“எங்க அப்பா பத்தி அப்படி பேசாத சிவா. எனக்கு கோபமா வருது. என் மேல இருக்குற கோபத்துல அவரை எதுக்கு அசிங்கப் படுத்துற? அவர் எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா?”
“நல்ல மனுஷன் அப்படிங்குறது தனக்கு பிடிச்சவங்க கிட்ட மட்டும் இருக்குறது இல்லை. எல்லார்க் கிட்டயும் அப்படி இருக்கணும். அந்த விசயத்துல உன் அப்பா மனுசனே இல்லை”
“சிவா”
“ஏய் அதான் சொல்லிட்டேன்ல? அந்த ஆள் கிட்டயே போய்க் கேளு வேற குடும்பம் இருக்கான்னு. அப்படி அவர் இல்லைன்னு சொல்லட்டும், என் காதை அறுத்து உன் கையில கொடுக்குறேன்”
“அப்படின்னா தயாரா இரு உன் காதை அறுக்க?”
“உன் அப்பா கிட்ட கேட்டுட்டு நீயே கத்தி எல்லாம் கொண்டு வா. இப்ப போடி இங்க இருந்து”, என்று சொல்ல அவனை முறைத்த படி அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் கருப்பட்டி கடைக்குள் வந்தான். “நான் இவ்வளவு நேரம் இங்க வெளிய தான் இருந்தேன். நீங்க பேசினது எல்லாமே எனக்கு கேட்டுச்சு. அந்த பொண்ணு கிட்ட நீ பேசினது ரொம்ப தப்பு மச்சான்”, என்றான்.
“எது டா தப்பு? அதெல்லாம் சரியா தான் பேசிருக்கேன்”
“அவளை பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டு போ. அதுக்காக அவ குடும்பத்தை எல்லாம் இழுக்கணுமா? அதுவும் அவ அப்பா பத்தி அப்படிச் சொல்ற? அந்த மனுசனைப் பாத்தா அப்படி எல்லாம் தெரியலை டா. எதுக்கு அவ கிட்ட அவரைப் பத்தி இப்படி ஒரு பொய் சொல்லணும்”, என்று கோபமாக கேட்டான் கருப்பட்டி.
“நான் பொய் சொல்லலை டா கருப்பட்டி”
“அப்படின்னா?”
“நம்ம கண்மணியோட அப்பாவும் இவளோட அப்பாவும் ஒண்ணு தான். ஆனா அம்மா வேற”
“என்ன சொல்ற நீ”
“என்னத்தை சொல்ல? அந்த ஆள் ரெட்டை வாழ்க்கை வாழ்ந்துருக்கான். கண்மணியோட அம்மா இறந்த பிறகு கண்மணியை நிர்க்கதியா விட மனசில்லாம தான் அண்ணா அவளைக் கல்யாணம் பண்ணிருக்கான்”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னான். கருப்பட்டியும் கண்மணிக்காக பரிதாபப் பட்டான்.
“அப்படின்னா நீ பேசினது எல்லாம் சரி தான் மச்சான். ஆனா இதையெல்லாம் அந்த பொண்ணு கிட்ட சொல்ல வேண்டியது தானே? அவளை இப்படி காயப் படுத்தி அனுப்பனுமா? அதுவும் ரூம் அது இதுன்னு…. நீ இப்படி பேசுவன்னு எனக்கே அதிர்ச்சியா இருக்கு சிவா”
“அவளைக் காயப் படுத்தி அனுப்பினது அவ மறுபடியும் காதல்னு வந்து உளறாம இருக்க தான்”
“சரி, அதை விடு. அது உன் விருப்பம். அவ பாடு. ஆனா கண்மணி விஷயத்தை அவ கிட்ட சொல்லிருக்கலாம்ல?”
“அது எப்படி அவ்வளவு ஈஸியா அந்த விஷயத்தை சொல்லுவேன்? அப்படிச் சொன்னா அதுக்கு மதிப்பு இல்லாம போயிரும். ஒண்ணு அவளே கண்டு பிடிக்கணும். இல்லை அவ அப்பனே விஷயத்தைச் சொல்லணும். அதுக்கு அப்புறம் கண்மணி யாருன்னு சொல்றேன்”
“ஹிம், ஆனா ஒரே ஒரு விஷயம் சொல்றேன் டா. நீ அந்த பிள்ளையை காயப் படுத்துறேன்னு சொல்லி உன்னையே காயப் படுத்திட்டு நிக்குற?”
