அத்தியாயம் 16
சிறையெடுக்க வா என்று
உன்னை அழைக்கிறது
எந்தன் இதயம்!!!
முதல் முறை தன்னிடம் சண்டைக்கு வந்தவளா இந்த உமா என்று அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. உள்ளே வந்தவள் அமைதியாக அப்படியே நிற்க “உமா, ஏன் அங்கயே நின்னுட்ட? உள்ள வா”, என்றான் சிவன்.
அடுத்த நொடி அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கோபத்தாலும் கண்ணீராலும் சிவந்திருந்தது.
“உமா”, என்று அவன் அதிர்வாக அழைக்க “உங்க வாயால என்னோட பேரைச் சொல்லாதீங்க. எனக்கு எரிச்சலா இருக்கு”, என்று சீற்றத்துடன் சொன்னாள்.
அவள் கோபத்தில் வியப்பாக அவளைப் பார்த்தவன் “என்ன ஆச்சு உமா? எதுக்கு இவ்வளவு கோபம்?”, என்று கேட்டான்.
“என்ன ஆகணும்? இன்னும் ஆக என்ன இருக்கு?”
“நான் என்ன செஞ்சேன்? என் மேல என்ன கோபம்?”
“என் வாழ்க்கையை கெடுத்தீங்களே? அது ஒண்ணு போதாதா?”
“நானா உன் வாழ்க்கையை கெடுத்தேன்? நீ என்ன சொல்ற? நீ என்னை விரும்பின தானே? நீ என்னைக் காதலிச்சது…?”, என்று குழப்பமாக கேட்டான்.
“காதலைப் பத்தி நீங்க பேசாதீங்க. அதுக்கு உங்களுக்கு தகுதியே இல்லை. உங்களை விரும்பின பாவத்துக்கு எனக்கு என்ன பேர் கொடுத்தீங்க? நீங்க பேசினது எல்லாம் இன்னும் எனக்கு நினைவு இருக்கு. ஒரு பொண்ணு வந்து தன்னோட காதலைச் சொன்னா அவ ஆம்பளைக்கு அலையுறான்னு அர்த்தமா?”
“உமா சாரி, நான் பண்ணினது தப்பு தான். அது எதுக்குன்னா….?”
“எதுக்கா வேணும்னாலும் இருக்கட்டும். அதுக்கு அப்படி பேசணுமா? பிடிக்கலைன்னா என்னை அடிக்க கூட செஞ்சிருக்கலாமே? ஆனா நீங்க என்ன எல்லாம் பேசினீங்க? எனக்கு அதை எல்லாம் மறக்க முடியலை. இந்த நிமிஷம் எனக்கு உங்களைப் பிடிக்கலை”
“ஆனா எனக்கு உன்னைப் பிடிக்கும் உமா. அதுவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்”, என்று சொன்னவன் தான் சொன்னதைக் கேட்டு சந்தோஷப் படுவாள் என்று எண்ணி அவளைப் பார்த்தான்.
அவளோ “அப்படியா? நீங்களும் என்னை லவ் பண்ணுறீங்களா?”, என்று நக்கலாக கேட்டாள்.
அவள் பேச்சின் தொனி மனதை பாதித்தாலும் “ஆமா, நீ என்னை நம்பலையா?”, என்று கேட்டான்.
“உங்க காதலை நம்புறேன்னு வச்சிக்குவோம். எங்க அப்பா வந்து உங்க அம்மா கிட்ட நம்ம கல்யாணம் பத்தி பேசலைன்னா நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிருப்பீங்களா?”, என்று நெற்றி அடியாய் வந்து விழுந்தது அவள் கேள்வி.
“அது… அது வந்து”, என்று தயங்கினான் சிவன்.
“என்ன தயங்குறீங்க? பதில் சொல்லுங்க. என்னை லவ் பண்ணுற நீங்க என்னை என் அப்பா கிட்ட பொண்ணு கேட்டுருப்பீங்களா? இல்லை உங்க அம்மா கிட்ட தான் நான் உமாவை விரும்புறேன்னு சொல்லிருப்பீங்களா? சரி அதைக் கூட விடுங்க. என் கிட்ட எதுக்காக நீங்க விரும்பினதை சொல்லலை? ஐ லவ் யு அப்படிங்குற வார்த்தை ரொம்ப பெருசா இருக்கோ?”
“அது வந்து உமா….”
“பதிலே பேச முடியலை போல? என் கேள்விக்கு உங்க கிட்ட பதில் இல்லை, அப்படி தானே? என்ன சார் சொல்லுங்க. என்னைத் தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே? நான் உங்களை விரும்புனேன்னும் உங்களுக்கு தெரியும். அப்படின்னா எங்க அப்பா கிட்ட என்னை பொண்ணு கேட்டுருக்க வேண்டியது தான? ஏன் இத்தனை நாள் கேக்கலை?”
