“எங்க டி போயிட்டு வர? உன்னை வீட்ல இருக்க சொல்லிட்டு தானே போனேன்? நான் இந்த பக்கம் போனதும் நீ அந்த பக்கம் போயிருக்க? அப்படி என்ன திருட்டுத் தனம் உமா? உன் கிட்ட இருந்து நான் இதை எதிர் பாக்கலை. எங்க போயிட்டு வர? அந்த ஸ்டூடியோ காரனைத் தான் பாத்துட்டு வரியா?”, என்று கேட்டாள் கோதை.
யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் தலை குனிந்த படி நின்றாள் உமா. அவர்களிடம் வாக்குவாதம் செய்யவோ எதிர்த்து பேசவோ அவள் மனதில் ஒரு சதவீதம் கூட தெம்பில்லை. தந்தையை நிமிர்ந்து பார்க்க தைரியம் கூட அவளுக்கு இல்லை.
முன்பு தப்பு செய்தால் தலை குனிந்து நிற்பவள் இன்று தந்தையின் மீது இருந்த கோபத்தால் தலை குனிந்து நின்றாள். ராதாகிருஷ்ணன் அவளை கூர்மையுடன் பார்க்க அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்க வில்லை.
மூவரும் அவள் பதிலுக்காக அவளையே பார்த்துக் கொண்டிருக்க இங்கேயே இருந்தால் தந்தையிடம் தேவையில்லாததை பேசி விடுவோம் என்று தோன்றியது அவளுக்கு. அதனால் அவளுடைய அறையை நோக்கி நடந்தாள்.
பதில் சொல்லாமல் அவர்களை உதாசீனப் படுத்திச் செல்வதைக் கண்டு கோதை மற்றும் அருண் இருவரும் அதிர்ச்சியில் நிற்க “பாப்பா”, என்று அழைத்தார் ராதாகிருஷ்ணன். ஆனால் அவரைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை.
“இவளுக்கு இருக்குற திமிரைப் பாத்தீங்களா? எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம்”, என்று கணவரிடம் சொன்ன கோதை “ஏன் டி என்னைத் தான் மதிக்க மாட்ட. என் பேச்சைக் கேக்கவும் மாட்ட. உன் அப்பா கூப்பிடுறார்? என்னன்னு கூட பேசாம நிக்குற”, என்று மகளிடம் கேட்டாள்.
“யார்க் கிட்டயும் பேசுற மனநிலைமைல நான் இப்ப இல்லை?”, என்று அவள் சொல்ல அனைவரின் முகமும் அதிர்ச்சியை பிரதிபலித்தது.
“ஏய் உன்னைக் கூப்பிட்டது உன் அப்பா டி”
“அப்பா தானே? கடவுள் இல்லையே?”, என்று அவள் கேட்க அனைவரும் அதிர்ந்து போனார்கள். ராதாகிருஷ்ணனுக்கு அவள் பேச்சை நம்பவே முடியவில்லை.
“பாப்பா அப்பா மேல என்ன மா கோபம்? நான் உன்னை என்ன பண்ணினேன்?”
“நான் எதையும் பேச விரும்பலை. யார் கிட்டயும் பேச விரும்பலை”
“இவளை எல்லாம் வெளிய நடமாட விட்டது தான் தப்பு. ரூமுக்குள்ள போட்டு அடைக்கணும்? செல்லம் செல்லம்னு தாங்குனீங்கல்ல? அதான் உங்களுக்கு நல்ல மரியாதை கொடுக்குறா”, என்று கோதை சொல்ல “தாராளமா ரூம்ல போட்டு அடைச்சிக்கோங்க. கைக்கு விலங்கு போடணும்னாலும் போட்டுக்கோங்க. போன் இருக்குறது பிரச்சனைன்னா இனி எனக்கு அதுவும் தேவையில்லை”, என்றவள் அதை தூக்கி தரையில் எறிந்தாள். அந்த ஐபோன் டைல்ஸ் தரையில் பட்டு சுக்குநூறாக சிதறியது. அனைவரும் அவளை வியப்பாக பார்த்தார்கள்.
