எப்போதும் அவன் பின் பக்கம் இருந்த கிணற்றில் தான் குளிப்பான். இன்று ஏதோ நினைவில் அறைக்குள் இருந்த குளியல் அறைக்குள் சென்று விட்டான். அவன் குளித்து விட்டு வெளியே வரும் போது கண்மணி எழுந்து அமர்ந்திருந்தாள். வெறும் துண்டுடன் ஈரம் சொட்ட சொட்ட நின்றவன் அவளைக் கண்டு அதிர்ந்தான்.
“தூங்கிட்டு இருப்பான்னு நினைச்சேனே?”, என்று எண்ணி அவசர அவசரமாக மாற்றுடையைத் தேடினான். அவளோ இமைக்க மறந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது அகன்ற தோள்களும் அவன் நெஞ்சினில் படர்ந்திருந்த கருமையான முடியும் அவனுடைய அளவான மீசையும் அழுத்தமான உதடுகளும் சொல்ல முடியாத சலனத்தை அவளுக்குள் விதைத்தது.
அவள் முன்னிலையிலே உடை மாற்றி முடித்தவன் அவள் அருகே வந்து அவள் கண்களை உற்றுப் பார்த்தான். அவள் வெட்கத்துடன் தலை குனிய “போயிட்டு வரேன் டி பொண்டாட்டி”, என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“என்னது டி யா? நான் உங்களை விட ஒரு வயசு மூத்தவள் தெரியுமா?”, என்று சிறு சிரிப்புடன் கேட்டாள் கண்மணி.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் ஒன்னாப்பு ரெண்டு வருஷம் படிச்சேன். ரெண்டு பேரும் ஒரே வருஷம் தான் பிறந்துருக்கோம். உன்னை விட அஞ்சு மாசம் நான் பெரியவன் தான். இப்ப சொல்லலாம்ல டி டி”, என்று அவன் சிரிக்க அவளும் அவனைக் கண்டு நிறைவாக புன்னகைத்தாள்.
கண்மணி கருப்பட்டி திருமணம் முடிந்து இரண்டு மாதம் கடந்திருந்தது. இருவரும் இயல்பாக மற்றவரின் உதவியை ஏற்றுக் கொள்ள பழகி இருந்தார்கள். அவளுக்கு என்று பார்த்து பார்த்து செய்தான். அவளுடைய வாழ்வில் கணவனாக மாற வில்லை என்றாலும் அவளுக்கு இன்றிமையாதவனாக மாறிப் போனான்.
அவளது ஒவ்வொரு தேவையையும் அவன் தான் நிறைவேற்றினான். அவள் வெளிப்படையாக எதுவும் கேட்க வில்லை என்றாலும் அவளுக்கு என்ன தேவை என்று பார்த்து அதை நிறைவேற்றினான்.
அதே போல அவளுக்கு கால் அமுக்கி விடுவது, அவள் துணிகளை துவைத்து போடுவது, அவன் கையால் மாத்திரை உண்பது என அவனுடைய இயல்பான தொடுகைகளுக்கு கூட பழகிப் போனாள். அது மட்டுமில்லாமல் இருவருக்கும் இடையே முத்தப் பரிமாற்றம் கூட இயல்பாக இருந்தது. தினமும் அவன் நெஞ்சில் முகம் புதைத்து தான் தூங்குகிறாள்.
அவனது கரத்தை எடுத்து தன்னுடைய வயிற்றில் வைத்து குழந்தையின் அசைவை கூட அவனுக்கு புரிய வைத்தாள். அன்று கண்மணிக்கு ஸ்கேன் எடுக்க வேண்டியது இருந்தது. கருப்பட்டி தான் அவளை அழைத்துச் சென்றான்.
மருத்துவமனை வந்ததும் டோக்கன் வாங்கிக் கொண்டு அமர்ந்தார்கள். அவர்கள் முறை வந்ததும் அவள் உள்ளே அழைக்கப் பட அவன் வெளியவே நின்றான். ஸ்கேன் எடுத்து முடிந்ததும் அந்த மருத்துவர் முன்பு அமர்ந்திருந்தார்கள்.
