“இல்லைப் பா, தெரியாம பண்ணிட்டா. என் மக அப்படி எல்லாம் பணத் திமிர்ல ஆடுறவ இல்லைப்பா. இந்த ஒரு தடவை மன்னிச்சிருங்க”
“இவ செஞ்ச காரியத்துக்கு பணத் திமிர் இல்லாம வேற என்ன அர்த்தம் சார்? அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் இல்லாம போனாக் கூட பட்டினியா வந்துறலாம். ஆனா ஊருக்கு வர பஸ்ஸுக்கு கூட அவன் கிட்ட பணம் இல்லை. அது கூட அவனுக்கு வேதனை இல்லை சார். ஆனா அவன் அண்ணன் பிணத்தை வாங்க கூட கையில பணம் இல்லாம பண்ணிட்டாளே? இவ எல்லாம் ஒரு பொண்ணா?”, என்று அவன் கேட்க அவர்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள். உமா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் வடிந்தது.
“என்ன தம்பி சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டார் ராதாகிருஷ்ணன்.
“என்னத்தைச் சொல்ல? உங்க பொண்ணு பண்ண திமிர்தனத்தால அவன் நிலைமை அப்படி தான் ஆச்சு சார். அவங்க அண்ணனுக்கு சீரியஸா இருக்குனு போன் வருது. ஆனா அவன் கிட்ட பஸ்க்கு கூட காசு இல்லை. அவன் எப்படி மதுரைல இருந்து திருப்பூர் போனான் தெரியுமா? அந்த கல்யாண மாப்பிள்ளையோட அப்பா பணம் கொடுத்து காரையும் கொடுத்து அனுப்புனார். போன இடத்துல அவன் அண்ணன் இறந்துட்டான். அவன் டெட் பாடியை வாங்கணும்னா ஹாஸ்பிட்டல் பில் கட்டணும். அதுவும் நாப்பதாயிரம். ஆனா அவன் பணம் இல்லாம நின்னுருக்கான். பஸ்ஸுக்கு பணம் கொடுத்தவங்க மொத்தமா நாப்பதாயிரம் எப்படி சார் கொடுப்பாங்க? அவங்க அண்ணி கையிலே பணம் இருந்ததுனால சரியாப் போச்சு. ஆனா வந்து அண்ணன் பிணத்தை வாங்க கையில பணம் இல்லாம நின்னேன் பாரு டா. அப்பவே பாதி உயிர் போன மாதிரி இருந்துச்சுன்னு சொல்லி அவன் அழுதப்ப எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?”, என்று குமுறினான் கருப்பட்டி.
உமா தான் செய்த தவறின் வீரியம் புரிந்து அழுது கொண்டிருந்தாள். அவள் ஒரு சதவீதம் கூட இப்படி நடக்கும் என்று எதிர் பார்க்க வில்லை. ராதாகிருஷ்ணனுக்கும் கஷ்டமாக தான் இருந்தது.
“இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாது. அவளை மன்னிச்சிரு பா”, என்றார்.
“சும்மா மன்னிப்புன்னு வந்து கதை சொல்லிட்டு இருக்காதீங்க? பர்சை வச்சிட்டு கிளம்புங்க. அவன் எப்ப வருவான்னு தெரியாது. அவன் வரும் போது இவ இங்க இருந்து, அவன் இவளைப் பாத்தா கொன்னு கூட போட்டுருவான். அவ்வளவு வெறுப்புல இருக்கான். உங்களுக்கு எல்லாம் ஏழைங்க கஷ்டம் விளையாட்டு தானே? கிளம்புங்க இங்க இருந்து. இங்கயே இருந்தா நானே ஏதாவது செஞ்சிறப் போறேன்?”, என்று கருப்பட்டி சொல்ல அதற்கு மேல் ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை.
