ம்ம்ம் அதே மாதிரி கடந்த பதிவுல மணிமேகலை-கு ஆதி ரோலக்ஸ்-னு வச்ச பேரு, போன வருஷம் நான் கதை எழுதுனப்ப வச்சது… (ஆமா இந்த கதை நான் எழுத ஆரமிச்சது ஒரு வருஷம் முன்னாடியே… ஆனா இப்ப தான் வெளிய விடுறேன்) விக்ரம் படத்தை பாத்து வச்சேன்னு சொல்லிடாதீங்க ப்ளீஸ்… ??
வெகு நாள் பிரிவிரிக்குப் பின் வேகத்தாலும் க்ரோததாலும் நிகழ்ந்த சந்திப்பில் கோவம் கண்களை மறைந்திருந்தாலும் உயிரினும் மேலாய் நினைத்த நண்பனை இத்தனை வருடங்கள் கழிந்து சந்திக்கும் பொழுது ஒரு எதிரியை பார்ப்பது போலவா சந்திக்க நேர்ந்தது… எத்தனை எதேச்சையாய் சந்திப்புகள் நிகழ வாய்ப்புள்ளது அனைத்தையும் தாண்டி இவ்வாறொரு நிலையிலா காண வேண்டும்?? நலம் விசாரிக்க வேண்டிய இதழ்கள் அவனை அழிக்க சபதமெடுக்க வேண்டிய அவசியம்… ஆற தழுவ துடிக்கும் கைகள் இப்பொழுது அடிக்க துடிக்கின்றது… காலம் விளையாடும் விளையாட்டும் அதில் மடியும் உறவுகளும்…
அலுவலகத்தில் உதய்யை அவன் கண்கள் அளவெடுத்தப் பொழுது அவனுடைய கம்பீரமான தோற்றத்தில் மனம் மகிழ்ந்தாலும் அவன் கண்களில் இருந்த வெறுமை அவனுடைய மனதை பளிச்சிட்டு காட்டியது… ஆனால் இன்று தன்னை கட்டி அழுகும் இந்த வளர்ந்த பிள்ளையை பார்க்கும் பொழுது அவனை விட ஆதி அதிகம் உடைந்திருந்தான்…
அவன் உடைந்திருக்கின்றான், ஏதோ மரணத்திற்காக காத்திருப்பவன் போல் நிற்பவனை தள்ளி விட்டு அறைய தோன்றியது… ஆனால் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு நாளும் மனம் களங்காதவன் இன்று இவ்வாறு பேசும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று ஆதியால் சற்றும் யூகிக்க முடியவில்லை…
வீசி எறிந்தான் ஆதி, அவனுடைய அகந்தையை நண்பனுக்காக, அவனுடைய உயிரை விடவா என்னுடைய ‘நான்’ என்னும் அகந்தை பெரிது…? நிச்சயம் இல்லை…
“என்…” ஆதி வாயை திறக்கும் பொழுது அவர்கள் முகத்தில் ஒரு காரின் வெளிச்சம் பட அந்த திசையை நோக்கி ஆதி திரும்ப அந்த காரிலிருந்து வேக வேகமாக இறங்கி வந்த ஆதவன் ஆதியை பார்த்த நொடி அதிர்ச்சியாய் உறைந்தாலும் அடுத்த நொடி நிம்மதி மனதில் பரவியது…
விடாமல் பொலிந்து கொண்டிருந்த மழையும் குறைந்த பாடில்லை உதய்யின் அழுகையும் குறையவில்லை விட்டு விலக மனம் இல்லாமல் நின்றவன் அவன் நிதானம் பெரும் வரை அசையாதிருக்க உதய் தன்னுடைய இயல்பிற்கு வந்த நொடி அணைப்பை விட்டு விலகி, உதய் ஆதியை தன்னுடைய தலை கொத்திக்கொண்டே பார்க்க அவனோ இமைக்காமல் உதய்யையே பார்த்து நின்றான்…
“என்னடா ஆச்சு… ஜெயன் நீ தனியா வெளிய வந்தணு சொன்னான் அதான் எதாவது பிரச்னையோனு அவனை உன் பின்னாடியே போக சொன்னேன்” உதய்யை பார்த்து கேள்வி கேட்டான் ஆதவன்.
