இரவு தூங்கும் முன் கண்மணி எண்ணுக்கு அழைத்தான் சிவன். அதை எடுத்தவள் “சொல்லு சிவா”, என்றாள்.
“அங்க எல்லாம் ஒகேயா கண்மணி? நீ நல்லா தானே இருக்க?”, என்று உண்மையிலே தவிப்புடன் தான் வந்தது அவன் குரல்.
“ம்ம். ஆனா நாளைக்கு என்னை….”
“என்ன கண்மணி?”
“அவர் கிட்ட சொல்லி….”
“எவர் கிட்ட? எனக்கு ஒண்ணும் புரியலை”
“அவர் கிட்ட சொல்லி என்னை நாளைக்கு இங்க இருந்து கூட்டிட்டு போகச் சொல்றியா? எனக்கு இங்க இருக்க பிடிக்கலை சிவா”
“யாரும் எதுவும் சொன்னாங்களா?”
“சே சே, அப்படி எல்லாம் இல்லை. எல்லாரும் நல்லா தான் வச்சிருக்காங்க. ஆனா அவங்க அதிகமா கேர் எடுத்துக்குறதே எனக்கு ஒரு மாதிரி உணர்வைத் தருது. உங்க வீட்டுக்கு புதுசா வந்தப்ப கூட எனக்கு இப்படி தோணலை. ஏன்னா அது என் புருஷன் வீடுன்னு ஒரு உரிமை இருந்துச்சு. ஆனா இது வேற. யார் வீட்லயோ இருக்குற மாதிரி இருக்கு சிவா”
“அது உன் வீடு கண்மணி. அங்கயும் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு”
“இல்லை சிவா. எங்க அம்மாவுக்கு இடம் இல்லாத வீட்ல நான் வந்து எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு? அது எல்லாம் பழைய கதை. நான் எதையும் கிளரக் கூடாதுன்னு மூளைக்கு தெரியுது. ஆனா என் மனசு ரொம்ப கஷ்டப் படுது. உமாவோட அம்மாவைப் பாக்க பாக்க அம்மா நினைவு ரொம்ப வருது. இங்கயே இருந்தா அவங்க நல்லா பாத்துக்கிட்டாலும் நான் ஏதாவது படக்குன்னு சொல்லிருவேனோன்னு பயமா இருக்கு. நான் அங்க வந்துட்டா இந்த உறவுகள் எல்லாம் ஒரு ஓரத்துல எனக்கு எப்பவுமே இருக்கும். ஆனா நாலஞ்சு மாசம் நான் இங்கயே இருந்தா இந்த உறவே இல்லாம போயிரும் சிவா. அந்த அளவுக்கு இவங்களை ஏதாவது சொல்லி கஷ்டப் படுத்திருவேனோன்னு பயமா இருக்கு”
“சரி நான் நாளைக்கு வரேன். ஆமா அவர் கிட்ட சொல்லின்னு சொன்னீயே? யார் அந்த அவர்னு சொல்லவே இல்லையே?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
“என்ன கிண்டல் பண்ணுறியா?”, என்று கேட்டாலும் அவள் குரலிலும் ஒரு லகு தன்மை வந்திருந்தது.
“நீங்க அவர்ன்னு சொன்னது எனக்கு தெரியலைங்க மேடம். கொஞ்சம் யாருன்னு தான் சொல்லுங்களேன்”, என்று அவளைச் சீண்டினான் சிவன்.
“என் குழந்தைக்கு அப்பா போதுமா?”, என்று சொன்னாள் கண்மணி.
“ஹா ஹா, சூப்பர் பதில் தான். சார் இப்ப தான் உன்னைப் பத்தி புலம்பிட்டு போனார்”
“என்னைப் பத்தியா? என்ன?”, என்று அவள் குரலில் ஆர்வம் கொப்பளித்தது.
“அங்க உன்னைத் தனியா அனுப்புனது அவனுக்கு பிடிக்கலை. அங்க வந்து உன்னைப் பாக்கவும் ஐயாவுக்கு தைரியம் இல்லை. என்ன செய்யன்னு தெரியாம புலம்பிட்டு போனான்”
“ஓ”
“சரி கண்மணி, உனக்கு இந்த கல்யாணம் வருத்தம் இல்லையே?”
“வருத்தம்னு சொல்ல முடியாது. ஆனா இளாவை என்னால எப்படி மறக்க முடியும்?”
“உன்னை யாரு மறக்கச் சொன்னா? ஆனா உங்க கல்யாணம் நடந்ததுல அவன் ஆத்மா ரொம்ப சந்தோஷப் படும். உனக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்னு என் அண்ணன் என் கிட்ட கேட்டுக்கிட்டான். அதனால நீ நீயா இரு. சரி டேப்லெட் போட்டியா?”