அங்கிருந்த டேபிளில் பர்சை வைத்து விட்டு “வா உமா போகலாம்”, என்று சொல்லி மகளை கைத்தாங்கலாக அழைத்து வந்தார். அவள் காரில் ஏறி அமர்ந்ததும் அவர் காரை எடுத்தார்.
“பாத்தியா மா, உன்னோட சின்ன தப்பு அடுத்தவங்க வாழ்க்கையில எப்படி விளையாடிருக்குன்னு”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன்.
“இப்படி நடக்கும்னு நான் எதிர் பாக்கலை பா”, என்று கண்ணீர் விடும் மகளை அணைத்துக் கொண்டு “சரி விடு மா, இனி யோசிக்காம இப்படி செய்யாதே”, என்றார்.
“அவர் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு போகலாம் பா”
“மன்னிப்பு கேக்க முடியாத தவறுகளும் இருக்கு உமா. இதை இதோட விட்டுரு. மேலும் மேலும் பிரச்சனையை வளக்க வேண்டாம். இந்த பையனே இவ்வளவு கோபப் பட்டுப் பேசும் போது அனுபவிச்சவனுக்கு எப்படி இருக்கும்? வேண்டாம் உமா”
“அப்பா”
“வேண்டாம்னா விடு உமா. இனி இது பத்தி பேச வேண்டாம்”, என்று சொல்லி விட்டு கார் ஓட்டுவதில் கவனம் வைத்தார். உமாவோ அழுது கொண்டே வந்தாள். அவளால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
உமா எப்போதும் கொஞ்சம் திமிராக நடந்து கொள்வாள் தான். நினைத்தது வேண்டும் என்ற பிடிவாதமும் உண்டு. அதற்காக பட்டினி கூட கிடப்பாள். ஆனால் ஒரு சின்ன தலை வலி வந்தால் கூட அதை தாங்கிக் கொள்ள முடியாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாள்.
படத்தில் ஏதாவது ரத்தக் காட்சிகள் வந்தால் கூட பார்க்க மாட்டாள். வெளியே திமிராக தெரிந்தாலும் உள்ளுக்குள் சிறு குழந்தை போல மென்மையான குணம் கொண்டவள். அதனால் அவளால் சிவன் பட்ட கஷ்டத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிய வில்லை.
அண்ணனின் உடலை வாங்க முடியாமல் சிவன் பணம் இல்லாமல் நின்றான் என்று தான் கருப்பட்டி சொல்லி இருந்தான். ஆனால் அவளோ அவனிடம் பணம் இல்லாமல் தான் அவனுடைய அண்ணன் இறந்தான் என்ற அளவுக்கு யோசித்து அதையே அவள் மனதில் பதிய வைத்துக் கொண்டாள். தன்னால் ஒரு உயிர் போய் விட்டது என்று எண்ணி ஏங்கி ஏங்கி அழுதாள்.
அதே நேரம் தேவையான பொருள்களை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தான் சிவன். “கை கால் கழுவிட்டு வா டா, சாப்பிடலாம்”, என்று பார்வதி சொல்ல அன்னை சொன்ன படி செய்தான்.
“மத்த எல்லாரும் சாப்பிட்டீங்களா மா?”, என்று கேட்ட படி சாப்பிட அமர்ந்தான்.
“அதான் நேரம் ஆச்சே? இன்னும் என்ன அப்புறம்? நீங்க எல்லாரையும் கூப்பிடுங்க. சேந்து சாப்பிடலாம்”
“மதியும் வெண்ணிலாவும் சுந்தரியைப் பாக்க போனாங்க பா. நீ கண்மணியைக் கூப்பிடு. நான் அவங்களைக் கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றாள் பார்வதி.
கண்மணியை உண்ண அழைக்க அவளுடைய அறைக்கு வெளியே நின்றவன் “கண்மணி”, என்று குரல் கொடுத்தான்.