பதில் அளிக்காமல் உதய் வேறு பக்கம் திரும்பி நின்றான் மௌனத்தை மட்டுமே பரிசளித்து…
“என்ன ஆச்சு ஆதி?”
ஆதி பதில் எதுவும் கூறாமல் தோளை குலுக்கி வேறு புறம் திரும்பி நின்றவன் மீண்டும் ஒரு முறை உதய்யை பார்த்து நீண்டதொரு பெருமூச்சு விட்டு அவன் இப்பொழுது நிதானத்தில் உள்ளான் என்று உறுதி செய்தவன் ஆதவனிடம் திரும்பி, “பூச்சி மருந்து வாங்கி குடு குடிச்சிட்டு சாகட்டும்…” ஆதியின் கூற்றில் உதய்க்கு சிரிப்பு தான் வந்தது…. இதை அக்கறை என்பதா இல்லை பழி வாங்கும் செயல் என்பதா??
மீண்டும் குழப்பமே…
உதய் ஆதியை பார்க்க அவன் தன்னுடைய வண்டியில் ஏறி அமர்ந்து ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டே தன்னை தான் பார்த்துக் கொண்டிருந்தான் எச்சரிக்கை பார்வையை வீசியபடியே…
ஆதி சென்றதும் ஆதவன் உதய்யை பார்க்க அவன் ஆதவனின் பார்வையை அழகாக தவிர்த்தான்…
“ஒன்னும் கேக்க மாட்டேன் வண்டில ஏறித் தோலை” உதய்யின் கையில் இருந்த சாவியை வாங்கியவன் அவன் வண்டிக்கு பின்னால் இருந்த ஜெயனிடம் கொடுக்க, “வேணாம் நானே போய்க்குவேன்”
“நீ பண்ண வரைக்கும் போதும் உன்ன வீட்டுல விட்டா தான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும் ஏறு இல்லனா அறைஞ்சிடுவேன்” முடிவாய் கூற உதய் வேறு வழி இல்லாமல் அமைதியாய் வண்டியில் ஏறினான். ஆனால், வீட்டிற்கு செல்லும் வரை ஆதவனோ உதய்யோ எதுவும் பேச வில்லை… உதய்யின் வாசலில் வண்டியை நிறுத்தியவன்…
“நாளைக்கு நாம லண்டன் போறோம் வர ஒரு வாரம் ஆகும் அங்க ஒரு புது பிரான்ச் ஓப்பன் பண்ண கொஞ்சம் வேலை இருக்கு உன்னோட ஹெல்ப் தேவை, பிலைட் காலைல ஆறு மணிக்கு வந்து சேறு”
அவ்வளவே ஆதவன் அவனிடம் மறு பதில் எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்… பிறகு அவனுக்கு நொடி பொழுது கொடுத்தாலும் ஏதேனும் ஒரு காரணம் கூறி மறுத்துவிடுவான்… ஆதவனுக்கு அவனை இப்பொழுது அந்த வீட்டில் இருந்து வெளியே துரத்த வேண்டும் அதற்காகவே இந்த முடிவு. அதற்காக எவ்வளவு பொய் வேணும் என்றாலும் கூற தயாராக உள்ளான்…
அதன் பிறகு உதய்யும் மாதவனும் ஒரு வாரம் என்று எண்ணிய பயணம் பத்து நாட்கள் கடக்க, பிறகே இந்தியா திரும்பினார். இந்த பத்து நாட்களில் அவனுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது ஒரு முறை மட்டுமே… முதல் வாரம் அழைப்பை ஆவலுடன் எதிர் பார்த்தவன் பிறகு தன்னை மாற்றிக்கொண்டான் தேவை இல்லாமல் எதற்காக மனதிற்கு ஒரு பாரத்தை கொடுக்க வேண்டும் பிரியம் இல்லாத உறவுகளுக்காக?
