அவர்கள் இருவரும் நின்று கொண்டே இருப்பதைக் கண்டவனுக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று புரிந்து போனது. இதை முன்பே எதிர் பார்த்தான். கூடவே உமாவின் தோற்றத்தையும் குறித்துக் கொண்டான்.
மொத்தமாக வைத்திருந்த சேரில் இருந்து இரண்டு சேரை எடுத்துப் போட்டவன் “உக்காருங்க”, என்றான். அவர்களும் அமர்ந்தார்கள்.
“மதி, இங்க வா”, என்று அழைத்தான். அண்ணன் அழைத்ததும் “என்னண்ணா?”, என்று கேட்ட படி அவசரமாக வந்தாள் மதி. அவளது தோற்றத்தை கண்டு பேவென்று அமர்ந்து விட்டான் அருண். ஏற்றிச் சொருவிய பாவாடையும் ஒரு கை முழுக்க மாவாகவும் வந்தவளைக் கண்டு திகைத்து பார்த்தான். அருணைப் பொறுத்த வரை அவனுடைய அன்னையைக் கூட இப்படி ஒரு தோற்றத்தில் கண்டதில்லை.
அண்ணன் கூப்பிட்டதும் அப்படியே வந்தவள் கூடத்தில் ஒரு ஆண்மகன் இருக்கவும் அதிர்ந்து பின் அவசரமாக பாவாடையை இறக்கி விட்டாள்.
“கையைக் கழுவிட்டு டீ போடு மா”, என்று சிவன் சொன்னதும் “சரிண்ணா”, என்றவள் டீ போடச் சென்றாள்.
“நீங்க ஒரு நிமிஷம் இருங்க. நான் இப்ப வந்துறேன்”, என்று சொல்லி விட்டு சிவனும் பின் பக்கம் சென்று விட்டான்.
அவர்களுக்கு டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள் மதி. அருண் அதை அவங்க தயங்கினான். “பரவால்ல எடுத்துக்கோங்க. டம்ப்ளரை நல்லா விளக்கிட்டேன்”, என்று மதி சொல்ல அவளை திகைப்பாக பார்த்த படி எடுத்துக் கொண்டான்.
உமாவுக்கு மனது கேட்காமல “உங்க அண்ணா எங்க?”, என்று கேட்டு விட்டாள்.
“அண்ணி வாந்தி எடுத்தாங்கல்ல? அதை கழுவி விடுவானா இருக்கும்? மாசமா இருக்குறதுனால நாள் முழுக்க அண்ணிக்கு வாந்தி தான்”, என்று சொல்லி இயல்பாக புன்னகைத்தாள் மதி. அந்த புன்னகை அருணை வியப்புக்குள்ளாக்கியது. “இவ்வளவு இயல்பா ஒரு பொண்ணா?”, என்று வியந்தான்.
“அந்த பொண்ணு யாரு?”, என்று கேட்டாள் உமா.
“அவங்க தான் என் அண்ணன் பொண்டாட்டி”, என்று சொல்லி விட்டு வெளியே சென்ற மதி “அண்ணா நீ போ நான் கழுவி விட்டுக்குறேன்”, என்று அவள் சொல்வதும் “சரிமா”, என்று சொல்லி விட்டு சிவன் உள்ளே வருவதும் தெரிந்தது.
மற்றொரு சேரை எடுத்துப் போட்டுவிட்டு அவர்கள் எதிரே அமர்ந்தவன் “சாரி வெயிட் பண்ண வச்சதுக்கு”, என்றான்.
“உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?”, என்று அருண் கேட்க அதற்கு என்ன பதில் சொல்ல என்று தயங்கினான் சிவன்.
அவன் அமைதியாக இருக்கவும் “அண்ணா வந்த விஷயம் பேசலாம்”, என்றாள் உமா.
“எங்க அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் சிவா?”, என்று கேட்டான் அருண்.