“என்னை என்ன பண்ணணும்னாலும் பண்ணிக்கோங்க. சாகடிக்கணும்னு தோணுச்சுனா கூட கொன்னுருங்க. ஆனா என் கிட்ட யாரும் பேசாதீங்க. எனக்கு யார்க் கிட்டயும் பேச பிடிக்கலை”, என்று கத்திய உமா “வள்ளி”, என்று வேலைக்காரியை அழைத்தாள்.
வேலைக்காரி வந்ததும் “இனி நீ மட்டும் தான் என்னோட ரூமுக்கு வரணும். நீ தான் எனக்கு சாப்பாடு கொண்டு வரணும். வேற யாரையும் நான் பாக்க கூட விரும்பலை”, என்று சொல்லி விட்டு அவளுடைய அறைக்குச் செல்லப் பார்க்க யாருக்கும் அவளை புரிந்து கொள்ள முடியவில்லை.
“ஏய் நில்லு டி, எல்லாம் அவன் கொடுக்குற இடமா? நான் நாளைக்கே அந்த ஸ்டூடியோவை போய் உடைச்சு அவனை கண்டந்துண்டமாக வெட்டிப் போடுறேன்”, என்றான் அருண்.
அவனைத் தீர்க்கமாக திரும்பிப் பார்த்தவள் “தாராளமா அவன் ஸ்டூடியோவைப் போய் உடை, அவனை வெட்டு, அவன் குடும்பத்தையே வெட்டு. எனக்கு என்ன? யார் இருந்தா என்ன? யார் போனா என்ன? இங்க இருக்குற யாரும் செத்தா கூட நான் கவலைப் படமாட்டேன்”, என்று வெறுப்புடன் சொல்லி விட்டுச் சென்றாள்.
உண்மையிலே அவள் அவனை விரும்பி இருந்தால் அவனுக்காக போராடி இருப்பாள். ஆனால் அவள் அப்படிச் சொல்லவும் அனைவருக்கும் குழப்பமாக இருந்தது.
“என்னங்க ஆச்சு இவளுக்கு? இவ இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டாளே? அதுவும் உங்க முகம் லேசா வாடி இருந்தா கூட அவ அழுவாளே? அவ இப்படி பேசுறது எனக்கு அதிர்ச்சியா இருக்கு?”
“என்ன நடந்துசுன்னு தெரியலை கோதை. அந்த பையன் அவளை எதுவும் சொன்னானோ தெரியலை”, என்று சொன்னவர் அருணிடம் அதைப் பற்றி விசாரிக்கச் சொன்னார். அடுத்த நாளே அந்த கடைக்குச் சென்றான் அருண்.
“வாங்க சார், போட்டோ எடுக்கணுமா?”, என்று கேட்டான் சிவன்.
“நான் ஒண்ணும் போட்டோ எடுக்க வரலை. உமா கிட்ட என்ன சொன்ன? அவ அவளாவே இல்லை. உன் பர்சை அவ ஏதோ தெரியாம எடுத்துட்டா. அதுக்கு திருப்பி திருப்பி அவளை திட்டுவியா?”
“ஹலோ நீங்க யாரு முதல்ல?”
“நான் உமாவோட அண்ணன். நீ எதுக்கு அவளைத் திட்டின?’
“ஆமா திட்டினேன் தான். கண்ட நேரத்துல கடைக்கு வந்து நின்னுட்டு கடுப்பேத்திட்டு இருந்தா. அதான் வராதேன்னு சொன்னேன். இதுல என்ன தப்பிருக்கு? சும்மா இங்க வந்து சவுண்ட் விடுற வேலை எல்லாம் வச்சிக்க கூடாது”
“நீ அவளை எதுவும் சொல்லலையா?”
“அதை உன் தங்கச்சிக் கிட்டப் போய்க் கேளு. அன்னைக்கே பர்சை திருடிட்டான்னு உன் தங்கச்சியை போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருக்கணும்னு இப்ப தோணுது போ”, என்று சொல்ல அவனை முறைத்துப் பார்த்த படி சென்றான் அருண்.
