கோபத்துடன் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த செல்வி அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து போய் அமர அதை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இந்த நிலையில் அவள் அப்படி இருப்பது அவனுக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவனுக்கு வேறு வழி இருக்க வில்லையே? இங்கேயே இருந்தால் கண்மணியை குத்திக் கிழிப்பது போல அவள் பேசுவது எப்படி குறையும்?
அவனைப் பொறுத்த வரை இரண்டு பேருமே முக்கியம். அப்படி இருக்க தங்கை ஏதாவது சொல்லி அது கண்மணியையும் அவளது குழந்தையையும் பாதித்தால் அவனை நம்பி விட்டுச் சென்ற அவனது அண்ணனுக்கு துரோகம் அல்லவா?
அவளுடைய ஊருக்கு வரும் பேருந்து வர அந்த பெரிய வயிற்றைத் தூக்கி கொண்டு அதில் ஏறிச் சென்றாள் செல்வி. பேருந்து கிளம்பியதும் உடனே செந்திலை அழைத்தான்.
“சொல்லுங்க மச்சான்”
“இங்க வீட்ல ஒரு பிரச்சனை மாப்பிள்ளை”, என்று ஆரம்பித்து நடந்ததை விளக்கமாக சொன்னவன் “செல்வி கோபப் பட்டு அங்க தான் வந்துட்டு இருக்கா. எனக்கு என்ன பண்ணனு தெரியலை. கண்மணி உடல் நிலை அப்படி இருக்கு. அவ ஏற்கனவே குடும்பத்தை இழந்து புருஷனை இழந்து அந்த குழந்தை மட்டும் தான் ஆறுதல்னு இருக்கா. அவ கொஞ்சம் டென்ஷன் ஆனா கூட குழந்தைக்கு நல்லது இல்லைன்னு சொல்றாங்க. ஏழு மாசம் வரைக்குமாவது நல்லா பாத்துக்கணும்ல? அம்மா அது புரியாம அவளுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பேச்சை ஆரம்பிச்சிட்டாங்க. இதுல செல்வி வேற”, என்று முடித்தான்.
“எனக்கு புரியுது மச்சான். கோபம் வந்தா செல்வி எப்படி பேசுவான்னு எனக்கு தெரியாதா? கண்மணி கதையைக் கேட்டு கொஞ்சம் திருந்தினா. ஆனா உங்க அம்மா, நீங்க, மதி, வெண்ணிலா எல்லாரும் கண்மணியை தாங்குறதைப் பாத்து இவளுக்கு கொஞ்சம் பொறாமை தான். தினமும் எனக்கு கால் பண்ணி அங்க நடக்குறதை சொல்லிட்டு தான் இருக்கா. நானும் தினமும் இப்படி பண்ணாதேன்னு சொல்லத் தான் செய்றேன். ஆனா எங்க கேக்குறா? அவ இங்க வரது ஒரு விதத்துல நல்லது தான். அங்க இருந்தா அவளும் நிம்மதியா இருக்க மாட்டா. அந்த பிள்ளையையும் நிம்மதியா இருக்க மாட்டா. எப்படியும் டெலிவரிக்கு இங்க இருக்குற டாக்டர் கிட்ட தானே பாக்குறோம்? நானே நாலு நாள்ல அவளை கூட்டிட்டு வரணும்னு தான் நினைச்சேன். அதனால ஒண்ணும் பிரச்சனை இல்லை. விடுங்க”
“இல்லை நீங்க ஒண்ணும் தப்பா நினைக்கலை தானே?”