“எப்படியோ தெரியும்”, என்று சிவன் சொல்ல “இப்ப அவங்க எங்க இருக்காங்க?”, என்று கேட்டான் அருண்.
“சொல்ல முடியாது”, என்று சிவன் பட்டென்று சொல்ல “இப்படிச் சொன்னா எப்படிங்க? நாங்க பவித்ரா அம்மாவை பாக்கணும்”, என்றான் அருண்.
“அவங்க இப்ப உயிரோட இல்லை”, என்று சிவன் இறுக்கத்துடன் சொல்ல இருவரும் அதிர்ந்து தான் போனார்கள்.
“என்ன சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் அருண்.
“ஆமா அவங்க இப்ப இல்லை. உங்க அம்மா கிட்ட போய்ச் சொல்லுங்க. அவங்க புருஷனை ஆயுசுக்கும் விட்டுக் கொடுத்துட்டு போய்ட்டாங்கன்னு”, என்று எரிச்சலுடன் சொன்னான்.
“அவங்க பொண்ணு….”, என்று தயக்கத்துடன் கேட்டான் அருண்.
“இருக்காங்க. ஆனா அவங்களும் இப்ப நல்ல நிலைமைல இல்லை”
“எங்க இருக்காங்க?”
“முதல்ல சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா அவங்களுக்கு உங்க யாரையும் பாக்க விருப்பம் இல்லை. அதனால சொல்ல முடியாது”
“இப்படிச் சொன்னா எப்படி சிவா? அவளும் எனக்கு தங்கச்சி தான். அவங்களைப் பத்தி முன்னாடியே தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நாங்க தேடி கண்டு பிடிச்சிருப்போம். பிளீஸ் எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க”
“இல்லை, அவங்க நல்லா இருக்கணும்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனா உங்க அப்பாவை விட்டுக் கொடுக்க முடியாம உங்க அம்மா அவங்க அம்மாவை விரட்டின மாதிரி திருப்பியும் நடக்கலாம்ல? மே பி அவங்க உயிருக்கு கூட உங்க அம்மாவால ஆபத்து வரலாம்”, என்று சொன்னான் சிவன்.
“இப்படி நினைச்சா நாங்க என்ன பண்ணுறது? அவங்களை எங்களால நல்லா பாத்துக்க முடியும்னு நிரூபிக்க தான் முடியும். முன்னாடியே உங்களை எப்படி நம்ப வைக்கிறது?”
“ஒரு வழி இருக்கு”
“என்ன சொல்லுங்க?”
“உங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் சேந்து வந்து என் கிட்ட எங்க பொண்ணைக் கொடுங்கன்னு கேக்கட்டும். நான் கண்டிப்பா அது யாருன்னு சொல்றேன்”, என்று சொன்னதும் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
“என்ன அம்மா அப்பாவை வரச் சொன்னதும் அமைதியாகிட்டீங்க? உங்களுக்கே தெரியுதுல்ல? உங்க அம்மா அந்த பொண்ணை ஏத்துக்க மாட்டாங்கன்னு”, என்று சிவன் கேட்க அவர்களுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
“தாராளமா பேசுங்க. அவங்க வந்து கேட்டா கண்டிப்பா நானும் அது யாருன்னு சொல்றேன்”, என்று சிவனும் சொன்னான்.
“சரி கிளம்புறோம்”, என்று சொல்லி அருண் எழுந்து கொள்ள உமாவும் எழுந்து கொண்டாள்.
அப்போது “ஒரு நிமிஷம்”, என்று அழைத்தான் சிவன். தன்னுடைய உடல் நிலையைப் பற்றி கேட்பான் என்று எண்ணினாள் உமா.
“என்ன சொல்லுங்க?”, என்று கேட்டான் அருண்.
“எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? எனக்கு வேற யாரையும் தெரியாது”
“என்ன சொல்லுங்க?”
