“நீ அத்தைன்னு சொன்னாலும் நான் உனக்கு அம்மா தான் மா. என் மகளோட எதிர்காலம் எனக்கு முக்கியம். எத்தனை நாள் உனக்கு அப்பா இல்லைன்னு நீ துடிச்சிருப்ப? அதே நிலைமை உன் பிள்ளைக்கும் வரணுமா? இதுவே நீ ஒரு கல்யாணம் பண்ணினா உனக்கு துணையும் கிடைக்கும் உன் குழந்தைக்கு அப்பாவும் கிடைக்கும். நீங்க ஒரு குடும்பமா ஆகிருவீங்க”
“வேணாம் அத்தை, என்னால முடியாது”, என்று சொல்லி அழ கண்மணியை அணைத்துக் கொண்டாள் பார்வதி.
“இங்க பார் மா, இப்ப உனக்கு இன்னொரு வாழ்க்கை தேவை இல்லாம இருக்கலாம். உன் பிள்ளை வளந்து அப்பாவுக்காக ஏங்கும் போது அவன் கூட சேந்து உன்னால அழத் தான் முடியும். ஆனா நான் சொன்னதுக்கு சம்மதிச்சா நீங்க ரெண்டு பேருமே நல்லா இருப்பீங்க. அப்பா இல்லாத கஷ்டம் உன்னைத் தவிர வேற யாருக்குமே புரியாது மா? எங்க நீ உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு. உங்க அம்மாவுக்காக நீ கவலைப் பட்டாலும் உன் வாழ்க்கைல ஒரு நிமிஷம் கூட உங்க அப்பாவுக்காக ஏங்கினது இல்லைன்னு”
“அத்தை”
“நான் உனக்கு அத்தையா இருக்க நினைக்கலை மா. உனக்கு அம்மாவா இருக்க நினைக்கிறேன். நீ பட்ட கஷ்டம் உன் பிள்ளைக்கு வேண்டாம் மா. நல்ல நிதானமா யோசிச்சு பாரு. உனக்கே எல்லாம் புரியும். நீ என்ன தான் வேலைக்கு போய் சம்பாதிச்சி உன் பிள்ளையை வளக்கலாம்னு நினைக்கலாம். ஆனா ஒரு அப்ளிகேஷன் போடுற இடத்துல கூட உன் பேருக்கு அடுத்து உன் புருஷன் பேரைத் தான் கேப்பாங்க. அந்த இடத்துல நீ விதவைன்னு போட்டேன்னு வை உன்னை சாதாரணமா பாக்குறவங்க கொஞ்சம் வித்தியாசமா பாப்பாங்க. அதுல பாவம்னு இரக்கமும் இருக்கும். வக்கிரமும் இருக்கும். இதே அந்த இடத்துல உன்னோட கணவர்னு ஒரு பேரைப் போட்டுட்டேன்னு வை நீயும் மத்தவங்க மாதிரி சாதாரணமா இருப்ப. உன்னை உடனே பண்ணிக்கச் சொல்லலை. ஆனா கூடிய சீக்கிரம் பண்ணிக்கோ டா”, என்று சொல்ல கண்மணி அமைதியாக இருந்தாள்.
அப்போது “அம்மா, உனக்கு என்ன அறிவு இல்லையா?”, என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தார்கள். அங்கே செல்வி தான் கோபமாக நின்றிருந்தாள்.
“என்ன செல்வி?”, என்று கேட்டாள் பார்வதி.
“நீ இப்ப என்ன சொல்லிட்டு இருக்க அவங்க கிட்ட?”
“என்ன டி?”
“அவங்களை வேற கல்யாணம் பண்ணச் சொல்லிட்டு தானே இருந்த?”
“ஆமா, அதுக்கு என்ன?”
“அதுக்கு என்னவா? அண்ணா இறந்து வருஷம் கழியலை, அதுக்குள்ள இவ்வளவு கேவலமா பேசுற?”
