“தெரியும் அத்தை. ஆபத்தை நினைச்சு பயந்தா நான் என் மகளை இழந்துருவேன். கண்மணி ரொம்ப அறிவாளிக் குழந்தை. அப்பாவைப் பத்தி கேட்டா நான் அழுவேன்னு தான் இது வரை அவ அப்பா பத்தியே கேட்டது இல்லை. ஆனா இப்ப ஸ்கூல்ல அவளோட மரியாதை ரொம்ப முக்கியம் அத்தை. எங்களுக்குன்னு ஒரு இடம் கடவுள் கொடுப்பார். நாங்க போறோம்”, என்று சொன்னாள்.
சொன்னது போல அடுத்த வாரத்தில் மகளை அழைத்துக் கொண்டு கிளம்பியே விட்டாள். எங்கே போவது என்ன செய்வது என்று ஒன்றுமே தெரிய வில்லை.
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. எங்கே செல்வது என்று தெரியாமல் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்த போது இளங்கோ டீ ஸ்டால் என்ற கடை கண்ணில் பட்டது. அவளுக்கு சட்டென்று இளங்கோ நினைவுக்கு வந்தான்.
இளங்கோ யாரும் அல்ல, அவளுடன் ஒன்றாக படித்தவன். உடனே தன்னுடைய போனில் இருந்து அவனை அழைத்தாள்.
“சொல்லு பவி எப்படி இருக்க?”
“நான் நல்லாவே இல்லை இளங்கோ. எனக்கு நீ ஒரு உதவி செய்யனும்”
“நீ எனக்கு பெஸ்ட் ஃபிரண்ட். உன் கல்யாண விசயத்துல தான் என்னால உன்னைக் காப்பாத்த முடியலை. இப்ப என்ன வேணும்னாலும் செய்றேன், சொல்லு. என்ன செய்யணும்?”
“எனக்கும் என் மகளுக்கும் இருக்க இடம் வேணும். நாங்க பிழைக்க ஒரு வேலை வேணும். உன்னால ஏற்பாடு பண்ண முடியுமா? வேற யார் கிட்ட கேக்கன்னு தெரியலை”
“இங்க சென்னைக்கு வரியா? இங்கயே ஏதாவது ஜாப் தேடித் தரேன்”
“வேண்டாம் இளங்கோ, நான் யாரையும் பாக்க விரும்பலை. எனக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் என்னை கொண்டு போய் விட்டுடு”
“சரி ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு. நான் திருப்பி கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் தன்னுடைய தங்கைக்கு அழைத்தான். அவள் பெயர் காவேரி. ஊட்டியில் அவளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறான். அவளிடம் உதவி கேட்க அவளும் அனுப்பி விடச் சொன்னாள்..
உடனே பவித்ராவை அழைத்தவன் “இப்ப எங்க இருக்க பவி?”, என்று கேட்டான்.
“கோவை பஸ் ஸ்டாண்ட்ல இளங்கோ”
“அப்படின்னா அப்படியே மேட்டுபாளையம் பஸ் ஏறு. அங்க போனதும் என் தங்கச்சி புருசனும் என் தங்கச்சியும் உன்னைக் கூப்பிட வருவாங்க. என் மாப்பிள்ளை உனக்கு வேலை வாங்கித் தருவார். நான் ஒரு ரெண்டு நாள் கழிச்சு உன்னையும் பாப்பாவையும் வந்து பாக்குறேன்”
“சரி இளங்கோ”, என்று சொல்லி போனை வைத்தவள் மகளை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினாள்.
காவேரி மற்றும் அவளது கணவன் அன்பு இருவரும் பவித்ராவை பொறுத்தவரை தேவதூதர்கள். இருவரும் பவித்ரா மற்றும் கண்மணியை சொந்தமாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களின் மகள் சங்கீதாவும் கண்மணியை தன்னுடைய தோழியாக ஏற்றுக் கொண்டாள்.