அவனுடைய ஒரே ஆதரவான அவனது நண்பன் ஆதவன் அவனை ஒரு நிமிடம் கூட தனியே விடாமல் வேலைகளை வாரி இரைத்தான் அவனது முயற்சியை உணர்த்த உதய்யும் மறுக்காமல் செய்தான் அவனுக்கும் அந்த இடைவேளை தேவை பட்டது…
இந்தியாவிற்கு திரும்பி நான்கு நாட்கள் கடந்த நிலையில் அவன் இரவு பகல் பாராமல் வேலையை மட்டுமே செய்தான் வீட்டிற்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து அலுவலகமே கதியாய் கிடந்தான் அவனது தந்தை அதை பற்றி கேட்டதற்கு,
“வேலை இருக்குப்பா டீல் சைன் ஆகுற வரைக்கும் நான் வீட்டுக்கு வர மாட்டேன்” என்றான்…
வீட்டில் இருக்கும் அவனின் சித்தி நளினிக்கு ஹரி மற்றும் விஷ்ணுவின் வித்யாசமான நடவடிக்கை சந்தேகத்தை வரவழைத்தது அதிலும் உதய்யின் செயலும் சேர்ந்து அவரை சிந்திக்க செய்தது… ஆதவனுக்கு அழைத்தவர் அவர்களிடையில் ஏதேனும் சண்டை நிகழ்ந்ததா என்று கேட்க அவன் மறுத்துவிட்டான் ஏனேனில் ஆதவனுக்கும் அவர்களிடையில் என்ன நடந்தது என்று தெரியாதல்லவா… அப்படி இருக்கையில் அவன் எவ்வாறு கூறுவான் அதிலும் கோவத்தில் அவரை திட்டியும் விட்டான்…
“என்ன புதுசா உதய் பத்தி எல்லாம் கேக்குறீங்க எப்பையும் உங்க பசங்கள பத்தி மட்டும் தான யோசிப்பிங்க”
அவன் கூறியதை கேட்டதும் அவருக்கு கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது அவன் கேட்பதும் உண்மை தானே விஷ்ணுவையும் ஹரியியும் பற்றியே எப்பொழுதும் யோசிப்பவர் உதய்யை பற்றி யோசிப்பது அரிதே… உதய்யின் தாயார் மறைந்த பிறகு அவன் தந்தை புதல்வர்களை அழைத்து தனியாக செல்வதாக இருக்கையில் நளினி தான் அவர்களை தன்னுடைய புதல்வரால் போல் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தார் ஆனால் அதை பின்பற்றவில்லை…
இதற்கு காரணம் உதய்யின் ஒதுக்கம் ஒரு புறம் இருந்தாலும் அவன் வயதை காரணம் வைத்து அவனை அவ்வளவாக கவனிக்கவில்லை… இப்பொழுது அவனை காணாத இரண்டு வாரங்கள் அவரை பெரிதும் பதித்து இருந்தது… தினம் இரவு வந்து வீட்டையே சுற்றி அவரிடம் வந்து வீட்டிற்கு என்ன தேவை அவருக்கு எதாவது உதவி தேவையா சகோதரிகளுக்கு எதுவும் தேவையா என்று ஒவ்வொன்றையும் ஆழ்ந்து அலசியே படுக்கைக்கு செல்வான்…
உணவு மேஜையில் இருக்கும் பொழுது எவரேனும் ஒருவர் சரியாக உண்ணவில்லை என்றால் உடனே அவர்களுக்கு என்ன உணவு புடிக்குமோ அது அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெயன் மூலம் அவர்கள் முன் இருக்கும். இதை யாவரும் கவனிக்கவில்லை என்றாலும் நளினி கவனித்திருக்கிறார் ஆனால் அவனுடைய ஒதுக்கம் அவருக்கு அவன் தனிமையை விரும்புவதாக தெரிய விலகியே இருந்தார்…