“உமா கொடுத்தா”, என்று அவள் சொல்ல இப்போது அவன் “ஓ”, என்று சொன்னான்.
“சரி சிவா, நாளைக்கு வா”
“சரி அவனையும் கூட்டிட்டு வரேன் கண்மணி. அப்புறம் ஒரு விஷயம் ஒரு பிரண்டா உன் கிட்ட சொல்லணும்”
“என்ன சிவா? நீ என்ன வேணா என் கிட்ட சொல்லலாம்”
“நீ கருப்பட்டியை உன் குழந்தைக்கு அப்பான்னு சொன்னது சந்தோஷம் தான். ஆனா அவனை உன்னோட புருசன்னு சொல்லணும்”
“அது… அது வந்து…”
“எனக்கு புரியுது கண்மணி. அவனை உன்னால உடனே ஏத்துக்க முடியாதுன்னு. ஆனா கண்டிப்பா உன் மனசு ஒரு முடிவைச் சொல்லும். அது படி நடன்னு தான் சொல்றேன். இல்லை இது தப்பு. இளாக்கு செய்யுற துரோகம். ஊர் உலகம் என்ன சொல்லும்னு அறிவு கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சா உன் வாழ்க்கை வீணாப் போயிரும். அம்மா என் கையில தாலியைக் கொடுத்தப்ப உன் கண்ணுல இருந்த பரிதவிப்பு அவன் மாப்பிள்ளையானதும் உனக்கு இல்லை தானே? அது கூட நல்ல மாற்றம் தான். அந்த மாற்றத்துக்கு நீயே சப்போர்ட் பண்ணு. கருப்பட்டி ரொம்ப ரொம்ப நல்லவன். என்னை விடவும் நல்லவன். இது எல்லாம் இளாவோட ஆத்மா தான் நடத்தி வைக்குதுன்னு நம்பு. சரியா? அவனை உடனே ஏத்துக்கோன்னு சொல்ல மாட்டேன். ஆனா அவன் கிட்ட நீ நீயா இரு. அவன் கிட்ட பேசணும்னு தோணுதா பேசு. கோபப் பட தோணுச்சுன்னா கோபப் படு. அதே நேரத்துல லவ் பண்ண தோணுச்சுன்னா லவ் பண்ணிரு. அந்த இடத்துல ஐயோ அவங்க கிட்ட எப்படி கோபப் பட முடியும்னு விலகி நின்னா உங்க வாழ்க்கை மாறவே மாறாது. அதை மட்டும் செய்யாத”
“ம்ம்”
“நான் சொன்னது புரிஞ்சதா?”
“புரியுது சிவா.,, நாளைக்கு…..”
“நினைவு இருக்கு மேடம். கவலைப்படாதே. நாளைக்கு பத்திரமா உன்னை உன் புருஷன் வீட்ல விட்டுருவேன்”, என்று சிரித்தான். அவளும் சிரிப்புடன் போனை வைத்தாள்.
அவளுக்கு பால் எடுத்து வந்த உமா காதில் கண்மணி பேசியது எல்லாமே விழுந்தது. மொபைலில் சத்தம் அதிகம் இருந்ததால் அவன் பேசியது கூட உமாவுக்கு கேட்டது. சிறிது நேரம் கழித்து சாதாரணமாக அறைக்கு வருவது போல “அக்கா தூங்கிட்டியா?”, என்று கேட்ட படி வந்தாள் உமா.
“இல்லை உமா”
“இந்தா பால். அம்மா கொடுத்து விட்டாங்க. குடிச்சிட்டு படு”, என்று அவள் நீட்டியதும் அதை வாங்கிக் கொண்டாள்.
“சரி நல்லா தூங்கு. குட் நைட்”, என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். அப்போது அவளுடைய பெற்றோரின் அறை திறந்திருக்க உள்ளே சென்றாள்.
“வா உமா”, என்று சொன்ன ராதாகிருஷ்ணனின் குரல் ஒரு மாதிரி இருந்தது.
“என்ன ஆச்சுப்பா? ஒரு மாதிரி இருக்கீங்க? அம்மாவும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்காங்க?”
“இவ மாறவே இல்லை உமா. மாறவே மாட்டா”
“என்ன ஆச்சுப்பா?”
“கண்மணிக்கு இங்க இருக்க பிடிக்கலையாம்? அவ இங்க இருந்து போகணும்னு நினைக்கிறாளாம்? நாம அவளைக் கொண்டு போய் அங்க விட்டுட்டு வரனுமாம். உங்க அம்மா சொல்றா. உங்க அம்மாவுக்கு அவளை இன்னும் மகளா நினைக்க முடியலை. என் பொண்ணை என் கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறா”, என்று சொன்னதும் கோதை கண்களில் கண்ணீர் வந்தது.
