு. உனக்கு போன் பண்ணா எடுக்கலை. அத்தநௌம் எடுக்கலை. வேற வழியில்லாம நானே கூட்டிட்டு வந்துட்டேன். பையன் பொறந்துருக்கான். நார்மல் டெலிவரி தான். என்னோட பிரண்டும், அவங்க அம்மாவும் இங்க இருக்காங்க. நீ பாத்து வா”
“சாரி டா, இப்படி நடக்கும்னு நான் எதிர் பாக்கலை. அத்தானுக்கு சொல்லிட்டியா?”
“அவரும் எடுக்கலை மா”
“அக்கா போன்ல தான பேசுற? அதுல உன் அத்தானோட ஆபீஸ் நம்பர் இருக்கும். அதுக்கு பண்ணு டா”
“சரி மா, நீ வா”
“சரி டா கொஞ்ச நேரத்துல வரேன்”, என்று சொல்லி போனை வைத்தாள் மீனாட்சி.
அப்போது அங்கே வந்த நைஸ் குழந்தையைக் காட்டினாள். அன்றலர்ந்த பூ போல இருந்த குழந்தையை கையில் வாங்க காயத்ரியும் தீபக்கும் பதற கலாவதி தான் முதலில் குழந்தையை வாங்கினாள். அவள் அருகே நின்று இருவரும் கொஞ்சினார்கள்.
பின் நர்ஸ் குழந்தையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள். உதவிக்கு கலாவதியையும் அழைத்து சென்று விட்டாள்.
வெளியே காயத்ரியும் தீபக்கும் மட்டுமே இருந்தார்கள். அப்போது ரேவதியின் கணவனே தீபக்கை அழைக்க விஷயத்தை சொன்னதும் உடனே வரேன் என்று சொல்லி போனை வைத்தான்.
அப்போது தான் நிம்மதியாக மூச்சு விட்ட தீபக் அடுத்த நொடி காயத்ரி கைகளைப் பற்றிக் கொண்டான். கூச்சத்திலும், தன்னுடைய தாய் பற்றி பயத்திலும் தடுமாறி நின்றாள் காயத்ரி.
அனைவரும் வந்த பிறகு கலாவதி மற்றும் காயத்ரியை அறிமுகப் படுத்தினான் தீபக். மாற்றி மாற்றி அவர்களுக்கு நன்றி சொன்னார்கள். மீனாட்சி கலாவதியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு விட்டாள்.
அதன் பின் சிறிது நேரம் அங்கிருந்து விட்டே காயத்ரியும் கலாவதியும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
வீட்டுக்கு செல்லும் வழி முழுவதும் இருவருக்குள்ளும் மௌனமே ஆட்சி செய்தது.
வீட்டுக்கு சென்ற பின்னரும் அதே தான். கலாவதி காயத்ரியிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. சௌமி பள்ளியில் இருந்து வந்ததும் தாயிடம் இருந்த அமைதி அவளை திகைக்க வைத்தது.
காயத்ரியிடம் விசாரிக்கலாம் என்று பார்த்தால் அவளோ நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள். “இவளுக்கு மட்டும் எப்படி தான் எந்நேரமும் தூக்கம் வருதோ?”, என்று எண்ணிக் கொண்டு தாயைக் காணச் சென்றாள்.
சௌமி எவ்வளவோ பேச்சுக் கொடுத்தும் கலாவதி அவளிடமும் பேச வில்லை.
காதல் தொடரும்