“நான் என்னடா ஆதவா பண்ணுவேன் அவன் தான் எப்பையுமே தனி தீவா இருக்க ஆசை படுவான் அதுனால தள்ளியே இருந்தேன்” அழுதுகொண்டே பேசினார், “பிள்ளைக்கு எதுவும் ஒடம்பு சரி இல்லையா சிரத்தையே இல்லாம பேசுனான்”
“வந்தேன்னு வைங்க கொமட்டுலயே குத்துவேன் இத்தனை நாள் எங்க போச்சு உங்க புள்ள பாசம் எல்லாம்…”
அவன் பேச பேச அவர் விசும்பிக்கொண்டே இருந்தார், “உங்களுக்கு அவனை பத்தி என்ன கேக்கணும்னு தோணுச்சுனாலும் அவன் கிட்ட டாரெக்டா அவன்கிட்டயே கேட்டுக்கோங்க”
“அவன்கிட்ட பேச பயமா இருக்கு ஆதவா”
“பிள்ளை கிட்ட பேச என்ன பயம் வைங்க போன்-அ எனக்கு வேலை இருக்கு அப்றம் உங்க பையன் விஷ்ணுவை கொஞ்சம் அடங்கி இருக்க சொல்லுங்க இல்லனா மூஞ்சி அடையாளம் தெரியாத மாதிரி ஆக்கிடுவேன்”
‘பயம் ஆம்ல பயம்’ என்று அவரை திட்டிக்கொண்டே அலைபேசியை அனைத்துவிட்டான்
இங்கே உதய் வேளையில் மும்முரமாக உணவை கூட சரியாக எடுக்காமல் இருக்க அவனை பார்த்த யாழினிக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது… இன்னொரு புறம் இவ்வாறு உணவிற்கு முக்கியம் இல்லாமல் வேலை பார்த்து எந்த கோட்டையை கட்ட போகிறான் என்று கோவம்… ஆனால் அவனிடம் இருந்த மாற்றத்தை அவளும் நன்றாக கவனித்தாள்… அவன் முகத்தில் இருக்கும் இறுக்கம் நீங்கி வெறுமை படர்ந்திருந்தது… அவளின் அசைவுகளை நோக்கும் கண்கள் கணினியின் திரையை தவிர வேறு எங்கும் அசைய மறுத்தது தன்னுடடைய ஏமாற்றத்தை மறைத்தவள் இன்றேனும் அவன் மத்திய உணவை உண்கிறானா என்று கடிகாரத்தை பார்க்க அது உணவு இடைவேளை தாண்டி அரை மணி நேரம் சென்றதை குறித்தது… இனியும் இவனை விட்டு வைக்க கூடாதென முடிவுடன் அவனுடைய அறைக்கு சென்றாள்…
அவள் வருவதை பார்த்தவன், “நல்ல வேலை வந்திங்க யாழினி நேத்து உங்கள ஒரு மெயில் அனுப்ப சொன்னேன்ல யு.ஸ் தாம்சன் கம்பெனிக்கு இன்னொரு மெயில் அனுப்பனும் அத உங்களுக்கு டாக்குமெண்ட்-ஆ சென்ட் பண்ணிருக்கேன் அத ஒன் டைம் ரிவைஸ் பண்ணிட்டு நாம போட்டு வச்சிருக்க பட்ஜெட்க்கும் இதுக்கும் எவ்ளோ டிஃபரென்ஸ் வருதுன்னு பாத்து சொல்லுங்க அப்றம் அந்த ப்ளூ பைல்ல…” இவனை விட்டால் இவன் பேசிக்கொண்டே செல்வான் என்று அறிந்தவள் அவனை நிறுத்தினாள்… எதை கூறினால் அவன் அமைதி ஆவானோ அதை கூறி நிறுத்தினாள் அந்த காட்டாற்றை…
“சார் எனக்கு பசிக்கிது” திரையில் இருந்து கண்களை உயர்த்தியவன், “ஓ நீங்க சாப்புடலையா சரி போய் சாப்பிட்டு வாங்க” என்று மறுபடியும் திரையில் கவனம் சென்றது….