“இதுல என்ன கேவலம்? இங்க பாரு செல்வி, நானே கண்மணி மனசை மாத்தணும்னு போராடிட்டு இருக்கேன். லூசு மாதிரி பேசிட்டு இருக்காத?”, என்று கடுமையாக பேசினாள் பார்வதி.
“புருஷன் செத்து கொஞ்ச நாள்ல இன்னொரு கல்யாணமா? அதுக்குள்ள அடுத்த ஆம்பளை துணையா?”, என்று செல்வி ஒரு மாதிரி கேட்க கண்மணி கண்களில் கண்ணீர் வந்தது.
“செல்வி”, என்று கையை ஓங்கினாள் பார்வதி.
அப்போது “என்ன இங்க சத்தம்?”, என்று கேட்ட படி அங்கு வந்தான் சிவன்.
“அம்மாவைப் பாருண்ணா. இவங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு அசிங்கமா பேசிட்டு இருக்காங்க. அதுக்கு அவங்க சம்மதிக்க வேற செய்யனுமாம்? சி சி. எப்படி இப்படி எல்லாம் நினைக்க முடியது. ஒருத்தனை லவ் பண்ணி அவன் கூட வாழ்ந்து ஒரு பிள்ளையையும் வாங்கிக்கிட்டு இன்னொருத்தன் கூட ஒண்ணா….”, என்று செல்வி சொல்ல வரும் போதே அவளை ஓங்கி ஒரு அரை வைத்திருந்தான் சிவன்.
அண்ணன் அடித்ததில் தூரப் போய் விழுந்தாள் செல்வி. பார்வதி அதைக் கண்டு “இவளுக்கு இது தேவை தான்”, என்று அமைதியாக இருக்க கண்மணி தான் ஓடிச் சென்று அவளைத் தூக்கி நிறுத்தினாள். அதைக் கூட உணராமல் கன்னத்தில் கை வைத்த படி அண்ணனைப் பார்த்தாள் செல்வி.
“நிறை மாசமா இருக்குறதுனால தான் ஒரு அறையோட நிறுத்துறேன். நீயெல்லாம் ஒரு பொண்ணா? எப்பவுமே நீ ஒரு பக்கா சுயநலவாதின்னு எனக்கு தெரியும். ஆனாலும் தங்கச்சின்னு உன் மேல அன்பா தான் இருந்தேன். ஆனா இன்னைக்கு நீ பேசினது…? எது அசிங்கம்? இல்லை எது அசிங்கம்னு கேக்குறேன்? உனக்கு நீ ஆசைப் பட்டது எல்லாம் கிடைச்சிருச்சுள்ள? அந்த திமிர்ல நீ பேசத் தான் செய்வ? உனக்குன்னு ஒரு வலி வந்தா தான் அடுத்தவங்களோட உணர்வுகள் உனக்கு புரியும்? அம்மாவே கஷ்டப் பட்டு அவ கிட்ட பேசிட்டு இருக்காங்க. அதை புரிஞ்சிக்கலைன்னா கூட பரவால்ல, ஒதுங்கியாவது போகலாம்ல? இங்க பாரு செல்வி, கண்மணி இந்த வீட்டு பொண்ணு. நீ வேற அவ வேற இல்லை. அம்மா அவளுக்கு எல்லா நல்லதும் செஞ்சு வைப்பாங்க. அதை யாராலயும் தடுத்து நிறுத்த முடியாது. அதை எல்லாம் நீ பாராட்டலைன்னாலும் கூட பரவால்ல. சகிச்சிட்டு அமைதியா இருந்தா போதும். அதுவும் முடியாதுன்னா தயவு செஞ்சு வீட்டை விட்டு போயிரு”, என்று சிவன் சொல்ல அதிர்ந்து போனாள் செல்வி.
அதைக் கேட்டு பார்வதியும் அமைதியாக இருக்க துடித்துப் போனாள். “அம்மா அவன் என்னை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்றான்? இன்னும் பத்து நாள்ல எனக்கு டேட் சொல்லிருக்காங்க. நிறை மாசம்னு கூட பாக்காம அடிக்கிறான். வீட்டை விட்டு போகக் சொல்றான். நீ வேடிக்கை பாத்துட்டு இருக்க?”, என்று கேட்டாள் செல்வி.