“அது”
“ரொம்ப கஷ்டப் படாதீங்க. எனக்கே பதில் தெரியும். எங்க அப்பா சொன்னதுனாலயும் உங்க அம்மா சொன்னதுனாலயும் தான் இந்த கல்யாணத்துக்கு நீங்க ஒத்துகிட்டீங்க. இன்னும் சொல்லப் போனா கண்மணி அக்காக்காகவும் மதிக்காகவும் கூட இருக்கலாம். அவங்களுக்காக தான் என்னைக் கல்யாணம் பண்ணுனீங்கன்னு என்னால அடிச்சு சொல்ல முடியும்”
“என்ன சொல்ற நீ? அவங்க எப்படி நமக்கு இடைல வராங்க?”
“ஆமா, என்னைக் கல்யாணம் பண்ணினா கண்மணி அக்கா கடைசி வரை எங்க குடும்பத்து கூட தொடர்புல இருப்பான்னு நினைச்சு ஒத்துகிட்டிருப்பீங்க. இல்லைன்னா உங்க தங்கையை எங்க வீட்ல கட்டிக் கொடுத்துருக்குறதுனால என்னைக் கல்யாணம் பண்ணிருப்பீங்க. இது ரெண்டும் தான் காரணம். சத்தியமா எனக்காக நீங்க என்னைக் கல்யாணம் பண்ணலை. அதெல்லாம் ரெண்டாவது விஷயம். நீங்க எதுக்காகவேணும்னாலும் என்னைக் கல்யாணம் பண்ணிருந்துருக்கலாம். ஆனா எனக்கு உங்களைப் பிடிக்கலை. உங்களோட பேச்சு, என்னை அவமானப் படுத்தினது எதையும் மறக்க முடியலை. அப்ப என்னால எப்படி இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியும்?”
“நீ என்னை விரும்பின தானே உமா?”
“ஆமா விரும்பினேன். ஆனா அது பாஸ்ட் டென்ஸ். எப்ப என்னோட காதலை கொச்சப் படுத்துனீங்களோ அப்பவே அது செத்துருச்சு. நான் சாவுல இருந்து மீண்டு முதல் முறை உங்க வீட்டுக்கு வந்தப்ப ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை ஏன் இப்படி மெலிஞ்சிட்ட? உடம்புக்கு என்னன்னு கேட்டுருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பேன். நீங்க பேசின வார்த்தைகளைக் கூட மானங்கெட்டுப் போய் மறந்துருப்பேன். ஆனா என்னை ஒரு வார்த்தை கூட கேக்காம சாதாரணமா மரம் மாதிரி நின்னீங்க பாருங்க. அப்ப நானும் செத்துட்டேன். என் காதலும் செத்துட்டு. இப்ப எனக்கு உங்க கூட வாழ விருப்பம் இல்லை”
“நான் என் வீட்டுக்காகவும் கண்மணிக்காகவும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு வச்சிக்கோ. உன் காதல் தான் செத்துருச்சுல்ல? நீ எதுக்கு இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட? உங்க அப்பா சொன்னதுனாலயா? உங்க அப்பா ஒரு விசயத்துக்கு உன்னைக் கட்டாயப் படுத்தவும் மாட்டார். நீ ஒரு விஷயம் முடிவு பண்ணிட்ட பிறகு யாருக்காகவும் அதை மாத்திக்கவும் மாட்ட. அப்படி இருக்க என்னை வெறுத்த நீ எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ண ஒத்துகிட்ட?”, என்று அவன் கேட்க இப்போது “அது….”, என்று அவள் திணறினாள்.
“இதுக்கு உனக்கு பதில் இல்லை அப்படி தானே உமா?”, என்று கேட்கும் போதே அவனுக்கு சிரிப்பு வந்தது.
“நீங்க பேச்சை மாத்தாதீங்க. எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. உங்களை பிடிக்கலை”, என்று படபடப்பாக பேசினாள்.
“நீ வீணா பிடிவாதம் பிடிக்கிற உமா? நான் செஞ்சது தப்பு தான். உன்னை என்னோட வாழ்க்கைல இருந்து விரட்ட அப்படி பேச வேண்டியதா போச்சு. பேசினதுக்கு என்னை அடிச்சிருக்கலாம்னு இப்ப சொல்ற? ஆனா நான் அப்ப உன்னை அடிச்சிருந்தா என் கை உன் மேல பட்டுருச்சுன்னு சொல்லி சந்தோஷப் பட்டுருப்ப?”, என்று அவன் சொல்ல அவள் முகம் அவன் பேச்சால் சிவந்து போனது.
