ஆனால் மஹாலக்ஷ்மியின் அண்ணி தான் திருமணம் நிச்சயம் ஆன தினத்திலிருந்து சற்று கோபமாக சுற்றி வந்தார். அவர் மகளுக்கு அதை விட கோவம் கார்த்தி மேல். அதையும் பெரிதுபடுத்தாமல் மரியாதையாகவே கார்த்தியும் வைஷ்ணவியும் கவனிக்க, மகாலட்சுமிக்கு மருமகளின் நடவடிக்கை திருப்தியாக இருந்தது.
தன்னுடைய விசேஷம், புடவை அணிந்து இருந்தவள், எதையும் யோசிக்காமல் பந்தி பரிமாறும் பொழுது உடன் நின்று, மஹேஸ்வரியையும், மஹாலக்ஷ்மியையும் பரிமாற விடாமல் தள்ளி நிறுத்தியது என அங்கிருந்த சொந்தங்கள் அனைவரும் கார்த்தியின் மனைவி தங்கம் என பாராட்டுடன் வாழ்த்தி தான் சென்றனர்.
இதற்கிடையில் ஷெர்லின் வேறு வைஷ்ணவியிடம், “நேத்து என்ன நடந்துச்சு” என சுற்றி சுற்றி கேள்வி கேட்க அவள் கையில் ஒரு வாலியை திணித்து வேலை கொடுத்து அமைதியாக்கிவிட்டாள்.
ஷெர்லினுக்கும் பொழுது போகாமலிருக்க அமைதியாக வேலையை செய்தாள்.
பந்தி முடிந்த நேரம், அங்கு வந்த சுந்தர் அவசரமாக கார்த்தியிடம், “கங்கிராட்ஸ் கார்த்தி, கங்கிராட்ஸ் வைஷ்ணவி”
திருமணத்திற்கு வராததற்கு மன்னிப்பை கேட்டு அவன் கழுத்தில் ஒரு சங்கிலியை போட, “ஐயோ சார் இது என்ன? நீங்க வந்ததே சந்தோசம் இந்த கிப்ட் எல்லாம் தேவையா?” என சிரிப்போடு கேட்க,
“உண்மைய சொன்னா நம்ப மாட்டீங்க”
சுந்தரின் வார்த்தையை இடையிட்டு, “நீங்க எப்போ உண்மை பேசிருக்கீங்க இப்போ பேச?” வந்து நின்றாள் ஷெர்லின் தெனாவெட்டாக.
சுந்தர் எதுவும் தவறாக எண்ணிக்கொள்வானோ என்ற பயத்தில் கார்த்தி அவளிடம், “ஏன் ம்மா?” என்றான் பாவமாக.
ஆனால் சுந்தர் அதை எதுவும் கண்டுகொள்ளவில்லை, “நீங்க எப்போ எனக்கு உங்க ப்ராஜெக்ட்ட கைல குடுத்தீங்களோ அந்த நாள்ல இருந்து எனக்கு புது புது ப்ராஜெக்ட்ஸ் வந்துட்டே இருக்கு. நீங்க என்னோட லக்கி ச்சார்ம் கார்த்தி” என்றான்.
கார்த்தியோ சிரிப்போடு, “வாயடச்சிட்டீங்க…” என்று, “அம்மா அப்பாவ கூட்டிட்டு வர சொன்னேன்ல” எனவும்,
“வந்துட்டாங்க கார்த்தி, கீழ உங்க அம்மா அப்பாகிட்ட பேசிட்டு இருக்காங்க. அவங்க இன்னைக்கு நான்-வெஜ் சாப்புட மாட்டாங்க. கீழ தான் வெஜ் சாப்பாடுன்னு சாப்புட ஒக்கார வச்சிட்டு தான் வந்தேன்”
“அப்ப நாங்க போய் பாத்துட்டு வர்றோம்” என வைஷ்ணவி கார்த்தியின் கை பிடிக்க அவளிடம், “யாரும் இல்ல வைஷ்ணவி ம்மா. அவர் சாப்பிட்டதும் போகலாம்” என்றான்.
“ஷெர்லின் சார்க்கு பரிமாறு நாங்க வந்தர்றோம்” என கார்த்தியை முறைத்து கீழே இழுத்து சென்றாள். படிகளில் இறங்குபவளின் கை பிடித்து நிறுத்தியவன், “என்ன இது?” என்றான் அவளிடம்.