அவனின் செயலில் கோபமுற்ற யாழினி அவன் அமர்ந்திருந்த பக்கம் சென்று மடிக்கணினியை மூடினாள் அதில் கோவம் அடைந்த உதய் அவளை பார்க்க, “நீங்களும் என் கூட சாப்பிட வரீங்க சார்”
புருவம் உயர்த்தி பார்த்தவன் அவள் கண்களில் இறைஞ்சுதலை கண்டு மனம் இறங்கினாலும் அவன் மூளை சொல்வதை கேட்டு, “இல்ல நீங்க போங்க எனக்கு பசிக்கல”
“இல்ல சார் நீங்க வந்த தான் நான் சாப்ட போவேன்”
“பசிக்காம நான் வந்து என்ன பண்ண போறேன் டைம் தான் வேஸ்ட் ஆகும் நீங்க போங்க”
“ஏன் சார் இப்டி பொய் சொல்றிங்க எனக்கு தெரியும் சார் நீங்க நாலு நாளா ஒழுங்கா சாப்பிடல, தூங்கலை… உங்க கண்ணு கூட எப்படி சிவந்திருக்கு பாருங்க கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க உங்க கண்ணுக்கு”
“சரி இருங்க ஜெயன் கிட்ட ஏதாச்சும் வாங்கிட்டு வர சொல்றேன்”
“இல்ல வேணாம் நாம வெளிய எங்கயாச்சும் போகலாம் வாங்க”
அவள் கண்களில் அவ்வளவு ஆசை… இதற்காக ஆவது வெளியில் அவளுடன் செல்ல ஆசை எழுந்தது அவனுக்கு… அவனும் கவனிக்கிறான் அவளை உள்ளே அவனிடம் எதாவது உதவி என்று வருபவள் அவனை ஒரு ஆவலுடன் பார்ப்பாள்… எதாவது பேச முயற்சித்துக்கொண்டே இருப்பாள் ஆனால் பதில் கூறும் நிலையிலோ உற்சாகமாக உரை நிகழ்த்தும் நிலையிலோ அவன் இல்லை அதனால் வெளியில் செல்லும் பொழுது அந்த சிறிய முகத்தில் படரும் சோக ரேகைகள்…
அது தன்னை பாதிக்க கூடாதென உறுதியாக இருந்தவன் இப்பொழுது அதே உறுதியை பிடித்து வைத்திருக்க முடியவில்லை. அவன் ஆனந்தத்திற்காக அவன் மன நிம்மதிக்காக அவள் செய்யும் உதவிகளை ஏற்கவே மனம் துடித்தது…
“சரி வாங்க” என்று எழுந்தவன் தன்னுடைய சட்டையின் ஒரு பட்டனை கழட்டியவன் கையை மடித்து விட்டு வெளிய செல்ல யாழினி அவன் பின்னே அவன் வேகத்திற்கு இணையாக ஓடினாள் இவர்களை பார்த்த ஜெயன் உதய்யின் பின்னே வேகமாக வந்தான்…
“சார்”
“ஜெயன் நான் சாப்புட போறேன் வரீங்களா?”
‘பேசுவது உதய் தானா’ என்னும் நோக்கில் ஜெயன் அவனை வியந்து பார்த்தான்…
“வாங்க ஜெயன்” என்று உதய் மின் தூக்கியை நோக்கி செல்ல வேறு வழி இன்றி ஜெயன் அவனுடன் செல்ல பின்னே யாழினி முகத்தில் ஒரு ஆனந்த பூச்சுடன் வந்தாள்.
“அய் அண்ணா நீங்களும் வர்றிங்களா? சூப்பர் வாங்க உங்க கூட ஒக்காந்து நான் சாப்பிட்டதே இல்ல… உங்களுக்கு என்ன டிஷ் புடிக்கும்… எனக்கு பட்டர் சிக்கன் தான் ரொம்ப புடிக்கும்…” உதய்யை பார்த்து, “சார் பட்டர் சிக்கன் ஒன்னு அப்றம் மெயின் டிஷ் பிரைடு ரைஸ் எனக்கு… அண்ணா உங்களுக்கு?”
‘பட பட பட்டாசு’ உதய் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்…
ஜெயன் உதய்யை பார்க்க அவன் சிரிப்புடன் கீழ் தளத்திற்கான பட்டனை அழுத்தி சாதாரணமாக நின்றான்…
“அண்ணா சொல்லுங்க” மேலும் அழுத்தினாள் யாழினி…
“நான் சாப்டுட்டேன் மா”
“பொய் சொல்றாங்க சார், பாருங்க கண்ணு எப்படி பட படக்குதுனு”
“ம்ம்ம் அப்டியா ஜெயன்?” உதய் மறைத்து வைத்த சிரிப்புடன் கேட்டான் ஆனால் கண்கள் சிறு பிள்ளை போல் குற்றம் சாட்டிய யாழினியை பார்த்துக்கொண்டே இருந்தது…
“ஆமா சார் நான் நீங்க சாப்பிட்டதும் தான் சாப்பிடுவேன்”
“சரி அப்ப நல்லது தான் எல்லாரும் சாப்பிடலாம்… ஒரு நல்ல ரெஸ்டாரண்ட் பாருங்க தூரமா இருந்த கூட பரவால்ல”