ஆனால் அதை அடக்கி அவனை முறைக்க “நான் பேசினது தப்பு தான் உமா. அதுக்கு வேணும்னா மன்னிப்பு கேக்கவா?”, என்று இறங்கி வந்தான் சிவன்.
“இவன் என்ன பொசுக்குன்னு இப்படி இறங்கி வந்துட்டான்? எவ்வளவு நேரம் மூச்சு விடாம டயலாக் பேசிருக்கேன். இவன் என்ன சட்டுன்னு மன்னிப்புன்னு சொல்றான். மயக்க பாக்குறான். மயங்கிறாத டி”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “எப்படி எப்படி? என்னை உயிரோட கொன்னுட்டு மன்னிப்பு கேக்குறீங்களா?”, என்று கோபமாக கேட்பது போல கேட்டாள்.
“இப்ப என்னை என்ன தான் பண்ணச் சொல்ற?”, என்று சலிப்புடன் கேட்டான் சிவன்.
“எனக்கு உங்க கூட வாழப் பிடிக்கலை”
“சரி நான் என்ன செய்யணும்? எல்லாரையும் கூப்பிட்டு வச்சு பேசணுமா? உன்னை உன் வீட்டுக்கு அனுப்பனுமா?”, என்று கேட்க “காரியத்தையே கெடுக்குறானே?”, என்று எண்ணிக் கொண்டு “வேண்டாம் வேண்டாம். எல்லா பிரச்சனையும் நமக்குள்ள இருக்கட்டும். அடுத்தவங்களுக்காக நாம வாழ்ந்து தான் ஆகணும். ஆனா இந்த ரூமுக்குள்ள நீங்க யாரோ நான் யாரோ?”, என்று அவசரமாக சொன்னாள். அதைக் கேட்டு அவனுக்கு சிரிப்பு வந்தது.
“இப்ப பர்ஸ்ட் நைட் கொண்டாடிருவேனோன்னு பயத்துல தானே இப்படி கோபப் படுற? எனக்கும் அந்த ஆசை எல்லாம் இல்லை. நீ சம்மதம் சொல்லாம இங்க பர்ஸ்ட் நைட் எல்லாம் நடக்காது. அதனால கவலை இல்லாம பேசாம படு”, என்று சொல்லி படுத்து விட்டான்.
“அடப்பாவி, எப்படி கண்டு பிடிச்சான்?”, என்று எண்ணினாள் உமா. உண்மையிலே அவள் அப்படி தான் நினைத்தாள். அவன் வந்து சமாதானமாக பேசினால் தான் அவன் பக்கம் சாய்ந்து விடுவோம் என்ற பயத்தில் தான் அவள் சண்டை இழுத்தது.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவன் உடனேயே தூங்க ஆரம்பித்தான். “என்ன படுத்ததும் தூங்கிட்டான்? அப்படின்னா இவனுக்கு ஏமாற்றமே இல்லையா? என்னை பிடிச்சிருந்தா தானே இவனுக்கு ஆசை இருக்கும்? அது நடக்கலைன்னு ஏமாற்றம் வந்திருக்கும்? இவனுக்கு தான் முதல்ல இருந்தே என்னைப் பிடிக்கலையே?”, என்று எண்ணினாள்.
“இப்ப நீ என்ன நினைக்கிற? அவன் உன் கிட்ட வரக் கூடாதுன்னு தான சண்டையை இழுத்த? அவன் பேசாம படுத்த பிறகும் கவலைப் படுற? இப்ப அவன் உன்னை நெருங்கினா உனக்கு சந்தோஷமா?”, என்று மனசாட்சி கேள்வி எழுப்ப அதை அடக்கி விட்டு கட்டிலின் மற்றொரு ஓரம் படுத்து விட்டாள்.
அவளும் சற்று நேரத்தில் உறங்கி விட்டாள். பாதி ராத்திரியில் சிவனுக்கு விழிப்பு வந்தது. புது மனைவியைப் பார்த்தான்.
அவளோ சிறு குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தாள். “ஐ லவ் யு உமா”, என்று முணுமுணுத்தவன் அப்போது தான் அவளது நெற்றி மீதிருந்த வியர்வையைப் பார்த்தான். அவளது வீட்டில் ஏசி காற்றில் தூங்கிப் பழக்க பட்டவளுக்கு இங்கு பேன் காற்று போத வில்லை என்று புரிந்தது.
எழுந்து அமர்ந்தவன் அந்த அறையின் ஓரத்தில் இருந்த டேபிள் பேனை எடுத்து அவள் முகத்துக்கு நேராக காற்று வரும் படி வைத்தான்.
ஜில்லென்று காற்று முகத்தில் பட்டதும் அவளது முகம் சிறிது மலர்ந்தாலும் நன்கு உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். அவளையே ரசித்துப் பார்த்தான்.