“இன்ஜினீயர்கு ஷெர்லின் மேல ஒரு இது…” – வைஷ்ணவி
“எது?” – கார்த்தி
“இண்ட்ர்ஸ்ட். ரொம்ப நாளாவே. அதான் பேசட்டும்னு விட்டேன். நீங்க எதையுமே புரிஞ்சுக்காதிங்க என் மக்கு புருஷரே” திட்டிவிட்டு அவன் மறு வார்த்தை பேசும் முன் கீழே ஓடிவிட்டாள். அதற்கு மேல் கார்த்தியின் அங்கு நிற்கவில்லை.
மேலே ஷெர்லின் ஒரு இலையை எடுத்து டேபிள் மேல் போட்டு ஒரு சிறு வாட்டர் கேன் ஒன்றையும் வைத்து முட்டை ஒரு கையிலும் ஸ்வீட் ஒரு கையிலும் வைத்து நின்றாள் அவனை முறைத்துக்கொண்டு.
அவனோ அவள் பார்வையை எளிதாக சந்தித்து, “ம்ம்ம்” என்றான் இலையை கண்களாலே காட்டி. “பாத்தா தண்ணி தானா தெளிச்சுக்குமா? தண்ணிய தெளிங்க என்ஜினீயர் சார்”
அவளது கட்டளையை நிறைவேற்றாமல், “ஏன் நீ பண்ண மாட்டியா?”
அவளோ, “சாப்பாடு வேணும்னா நீங்களே பண்ணுங்க, வேணாம்னா படி அந்த பக்கம்” என நகர்ந்தவளின் கையை எட்டி பிடித்து, “வை” என்றான் எப்பொழுதும் இருக்கும் அதே சலனமற்ற பார்வையோடு.
அவன் கையை உதறியவள் முறைப்போடு நிற்க, சுந்தர் இலை மேல் தண்ணீர் தெளித்து விட்டான்.
“விட்ட ஊட்டி விட சொல்லுவீங்க போல” என புகாரிட்டு அவன் இலையில் முட்டை, சிக்கன் கிரேவி, தயிர் வெங்காயம் வைக்க கீழிருந்து சூடாக ஆட்டு பிரியாணி கொண்டு வந்தான் சித்தார்த்.
“கல்யாணத்துல உங்கள மாப்பிள்ளை எதிர்பார்த்தார் சார்” என்றவன் பார்த்து பார்த்து கறியாக எடுத்து வைத்தான்.
“முக்கியமான வேலை இருந்துச்சு சித்தார்த், அவாய்ட் பண்ண முடியல அதான் இப்போ குடும்பத்தோட வந்துட்டேன், எல்லாரும் மன்னிச்சிடுங்க” வீட்டில் இருந்த ஒருவர் விடாமல் அவனை இதே கேள்வி கேட்டுவைக்க, சிரித்துவிட்டான் சுந்தர்.
“சரி சார், நல்லா சாப்புடுங்க. கூச்சப்படாம கேட்டு வாங்கிக்கோங்க” என சித்தார்த் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வைஷ்ணவி அழைத்து சகோதரனுக்கு வேலை கொடுத்துவிட, மீண்டும் சுந்தரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஷெர்லினிடம் வந்தது.
“சித்தார்த் தான?” என்றான் சம்மந்தமே இல்லாமல் ஷெர்லினிடம்.
“ஆஹ்?” புரியாமல் ஷெர்லின் விழிக்க,
“இவன தான சைட் அடிப்ப?” கேள்வி ஷெர்லினிடம் இருந்தாலும் காரியமே கண்ணாய் உணவையும் உள்ளே தள்ளிக்கொண்டே தான் இருந்தான்.
இவனுக்கு எப்படி தெரிந்தது என வியந்தவள், “ஆமா” என்றாள் உண்மையை மறைக்காமல்.
“ம்ம்ம்” என்னும் விதமாய் தலையை அசைத்தவன், “பிரியாணி வை” என்றான் முகத்தை உர்ரென வைத்து. அவனின் முகத்தை ஆராய்ச்சியோடு பார்த்தவள் அவனுக்கு உணவை வைத்தாள்.
“பீஸ் போடு” என்றான்.