“இல்ல சார் பக்கத்துல ஒரு புது பைவ் ஸ்டார் ஹோட்டல் ஓபன் பண்ணிருக்காங்க நல்ல இருக்குனு கேள்வி பட்டேன் அங்க போகலாம்”
“ஐயோ பைவ் ஸ்டார்ட் ஹோட்டல் எல்லாம் வேணாம் எனக்கு ஒரு கடை தெரியும் அங்க போகலாமா” – யாழினி கேட்டால் உதய்யிடம்
“இல்ல மேடம்…”
“ஐயோ அண்ணா என்ன மேடம் எல்லாம் கூப்புடாதிங்க யாழினி-னு பேர் சொல்லியே கூப்புடுங்க அப்ப தான் அந்நியமா தெரியாது பாருங்க”
“ஹோட்டல் பேரு சொல்லுங்க யாழினி”
மின் தூக்கியில் இருந்து வெளி வரும் பொழுது உதய் கேட்க அவள் அந்த கடையின் பெயரை கூறி அவனை பின் தொடர்ந்தாள்… இவர்களுக்கு பின்னால் வந்த ஜெயனுக்கு ஆச்சிரியத்திற்கு மேல் ஆச்சிரியமாக இருந்தது எவருடனும் அதிகம் ஒட்டாத இவன் எவ்வாறு இவளுடன் இவ்வளவு குறுகிய காலத்தில் அதுவும் பெண்களிடம் தன்னால் முடிந்த அளவிற்கு இடைவெளியை கடை பிடிப்பவன் இவளுடன் சகஜமாக பேசுவது அவளுக்கு உணவு வாங்கி தருவது, கம்பெனி ரூல்ஸ்ல் இல்லாத புது விதியாய் அவளுக்கு வாகனம் ஏற்பாடு செய்வது, வந்த பத்து நாட்களில் முன் பணம் தருவது என்று சலுகைகள் ஏராளம் அதுவும் அவளுக்கு மட்டுமே… நான்கைந்து நாட்கள் அவனுடைய அறையை விட்டு வராதவன் இன்று அவளுடைய ஒரு வேண்டுகோளுக்காக வந்திருக்கிறான்… அதற்கு காரணம் என்னவாக இருந்தாலும் அவனுக்கு கவலை இல்லை அவனுடைய சார் நீண்ட நாட்களுக்கு பிறகு மத்திய உணவு உண்ண போகிறான்… அதற்காக யாழினிக்கு மனதார மானசீகமாக நன்றி கூறிக்கொண்டான்…
ஜெயன் ஓட்டுனருக்கு சைகை செய்து வண்டியை எடுக்க கூற அவனை தடுத்த உதய் அவனே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கதவை அடைத்தான்…
“சார் நீங்க என் ஓட்டுரிங்க நான் வண்டி எடுக்குறேன்”
“இல்ல ஜெயன் ஏறுங்க டைம் இல்ல”
“சார் இது ரோல்ஸ் ராய்ஸ் கார் தான?”
பின் இருக்கையில் அமர்ந்த யாழினி மிக மிக மெதுவாக கதவை சாற்றி அந்த காரை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்… அந்த கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி… முன் கண்ணாடியில் அதை பார்த்த உதய்க்கு இந்த காட்சிக்காகவே இது போன்ற பல புது கார்களை வாங்க தோன்றியது…
“ம்ம்ம்ம்ம்” என்றான் வண்டியை சாலையில் பாய்ச்சி
“குண்டு ஊசி போட்ட கூட கேக்காதாமே சார்” இருக்கைகளை மெல்ல வருடியவள், “ரொம்ப சாப்ட்-ஆ இருக்கு சார்… எவ்ளோ வரும் இந்த கார்”
“11 C”
“ஆத்தி” வாயை பிளந்தாள் யாழினி… இதை பார்த்த ஜெயனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…
“சார் கேக்குறேனு தப்பா நெனச்சுக்காதீங்க ஒரு நூறு கோடி இருக்குமா உங்க சொத்து?” அவள் கேள்வியில் எந்த கள்ளம் கபடமும் இல்லை
“ம்ம்ம்ம் இருக்கும்” என்றான் சிறு புன்னகையுடன் ஆனால் இவர்கள் மதிப்பில் அந்த நூறு கோடி ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும்
அவள் கேள்வியிலேயே இருக்க உதய் அவள் கூறிய கடையின் முன்னே வண்டியை நிறுத்தினான்… அது ஒரு சாதாரணமான கடை சிறிதும் இல்லை பெரிதும் இல்லை ஆனால் கடையினுள் இருந்து வந்த மனம் கால்களை கட்டி இழுத்தது… காரை விட்டு இறங்கியவள் யாருக்காகவும் நிற்க வில்லை விறு விறுவென உள்ளே சென்றாள்…
“சார் நான் வேற ரெஸ்டாரண்ட் பாக்கவா?” கேட்டான் ஜெயன் அந்த கடையை நோட்டம் விட்டபடியே.
