“அச்சோ, அப்படி எல்லாம் இல்லை உமா. அம்மா தெரியாம சொல்லிட்டேன் டா. சரி சரி நல்ல படியா போயிட்டு வா. அப்ப அப்ப உங்க அப்பாவுக்கு கால் பண்ணி பேசினாலும் எப்பவாது எனக்கும் கால் பண்ணி சொல்லு சரியா? மறந்துறாத?”
“அம்மான்னா அம்மா தான். சரி மா வரேன். கால் பண்ணுறேன் ஓகே வா? அண்ணா எங்க?”
“அவன் ஆபீஸ் போய்ட்டான்”
“சரி மா, பை”, என்று சொல்லி விட்டு தந்தையுடன் கிளம்பினாள். ராதாகிருஷ்ணன் அவளிடம் காரில் போகிறீர்களா என்று கேட்டுக் கொண்டே தான் வந்தார். ஆனால் உமா தான் மறுத்து விட்டாள்.
“அப்பா பிளீஸ் பா, எப்பவும் கார்ல தானே போறோம்? இந்த ஒரு தடவை ஜாலியா பஸ்ல போக பிளான் பண்ணிருக்கோம். பிளீஸ் பா”, என்று சொல்ல சரி என்று விட்டு விட்டார்.
பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் மற்ற தோழிகள் அருகே அவளை அழைத்துச் சென்ற ராதாகிருஷ்ணன் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் சொல்லி விட்டு அவர்கள் நால்வரையும் பேருந்தில் ஏற்றி விட்டு பஸ் கிளம்பியதும் தான் அங்கிருந்து சென்றார்.
மகள் என்று வந்தால் இப்படி தான் எல்லா விசயத்திலும் அக்கறையாக இருப்பார். அது அவளின் தோழிகளுக்கும் தெரியும் என்பதால் அதை யாரும் பெரியதாக எடுக்க வில்லை.
இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள் தோழிகள் நால்வரும். உமாவுடன் கல்லூரியில் படித்தவர்கள் தான் நிஷா, தனா, அனிதா, நித்யா, காயத்ரி. அனிதாவைத் தவிர மற்ற அனைவருக்கும் சென்னை தான். அனிதா மட்டுமே ஹாஸ்டலில் இருந்தாள்.
இப்போது அவர்கள் சென்று கொண்டிருப்பது அனிதாவின் திருமணத்துக்கு தான். நிஷா தனா ஒரு சீட்டிலும் உமா காயத்ரி ஒரு சீட்டிலும் அமர்ந்திருந்தார்கள்.
பகல் நேரம் என்பதால் அனைவருமே விழித்திருக்க இவர்கள் அரட்டைக் கச்சேரி ஆரம்பித்தது. ஆள் ஆளுக்கு கொண்டு வந்திருந்த நொறுக்கு தீனிகளை ஒரு கை பார்த்து விட்டே மதுரைக்கு சென்று சேர்ந்தார்கள்.
அவர்கள் போன போது அனிதா வீட்டில் நிச்சயதார்த்தம் நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்திருந்த உறவினர்களையும் நிச்சயப் பொருள்களையும் படம் பிடித்துக் கொண்டிருந்தான் சிவன்.
வேலையில் கவனமாக இருந்ததால் அவன் இவர்களைப் பார்க்க வில்லை. அவர்களும் ஏதோ ஒரு போட்டோகிராபர் என்று எண்ணி அவனை திரும்பிக் கூட பார்க்க வில்லை. விதி இவர்கள் இருவரையும் கோர்த்து விடுகிறது என்று அவர்களுக்கு எப்படி தெரியும்?
அனிதாவின் தந்தை தோழிகள் நால்வரையும் அனிதாவின் அறைக்கு அழைத்துச் சென்றார். இவர்கள் போன போது அனிதாவுக்கு அலங்காரம் முடிந்திருக்க அவள் ஓடி வந்து இவர்களை அணைத்துக் கொண்டாள்.
“பாத்தியா டி, கல்யாணம் பண்ண மாட்டேன் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு முதல் ஆளா பண்ணிக்கிறா”, என்று கிண்டல் செய்தாள் தனா.
“பாரு நிஷா, தனா எப்படிச் சொல்றான்னு”, என்று அனிதா வெட்கத்துடன் சிணுங்க “ஏய் தனா எதுக்கு டி என் செல்லத்தை கிண்டல் பண்ணுற? கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் என் செல்லம் மிஸ்டர் ரஞ்சித் ஐ. பி. எஸ் பாத்து மயங்கிருச்சு. அப்படி தானே அனிதா செல்லம்?”, என்று நிஷாவும் சேர்ந்து ஓட்ட மற்றவர்கள் சிரிக்க அனிதா அவர்களை முறைக்க என நேரம் நகர்ந்தது.
அப்போது அங்கே வந்த அனிதாவின் அன்னை “பிள்ளைகளா, மாப்பிள்ளை வீட்ல இருந்து வர இன்னும் நேரம் இருக்கு. முதல்ல நீங்க எல்லாரும் சாப்பிட வாங்க”, என்று சொல்லி அவர்களை அழைத்தாள்.
அவர்களும் அனிதாவை அம்போவென விட்டுவிட்டு கிளம்பினார்கள். “ஏய் என்ன டி நாலு பேரும் போறீங்க? ஒருத்தியாவது கூட இருங்க டி. நீங்க வந்ததும் என் சொந்தக்கார பொண்ணுங்க கூட போயிட்டாங்க”, என்றாள் அனிதா.
“என்னது உனக்கு துணைக்கு இருக்கணுமா? அப்படின்னா எங்க வயிரை யாரு கவனிக்கிறது? எங்களுக்கு சோறு தான் முக்கியம். போடி”, என்று கோரசாக சொல்லி விட்டு நால்வரும் வெளியே சென்றனர்.