கோவமாய் அவன் முகத்தை பார்த்தவள், “நான் என்ன உங்க அடிமையா? இப்டி ஆர்டர் பண்றீங்க” அவன் முன்பே அந்த பெரிய கிண்ணத்தை வைத்தாள், “வேணும்னா நீங்களே வச்சுக்கோங்க”
பார்வையாலே எரித்தவள் கீழே இறங்க சென்ற நேரம், “இன்னொரு தடவ அவனை இப்டி வச்ச கண்ணு வாங்காம பாக்குறத பாத்தேன், என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” அவள் செய்ய மாட்டேன் என்று சொன்னதை தானே கையில் எடுத்து பிரியாணியை பரிமாறிக்கொண்டான்.
அவன் குரலில் இருந்த கடுமையை புரிந்து சிறு பயத்தோடு அவனை பார்த்தவள் வரவழைத்த கோபத்தோடு, “நான் யாரை வேணாலும் பாப்பேன் அத கேக்க நீங்க யாரு?”
அவனோ அமைதியாக, “நான் கேக்காம வேற யாரு கேப்பாங்க?” தானே எழுந்து சென்று வெள்ளை சாதத்தை எடுத்து பரிமாறிக்கொண்டு, அதற்கு ரசத்தை ஊற்றி கோழிக்கறி எங்குள்ளது என தேடினான்.
“சிக்கன் 65 ஸ்மெல் வருது, ஆனா நீ எனக்கு அத வக்கவே இல்ல” அவன் கேள்வியில் பேச்சற்று நின்றவளை சிக்கன் 65 எங்கு புத்தியில் ஏறியிருக்கும்? சுந்தர் தேடுவதை பார்த்தவள் தன்னிச்சையாக அவனுக்கு உதவ சென்றது.
அவள் வேண்டுமென்றே மூடி வைத்திருந்த சிக்கன் 65 துண்டுகளை எடுத்து அவன் இலையில் வைத்தாள். வேலை நாட்களில் பல முறை அவன் சிக்கன் 65 விரும்பி கேட்டு வாங்கி உண்பதை பார்த்துளாள், அதனாலேயே இன்று மறைத்தும் வைத்தது. அவளை பார்த்து உளூரை நகைத்தவன், விட்ட உணவை தொடர்ந்தான்.
ஷெர்லினுக்கோ கோவமும், ஏக்கமும் கலந்து மாறி மாறி மனதில் நின்று ஆடியது.
“அது எப்படி நான் யாரை பாக்கணும் பாக்க கூடாதுன்னு நீங்க சொல்றிங்க? ஏன் நீங்க அந்த சித்தாள் பொண்ண சைட் அடிக்கலன்னு சொல்லுங்க பாப்போம்? நானும் தான் பாக்குறேனே அவளுக்கு மட்டும் ஏதோ கவர்ல வாங்கி வாங்கி குடுக்குறது, அது மட்டுமா? அன்னைக்கு ஒரு நாள் லீவுன்னு சொல்லி ஒரு பொண்ணு கூட ரெஸ்டாரண்ட்ல ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருந்திங்க. பஸ்ல போறப்ப நான் தான் பாத்தேனே. இவரு எல்லாம் பண்ணுவாராம் ஆனா நாங்க பண்ணா மட்டும் அது தப்பாம்”
நீண்ட பட்டியலை வாசித்தாள் ஷெர்லின்.
நிதானமாக தண்ணீரை எடுத்து அருந்தியவன் மீண்டும் எழுந்து மோரை ஊற்றி மீண்டும் நிதானமாக, “பார்வதி சின்ன பொண்ணு”
“அது உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். அவ காலேஜ் லீவு இருக்கறப்ப வந்து வேலை பாக்குறா அந்த பொண்ணு மனச ஏதாவது பேசி க…”
“லூசு மாதிரி பேச கூடாது, அவளுக்கு புக்ஸ் வாங்கி தந்தேன்”
இதை எதிர் பார்க்காத ஷெர்லின் ஒரு நிமிடம் திகைத்தவள், “அப்போ அந்த ரெஸ்டாரண்ட் பொண்ணு?”
“என்னோட கிளைன்ட்” என்றவன் திருப்பிதியாக உணவை முடித்து இலையை மூடி, “அப்போ நீ என்ன வாட்ச் பண்ணிட்டே இருக்க?”
எழுந்து சென்று கையை கழுவியவன் ஷெர்லின் அருகில் வந்து, “என்னோட வண்டிய இடிச்சது நியாபகம் இருக்கா?”