“என்ன சிவா?”, என்ற படியே நடந்து வந்தவள் லேசாக தலை சுற்ற தவறி விழப் போனாள். “ஏய் பாத்து”, என்ற படி அறைக்குள் சென்று அவளைப் பிடித்துக் கொண்டான்.
அப்போது அவனது கண்ணில் அவளுடைய தாய் தந்தை புகைப்படம் விழுந்தது. சட்டென்று அவனுக்கு உமாவுடன் பார்த்த அந்த ஆள் யார் என்று புரிந்தது. “ஆக கண்மணியின் அப்பா தான் அந்த ஆளா? எப்படி அவரால் முடிந்தது? இரண்டு பெண்களை வஞ்சித்து அவர் மட்டும் எப்படி சந்தோஷமாக வாழ முடிகிறது? அப்படி பட்ட அப்பனுக்கு பிறந்த மகள் வேறு எப்படி இருப்பாள்?”, என்று உமா மீதும் காழ்ப்புணர்ச்சி வந்தது.
அப்பா மகள் இருவரையும் அந்த நிமிடம் வெறுத்தான் சிவன். “என்ன சிவா அந்த போட்டோவையே பாத்துட்டு இருக்க?”, என்று கேட்டாள் கண்மணி.
“பவித்ரா அத்தை ரொம்ப அழகா இருக்காங்க. அதான் பாக்குறேன்”, என்று சமாளித்தான்.
“அழகு இருந்து என்ன செய்ய சிவா? அதை வச்சு அவங்க புருஷனை கூட அவங்களால தக்க வச்சுக்க முடியலை”
“அப்படி செஞ்சிருந்தா அவங்க மனசாட்சியே அவங்களை மன்னிச்சிருக்காது கண்மணி. பவித்ரா அத்தை நேர்மையான ஒரு வாழ்க்கையை வாழணும்னு முடிவு பண்ணி அதை வாழ்ந்துட்டும் போயிருக்காங்க. ஆனா அந்த ஆள் தான்….”
“எனக்கும் அந்த ஆளைப் பத்தி பேச பிடிக்கலை சிவா“
“ஏன் கண்மணி, ஒரு வேளை நீ அந்த ஆளைப் பாத்தா என்ன செய்வ? அவர் மகளேன்னு கூப்பிட்டா அவர் கூட போவியா?”, என்று அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்வதற்காக கேட்டான்.
“கண்டிப்பா மாட்டேன். என்னால அவரை மன்னிக்க முடியாது. அம்மா அவரை ஒரு நாளும் தப்பா சொன்னது இல்லை தான். இத்தனைக்கும் அவர் சூழ்நிலைக் கைதின்னு அவரை சப்போர்ட் பண்ணி தான் பேசுவாங்க. ஆனா அது அவங்க ரெண்டு பேரோட சூழ்நிலை. நான் என்ன தப்பு பண்னினேன்? என்னை எதுக்கு அவர் தனியா விடணும்? ஒரு வேளை அவரோட முதல் மனைவிக்கு பிள்ளைங்க இல்லைன்னா நான் அவங்க வீட்ல மகாராணியா இருந்துருப்பேன்ல? அவருக்கு பிள்ளைங்க இருக்கவும் என்னைத் தூக்கி போட்டுட்டார்? அப்படி இருக்க நான் எப்படி அவர் கூட போவேன்?”
“ஒரு வேளை அவரைப் பாக்குற மாதிரி சந்தர்பம் வந்தா என்ன பண்ணுவ கண்மணி?”
“நீ என்ன அவரைப் பத்தியே பேசிட்டு இருக்க?”
“இல்லை, அவரும் இதே ஊர்ல தான் இருக்கார். அப்படி இருக்க அவரைப் பாக்க வாய்ப்பு வரலாம்ல?”
“வரலாம். வராமலும் போகலாம். அவருக்கு தான் என்னைத் தெரியாதுல்ல? அதனால ஈஸியா அவரைக் கடந்து போயிருவேன். உன் கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டா செய்வியா சிவா?”