“உன் வாய்க் கொழுப்புக்கு நீ அனுபவிக்கிற? அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”, என்று பார்வதி கேட்க “எல்லாம் இவங்களால தானே? எல்லாருக்கும் என்னை விட இவங்க முக்கியமா போய்ட்டாங்கல்ல?”, என்று கேட்டு கண்மணியை முறைத்தாள் செல்வி.
“உன்னை விட கண்மணி எங்களுக்கு முக்கியம்னு யாரும் இங்க சொல்லலை. ஆனா நீயும் கண்மணியும் சமம்னு தான் சொல்லுறோம். அது உனக்கு புரியலைன்னா தயவு செஞ்சு உன் புருஷன் வீட்டுக்கு போயிரு. ஒரு நல்லது நடக்கணும்னா ஒரு கெட்டதை இழக்குறதுல தப்பு இல்லை”, என்றாள் பார்வதி.
“நான் கெட்டவளா மா?”
“உன் எண்ணம் கெட்டுப் போயிருக்கு செல்வி. நீ இது வரைக்கும் என்ன டி நல்ல காரியம் செஞ்சிருக்க? மதியும் நிலாவும் உன்னை விடச் சின்ன பொண்ணுங்க. அவங்களுக்கு ஏதாவது விட்டுக் கொடுத்துருக்கியா நீ? சிவா என்ன வாங்கிட்டு வந்தாலும் அது உனக்கே வேணும்? வேற யாரும் பங்குக்கு வந்துறக் கூடாது. கூடப் பிறந்தவங்க கிட்டயே போட்டி போடுற. உன் கிட்ட எல்லாம் என்ன நல்ல விஷயம் எதிர் பார்க்க முடியும்?”
“எல்லாரும் என்னை அசிங்கப் படுத்திட்டீங்கல்ல? இனி நான் இந்த வீட்டுக்கே வர மாட்டேன். என் பிள்ளையை கூட யாரும் பாக்க வரக் கூடாது. பிறந்த வீட்டு சீர்னு யாராவது வந்தீங்க? அப்புறம் இருக்கு உங்களுக்கு. எனக்கு யாரும் வேண்டாம்”, என்று சொன்னவள் அறைக்குள் சென்று உடை மாற்ற ஆரம்பித்தாள்.
“ஐயோ அத்தை, ஏன் இப்படி பண்ணுறீங்க? எப்படியாவது அவளை தடுத்து நிறுத்துங்க. எல்லாம் என்னால தான். நான் தான் ராசி இல்லாதவ. நான் உருவான நேரம் என் அப்பாவும் எங்க அம்மாவை விட்டுட்டுப் போனார். அப்புறம் அம்மாவும் இல்லை. புருசனும் இல்லை. இப்ப இங்க வந்து உங்களுக்கு எல்லாம் பாரமா வந்து உக்காந்துட்டு இருக்கேன். செல்வி இந்த வீட்டு பொண்ணு அத்தை. அதுவும் நிறை மாசமா வேற இருக்கா. சிவா நீயாவது அவ கிட்ட பேசு”, என்று கண்மணி சொல்ல இருவருமே வாயைத் திறக்கவே இல்லை.
செல்வி அறையை விட்டு வெளியே வர “செல்வி… இங்க பாரு செல்வி. என்னைத் தானே உனக்கு பிடிக்கலை? நான் இந்த வீட்டை விட்டு போறேன்., நீ இங்க இரு”, என்றாள் கண்மணி.
“என் அம்மா அண்ணனுக்கு இடையிலே நீங்க வராதீங்க. அவங்களே வெளிய போகச் சொன்ன பிறகு நீங்க யாரு இடையில பேச?”, என்று சொன்னவள் அன்னை மற்றும் அண்ணனை முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
பார்வதி சிவனைப் பார்க்க “நான் பாத்துக்குறேன் மா”, என்று சொன்னவன் செல்வி பின்னேயே அவளுக்கு தெரியாமல் சென்றான்.