“குழந்தை கொஞ்சம் வீக்கா இருக்கு. போன மாசத்துக்கு இந்த மாசம் கொஞ்சம் வெயிட் கூடனும். ஆனா கூடவே இல்லை. இன்னும் கொஞ்சம் கவனமா இருங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் இடையே எந்த காண்டேக்ட்டும் வேண்டாம். கொஞ்சம் விலகியே இருங்க. நான் டேப்லெட் மாத்தி தரேன். அதையும் போடுங்க”, என்று சொல்ல கருப்பட்டி அவளைப் பார்த்து நே என்று விழித்தான்.
அதைக் கண்டு அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. டாக்டர் இருந்ததால் அடக்கிக் கொண்டாள். அவர்கள் வாழ்க்கை காலப் போக்கில் சரியாகி விடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே வந்தது.
இப்படியே நாட்கள் நகர்ந்து மதி அருண் திருமணப் பேச்சு வார்த்தைகள் சூடு பிடித்தது. எல்லா ஏற்பாடுகளும் முடிந்து அவர்கள் திருமண நாளும் வந்தது.
தங்கையின் திருமணம் என்பதால் சிவனும் கருப்பட்டியும் சேர்ந்து எல்லா ஏற்பாடுகளும் செய்தார்கள். அதே போல ராதாகிருஷ்ணன் கிராண்டாக இந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
கோதை மதிக்கு என்று நிறைய நகைகள், உடைகள் என வாங்கிக் கொடுத்திருந்தாள். அது மட்டுமில்லாமல் உமாவுக்கு வாங்கியது போல கண்மணிக்கும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.
அனைவரின் ஆசியோடு மதி அருண் திருமணம் நல்ல படியாக முடிந்தது. அன்று இரவு அருண் வீட்டில் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தார்கள். படபடப்புடன் அறைக்கு வந்தாள் மதி.
“வா மதி, இங்க உக்காரு”, என்று சொன்னான் அருண்.
வெட்கத்துடன் அவன் அருகே அமர்ந்தாள். இது வரை அலுவலகத்தில் வைத்து இருவரும் வேலை விஷயம் பேசியிருக்கிறார்கள் தான். ஆனால் இப்போது அவளால் எதுவும் பேச முடிய வில்லை.
அவள் முகத்தில் இருந்த வெட்கம் அவனை அடித்துப் போட்டது தான். ஆனால் அவனுக்கு அவளிடம் பேச வேண்டியது இருக்கிறதே. அதனால் “மதி உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றான் அருண்.
அவன் குரல் சீரியசாக இருக்க “சொல்லுங்க”, என்று குழப்பத்துடன் கேட்டாள்.
“சரிங்க, இதுல என்ன இருக்கு? எங்க அண்ணனா இருந்தாலும் அதை தான் செய்யும். சரி உமா அண்ணிக்கு இன்னும் மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கலையா?”
“அதெல்லாம் மாப்பிள்ளை ரெடியா தான் இருக்கார். ஆனா இந்த கல்யாணம் நடக்குறது உன் கைல தான் இருக்கு”
“என் கைலயா? என்ன சொல்றீங்க?”
“உமாவுக்கு உங்க அண்ணனை ரொம்ப பிடிக்கும் மதி. நீ உங்க அண்ணன் கிட்ட உமா பத்தி கொஞ்சம் பேசுறியா?”
“என்ன சொல்றீங்க நீங்க?”, என்று அவள் அதிர்ச்சியாக கேட்க இது வரை உமா சிவன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைச் சொன்னான் அருண்.
அனைத்தையும் கேட்டவளுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்தது. “இவன் ஒரு வேளை இவனோட தங்கச்சிக்காக தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானா?”, என்று அவளுக்கு தோன்றியது. அந்த சந்தேகம் அவள் மனதில் இருந்த சந்தோஷத்தை அப்படியே விரட்டி அடித்தது.
மதி யோசனையில் இருக்க “நீ சொன்னா உங்க அண்ணா கேப்பான் மதி. பிளீஸ் மச்சான் கிட்ட சொல்லு”, என்றான் அருண்.
“நான் சொல்றது இருக்கட்டும். எனக்கு நீங்க ஒரு பதில் சொல்லுங்க”
“என்ன மதி?”
“உமா அண்ணியையும் எங்க அண்ணனையும் ஒண்ணு சேத்து வைக்க தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?”