அவள் பேசாமல் இருக்கவும், “அதுக்கு காசு எப்ப தருவ?” சம்மந்தமே இல்லாமல் கேள்வி வந்தது அவனிடமிருந்து.
“காசு… காசு இல்ல” அதை மறந்துவிட்டான் என்று நினைத்திருந்தாலே, கையில் இருந்த பணத்தை எல்லாம் போட்டு வைஷ்ணவிக்கு தங்க நகை ஒன்றை வாங்கி குடுத்துவிட்டாள் திருமண பரிசாக.
அவளை நெருங்கி வந்தவன் சுற்றம் எதுவும் பார்க்கவில்லை, “எனக்கு காசு வேணாம்”
குனிந்து அவள் முகத்தினருகில், “பொண்டாட்டி வேணும்” அவன் நெருக்கத்தை மூச்சு முட்ட நின்று அனுபவித்தவளுக்கு உடல் சிலிர்த்தது, அவனின் தனிப்பட்ட வாசனை, எந்நேரமும் உணர்ச்சிகளை மறைக்கும் முகம் இன்று குறும்போடும் கண்களில் காதலோடும் மின்னியது.
“நான் புரோக்கர் இல்ல என்ஜினீயர் சார்” அவனுக்கு நிகரான குறும்பு அவள் கண்களிலும்.
அவனோ மெல்லிய சிரிப்பை இதழில் படரவிட்டு அவள் துப்பட்டாவை எடுத்து கையின் ஈரத்தை துடைத்தவன், “எதுக்கு யாரோ ஒருத்தர் என்ன கல்யாணம் பண்ணி என் பணத்தை எல்லாம் எடுத்துட்டு போகணும்? போலீஸ் பொண்ணு நீ வந்து பாத்துக்குவியா ஷெர்லின் பேபி?”
அவள் காதுகளில் கிசுகிசுத்தவன் சற்று விலகி அவளை பார்க்க, ஷெர்லின் உடல் அவனின் கட்டுப்பாட்டில் சென்றது போல் தன்னை அறியாமலே தலையை ஆட்டியது.
ஷெர்லின் பேச்சு ஒரு விதமாக இருந்தாலும் அவள் குணம் எல்லாம் எவரையும் எந்த வகையிலும் புண்படுத்தாது, அமைதியாகவே எந்நேரமும் இருக்கும் தன்னுடைய குணத்திற்கு இவள் தான் மனைவியாக வர வேண்டும் என்று ஆவலுடன் பேசிய சில நாட்களிலே முடிவெடுத்துவிட்டான் சுந்தர்.
நாள் செல்ல செல்ல அவள் தன்னை அடிக்கடி முறைப்போடு பார்த்தாலும் அதில் இருந்த ஆர்வத்தை பார்த்தவனுக்கு அவள் மனமும் மெல்ல புரிந்தது. இன்று அவள் மூலமே அதை உறுதிசெய்த பிறகு எல்லையற்ற மகிழ்ச்சி, தாய் தந்தையிடம் இவ்விடயத்தை கூறி கையேடு அவள் தந்தையிடம் பேச தான் அழைத்துவந்தது.
மகிழ்ச்சியில் மனம் துள்ள, தன்னுடைய நெருக்கத்தினால் சிவந்த முகத்துடன் நின்றவள் கன்னத்திற்கு ஒரு முத்தத்தை பரிசளித்தவன், “உன் வீட்டுக்கு தான் போறேன். அம்மா உன்ன பாக்கணும் சொன்னாங்க” என்றான். அவளோ அவன் முத்திலிருந்து வெளி வராமல், “ஹா?” என்றாள் கேள்வியாக.
“அம்மா உன்ன பாக்கணும், கீழ போகலாமா?”
இன்னும் அவள் அதிர்ச்சியிலிருந்து மீளாமலிருக்க, “ஷாக்க கம்மி பண்ணிட்டு, அருவா தூக்குற பொண்ணா வந்து உன் மாமியாரை பாரு… என்ன?”
மென்னகையோடு அவள் கன்னம் தட்டி அவள் கையேடு கை கோர்த்து அந்த கையில் ஒரு முத்தம் கொடுத்து அவளுக்கான சில நிமிட நேரத்தையும் தந்து நிறைவான மனதோடு கீழே சென்றான்.