பவித்ராவும் கண்மணியும் ஊரை விட்டு சென்றது வரை மகளிடம் சொன்ன ராதாகிருஷ்ணன் “அவங்க எங்க போனாங்க என்ன ஆனாங்கன்னு தெரியாது டா உமா குட்டி. இப்ப அவங்க உயிரோட இருக்காங்களான்னு கூட தெரியலை. உன் பாட்டி இறந்ததுக்கு அவங்க வருவாங்கன்னு நினைச்சேன். ஆனா வரலை”, என்று மூடித்தார்.
“அவங்க வரலைன்னதும் நீங்களும் தொல்லை விட்டதுன்னு அவங்களை தேடக் கூட இல்லை அப்படி தானே பா?”, என்று கேட்டாள் உமா. அவரால் மகளை நிமிர்ந்து பார்க்க முடியலை.
“பதில் சொல்லுங்கப்பா”
“அவர் எப்படி உமா பதில் சொல்லுவார். ஆம்பளைங்குறது குழந்தை பெத்துக்க மட்டும் இல்லை. தன்னை நம்பி வரவளை கடைசி வரைக்கும் காப்பாத்தணும். அம்மா செஞ்சது சரின்னு நான் சொல்ல மாட்டேன். அதே நேரம் அது தப்புன்னும் சொல்ல மாட்டேன். ஏன்னா அது பொண்ணுங்களோட இயல்பு. தன்னோட புருஷன் தனக்கு மட்டும் தான் வேணும்னு நினைப்பாங்க? ஆனா இவர் என்ன செஞ்சிருக்கணும்? அம்மா கிட்ட கோபப் பட்டு அவங்க கூடவே போய் இருந்துருக்கணும்ல? ஏன் அவங்க கூட போகாம அம்மா கூடவே இருந்துட்டார்? அப்படின்னா அவரும் அவங்களை ரெண்டாந்தாரமா தானே பாத்துருக்கார்?”, என்று கேட்டான் அருண்.
பிள்ளைகள் இருவரும் குற்றம் சொன்னதும் அவர் பதில் சொல்ல முடியாமல் மௌனமானர். “என்ன ரெண்டு பேரும் அவரையே குற்றம் சொல்றீங்க?”, என்று கேட்டாள் கோதை.
“உன் புருஷனை சொன்னதும் உனக்கு கோபம் வருதே? அப்படின்னா அவங்க புருஷனை நீ ஒரெடியா பிரிச்சிட்டியே? அப்ப அவங்களுக்கு உன் மேல எவ்வளவு கோபம் வரும்? நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கு குழந்தை வேணும்னு ஒரு அப்பாவி பொண்ணை உன் புருசனுக்கு கட்டி வைப்ப. இதே உனக்குன்னு குழந்தை வந்ததும் அவங்களை விரட்டி விடுவ. நீயெல்லாம் எனக்கு அம்மா”, என்று உமா கேட்க கோதையால் ஒன்றும் பேச முடியவில்லை.
“என்னை மன்னிச்சிரு பாப்பா. அருண் நீயும் என்னை மன்னிச்சிரு டா”, என்றார் ராதாகிருஷ்ணன்.
“மன்னிக்கிற தப்பை நீங்க செய்யலை பா. என் அப்பா தான் இந்த உலகத்துல பெஸ்ட்ன்னு இறுமாப்போட இருந்தேன். ஆனா நீங்க? அந்த பொண்ணு வந்து சொல்லுமா பா, நீங்க தான் என்னோட பெஸ்ட் அப்பானு? அப்பா இல்லாம அந்த பொண்ணு எப்படி வளந்துருக்கும்? ரெண்டு பேரும் முதல்ல வெளிய போங்க. உங்களைப் பாக்கவே எனக்கு பிடிக்கலை”, என்று உமா சொல்ல இருவரும் எழுந்து சென்றார்கள்.
“ஆமா பாவம் தான். ஏய் உமா, இந்த விஷயத்தை உனக்கு யாரு சொன்னா? ஏன் கேக்குறேன்னா நமக்கே தெரியாத விஷயம் யாருக்கோ தெரிஞ்சிருக்குன்னா அவங்களுக்கு பவித்ரா அம்மா மூலமா தான் தெரிஞ்சிருக்கும். அவங்க கிட்ட கேட்டா பவித்ரா அம்மாவையும் தங்கச்சியையும் கண்டு பிடிச்சிறலாம்”
“எனக்கு சொன்னது சிவா தான் அண்ணா”
“என்ன சொல்ற நீ? அவனா?”
“அண்ணா நான் இன்னும் சில விஷயங்களை மறைக்க விரும்பலை. நான் சிவாவை விரும்பினேன். இப்ப என் கிட்ட அந்த காதல் இருக்கானு கேட்டா எனக்கு தெரியலை. ஆனா அவன் அப்பவே என்னை நிராகரிச்சிட்டான். அவன் தான் உங்க அப்பாவோட லட்சணம்னு சொல்லி திட்டினான். அப்பவும் நான் நம்பலை. அப்புறம் நம்ம வக்கீல் அங்கிள் கிட்ட தான் கேட்டேன். அவர் தான் சொன்னார். ஆனா அவருக்கும் அவங்க எங்க இருப்பாங்கன்னு தெரியாதுன்னு சொல்லிட்டார்”
“ஆனா அவனுக்கு தெரிஞ்சிருக்கு”, என்று அருண் சொல்ல “அண்ணா”, என்று கேள்வியாக இழுத்தாள் உமா.