அடுத்து வந்த நாட்களில் உமா அறைக்குள் அவளே அவளை சிறை வைத்துக் கொண்டாள். வள்ளியைத் தவிர வேறு யாரிடமும் பேச வில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும், அதாவது மதிய உணவு மட்டுமே உண்டாள். காலையிலும் இரவிலும் உணவை வள்ளி பிடிவாதமாக வைத்து விட்டு வந்தால் கூட அவள் அதை தொட்டுப் பார்க்க வில்லை. அவள் என்ன நினைக்கிறாள்? அவள் ஏன் காலை மற்றும் இரவு உணவை தவிர்க்கிறாள் எதற்காக அறைக்குள்ளே அடைந்து கிடக்கிறாள் என்று யாருக்கும் எதுவும் புரிய வில்லை.
அவளுடைய இந்த பரிமாணம் அருணுக்கு கூட வியப்பாக தான் இருந்தது. நான்கு சுவருக்குள் டிவி இல்லாமல், மொபைல் இல்லாமல் எந்த வித சந்தோஷமும் இல்லாமல் அவளால் எப்படி நாளைக் கடக்க முடிகிறது என்று அனைவரும் வியந்து போனார்கள்.
வள்ளி சொல்லி தான் அவள் தினமும் குளிக்கிறாள் என்று கூட தெரிந்தது. ஒரு நாள் வள்ளி மதிய உணவை எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு போன போது எல்லாருமே உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு கொள்ளாதவள் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து வள்ளி கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு நிதானமாக உண்ண ஆரம்பித்தாள். இந்த ஒரு வாரத்தில் அவள் உடல் எடையும் கொஞ்சம் குறைந்திருந்தது.
“உமா ஏன் மா இப்படி பண்ணுற?”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன்.
“வள்ளி, தயவு செஞ்சு எல்லாரையும் இங்க இருந்து போகச் சொல்லு”, என்றாள் உமா.
“இவ்வளவு ரோஷம் பாக்குறவ எதுக்கு டி மதியம் மட்டும் சாப்பிடுற? அப்பவும் பட்டினி கிடக்க வேண்டியது தானே?”, என்று கோதை ஒரு ஆதங்கத்தில் கேட்க அடுத்த நொடி தட்டை கீழே வைத்த உமா “வள்ளி இனி சாப்பாடு கொண்டு வராத”, என்று சொல்லி விட்டு கை கழுவச் சென்றாள். விக்கித்துப் போனார்கள் அனைவரும்.
“உமா நீ பண்ணுறது எதுவும் சரி இல்லை”, என்றான் அருண்.
“பாப்பா அம்மா தெரியாம சொல்லிட்டா டா. ஏற்கனவே ஒரு தடவை சாப்பிட்டு ரொம்ப மெலிஞ்சு போயிட்ட. அதையும் நிறுத்துனா என்ன மா பண்ணுறது?”, என்று ராதா கிருஷ்ணன் கேட்க அவள் பதிலே சொல்லாமல் படுத்துக் கொண்டாள். அதற்கு அடுத்த மூன்று நாட்கள் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தாள். யாருடையே பேச்சையும் அவள் கேட்க வில்லை. ஏதோ வாழ்வில் பற்று இல்லாத துறவி போல அவளது மனம் அமைதியாக இருந்தது.
ஆனால் உடலில் இருந்த சத்தெல்லாம் வற்றி உருக்குலைந்து போனாள். எழுந்து குளிக்க கூட அவளுக்கு சக்தி இல்லாமல் போனது. அருணுக்கு கூட அவள் பிடிவாதம் பீதியைத் தான் கொடுத்தது.
கோதையோ மகளின் இப்படி ஒரு செய்கையை எதிர் பார்க்கவே இல்லை. வற்புறுத்தி உணவை ஊட்ட முயல கூட அவர்களால் முடிய வில்லை.