“நிச்சயமா இல்லை மச்சான். நானும் ஒரு தங்கச்சியோட தானே பிறந்திருக்கேன். இப்ப உங்களுக்கு இருக்குற வேதனை கூட எனக்கு புரியும்”
“நன்றி மாப்பிள்ளை. பிள்ளை பிறந்தா கூட பாக்க வர கூடாதுன்னு சொல்லிட்டா”
“அவர் யார் சொல்றது? பிறக்க போறது உங்க மருமகளோ மருமகனோ? ஒரு தாய் மாமனா உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீங்க தாராளமா வாங்க. அதுக்குள்ள செல்வியே திருந்திருவா”
“நல்லது நடந்தா சந்தோஷம் தான். எதுக்கும் அவ மனசு மாறி கூப்பிட்ட பிறகே வரோம். வைக்கிறேன் மாப்பிள்ளை”, என்று சொல்லி போனை வைத்தான்.
செல்வி பஸ்ஸில் இருந்து இறங்கும் போதே அவளை அழைக்க வந்திருந்தான் செந்தில். ஆனால் அவள் வருவது தெரியாதது போல நின்றான்.
“என்னங்க நீங்க எங்க இங்க? வேலைக்கு போகலையா?”
“வேலை விஷயமா ஒரு ஆளைப் பாக்க தான் வந்தேன் செல்வி. ஆமா நீங்க என்ன இந்த நிலைமையில இங்க வந்துருக்க? நாலு நாள்ல செக்கப் இருக்கே? அதுக்கு வந்தியா?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அங்க என்ன நடந்துச்சு தெரியுமா? வயித்துப் பிள்ளைக்காரின்னு கூட பாக்காம என்னை அடிச்சிட்டான்”
“யாரு சிவா மச்சானா? மச்சானுக்கு என்ன லூசு பிடிச்சிருக்கா? சரி நீ வண்டில ஏறு. வீட்ல போய் பேசிக்கலாம்”, என்று சொல்லி அப்போதைக்கு அவள் வாயை அடைத்தான்.
வீட்டுக்கு வந்ததும் செந்திலின் அன்னை மரகதம் விசாரிக்க செல்வி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள். செல்வத்தின் தந்தை சேகர் அவனது தங்கை சிவானி அனைவரும் வீட்டில் தான் இருந்தார்கள்.
நடந்ததை அப்படியே சொன்ன செல்வி “நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு அத்தை? அவங்களுக்கு எப்படி எங்க அம்மா ரெண்டாவது கல்யாணம் பண்ணலாம்னு பேசலாம். அது அசிங்கம் இல்லையா?”, என்று கேட்டாள்.
“உன்னை சிவா தம்பி அடிச்சதுல தப்பே இல்லை”, என்றாள் மரகதம்.
செல்வி அதிர்ந்து விழிக்க “ஏமா செல்வி, நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துறாது. ஒரு பேச்சுக்கு சொல்றேன். நம்ம சிவானிக்கு அப்படி ஒரு நிலைமை வந்தா நாங்களும் எங்க பொண்ணுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க தான் நினைப்போம். அப்ப எங்க கிட்டயும் இதை அசிங்கம்னு தான் சொல்லுவியா?”, என்று கேட்டார் சேகர். அதிர்ச்சியாக அவரைப் பார்த்துக் கொண்டு நின்றாள் செல்வி.
இப்போது அவள் என்ன சொல்வாள்? ஆம் என்று அவளால் சொல்ல முடியுமா? அவர் கேட்பதும் சரி தானே? செல்வி திகைத்த படி நிற்க “என்ன அண்ணி அமைதியா இருக்கீங்க? நாளைக்கு எனக்கு அப்படி ஒரு நிலை வந்து நான் வீட்ல வந்து உக்காந்துருந்தா அப்பவும் நீங்க இதைத் தான் சொல்லுவீங்களா? முதல்ல எதிர்ல இருக்குறவங்க என்ன மன நிலைல இருக்குறாங்கன்னு புரிஞ்சிக்கிட்டு பேசுங்க. உங்க இஷ்டத்துக்கு பேசுறது மட்டும் இல்லை. அது தான் சரின்னு நினைக்கிறதையும் முதல்ல விடுங்க. எனக்கு எங்க அம்மாக்கு அப்புறம் நீங்களும் அம்மா மாதிரி தான். நான் தப்பு பண்ணினா நீங்க தான் கண்டிக்கணும். இப்ப உங்களுக்கும் ஒரு குழந்தை வரப் போகுது. உங்களைப் பாத்து தான் அந்த பிள்ளை வளரும். இன்னைக்கு நான் உங்களுக்கு அறிவுரை சொல்ற மாதிரி நாளைக்கு உங்க பிள்ளையும் வந்து உங்களுக்கு அறிவுரை சொல்ற மாதிரி நிலைமையை உருவாக்காதீங்க”, என்றாள் சிவானி.