அன்பு ஊட்டியிலே அவர்களுக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுத்து ஒரு தேயிலைத் தோட்டத்தில் கணக்கு எழுதும் வேலையும் வாங்கிக் கொடுத்தான். பவித்ராவை தன்னுடைய தங்கை என்று தான் அனைவரிடமும் சொன்னான். அங்கிருப்பவர்களும் நட்பாக பழகினார்கள்.
கணவன் எங்கே என்று விசாரித்தவர்களிடம் அவர் இறந்து விட்டார் என்று பொய்ச் சொன்னாள் பவித்ரா. கண்மணியிடம் கேட்டாலும் அதே பதில் தான். அதுவே மற்றவர்களிடம் அவர்கள் மேல் இரக்கத்தை பெற்று தந்தது.
இளம் விதவை என்று சில பிரச்சனைகளும் அவளுக்கு வந்தது தான். அதை எல்லாம் கடந்து மகளை வளர்த்தாள். சங்கீதா படிக்கும் பள்ளியிலே மகளைச் சேர்த்தாள்.
இங்கே ஊருக்கு வந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் வீட்டை விட்டுப் போனதை அறிந்து துடித்து போனார். அம்மாவை சத்தம் போட அவர்களை அநாதை ஆக்கிய நீ எனக்கு மகனே இல்லை என்று அவரும் மாற்றி சத்தம் போட்டார்.
ஊருக்கு வந்து இதற்கு காரணமான கோதையை திட்டினார். கோதைக்கு அவர்கள் போனது கஷ்டமாக இருந்தாலும் மனதுக்குள் ஒரு சின்ன ஆறுதல் வந்தது. ஒரு வாரம் கோதையிடம் பேசாமல் இருந்த ராதாகிருஷ்ணன் அதற்கு பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி போனார்.
அம்மா, மாமனார், மாமியார் வரிசையாக தவறிப் போக அனைவருக்கும் கொள்ளி வைத்து விட்டு தன்னுடைய குடும்பம் என்று இருக்கலானார். அவருக்கு பிறந்த மகள் அவர் மனதை முற்றிலும் மாற்றினாள். அவளுக்கு உமா என்று பெயர் வைக்க அவருக்கு விருப்பம் இல்லை தான்.
ஆனால் கோதை “உங்க அப்பா பேரை என் பையனுக்கு வச்சிருக்கேன். அதனால எங்க அம்மா பேரை பொண்ணுக்கு வைக்கணும்”, என்று சொல்ல வேறு வழி இல்லாமல் சரி என்று சொன்னார்.
அடிக்கடி பவித்ரா நினைவும் மகள் நினைவும் வரும். அவர் நினைத்தால் அவர்களைத் தேடலாம் தான். ஆனால் எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் அதை அப்படியே விட்டுவிட்டார்.
அவர்கள் திரும்ப வந்தால் அவர் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது என்ற சுயநலத்தில் கூட அவர் தேடாமல் இருந்திருக்கலாம். ஊட்டியில் பள்ளிப் படிப்பை முடித்த கண்மணி கல்லூரி படிக்க சென்னைக்கு வந்தாள். அங்கே தான் அவள் இளவரசனைப் பார்த்தாள்.
அவன் அவள் அழகில் மயங்கி காதல் என்று பிதற்ற தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எண்ணி ஒதுங்க தான் செய்தாள். அவனுமே குடும்ப சூழ்நிலையால் அவளை அதிகம் தொந்தரவு செய்ய வில்லை.
அது அவளுக்கும் பிடித்தது. சிறு நட்புடன் அவர்கள் பேச ஆரம்பிக்க அது காதலாக வளர்ந்தது. மற்ற அனைவரிடமும் தந்தை இறந்ததாக சொல்லி இருந்த கண்மணி அவனிடம் மட்டும் உண்மை நிலவரத்தைச் சொன்னாள். அதைச் சொன்னால் அவன் விலகி விடுவான் என்று தான் எண்ணினாள். ஆனால் அவன் திடமாக இருக்க அவனை அழைத்துக் கொண்டு ஊருக்கே சென்றாள்.