“அம்மா சொன்னது உண்மை தான் பா. அக்காவுக்கு இங்க இருக்க விருப்பம் துளி கூட இல்லை”, என்றாள் உமா.
“என்ன உமா, அவ கூட சேந்து நீயும் இப்படி பேசுற?”
“நான் உண்மையை தான் பா சொல்றேன். இப்ப கூட அக்கா சிவா கிட்ட அங்க கூட்டிட்டு போகச் சொல்லி சொல்லிட்டு இருந்தா. என் மேலயும் அம்மா மேலயும் நம்பிக்கை இல்லைன்னா நீங்க பொறுமையா இருங்க. நாளைக்கே அவங்க வீட்ல இருந்து அக்காவை கூப்பிட வருவாங்க”
“நான் உன்னை நம்புறேன் உமா. உண்மையிலே கண்மணிக்கு இங்க இருக்க விருப்பம் இல்லையா? நாம அவளை நல்லா தானே பாத்துக்குறோம். இது அவ வீடு தானே?”
“வீடுங்குறது சிமிண்ட் செங்கல் வச்சு கட்டின கட்டிடம் இல்லைப் பா. அங்க எல்லாருக்கும் உணர்வுகள் இருக்கும். இப்ப நாம அக்காவுக்கு கொடுத்துருக்குற ரூம் பவித்ரா அம்மாவோடது. இந்த வீட்ல இருந்து அவங்க விரட்டப் பட்டுருக்காங்க. அதையெல்லாம் மறந்து அவ எப்படி இங்க இயல்பா இருப்பா? அவளைப் பொறுத்த வரைக்கும் இது தங்கக் கூண்டு”
“அப்படின்னா கண்மணி இங்க இருக்கவே மாட்டாளா?”
“நீங்க இருக்கச் சொன்னா இருப்பா தான். ஆனா உயிர்ப்போட இருக்க மாட்டா. நட்பு, காதல், திருமணம் இந்த உறவுகள் எல்லாம் பாதில வரும். நாமளும் அக்சப்ட் பண்ணிக்குவோம். ஆனா அப்பா அம்மா அப்படிங்குற உறவை பாதில திணிக்க முடியாது பா. அவ இந்த நேரத்துல சந்தோஷமா இருக்கணும். அவளுக்கு எங்க சந்தோஷம் இருக்கும்னு யோசிச்சு முடிவு பண்ணுங்க. நான் வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
“என்னை மன்னிச்சிரு கோதை. நான் உன்னைத் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்”, என்றார் ராதாகிருஷ்ணன்.
“பரவால்லைங்க. என் மேல தான் எல்லா தப்பும். என் ஒருத்தியோட சுயநலம் எத்தனை பேரை பாதிச்சிருக்கு? நான் மட்டும் அன்னைக்கு கொஞ்சம் உங்களை விட்டுக் கொடுத்திருந்தா பவித்ரா இப்ப உயிரோட இருந்திருப்பா. அவளை நான் தான் கொன்னுட்டேன்னு ஒரு குற்ற உணர்ச்சி என்னைக் கொன்னுட்டு இருக்குங்க. அது கடைசி வரை போகாது. அதான் எனக்கு கடவுள் கொடுத்த தண்டனை. நான் நிஜமாவே கண்மணி இங்க இருந்து போகணும்னு நினைக்கலை. அவ சந்தோஷமா இருக்கணும்னு தான் அப்படிச் சொன்னேன்”
“சரி விடு. காலைல அவளை அவ வீட்ல கொண்டு போய் விட்டுறலாம்”
“கஷ்டமா இருக்கா?”
“ம்ம், பெத்தவன்னு தான் பேர். ஆனா அவ கூட ஒரு நாள் கூட இருக்க முடியலை”
“எல்லாம் என்னால தான். அவளைக் கல்யாணம் முடிச்சு கொடுத்துருக்கோம்னு நினைச்சிக்கோங்க. உமாவும் கல்யாணம் முடிஞ்சு இங்க இருந்து போய்ருவா தானே? அப்படி நினைச்சிக்கோங்க”, என்று அவள் சொல்லும் போது அருண் அங்கே வந்தான்.
“வா பா”, என்றார் ராதாகிருஷ்ணன்.
“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”, என்று அருண் சொல்ல “நான் போறேன்”, என்றாள் கோதை.