“என்ன கண்மணி?”
“ஒரு வேளை அவரைப் பாக்க உனக்கு சந்தர்பம் வந்தா கண்டிப்பா நீ அவர் கிட்ட நான் தான் அவரோட மகள்ன்னு சொல்லக் கூடாது. சரியா?”
“உனக்கே விருப்பம் இல்லைங்குறப்ப நான் ஏன் சொல்லப் போறேன்? உன் அனுமதி இல்லாம சொல்ல மாட்டேன். சரி சாப்பிட வா”, என்று அழைத்துச் சென்றான்.
ஆனாலும் கண்மணிக்கு ஏதாவது நியாயம் நடக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழுந்தது. அப்பா இல்லை என்றால் அது வேறு. ஆனால் இருந்தும் இல்லாமல் போவது என்பது வேறு அல்லவா? கூடவே இவளும் உன் அப்பாவுக்கு மகள் தான் என்று உமாவின் முன்னால் கண்மணியை நிறுத்தி உமாவைக் காயப் படுத்த வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு உருவானது.
“சாப்பிட வாங்க ரெண்டு பேரும்”, என்று பார்வதி அழைத்ததும் நடப்புக்கு வந்த சிவன் கண்மணியை அழைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தான்.
மதிய உணவு முடிந்ததும் கடைக்கு சென்றான். அங்கே கருப்பட்டி முகம் ஒரு மாதிரி இருந்தது.
“என்ன டா ஒரு மாதிரி இருக்க?”
“ஒண்ணும் இல்லை, நான் சாப்பிட்டுட்டு வரேன்”, என்று சொல்லி அங்கிருந்து கிளம்பப் பார்த்தான்.
“அம்மா, சுந்தரி அம்மாவை பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. நீ இதைச் சாப்பிடு”
“அங்க வை. அப்புறம் சாப்பிடுறேன்”
“டேய் இன்னைக்கு கறிக்குழம்பு டா. சூடா இருக்கும் போதே சாப்பிடு”
“ப்ச்”, என்று சலித்துக் கொண்டான் கருப்பட்டி. அவனை வியப்பாக பார்த்தான் சிவன்.
“என்ன ஆச்சு மாப்பிளை? ஏன் இப்படி இருக்க?”, என்று கேட்க அவன் முன்பு அவனுடைய பர்ஸைத் தூக்கிப் போட்டான். அதைப் பார்த்ததும் சிவனுக்கு விஷயம் புரிந்தது.
கோபத்தில் அவன் கண்கள் சிவந்தது. “நீ டென்ஷன் ஆகாத மச்சான். அந்த பொண்ணு அவ அப்பா கூட வந்திருந்தது. நல்லா திட்டி விட்டுட்டேன். இனி கண்ணு முன்னாடி வராதேன்னு”, என்று அவனை சமாதானப் படுத்தினான் கருப்பட்டி.
“திட்ட மட்டுமா செஞ்ச? நாலு வச்சிருக்கலாம்ல?”
“அவ அப்பா இருந்தார் டா. ஆனா நான் கோபமா பேசினதுக்கே அவ அழுதுட்டா. அவ அப்பா தான் சமாதானம் செஞ்சு கூட்டிட்டு போனார்”
“எப்படியோ கருப்பட்டி அவ இனி என் கண்ணு முன்னாடி வராம இருந்தா சந்தோஷம் தான். அவ அப்பாவும் தான்”
“அவ அப்பாவுமா?”
“அது… இப்படி ஒரு பிள்ளையை பெத்துருக்கார்ல? அதான்”, என்று சொல்லி சமாளித்தான். அவர் தான் கண்மணியின் தந்தை என்று அவனிடம் உண்மையைச் சொன்னால் அது கண்மணிக்கு தெரிந்து விடக் கூடும் என்று எண்ணி தான் அவனிடம் இருந்து மறைத்து விட்டான்.