தாயிடம் அவனை அறிமுகப் படுத்த பவித்ராவுக்கும் அவனை பிடித்தது. “நீ என் மகளுக்கு பெரிய பங்களா வாங்கிக் கொடு. நகை வாங்கிக் கொடு. கார் வாங்கிக் கொடு. அவளை பணக்காரியா வச்சிக்கோன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன் பா. எந்த சூழ்நிலையிலும் நீ அவளை கை விட மாட்டேன்னு ஒரு உத்திரவாதத்தை மட்டும் எனக்கு கொடு”, என்று கேட்டாள் பவித்ரா.
“கண்டிப்பா நான் கண்மணியைக் கை விட மாட்டேன் மா”, என்று வாக்கு கொடுத்தான் இளவரசன்.
இருவருக்கும் மூன்று வயது வித்தியாசம் என்பதால் கண்மணி இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் போது இளவரசன் வேலைக்கு சென்று விட்டான். அப்போது ஒரு நாள் கண்மணி கல்லூரியில் இருக்கும் போது அவளுக்கு ஒரு தகவல் வந்தது. அவளது அம்மா தவறி விட்டார் என்று சொல்லி.
இளவரசனுக்கு அழைத்து சொல்லி விட்டு அவள் கிளம்ப “நீ கிளம்பி போ கண்மணி, நானும் வீட்ல சொல்லிட்டு வரேன்”, என்று சொன்னவன் அன்னையிடம் விஷயத்தைச் சொல்லச் சென்றான். அங்கே வீட்டு டிவியில் பாண்டி படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஹீரோவின் அண்ணன் ஒரு பெண்ணுடன் ஓடிப் போய்விடுவான். அதைப் பார்த்து அவனது அன்னை திட்டிக் கொண்டிருக்க உண்மையை மறைத்து பொய்ச் சொல்லி விட்டு ஊட்டிக்கு சென்றான்.
அங்கே பவித்ரா சாதாரணமாக இறக்க வில்லை. அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்த குடவுன் தீக்கிரையாகி இருந்தது. அந்த விபத்தில் பலர் இறந்திருந்தனர். அன்பு கூட இறந்திருந்தான். அனைவருமே அதிர்ச்சியில் ஸ்தம்பித்து தான் போனார்கள்.
சாவுக்கு இளங்கோவும் வந்திருந்தான். இங்கே எல்லாம் முடிந்ததும் இளங்கோ காவேரியையும் சங்கீதாவையும் ஊருக்கு கிளம்பச் சொன்னான். கூடவே கண்மணியையும் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி கிளம்பச் சொன்னான்.
கண்மணி என்ன செய்ய என்று தெரியாமல் இளவரசனைப் பார்க்க இளவரசன் உறுதியாக மறுத்தான். “அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சார். கண்மணியை நான் பாத்துக்குவேன். எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வைங்க”, என்றான்.
“உங்க வீட்ல….”, என்று இளங்கோ தயங்க “நான் இல்லைன்னா அவங்க அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க சார். ஆனா நான் இல்லைன்னா கண்மணி ஒண்ணும் இல்லாம போயிருவா. அவளை இப்ப வீட்டுக்கும் கூட்டிட்டுப் போக முடியாது. ஆனா இப்ப எங்க கல்யாணம் நடக்கணும்”, என்று சொல்ல அவர்களுக்கு இளங்கோ தான் திருமணம் செய்து வைத்தான்.
இருவரும் ஓசுருக்கு வந்தார்கள். அங்கே வீடு எடுத்து இருவரும் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். முடிக்காத படிப்பை இளவரசன் தான் அவளை முடிக்க வைத்தான். அவனது அலுவலகத்திலே அவளுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்தான். அதற்கு பிறகு தான் அவனுக்கு திருப்பூருக்கு மாற்றல் கிடைத்தது. கண்மணியும் வேலையை விட்டுவிட்டு அவனுடன் சென்றாள். அங்கே சென்று ஒரு மாதத்துக்கு பிறகு தான் அவளுக்கு குழந்தை தங்க அதை சோதித்து விட்டு வீட்டுக்கு வரும் போது தான் ஒரு லாரி அவர்கள் வண்டியை மோதியது.