“அப்படி… அப்படி எல்லாம் இல்லை… ஏன் அப்படிச் சொல்ற?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டான்.
“ஏன்னா அவளைக் காயப் படுத்தின சந்தோஷம் உன் கிட்ட இல்லை. உன் முகத்துல ஒரு வலி தான் தெரியுது. அவளை உனக்கு பிடிக்குமா? ஏன்னா டின்னு சொல்ற அளவுக்கு அவ மேல உரிமையை நீயே எடுத்துகிட்ட?”
“பாத்ததும் எனக்கு பிடிச்ச முதல் பொண்ணு அவ தான்”, என்று சிவன் சொன்னதும் அதிர்ந்து போனான் கருப்பட்டி.
“என்ன மச்சான் சொல்ற?”
“ஆமா டா. ஆனா ஒத்து வராதுன்னு தெரிஞ்ச பிறகு வெட்டி விடுறது தான் நல்லது. நீயும் வேலையைப் பாரு”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.
காரை ஒட்டிக் கொண்டு சென்ற உமாவுக்கு உடனடியாக என்னோட அப்பா அப்படி இல்லை என்று அவனிடம் நிரூபிக்க வேண்டும் என்ற வேகம் பிறந்தது. ஆனால் அவன் உறுதியாக சொன்னது சிறு குழப்பத்தை விதைத்தது.
தன்னுடைய தந்தையிடம் சென்று உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறதா என்று கேட்கும் தைரியம் எல்லாம் அவளுக்கு இல்லை. அதே நேரம் அவர் அப்படி இல்லை என்ற நம்பிக்கையும் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த படி இருந்தாள். தந்தையை பற்றிய பேச்சில் அவள் காதல் வலி கூட பின்னுக்கு போனது. அவன் பேசிய கடுமையான வார்த்தைகள் கூட அவள் அடி மனதில் பதிந்து போனது.
இரு வேறு பட்ட மனநிலைக்கு இடையில் அவள் போராடிக் கொண்டிருக்கும் போது அவளுடைய நினைவில் வந்தார் அவர்களின் குடும்ப வக்கீல் சதாசிவம். “அங்கிள் கிட்ட கேக்கலாம்”, என்று எண்ணி உடனே அவரை அழைத்தாள்.
“உமா, எப்படி இருக்க?”
“நான் நல்லா இருக்கேன் அங்கிள்? நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் மா. சரி என்ன விஷயம்? அதிசயமா கால் பண்ணிருக்க?”
“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அங்கிள். இப்ப எங்க இருக்கீங்க? ஆபீஸ்லயா?”
“இல்லை மா, பேங்க்ல இருக்கேன். இங்க வேலை முடிஞ்சது. வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்”
“அப்படியா? சரி நான் வீட்டுக்கு வரேன். ஆனா நான் வரதும் பேசுறதும் அப்பாவுக்கு தெரியக் கூடாது”, என்று அவள் சொல்ல குழப்பம் வந்தாலும் “சரி மா, நீ வா, பேசுவோம்”, என்று சொல்லி போனை வைத்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் முன்னால் அமர்ந்திருந்த உமா
“அங்கிள் நீங்க எனக்கு ஒரு உண்மையைச் சொல்லணும்”, என்றாள்.
“என்ன உண்மை உமா? நீ என்ன கேக்குற?”
“எங்க அப்பா பத்தின உண்மை?”
“அப்பா பாத்தியா? என்ன சொல்ற நீ?”, என்று அவர் கேட்டாலும் அவர் கண்களில் ஒரு நொடி தோன்றிய அதிர்ச்சியை அவள் குறித்துக் கொண்டாள். அதுவே அவள் சந்தேகத்தை அதிகப் படுத்தியது.
“ஓஹோ அப்படின்னா அவரைப் பத்தின எதுவும் உங்களுக்கு தெரியாது, அப்படித் தானே?”
“இருந்தா தானே மா சொல்றதுக்கு?”
“உங்களை எங்க அப்பா ஸ்தானத்தில் வச்சிருக்கேன். ஆனா நீங்க என்னை பொண்ணா நினைக்கலை. அப்படி தானே?”