“சரி சரி விடுங்க. அவ ரெஸ்ட் எடுக்கட்டும். அம்மா எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க. நான் சாப்பிட்டு கிளம்பனும்”, என்று சொன்ன செந்தில் மனைவியை அறைக்கு அழைத்து வந்து அமர வைத்தான்.
“சரி செல்வி, நீ ரெஸ்ட் எடு. நான் சாப்பிட்டு கிளம்புறேன். சாயங்காலம் பாப்போம். நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு டி. சண்டைன்னாலும் நீ இங்க வந்தது எனக்கு சந்தோஷம் தான்”
அவன் கையைப் பற்றியவள் அவனையே பாவமாக பார்த்தாள். “என்ன மா?”, என்று அன்புடன் விசாரித்தான். அவள் என்ன தவறு செய்தாலும் அவனுடைய ஆருயிர் மனைவி ஆயிற்றே.
“வேற எப்படிச் சொல்லச் சொல்ற? நீ தான் யோசிக்கணும். ஒண்ணும் மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. கண்மணி மாதிரி என் தங்கச்சிக்கும் ஒரு நிலைமை வந்தா நானும் கண்டிப்பா அவளுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைப்பேன். அதுக்கு நீ தடையா இருந்தா உன்னை தள்ளி வச்சிட்டு என் தங்கச்சிக்காக நிப்பேன். ஏன்னா அந்த இடத்துல நான் ஒரு அண்ணனா நிக்கணும். அதை தான் சிவா மச்சான் செஞ்சிருக்கார். ஆனா அவருக்கு உன் மேலயும் அக்கறை இருக்கு. அவர் தான் நீ கிளம்பி வரதைச் சொன்னார். அங்க வச்சு சொல்லிருந்தா அங்கயே கத்திருப்ப. எல்லாருக்கும் எல்லார் மேலயும் பாசம் இருக்கு. அதை புரிஞ்சிக்காதவங்க ஒரு நாளும் அந்த பாசத்தை அனுபவிக்கவே முடியாது. இப்ப எனக்கு ஏதாவது ஆனா கூட நீ உன் வீட்டுக்கு போனா உன்னைத் தாங்கத் தான் செய்வாங்க. உனக்கு கண்மணியே ஒரு அண்ணியா இருந்து ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க தான் நினைப்பாங்க. ஆனா அந்த பெருந்தன்மை உன் கிட்ட இல்லைன்னா மாற வேண்டியவங்க அவங்க இல்லை. நீ தான். சரி இந்த நேரத்துல எதையும் யோசிக்காத. படுத்து ரெஸ்ட் எடு. அம்மா எதவது கொடுத்தா மறுக்காம சாப்பிடு”, என்று சொன்னவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டுச் சென்றான்.
அலுவலகம் சென்ற செந்தில் சிவனுக்கு அழைத்து வீட்டில் நடந்ததையும் செல்வி யோசிப்பதையும் சொல்லி விட்டு வைத்தான். அதை சிவன் அப்படியே பார்வதியிடம் சொல்ல அவளோ சிவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.
ஏனோ சிவனால் மட்டுமே கண்மணியை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்ற யோசனை அவளுக்குள் எழுந்தது. ஆனால் அதை வெளியே சொல்ல வில்லை. அடுத்து வந்த நாட்களில் செல்வியிடம் யாரும் அதைப் பற்றி பேச வில்லை. மற்ற படி நல்ல விதமாக அவளிடம் பேசினார்கள்.