நிச்சயம் அவள் மனதில் இன்னும் அவன் மீது காதல் இருக்கிறது என்று அவனுக்கு தெரியும். அவனுடைய அதிகப் படியான பேச்சைக் கூட அவள் காதல் மன்னித்து விடும் என்றும் அவனுக்கு தெரியும். அவள் எதிர் பார்ப்பது அவனாக அவளிடம் காதலைச் சொல்ல வேண்டும் என்று மட்டும் தான்.
அதை அவன் இப்போது சொல்ல தயாராக இருக்கிறான். ஆனால் அதை அவள் நம்பத் தயாராக இல்லை. இப்போது அவன் சொன்னால் கூட திருமணம் முடிந்து விட்டதால் அவன் பொய்ச் சொல்வதாக தான் தெரியும்.
“எங்க டி போய்ருவ? கண்டிப்பா ஒரு நாள் என் மனசு உனக்கு புரியும். அது வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன். அதான் நான் உன்னை பேசினதுக்கு தண்டனை”, என்று எண்ணிக் கொண்டு மேலும் சிறிது நேரம் அவளை ரசித்து விட்டே தூங்கினான்.
ராதாகிருஷ்ணன், கோதை, அருண், மதி நால்வரும் அன்று இரவு பதினொரு மணிக்கு தான் வீட்டுக்கு சென்றார்கள். அறைக்கு வந்ததும் அருண் மதியை ஆசையாக பார்த்தான். “என்ன?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டாள் மதி.
“எனக்கு உன் கூட வாழனும். அதுவும் இப்பவே”, என்று அவன் வெளிப்படையாக கேட்டு விட்டான். அவன் கேள்வியில் ஒரு நொடி ஜெர்க் ஆனாலும் “யாரு வேண்டாம்னு சொன்னா? நான் உமா அண்ணி கல்யாணம் முடியுற வரைக்கும் தானே வேண்டாம்னு சொன்னேன். இப்ப தான் அவங்க கல்யாணம் முடிஞ்சிருச்சே?”, என்று அவள் வெட்கத்துடன் சொல்ல அடுத்த நொடி அவளை தன் கரங்களில் அள்ளிக் கொண்டான். அங்கே அவர்கள் வாழ்க்கை ஆரம்பமானது.
அடுத்த நாள் காலையில் உமா கண் விழிக்கும் போது சிவன் அறையில் இல்லை. இரவு இல்லாத டேபிள் பேன் கண்ணில் பட “ரொம்ப தான் அக்கறை இருக்குற மாதிரி நடிக்கிறான்”, என்று எண்ணிக் கொண்டு குளிக்கச் சென்றாள்.
அன்று குடும்ப உறுப்பினர்களுக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. செந்தில் குடும்பமும் வந்திருந்தது. ராதாகிருஷ்ணன் விடிந்ததும் குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் பேரனைத் தூக்கிக் கொண்டு அமர கருப்பட்டி முகத்தை தூக்கி கொண்டு அமர்ந்திருந்தான். அவன் அருகே அமர்ந்த கண்மணி “சாருக்கு என்ன கோபம்? முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள்.
அவள் கையைப் பற்றிக் கொண்டவன் “எல்லாரும் எப்ப போவாங்க? எனக்கு என் பையன் வேணும்”, என்று கேட்டான்.
அவன் மனச் சிணுங்கல் புரிந்தவள் “எப்பவும் உங்க மகனைத் தான் கவனிக்கணும்னு இல்லை. கொஞ்சம் உங்க மகனோட அம்மாவையும் கவனிக்கலாம்”, என்று சொன்னாள்.
அதைக் கேட்டு அவன் கண்கள் மின்ன அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் “உங்க பையன் சாயங்காலம் வரைக்கும் அவங்க தாத்தா கிட்ட இருப்பான். அதுக்கப்புறம் உங்க கூடவே தானே இருக்கப் போறான்? இதுக்கெல்லாம் முகத்தை தூக்கணுமா?”, என்று அவனுக்கு புரிய வைக்க முயன்றாள்.
“புரியுது, சாரி”, என்று அவன் முணுமுணுக்க அப்போது அவனை போனில் அழைத்த சிவன் “உன் பொண்டாட்டியைக் கொஞ்சினது போதும். வெளிய வா, நிறைய வேலை இருக்கு”, என்றான்.
“உனக்கு எப்படி தெரியும்?”, என்று கருப்பட்டி கேட்க “அப்ப உண்மையிலே அதை தான் செய்யுறியா? உன் மகன் மாமா கிட்ட இருக்குறதைப் பாத்தேன். பிள்ளையை விட்டா பொண்டாட்டி கூட இருப்பேன்னு நினைச்சு தான் சொன்னேன். பாத்தா உண்மையா அதை தான் பண்ணிட்டு இருக்கியா?”, என்று கேட்டான் சிவன்.