“நான் இங்க வந்து உக்காந்து அரை மணி நேரம் ஆகுது. ஆனா இன்னும் எனக்கு சாப்பாடு வைக்கலை. இத்தனைக்கும் அப்பா எனக்கு சாப்பாடு வைக்கச் சொன்னாங்க. நானும் கேட்டேன். இப்ப வரைக்கும் எனக்கு சாப்பாடு தரலை. ஆனா உனக்கு பாரு, நீ வந்து உக்காந்த உடனே பரிமாறுறாங்க. இப்ப தெரியுதா அவங்களுக்கு யாரு முக்கியம்னு? சின்ன பிள்ளைல இருந்து இப்படி செஞ்சு செஞ்சு தான் என்னை அவங்க கிட்ட இருந்து ஒதுக்கி வச்சாங்க. ஆனா பழி என் மேல போட்டா எப்படி”, என்று சிறு வேதனையுடன் உமா சொல்ல கோதைக்கு தன்னுடைய தவறு உரைத்தது.
“சாரி உமா, பேசிட்டு இருந்ததுல கவனிக்கலை. நீயும் என் பொண்ணு தான் டி”, என்ற படி அவளுக்கு பரிமாறினாள் கோதை. ஆனால் கணவரை மட்டும் நிமிர்ந்து பார்க்க வில்லை.
“யார் இல்லைன்னு சொன்னா? நான் உன் பொண்ணு தான். ஆனா அண்ணா எப்பவும் உனக்கு ஸ்பெஷல். அதை நான் ஏத்துகிட்டு பழகிக்கிட்டேன். அதனால நான் அப்பாவுக்கு ஸ்பெஷல் ஆகிட்டேன். இன்னொரு தடவை இது தப்புன்னு சொல்லிட்டு இருக்காத மா. அது போதும்”, என்று அன்னையிடம் சொன்ன உமா “அப்படி தானே பா?”, என்று தந்தையிடம் கேட்டாள்.
“ஆமா டா தங்கம். நீ சாப்பிடு”, என்று சொன்ன ராதாகிருஷ்ணன் மனைவியை முறைப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
“நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் அருண் எனக்கு ஸ்பெஷல் தான் உமா. என்னோட வாழ்க்கையை நான் எனக்குன்னு தக்க வச்சிக்க காரணம் அவன் தான்”, என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் கோதை. ஆனால் அவள் மனதில் இருக்கும் எண்ணம் புரிந்த ராதாகிருஷ்ணன் அவளை குற்றம் சாற்றும் பார்வை பார்க்க அவர் பார்வையை தவிர்த்தாள் கோதை.
அப்போது தான் உமாவுக்கு தோழிகளின் நினைவு வர “ஐயோ, அம்மா பண்ணின கலாட்டால சொல்ல வந்த விசயத்தையே மறந்துட்டேன். அப்பா நாளைக்கு என்னோட பிரண்டு அனிதாவுக்கு மதுரைல கல்யாணம். நான் போய்ட்டு வரேன் பா”, என்றாள்.
“அதுக்கென்ன டா? தாராளமா போயிட்டு வா. ஆனா தனியா மட்டும் அனுப்ப மாட்டேன்”, என்றார் ராதாகிருஷ்ணன்.
“தனியா இல்லைப்பா. என் பிரண்ட்ஸ் வராங்க”
“அப்படின்னா போயிட்டு வா உமா. நாளைக்கு காலைல தானே கல்யாணம்? எத்தனை மணிக்கு கல்யாணம்? வீட்ல இருந்து எப்ப கிளம்பினா சரியா இருக்கும்?
“அப்பா நாளைக்கு தான் கல்யாணம். ஆனா நாங்க எல்லாரும் இன்னைக்கே போகணும்”
“என்னது இன்னைக்கா? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இந்த தங்குற வேலை எல்லாம் கூடாது. மதுரை தானே? நாளைக்கு காலைல போ. கல்யாணம் அட்டண்ட் பண்ணிட்டு நாளைக்கு நைட் வீட்டுக்கு வந்துருக்கணும். சொல்லிட்டேன்”, என்றாள் கோதை.
“அப்பா அம்மாவை பாருங்க பா. எங்க கேங்க்ல அஞ்சு பேர்ல ஒருத்திக்கு கல்யாணம் பா. நான் போகலைன்னா எப்படி? மத்த மூணு பேரும் இன்னும் கொஞ்ச நேரத்துல பஸ் ஸ்டாண்ட்ல எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க பா. அப்பா பிளீஸ் பா. அங்க அனிதா வீட்ல தான் தங்க போறோம். சேபா தான் பா இருக்கும். மாப்பிள்ளை போலீஸ் வேற. பிளீஸ் பா. போயிட்டு வரேன் பா”, என்று தந்தையைக் காக்கா பிடித்தாள்.
மகள் இப்படி கெஞ்சிக் கேட்டால் அவர் மறுக்கவா செய்வார்? “சரி டா. கிளம்பு”, என்று அவர் அனுமதி கொடுக்க “ஏங்க, என் பேச்சுக்கு இங்க மதிப்பே இல்லையா? வயசு பொண்ணை இப்படி அனுப்பலாமா?”, என்று கேட்டாள் கோதை.
“உன் மகன் தட்டுல சட்னி இல்லை பாரு. அதை ஊத்துற வேலையை மட்டும் பாரு. என் பொண்ணு விசயத்துல தலையிடாதே”, என்ற ராதாகிருஷ்ணன் மகள் புறம் திரும்பி “நீ போயிட்டு வா டா”, என்றார்.
“நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க? அவ ஏதாவது பிரச்சனையை இழுத்துட்டு வரும் போது தான் உங்களுக்கு தெரியும்”, என்று கோதை புலம்ப “அவ கிடக்குறா உமா? நீ போய்ட்டு வா. ஆனா அப்பாவுக்கு அப்ப அப்ப கால் பண்ணி பேசணும் சரியா டா?”, என்று மகளைக் கொஞ்சினார் ராதாகிருஷ்ணன்.
“என் பாதுகாப்பு பத்தின பயம் தானே பா உங்களுக்கு? கண்டிப்பா நான் கால் பண்ணி பேசுறேன். எனக்காக இல்லைன்னாலும் உங்களுக்காக நான் சேஃபா இருப்பேன் பா. உங்க நம்பிக்கையை நான் என்னைக்கும் கெடுக்க மாட்டேன்”
“நான் உன்னை நம்புறேன் டா. நீ போயிட்டு வா. கார்ட் எடுத்துக்கோ. எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணு. இப்ப அப்பா உன்னை எங்க டிராப் பண்ணனும்னு சொல்லு. அப்பா உன்னை அங்க விட்டுட்டு ஆபீஸ் போறேன்”
“பிள்ளைங்க பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க பா. என்னை அங்க விட்டுருங்க”
“சரி போய் கிளம்பிட்டு வா”, என்று சொல்ல சந்தோஷமாக அறைக்குள் சென்றாள் உமா. ராதாகிருஷ்ணனும் கோதையை ஒரு பார்வை பார்த்து விட்டு அவரின் அறைக்குள் சென்றார்.
மகள் மற்றும் கணவன் இருவரும் சென்றதும் கோதை எரிச்சலுடன் நிற்க “அம்மா கூல். அவ ஒண்ணும் சின்னப் பிள்ளை கிடையாது. இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகணுமா?”, என்று அன்னையை சமாதானப் படுத்தினான் அருண்.
மகனின் குரலில் கொஞ்சம் அமைதி வந்தாலும் “உமா நான் என்ன சொன்னாலும் கேக்குறது இல்லை அருண். கஷ்டமா இருக்கு”, என்றாள் கோதை.
“உங்க போராட்டம் எனக்கு புரியுது மா. ஆனா உங்க பேச்சைக் கேக்க தான் நான் இருக்கேனே? என் கிட்ட சொல்லுங்க. நான் செய்றேன்’
“நீயும் எங்க என் பேச்சைக் கேக்குற? உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டுட்டே இருக்கேன். நீ தான் பதிலே சொல்ல மாட்டிக்க? நம்ம சொந்தத்துல நித்யான்னு ஒரு பொண்ணு இருக்கா. அவளை உனக்கு பாக்கணும்னு எனக்கு அவ்வளவு ஆசை டா. ரொம்ப அழகா இருப்பா”
“அம்மா, நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனா? இல்லை நீங்க எனக்கு பொண்ணு பாக்க கூடாதுன்னு சொன்னேனா? நீங்க பாக்குற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானே சொல்றேன்? என்னோட ஒரே ஒரு கண்டிஷன். எனக்கு முன்னாடி உமா கல்யாணம் முடியனும். தங்கச்சியை வச்சிக்கிட்டு என்னால கல்யாணம் பண்ண முடியாது”
“எங்க? அவ தான் டிமிக்கி கொடுத்துட்டே திரியுறாளே? எல்லாம் உங்க அப்பா கொடுக்குற செல்லம்”
“கொஞ்சம் நாள் பொறுங்க. அவளே சரியாகிறுவா. சின்ன பொண்ணு தானே? இருபத்தி நாலு வயசு தானே ஆகுது? எனக்கும் இருபத்தி ஏழு தான் ஆகுது. ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்”
“சரி டா. அதுக்குள்ள அந்த நித்யாவுக்கு கல்யாணம் ஆகாம இருக்கணும்”
“அவ போனா போறா மா. அவ இல்லைன்னா ஏதோ வித்யாவையோ திவ்யாவையோ பாருங்க. தாராளமா கட்டிக்கிறேன்”, என்று சொன்னவன் அன்னையை ஆதரவாக அணைத்துக் கொண்டான். மகனின் அன்பில் அந்த தாயின் மனம் நெகிழ்ந்து போனது. ஆனால் அவன் சொன்னது நடக்காது என்றும் அவனே வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்வேன் என்றும் சொன்னால் அதை கோதை மனம் ஏற்றுக் கொள்ளுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
வெள்ளை நிற சுடிதார் அணிந்து தேவதை போல கிளம்பி வந்த மகளை பெருமையாக பார்த்தார் ராதாகிருஷ்ணன். அவள் அழகுக்கு ஏற்றார் போல ராஜகுமாரனை எங்கிருந்து தேட என்று பெருமூச்சு வந்தது அவருக்கு.
“அப்பா கிளம்பலாமா பா?”, என்ற படி அவர் அருகே வந்து நின்றாள்.
“போகலாம் டா. நான் காரை எடுக்குறேன், நீ வா”, என்று சொல்லி அவளுடைய பையை வாங்கி விட்டு வெளியே வந்தார். உமா அன்னையைத் தேடினாள்.
முகத்தில் சிணுங்களுடன் நின்றிருந்த கோதையின் அருகில் வந்தவள் “என் செல்ல அம்மாவுக்கு இன்னும் கோபம் போகலையா?”, என்று கேட்ட படி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“போடி”, என்று சிணுங்களுடன் சொன்னாள் கோதை.
“ஆமா, நான் இப்படி பக்கத்துல வரும் போதெல்லாம் போடி போடின்னு சொல்லிட்டு ஏன் கிட்ட வர மாட்டிக்க, பேச மாட்டிக்கன்னு கேக்க வேண்டியது. நான் என்ன மா பண்ண?”, என்று கவலையாக கேட்டாள் உமா.