“அம்மா உங்க கிட்டயும் தான் பேசணும்”
“என் கிட்ட என்ன பேசணும்? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டுட்டு இருக்கேன்? மூச்சே விட மாட்டிக்க? உமாவும் கேக்க மாட்டிக்கா. நான் மட்டும் உன் பேச்சைக் கேக்கணுமா?”
“அது சம்மந்தமா தான் பேச வந்தேன்”
“என்ன பா? சொல்லு. கல்யாணத்துக்கு சம்மதமா? அம்மா உனக்கு ஒரு பொண்ணு பாத்துருக்கேன் டா?”, என்று ஆர்வமாக சொன்னாள் கோதை.
“அதெல்லாம் வேண்டாம். எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு”, என்று அருண் சொல்ல இருவரும் அதிர்ந்து போனார்கள்.
“என்ன நீ இப்படி சொல்ற? நீ என்னைத் தானே உனக்கு பொண்ணு பாக்கச் சொன்ன? இப்ப உனக்கும் என்னைப் பிடிக்கலையா அருண்?”, என்று கேட்கும் போதே கோதை கண்கள் கலங்கியது.
“அம்மா அப்படி இல்லை மா”
“அப்புறம் ஏன் அப்படிச் சொல்ற?”
“எனக்கு அந்த பொண்ணைப் பிடிச்சிருக்கு மா”, என்று அருண் சொல்ல “யாருன்னு சொல்லு பா. பேசி முடிச்சிறலாம்”, என்றார் ராதாகிருஷ்ணன்.
“என்னங்க, ஏன் அப்படிச் சொல்றீங்க?”, என்று கோதை கேட்க “என் பையன் விசயத்துல முடிவு எடுக்க எனக்கு உரிமை இருக்கா இல்லையா?”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன்.
“இருக்கு”
“அப்படின்னா அமைதியா இரு. அவன் விரும்புற பொண்ணை அவனுக்கு கட்டி வைப்போம். சந்தோஷமா இருக்கட்டும்”
“அப்ப நம்ம ஸ்டேட்டஸ்?”
“அதைப் பாத்து பாத்து தான் நான் என்னோட ஒரு மனைவியையும் மகளையும் இழந்துட்டு நிக்குறேன்”, என்று சொல்ல கோதை கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.
“யாருன்னு சொல்லு அருண், பேசி முடிச்சிறலாம்”, என்று ராதாகிருஷ்ணன் கேட்க “நான் மதியை ரொம்ப விரும்புறேன் பா. அவங்க வீட்ல பேசுறீங்களா?”, என்று கேட்டான்.
“மதியா?”, என்று அவர் ஆச்சர்யமாக கேட்க கோதை கண்கள் ஒளிர்ந்தது. கணவரின் சந்தோசத்துக்காக மகனின் ஆசையா நிறைவேற்ற எண்ணினாள். “சம்மதம் சொல்லுங்க. இப்ப தானே கண்மணி உங்க கூட இல்லைன்னு கவலைப் பட்டீங்க? அவங்க வீட்ல பொண்ணு எடுத்தா அப்ப அப்பவாது கண்மணி உங்க முன்னாடி வருவா. மதியும் ரொம்ப அழகா தானே இருக்கா?”, என்று கேட்டாள் கோதை.
“சரி அருண், நாளைக்கு அவங்க வீட்ல பேசுறோம். உங்க அம்மாவே சரின்னு சொல்லிட்டா. அப்புறம் என்ன?”, என்று ராதாகிருஷ்ணன் சொன்னதும் அருண் முகம் மலர்ந்தது.
அடுத்த நாள் காலை எழுந்ததும் பார்வதி மற்றும் சுந்தரியிடம் “நானும் கருப்பட்டியும் போய் கண்மணியை இங்க அழைச்சிட்டு வரப் போறோம்”, என்றான் சிவன்.
“என்ன டா விளையாடுறியா? இதெல்லாம் காலம் காலமா நடக்குற சடங்கு. குழந்தை பிறக்குற வரை அவ அங்க தான் இருக்கணும்”, என்றாள் பார்வதி.
“அம்மா, அவளுக்கு அங்க இருக்க பிடிக்கலை மா?”
“அதை நீயா சொன்னா எப்படி சிவா?”
“நான் ஒண்ணும் சொல்லலை. அவ தான் அவ புருஷன் கிட்ட சொல்லி அவளைக் கூட்டிட்டு போகணும்னு சொன்னா”
“புருஷன்”, என்று சொன்னதும் கருப்பட்டியின் கண்கள் மின்னியது. அவள் தன்னிடமா சொல்லச் சொன்னாள் என்று ஆச்சர்யப் பட்டான் கருப்பட்டி.