கடையில் கூட்டம் வழிந்தோடியது உள்ளே உண்ண கூட இடம் இருக்குமா என்ற சந்தேகம் அவனுக்கு. அதை விட உதய் இது போன்ற இடத்திற்கெல்லாம் வந்ததே இல்லை எப்பொழுதும் பெரிய பெரிய உணவகத்திற்கு மட்டுமே செல்லும் பழக்கம் கொண்டவன் அதை விட அவன் தொழில் அவனை அவ்வாறு இருக்க வைத்தது என்று கூறலாம்…
“கார் பார்க் பண்ணியாச்சுல, வாங்க போகலாம்” என்று அவனுடைய பேச்சை அலட்சிய படுத்தி தன்னுடைய வால்ட்டை எடுத்து அதில் போதுமானளவு பணம் உள்ளதா சென்று உறுதி செய்து உள்ளே சென்றான்…
“பசங்க எல்லாரையும் சாப்பிட சொல்லுங்க ஜெயன்”
“சரி சார்”
உதய் உள்ளே சென்றதும் யாழினியின் குரல் அங்கு உள்ள மொத கடையின் கவனத்தையும் இருந்த அத்தனை சலசலப்பு ஒலியையும் தாண்டி கேட்டது, “சார் இங்க வாங்க” கையை மேலே தூக்கி காட்டினாள் தனக்கு அருகில் உள்ள ஒரு இருக்கையை பிடித்துக் கொண்டு…
சத்தமாக பேசுவதையே பொறுக்காதவன் இன்று சிரிப்புடன் அவள் கூறிய இடத்திற்கு சென்று அவள் அருகில் அமர்ந்து கடையை நோட்டம் விட்டான்… இளம் மஞ்சள் நிற வண்ணம் பூச பட்டிருந்த சுவர்களில் பல கறைகள்… அவன் அமர்ந்திருந்த நாற்காலியும் ஒரு புறம் ஆடிக்கொண்டு இருந்தது… கையை நாடியில் வைக்க நினைத்து அந்த டேபிளை பார்த்தவன் அது இருந்த கோலத்தை பார்த்து யாழினியை பார்க்க அவள் மும்முரமாக தனது பையில் ஏதோ தேடிக் கொண்டிருந்தாள்…
“இங்க டேபிள் எல்லாம் துடைக்க மாட்டாங்களா?”
சட்டென அவள் டேபிளை பார்க்க இவர்களுக்கு முன்னாள் உணவிருந்தி சென்றவர்கள் விட்டிருந்த சாதம் குழம்பு எல்லாம் அப்படியே இருந்தது… சங்கடத்துடன் அவனை பார்க்க விரும்பாதவளாய்… “அண்ணா” அங்கே வேலை பார்த்தவர்களை கத்தி அழைத்தாள்…
“அண்ணா இந்த டேபிளை கிளீன் பண்ணல இன்னும்”
“இந்த வந்துட்டேன் யாழினி” என்று ஒருவர் வந்து துடைத்துக்கொண்டே, “தம்பி யாருமா, தோஸ்தா?”
‘ரெகுலர் கஸ்டமர் போல’ – உதய்
“இல்ல ண்ணே இவரு என்னோட பாஸ்”
“ஓ தம்பி என்ன கடை வச்சிருக்கீங்க” என்றார் அவர் எந்த தயக்கமும் இன்றி… அவர் கேட்டதில் சிரித்த யாழினி, “அண்ணா அது கடை இல்ல பெரிய பேக்டரி மாதிரி இருக்கும்”
பிறகு இருவரும் உணவை ஆர்டர் செய்ய ஜெயன் மற்றும் அவனுடைய மற்ற கார்ட்ஸ் சற்று தள்ளி ஆங்காங்கு கால்வாசி கடையை பிடித்து அமர்ந்தனர்… அனைவர்க்கும் ஆச்சிரியம் உதய்யின் இந்த புது செயல்…