“ஆமா உமா, பவித்ரா அம்மாவை பத்தின விஷயம் சிவாவுக்கு தெரிஞ்சிருக்கு. உனக்கு உடம்பு சரி ஆனதும் போய் விசாரிப்போம். நான் மட்டும் தனியா போக முடியாது. தேவையில்லாதது நிறைய பேசிட்டேன்”
“இன்னைக்கே போகலாம் அண்ணா, எனக்கு அவங்களைக் கண்டு பிடிக்கணும். இனியும் அவங்க கஷ்டப் படக் கூடாது. என்னைக் கூட்டிட்டு போ அண்ணா”
“சரி வா கிளம்பலாம்”, என்று சொல்லி இருவரும் கிளம்பினார்கள்.
போவதற்கு முன் தந்தை அருகில் வந்த அருண் “உங்க இன்னொரு பொண்ணோட பேர் என்னப்பா?”, என்று கேட்டான்.
“பேர்… பேர் என்னன்னு மறந்துருச்சு பா. அம்முன்னு கூப்பிட்டது தான் நினைவு இருக்கு”, என்று அவர் குற்ற உணர்வுடன் சொல்ல பிள்ளைகள் இருவரும் பார்த்த பார்வையில் அவருக்கு செத்து விடலாம் போல இருந்தது.
கோதை மற்றும் ராதாகிருஷ்ணனைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றார்கள். அவர்கள் போவதைப் பார்த்த பெற்றவர்களுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
உமா மற்றும் அருண் இருவரும் ஸ்டூடியோ சென்ற போது கருப்பட்டி மட்டுமே கடையில் இருந்தான். அவர்களைக் கண்டு கருப்பட்டிக்கு பேரதிர்ச்சி. அதுவும் உமாவின் இந்த தோற்றம் அவன் நம்ப முடியாததாக இருந்தது.
“சிவா இல்லையா?”, என்று கேட்டான் அருண்.
“எதுக்கு சார் மறுபடியும் அவனை மிரட்டவா?”, என்று கேட்டாலும் உமாவிடம் கோபப் பட அவனால் முடியவில்லை. அவளது தோற்றம் அவனுக்கே பரிதாபத்தைக் கொடுத்தது.
“சரி நாங்க வீட்ல போய் பாக்குறோம். வீட்டு அட்ரஸ்”, என்று கேட்டதும் கருப்பட்டி அட்ரஸ் சொன்னான்.
அந்த கிராமத்துக்குள் நுழைந்தது அவர்கள் கார். சிவனின் வீட்டின் முன் நிறுத்தியதும் அக்கம் பக்கத்து வீட்டினர் எட்டிப் பார்த்தார்கள். மிகப் பெரிய பங்களாவில் வாழ்ந்த இருவருக்கும் அந்த சூழ்நிலையே வித்தியாசமாக தான் இருந்தது.
காரை வெளியே நிறுத்தி விட்டு இருவரும் அந்த கம்பவுண்டுக்குள் நுழைந்தார்கள். சிவா வீடு கொஞ்சம் சிறியது தான். பழைய காலத்து வீடாக இருந்தது. வீட்டின் கதவு திறந்தே இருந்தது. சிவனைக் காண உமாவுக்கு சிறிது படபடப்பும் வந்தது. அவள் காதல் இல்லை என்று சொன்னாலும் தன்னைக் கண்டவுடன் தன்னுடைய தோற்றத்தைப் பார்த்து எனக்கு என்னவாயிற்று என்று கேட்பானா என்ற எதிர்பார்ப்பு அவளுக்குள் உருவானது.
எதிர்பார்ப்பில் வீட்டுக்குள் சென்ற உமா அங்கே கண்ட காட்சியில் திகைத்து போனாள். கண்மணியை தன்னுடைய தோளில் சாய்த்த படி பின் வாசல் மூலமாக அவளை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான் சிவன். அவள் அப்போது தான் வாந்தி எடுத்ததால் அவள் மயங்கி விழக் கூடாது என்று தான் அவளைப் பிடித்திருந்தான். ஆனால் அது உமாவுக்கு தெரியாதில்லையா?
அவர்களைக் கண்ட சிவன் ஒரு நொடி திகைத்து பின் கண்மணியை ஒரு பார்வை பார்த்தான். அவளும் கண்களில் கேள்வியைத் தாங்கி அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உமாவுக்கோ அவர்களை கண்டு கணவன் மனைவி போலவும் லேசாக மேடிட்டு இருந்த அவள் வயிறு அவர்கள் குழந்தை போலவும் தோன்றி வைத்தது.
இதனால் தான் தன்னை வேண்டாம் என்று சொன்னானா என்று குழம்பி நின்றாள். அவர்களைக் கண்டு சிவனும் திகைத்து தான் போனான். அந்த இடமே அமைதியாக இருக்க “நாங்க கொஞ்சம் பேசணும் சிவா”, என்றான் அருண்.
“ஒரு நிமிஷம்”, என்று சொன்ன சிவா கண்மணியை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் சென்று அவளை படுக்க வைத்தான்.
“அது யார் சிவா?”, என்று கேட்டாள் கண்மணி.
“எனக்கு தெரிஞ்சவங்க. நீ ரெஸ்ட் எடு. நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்”
“இல்லை, வந்தவங்களுக்கு ஜூஸ் கொடுக்கணும்”
“இப்ப நீ ஜூஸ் போடப் போனா மயங்கி விழுந்துருவ. மதி பின்னாடி மாவு அரைச்சிட்டு இருக்கா. நான் அவளைக் கூப்பிட்டுக்குறேன். நீ ரெஸ்ட் எடு”, என்று சொல்லி வெளியே சென்றான்.