“அதுவும் ஒரு காரணம் தான். ஆனா….”, என்று அவன் சொல்ல வர அவன் அந்த உண்மையை ஒத்துக் கொண்டதைத் தாங்க முடியாமல் “பேசாதீங்க”, என்று கத்தி விட்டாள்.
“ஏய் மதி நான் சொல்ல வரதைக் கேளு”
“ஒண்ணும் கேக்க வேண்டாம். எனக்கு எல்லாம் புரிஞ்சிருச்சு. உங்க அப்பா அம்மா என்னை உங்களுக்கு பொண்ணு கேட்டது கண்மணி அண்ணி உங்க குடும்பத்து கூட ஒட்டணும்னு. நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது உமா அண்ணிக்காக. ஆக மொத்ததுல யாருமே எனக்காக என்னை ஏத்துக்கலை. அப்படி தானே?”
“ஐயோ அப்படி இல்லை மதி”
“ஏழை மாப்பிள்ளையா இருந்தாலும் அவன் எனக்காக என்னைக் கல்யாணம் பண்ணணும்னு நினைச்சேன். ஆனா அது நடக்கலை. ஆனா ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோங்க. எங்க அண்ணா கிட்ட போய் நான் ஒரு நாளும் நீ உமா அண்ணியைக் கட்டிக்கோன்னு சொல்ல மாட்டேன்”
“மதி பிளீஸ், உமா பாவம்”
“நீங்க உங்க தங்கச்சிக்காக பாவம் பாக்கலாம். நான் என் அண்ணனுக்காக பாவம் பாக்க கூடாதா? செல்வி அக்கா அவ நத்தானாரை எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னப்பவே முடியாதுன்னு சொன்னவ நான். அப்படி இருக்க என் வாழ்க்கைக்காக அவன் வாழ்க்கையை நான் அடகு வைக்க மாட்டேன்”
“ஏய், இதுல நம்ம வாழ்க்கை எங்க டி பாதிக்கப் படுது?”
“கண்டிப்பா பாதிக்கப் படுது தான். நான் இப்ப எங்க அண்ணன் கிட்ட போய் பேச மாட்டேன்னு சொன்னப்ப உங்க முகம் மாறினதைப் பாத்தேன். இந்த கோபத்துல நீங்க எப்படி என் கூட சந்தோஷமா இருப்பீங்க? ஆனா இதை மனசுல வச்சிட்டு நீங்க என் கூட வாழவே வேண்டாம். உமா அண்ணி கல்யாணம் முடியுற வரைக்கும் நீங்க யாரோ நான் யாரோ. ஆனா எங்க அண்ணன் விருப்ப படி தான் அவன் கல்யாணம் நடக்கும். நான் போய் அவன் கிட்ட பேச மாட்டேன்”, என்று சொன்னவள் தரையில் தலையணையைப் போட்டு படுத்து விட்டாள். அவன் சொல்ல வருவதை அவள் கேட்கவே இல்லை.
அடுத்து வந்த நாட்களில் மற்றவர்கள் முன்பு சாதாரணமாக இருந்தாலும் தனி அறையில் தனித் தனியாக தான் இருந்தார்கள். அவர்கள் திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து அருண் அலுவலகம் செல்ல மதியும் அவனுடன் அலுவலகம் கிளம்பினாள்.
“இல்லை மாமா, வெளியூருக்கு எப்ப வேணும்னாலும் போகலாம். ஆனா நமக்கு இப்ப புராஜெக்ட் முடியுற மாதிரி இருக்கு. கொடுத்துருக்குற டெட்லைன்குள்ள எல்லாம் முடிக்கணும். அதுக்கு உங்க பிள்ளை இங்க இருக்கணும்”, என்றாள் மதி.
“பரவால்ல மா, பொறுப்பா தான் இருக்க. அருண் வந்து எனக்கு மதியைப் பிடிச்சிருக்கு பா. பொண்ணு கேளுங்கன்னு சொன்னப்ப கொஞ்சம் எனக்கு தயக்கம் இருந்துச்சு தான். ஆனா அவன் நினைச்ச மாதிரி நீ தான் அவனுக்கு பெஸ்ட் ஜோடி. அப்படி தானே கோதை?”, என்று சொல்ல “ஆமாங்க”, என்றாள் கோதை.