“திண்ணிப் பண்டாரங்களா”, என்று கத்தி விட்டு அமர்ந்திருந்தாள் அனிதா.
நால்வரும் வெளிய வந்ததும் “அனி பாவம் டி. வேற யாரும் துணைக்கு வர வரைக்கும் நான் அவ கூட இருக்கேன். நீங்க சாப்பிட்டு வந்ததும் நான் போய் சாப்பிட்டுக்குறேன்”, என்று சொல்லி விட்டு உமா அறைக்குள் செல்ல “அவ பசி தாங்குவா. நம்மளால அது முடியாது. வாங்க டி”, என்று சொல்லி நிஷா அழைக்க இருவரும் அவளுடன் சென்றார்கள்.
அனிதாவிடம் சென்று பேசிக் கொண்டிருந்தாள் உமா. அப்போது அனிதாவின் சித்தப்பா பெண் அங்கே வர அனிதா உமாவை சாப்பிடப் போகச் சொன்னாள்.
வெளியே வந்த உமா “சாப்பாடு எங்க போடுறாங்கன்னு தெரியலையே?”, என்று யோசித்த படியே மாடியில் இருந்து இறங்கினாள். இறங்கிய படியே அவள் போனை எடுத்து நிஷாவை அழைத்தாள்.
ஆனால் நிஷா அந்த அழைப்பை எடுப்பதற்குள் கட் ஆகி விட நிஷா அவளை அழைத்தாள். மீண்டும் அந்த பாட்டு ஒலித்தது. நிஷா கண்கள் குண்டு குண்டாக இருப்பதால் அவளுக்கு என்று அந்த பாட்டை வைத்திருந்தாள்.
திடீரென்று அமைதியாக இருந்த அந்த இடத்தில் அந்த பாட்டு சத்தமாக ஒலிக்க அனைவருமே உமாவைத் திரும்பிப் பார்த்தார்கள். அதில் அங்கே நின்றிருந்த சிவனும் அடக்கம். அவளுடைய ரிங் டோன் கேட்டு அவன் உதடுகள் கூட ஒரு நொடி சிரிப்பில் விரிந்தது.
அனைவரும் அவளையே பார்க்க உமாவுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. அவள் ஒரு மாதிரி அசடு வழிய அந்த காட்சி சிவனுக்கு இயல்பாக அழகாக பட்டது. அவளை தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்தான். ஏனோ அவன் கண்களுக்கு அவள் அதிக அழகுடன் இருப்பதாக பட்டது. அவளைப் பார்ப்பது தவறு என்று தெரிந்தாலும் அவள் பக்கம் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ சிறு அவமானத்துடன் படக்கென்று போனை ஆன் செய்து காதில் வைத்து “எங்க டி இருக்கீங்க?”, என்று கேட்ட படியே அவசரமாக மாடியில் இருந்து இறங்கினாள்.
“வீட்டுக்கு பின் பக்கம் வா”, என்று சொல்லி விட்டு நிஷா போனை வைக்க அவசரமாக கீழே இறங்கினாள் உமா. சிவனும் அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
அப்போது இருவரும் எதிர் பார்க்காத அந்த சம்பவம் நிகழ்ந்தது. கை கீல்ஸ் செருப்பு அணிந்து படியில் இருந்து அவசரமாக கீழே இறங்கி வந்தவள் கடைசி படியில் இருந்து இறங்கி காலை ஒரு வாழைப் பழத் தோல் மீது வைத்து விட்டாள்.
சட்டென அது சறுக்கி விட “ஐயோ”, என்ற அலறலுடன் பேலன்ஸ் இல்லாமல் அவள் கீழே விழப் போக அவளை சட்டென்று தன்னுடன் இழுத்து தன் தோளில் சாய்த்து அவளை பிடித்துக் கொண்டான். அவள் கரங்களும் பிடிப்புக்காக அவன் சட்டைக் காலரை இறுக்கமாக பற்றிக் கொண்டது. அவனுடைய கைக்குள் இருந்தவளின் உடல் நடுங்குவது அவனுக்கு புரிந்தது. அதனால் அவனாக அவளை விலக்கி நிறுத்தாமல் நின்றிருந்தான்.
“அப்பாடி”, என்ற நிம்மதி உணர்வுடன் அவன் சட்டையை பிடித்திருந்தவள் சில நொடிகள் கழித்து அவனை விட்டு விலகி “ரொம்ப நன்றிங்க”, என்றாள். அவளை வெகு அருகாமையில் கண்ட சிவனுக்கு ஒரு நொடி மூச்சு தடை பட்டது போல இருந்தது.
அவனுடைய அன்னை, தங்கைகள், சுந்தரியை தவிர்த்து அவன் இவ்வளவு நெருக்கத்தில் ஒட்டிய படி நின்றது உமாவுடன் தான்.
அவளை விழ விடக் கூடாது என்று பிடித்தவனுக்கு அவள் அருகாமையில் கொஞ்சமே கொஞ்சம் மூச்சு திணறுவது போல தான் இருந்தது.
இது அவள் மீது அவனுக்கு உருவான சலனம் என்று கூட அவன் உணர வில்லை. அவள் நன்றி சொல்லி அவனையே பார்க்க அதற்கு பின் தான் நடப்புக்கு வந்தான்.
“பரவால்ல, பாத்துப் போங்க”, என்று சொல்லி விட்டு சிவனும் அங்கிருந்து சென்று விட்டான். அவளும் அவனை குழப்பாக பார்த்து விட்டு தோழிகளைத் தேடிச் சென்றாள். அவள் போன போது பாதி உணவில் இருந்தார்கள் அவர்கள்.