“இல்லை மதி என்னோட தங்கச்சி. டிகிரி முடிச்சிருக்கா. டைப்ரேட்டிங்க் எல்லாம் தெரியும். உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல ஏதாவது வேலை இருந்தா சொல்ல முடியுமா? அவளுக்கு வரன் பாத்துட்டு இருக்கோம். முடிவாகுற வரைக்கும் வேலைக்கு போகணும்னு நினைக்கிறா. முடிஞ்சா செய்ங்க. இல்லைனா வேண்டாம்”, என்று அவன் கேட்க உமாவுக்கு புஸென்று போனது.
“இதுல என்ன இருக்கு? எங்க ஆஃபிஸ்ல வேகண்ட் இருக்கு. நாளைக்கு ஆபிஸ் வரச் சொல்லுங்க. இன்டர்வியூ பண்ணிட்டு வேலைக்கு எடுத்துக்குறேன்”, என்று சொல்லி தன்னுடைய கார்டைக் கொடுத்தான் அருண்.
வெளியே வந்து காரில் எறியதும் “அண்ணா என்ன நீயே மதியை வேலைக்கு வரச் சொல்லிட்ட. அப்பா கிட்ட கேக்க வேண்டாமா?”, என்று கேட்டாள் உமா.
“கேக்கணும் தான். அவர் தான் ஆள் எல்லாம் எடுப்பார். ஆனா அப்பாவோட இன்னொரு பொண்ணைப் பத்தி தெரியனும்னா மதி மூலமா தெரிஞ்சிக்கலாம்னு தோணுச்சு. அதான்”
“நல்ல ஐடியா தான். இதைச் சொன்னா அப்பா சரின்னு சொல்லுவாங்க”
“ஹிம், சரி அதை விடு. சிவா என்ன உன்னைக் கண்டுக்கவே இல்லை. உண்மையிலே அவன் உன்னை விரும்பலையா? அது மட்டுமில்லாம அந்த பொண்ணு வேற யாருன்னு தெரியலை. ஒரு வேளை சிவாவுக்கு கல்யாணம் ஆகிருக்குமா?”
“தெரியலை அண்ணா”
“அப்ப உன்னோட நிலைமை உமா?”
“அவங்களை ரொம்ப விரும்பினேன். ஆனா இப்ப அதே லவ் என் கிட்ட இருக்கான்னு கேட்டா எனக்கு பதில் தெரியலைண்ணா. அவருக்கு கல்யாணம் ஆகிருந்தா சந்தோஷம் தான்”
“அப்படின்னா உனக்கு வேற மாப்பிள்ளை பாக்கவா உமா?”
“அதை மட்டும் செஞ்சிறாத அண்ணா. அவனை தவிர வேற ஆளை எல்லாம் என்னால கல்யாணம் பண்ண முடியாது”
“அப்ப அவன் கிட்ட பேசலாம்ல? நான் பேசவா? அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சான்னு முதல்ல கேக்கணும்”
“அப்படி கல்யாணம் ஆகிருந்தா என்ன பண்ண அண்ணா? அம்மா பவித்ரா அம்மாவை விரட்டின மாதிரி சிவாவோட முதல் பொண்டாட்டியை விரட்டிட்டு அந்த இடத்துக்கு நான் போகனுமா?”
“சே சே அப்படிச் சொல்லலை. அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரிஞ்சா…”
“அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னா கூட அவன் கிட்ட நான் காதலைப் பத்தி பேச விரும்பலை. மறுபடியும் அவன் கிட்ட அவமானப் பட எனக்கு தெம்பு இல்லை”
“நானும் அப்பாவும் பேசுறோம் உமா”
“அது என் காதலுக்கு அசிங்கம் அண்ணா. என்னை, என் காதலை அசிங்கப் படுத்தினவன் கிட்ட மறுபடியும் கெஞ்சக் கூடாது. அவனா வந்து அவன் காதலைச் சொல்லட்டும். அப்புறம் பாக்கலாம்”, என்று முடித்துக் கொண்டாள்.