“நீ என்னோட பொண்ணு தான். ஆனா ஆர்.கே என்னோட நண்பன் மா”
“இப்ப நீங்க உண்மையைச் சொல்லலைன்னா நான் என் அப்பா கிட்டயே போய் உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கான்னு கேப்பேன் அங்கிள்”
“உமா, நீ அப்படி கேட்டா… அதுவும் நீயே கேட்டா அவன் கண்டிப்பா தாங்க மாட்டான் மா”
“அப்படின்னா நீங்க சொல்லுங்க”
“முதல்ல இதைப் பத்தி உன் கிட்ட யார் சொன்னது?”
“யார் சொன்னாங்கன்னு முக்கியம் இல்லை அங்கிள். விஷயம் தான் முக்கியம்”
“சரி சொல்றேன். உனக்கு என்ன தெரியணும்”
“அப்பாவுக்கு தப்பான அஃபையர் இருக்கா?”
“அப்படி எல்லாம் இல்லை மா. ஆனா உங்க அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்கு. அவன் இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருந்தான். உங்க அம்மா தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா திடீர்னு அந்த பொண்ணை உங்க அப்பா உன்னோட பாட்டி வீட்ல போய் விட்டுட்டு வந்துட்டான். என்ன காரணம்னு எல்லாம் எனக்கு தெரியாது. அவனும் சொல்லலை. நானும் கேட்டுக்கலை. உங்க பாட்டி செத்தப்ப அங்க போனப்ப தான் தெரிஞ்சது அந்த பொண்ணு அங்க இல்லைன்னு. அவங்க எங்க போனாங்கன்னு தெரியாது. அவனும் தெரியாதுன்னு சொல்லிட்டான். இதைப் போய் யார் கிட்ட கேக்குறதுன்னு நானும் விட்டுட்டேன்”, என்று அவர் சொல்ல அதைக் கேட்டு இதயமே சுக்குநூறாக உடைவது போல இருந்தது உமாவுக்கு.
அவளுக்கு தெரிந்து அவள் தந்தை என்பவர் சாமி போல? உமா அவர் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அதனால் அவளால் இவ்வளவு பெரிய உண்மையை ஜீரணிக்க முடிய வில்லை. அவள் நல்லவளா கெட்டவளா தெரியாது, ஆனால் அவர் நல்லவர் என்று நூறு சதவீதம் நம்புபவள். அதனால் அவளுக்கு இதைக் கேட்டு கஷ்டமாக இருந்தது.
“அங்கிள் நீங்க சொல்றது உண்மையா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள். கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.
“ஆமா மா, ஆனா வெளிய தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. சில விஷயங்கள் மக்கி மண்ணா மறைஞ்சு போன பிறகு அதை தூசி தட்டி எடுக்க கூடாது. நீ இதைப் பத்தி பேசினா உன் அப்பா அம்மாவோட நிம்மதி போயிரும். அதுவும் நான் சொன்னேன்னு சொன்னா எங்க இத்தனை வருஷம் நட்பும் கெட்டுப் போயிரும் மா”
“சரி அங்கிள், நான் இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டேன். வரேன்”, என்று சொல்லி விட்டு தளர்ந்து போய்ச் சென்றாள் உமா. அவளால் இதை ஜீரணிக்கவே முடிய வில்லை. அவளது தந்தை இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டாரா? அப்படி செய்திருந்தாலும் அதை ஏன் இது வரை வெளியே சொல்ல வில்லை என்று பல கேள்விகள் உதயமானது. தளர்ந்து போய் வீட்டுக்குச் சென்றாள்.
அவள் காதல் மறுக்கப் பட்டது, அவன் பேசிய அதிகப் படியான வார்த்தைகள், தந்தையைப் பற்றிய உண்மை என அனைத்தும் சேர்ந்து அவளை மொத்தமாக புரட்டிப் போட்டது. வாழ்க்கையை வெறுத்த மனநிலையில் தான் வீட்டுக்குச் சென்றாள்.
அவள் வீட்டுக்குச் சென்ற போது அனைவரும் வீட்டு ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள். “இதோ வந்துட்டால்ல, இந்த வீட்டோட மகாராணி. மேடம் எங்க போய் பொறுக்கிட்டு வராங்கன்னு கேளுங்க”, என்றான் அருண்.